Skip to main content

ஒரு நாள் என் கண்மணியைப் பார்த்தேன்!

 
கொலை நிகழ்ந்த முந்திய இரவு சூரியனும் சந்திரனும்

பணப்பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தன

இந்தியக் கொடியை அவளுடைய வாயில் திணித்து

அவளுடைய பேச்சைப் பறித்திருந்தார்கள்

பல மனிதர்கள் மின்னும் வாள்களுடன் விரைந்தார்கள்

தீரச் செயலுக்குப் பெற்ற பரிசைப் போல

அவளை உயரத் தூக்கிப்பிடித்திருந்தார்கள்

அவர்களுடைய முகத்தில் காறித் துப்பிவிட அவள் விரும்பினாள்

ஆனால் அவர்களுக்கு முகங்கள் இல்லை

ஏழு கடல்களின் சக்தியும் தாக்கியதைப் போல

அவளைச் சங்கிலியால் பிணைத்திருந்தனர்

அந்தக் காமுகர்கள்

அவள் மீது வீசப்பட்ட வேட்டைக்காரர்கள் வலைக்கு எதிராக

போராடிக் கொண்டிருந்த அவள்

சுற்றியிருந்த விளக்குகளுக்குப் பின்னால் மறைந்து போனாள்

மழையெனக் கொட்டிக்கொண்டிருந்தது

அவளுடைய கண்ணீர்

ஆனாலும் தாகமெடுத்த நூற்றுக்கணக்கான நாக்குகளுக்கு

தாகம் தீரவில்லை.

ஆற்றின் கரைகளில் சதைக் கோளங்கள்  

சிதறிக் கிடந்தன

அவளுடைய ஆடைகள் கந்தல் கந்தலாய்

கிழிக்கப்பட்டிருந்தன

அந்த நெறித்த தழுவலில் அவளது உயிரின்

தசை நார்கள்  மண்ணில் இரத்தத்தைக் கொட்டித் தீர்த்தன

இருளின் அரக்கர்கள் அவளுடைய கண் விழிகளைக்

கோலியாக்கி விளையாடினார்கள்

அவளுடைய தாலியை வணிகனிடம் விற்று

குடித்துக் களிவெறியாடினார்கள்

அவளுடைய மலருடலின் இதழ்களை

ஒவ்வொன்றாகக் கசக்கினார்கள்  

பின்னர் அவளை எடுத்துச் சென்றார்கள்

எங்கென்று யாருக்குத் தெரியும்?

எனது கண்மணியை ஒருநாள் பார்த்தேன்

என்னை நான் கண்ணாடியில் பார்த்தேன்

அவளுடைய முகம் கறையான் புற்றாக உயர்ந்திருந்தது

அதன் உச்சியில் ஒரு செந்நாகம் படமெடுத்து

ஆடிக்கொண்டிருந்தது

கண்ணீர் வற்றிய அவளுடைய விழிகள்

மின்னும் குத்துவாள்களாக வானோக்கி முளைத்திருந்தன

அவளுடைய கருத்த உடலில் கங்கையும்

யமுனையும் ஓடின

அவளுடைய வாயில் நெருப்பு எரிந்தது

கிராமத்துப் புதரில் நச்சரவம் ஒன்று

தங்கியிருந்தது

அதன் மொத்த உடலும் நோய் பிடித்து

பல வண்ணப் புள்ளிகளைக் கொண்டிருந்தது

பார்க்கும் இடங்களிலெல்லாம்

நான் புலிகளைப் பார்க்கிறேன்

சிங்கங்களைப் பார்க்கிறேன்

சிறுத்தைகளைப் பார்க்கிறேன்

எனது கண்மணியின் உடலைக் கிழித்துப் போட்டது

எந்த மிருகம்?

மரங்களும் கற்பாறைகளும் நிமிர்ந்து நிற்கின்றன

வானை நிரம்பிக் கொண்டிருப்பது யாருடைய குரல்?

இந்தியாவின் தெருக்களில் வெள்ளிக் குத்துவாட்கள்

அணிவகுத்துச் செல்கின்றன  

இரத்தத்தில் முக்கியெடுத்த கந்தைகள்

ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படுகின்றன.

 

சித்தலிங்கய்யா

தமிழில் நிழல்வண்ணன்

 

கர்நாடகாவின் எதிர்க் கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழும் சித்தலிங்கய்யா தேவய்யா (1954, பெங்களூர்) 1970 களில் கன்னடத்தில் தலித் இலக்கியத்தைத் தொடங்கிவைத்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். கர்நாடகா தலித் சங்கர்ஷ சமிதியின் நிறுவன உறுப்பினரான அவர் தனது கவிதை மூலமாகவும் எடுத்துக்காட்டாகத் திகழும் எதிர்ப்புப் பாடல்கள் மூலமாகவும் தலித்துக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பல தலைமுறைகளுக்குத் தூண்டுகோளாக இருந்துவருகிறார். ஐம்பது ஆண்டுகளாக சித்தலிங்கய்யாவின் கவிதைகள் ஆணாதிக்க சாதி அமைப்பு முறையின் தீவிர விமர்சனங்களாக இருந்துவருகின்றன.

 

நன்றி: ஜனதா வீக்லி

Comments

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத...

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடி...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...