Skip to main content

இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயகா - பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்!

 

அண்மையில் செப்டம்பர் 21ல் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனா (மக்கள் விடுதலை முன்னணி) கட்சியின் வேட்பாளர் அனுர குமார திசாநாயகா தேசிய மக்கள் சக்தி என்ற அணி சார்பில் நின்று 'வெற்றி பெற்று அதிபராகி உள்ளார். இவரது வெற்றியை 'இடதுசாரி அரசு மலர்ந்தது ' என .பொ.. (மா) கட்சியின் இதழ் தீக்கதிர் குறிப்பிடுகிறது. மேலும் 'அரிவாள் - சுத்தி பொறிக்கப்பட்ட செங்கொடிகளை ஏந்தி இலங்கையில் மக்கள் அவரது வெற்றியைத் கொண்டாடி வருகின்றனர்' எனவும் அந்த இதழ் குறிப்பிடுகிறது. தீக்கதிர் மட்டும் அல்ல பலரும் திசாநாயகாவின் வெற்றியை ஒரு புரட்சிகரக் கட்சி ஆட்சிக்கு வந்தது போல வரவேற்று மகிழ்ச்சி அடைகின்றனர்.

இதே திசாநாயகா 2019ல் நடந்த அதிபர் தேர்தலில் 3% வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். ஆனால் இப்பொழுது நடந்த தேர்தலில் முதல் சுற்றில் 42.3% வாக்குகள் பெற்றிருந்த அவர் இரண்டாவது சுற்றில் முன்னுரிமை வாக்குகள் அப்படையில் 55.89% வாக்குகள் பெற்று அதிபராகி உள்ளார். இது எப்படி நடந்தது?

2022ல் இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மக்களின் மாபெரும் எழுச்சிக்கு இட்டுச் சென்றது. மக்கள் ஆட்சியிலிருந்த முதலாளிய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதி இராஜபக்சே கும்பலை நாட்டை விட்டே துரத்தினார்கள். இந்த மக்கள் எழுச்சிக்கு எந்தப் பலமான புரட்சிகர அமைப்பும் தலைமை தாங்கவில்லை. முதலாளியத்திற்கு மாற்றாக புதிய அரசியல் அமைப்பையும் பொருளாதார அமைப்பையும் முன்வைத்து நாட்டை அரசியல், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டு வழி நடத்துவதற்குப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான புரட்சிகரமான பலமான அமைப்பு அங்கு இல்லை. அதனால் தன்னெழுச்சியாக எழுந்த மக்களின் அந்த எழுச்சி புரட்சிகரமான அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரவில்லை. ஆளும் வர்க்கமோ ரணில் விக்ரமசிங்காவை புறக்கடை வழியாக ஆட்சியில் அமர்த்தி மக்களை ஏமாற்றியது. ரணில் விக்ரமசிங்காவின் ஆட்சி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை.

பொருளாதார நெருக்கடியிருந்து தப்பிக்க விக்ரமசிங்க அரசு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (.எம்.எப்) 290 கோடி டாலர்களைக் கடனாகப் பெற்றது. .எம்.எப். விதித்த நிபந்தனைகளின்படி விக்ரமசிங்க அரசு
சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டது. கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கான நிதியைக் குறைத்தது. முதலாளிகளுக்கு சலுகைகளை வழங்கியது. பொதுச் சொத்துகளை தனியார் முதலாளிகளுக்கு விற்றது. மக்கள் எதிர்பார்த்தபடி பிரச்சினைகள் தீரவில்லை.

இந்தச் சூழலில் நடந்த அதிபர் தேர்தல் திசாநாயகா வெற்றிபெற நல்வாய்ப்பாக அமைந்தது. ஏற்கனவே கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறிஆட்சியில் இருந்து மக்களைக் கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த விக்ரமசிங்க, ராஜபக்சே, பிரமதேசா ஆகியோரின் மீது மக்கள் அதிருப்தியுடனும் கடுங்கோபத்துடனும் வெறுப்புடனும் இருந்து வந்தனர். தங்களுடைய வாழ்வை நாசமாக்கியவர்கள் எவரும் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது எனக் கருதினர்.

இந்த நிலையில்தான் ''ஊழலை ஒழிப்பேன், ஊழல் மூலம் பொதுச்சொத்துகளைக் கொள்ளை அடித்தவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வேன். நிர்வாக அமைப்பைச் சீர்திருத்தி மேம்பாடு அடையச் செய்வேன். மக்களைத் துயரங்களிலிருந்து விடுவிப்பேன்." ஆகிய வாக்குறுதிகளை அளித்து மக்களின் வாக்குகளை அறுவடை செய்துள்ளார் திசாநாயகா.

1960 களின் இறுதியில் ரோகன விஜயவீரா மற்றும் அவருடைய தோழர்களால் தொடங்கப்பட்ட கட்சிதான் ஜனதா விமுக்தி பெரமுனா. மார்க்சியம், லெனினியம், மாவோயிசம் ஆகியவற்றைத் தத்துவ வழிகாட்டியாகக் கொண்டு செயல்படும் எனக் கூறிக்கொண்ட கட்சி இடது தீவிரப்பாதை என்னும் தவறில் வீழ்ந்தது. 1971ல் சிரிமாவோ பண்டாராநாயக ஆட்சியின் போது திடீரென ஓர் ஆயுத எழுச்சியில் ஈடுபட்டது. ஆனால் அந்த எழுச்சி இந்தியா உட்பட பல நாடுகளின் உதவியால் ஒடுக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அந்த எழுச்சியின்போது அரசால் கொல்லப்பட்டனர்.

1987-89 ஆண்டுகளில் மீண்டும் ஓர் ஆயுத எழுச்சியில் அந்தக் கட்சி ஈடுபட்டது. அதுவும் அரசால் கடுமையாக ஒடுக்கப்பட்டது. அதன் பிறகு அக்கட்சி இடது தீவிரவாதத்திலிருந்து விலகி வலது திரிபுவாதப் பாராளுமன்றப் பாதைக்குத் திரும்பியது. ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. 2004ல் சந்திரிகா பண்டார நாயக்கா அதிபராக இருந்தபோது ராஜபக்சே பிரதமராக இருந்த அமைச்சரவையில் அனுர குமார திசாநாயகா வேளாண்மை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைமையில் நடந்து வந்த ஈழ விடுதலைப் போரை 2009ல் ராஜபக்சே ஈவிரக்கமின்றி ஒடுக்கி இலட்சக்கணக்கான மக்களைக் கொன்ற போது அதற்கு ஆதரவு அளித்த கட்சிதான் ஜனதா விமுக்தி பெரமுனா (ஜெவிபி). புரட்சிகரக் கொள்கைகளைக் கொண்ட கட்சி என்று தொடங்கப்பட்ட கட்சி சிங்கள இனவாதத்திலும், பெளத்த மதவாதத்திலும் வீழ்ந்தது. தேசிய இனங்கள் சமத்துவத்துடனும் ஜனநாயக உரிமைகளுடனும் வாழ்வதை உறுதிப்படுத்தும் அரசியல் சுயநிர்ணய உரிமை என்னும் லெனினியக் கோட்பாட்டிற்கு எதிராக அது செயல்பட்டது. அதனால் அந்தக் கட்சியை தமிழ் மக்கள் தங்களுக்கு எதிரான கட்சியாகவே கருதுகின்றனர். அதனால்தான் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து திசாநாயகாவால் மிகக் குறைவான வாக்குகளையே பெற முடிந்தது.

இலங்கை ஆளும் வர்க்கத்தின் பல கட்சிகளைச் சேர்ந்த ஏஜண்டுகளும் மக்கள் முன் கேவலமாக அம்பலப்பட்டுப் போய் விட்ட நிலையில் மக்களைத் துயரங்களிலிருந்து மீட்பவராக திசாநாயகா இன்று ஆளும் வர்க்கத்தால் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக் கட்டில் ஏறி உள்ள திசாநாயகா அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் விரைவில் அம்பலப்பட்டுப் போவார் என்பது மட்டும் உறுதி.

மக்களின் வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம் போன்ற துயரங்களுக்கு எல்லாம் காரணமாக இருப்பது நிலவி வரும் முதலாளிய வர்க்கச் சுரண்டல் தான். அதில் பெருமளவு பயன் பெறுபவர்கள் உள்நாட்டு முதலாளிகளும். வெளிநாட்டு முதலாளிகளும்தான். இந்தச் சுரண்டல் அமைப்பை மாற்றி அமைக்காமல் மக்களைத் துயரங்களிலிருந்து விடுவிக்க முடியாது. மேலும் இந்தச் சுரண்டல் அமைப்பைக் கட்டிக் காப்பாற்றி வரும் அதிகாரவர்க்க ஆட்சி அமைப்பை புரட்சிகரமான முறையில் மாற்றி அமைக்காமல் சுரண்டலையும் ஊழலையும் ஒழிக்க முடியாது.

ஆனால் திசாநாயகா தனது ஆட்சியின் கீழ் உள்நாட்டு முதலாளிகள் மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் மூலதனத்துக்கும் இலாபங்களுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாது என உறுதிமொழி கொடுத்து உள்ளார். சில மாதங்களுக்கு முன்பே இந்தியா வந்து இந்திய ஆட்சியாளர்களுக்கு வாக்குறுதி அளித்து அவர்களது ஆசியைப் பெற்றுள்ளார். அமெரிக்காவுடன் உறவு கொண்டு அதன் நல்ல எண்ணத்தையும் பெற்றுள்ளார். .எம்.எப்.ன் மக்களுக்கு மேலும் சுமைகளைக் கொண்டு வரும் நிபந்தனைகளை நிறைவேற்றாமல் இவர் தப்பிக்க முடியாது.

இவ்வாறு திசாநாயகா ஒரு பக்கம் முதலாளிய வர்க்கத்தின் நண்பனாக இருந்து கொண்டு, மக்கள் மீதான அதன் சுரண்டலை ஒழிக்காமலே மக்களைத் துயரங்களிலிருந்து விடுவிக்கப் போவதாக வேடம் போடுகிறார்; பாலுக்கும் காவலனாகவும் பூனைக்கும் தோழனாகவும் இரட்டை வேடம் போடுகிறார்.

நிலவி வருகின்ற பொருளாதர அமைப்பிலும் அரசியல் அமைப்பிலும் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வராமல் இலங்கை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. பிரச்சினைகள் தீராத போது மக்கள் மீண்டும் போராட்டங்களில் குதிப்பதைத் தவிர்க்க முடியாது. அப்பொழுதுதான் திசாநாயகாவின் உண்மை முகம், ஆளும்வர்க்கத்தின் ஏஜண்ட் என்ற முகம், வெளிப்படும். நிலவுகின்ற மக்களுக்கு எதிரான அமைப்பை அம்பலப்படுத்தி மக்களின் புரட்சிகர ஆற்றலால் அதை மாற்றி அமைக்காவிட்டால், அமைப்பே ஆள்பவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்தி விடும் என்பதுதான் வரலாறு.

அம்பலப்பட்டுப்போன நிலையில் திசாநாயகா அனைத்து வகைப்பட்ட சதிகளிலும் ஈடுபட்டு, எப்படியாவது ஆளும் வர்க்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுவார். சிங்களப் பேரினவாதத்தையும் பெளத்த மதவாதத்தையும் கையில் எடுத்து மக்களைப் பிளவுபடுத்தி தேசிய இனங்களுக்குள் மோதலை உருவாக்கவும் தயங்கமாட்டார். இதற்கான விதையை ஜனதா விமுக்தி பெரமுனாவின் வரலாறு தன்னகத்தே கொண்டுள்ளது.

  - மு.வசந்தகுமார் 

Comments

  1. பொறுத்து இருந்து பார்க்கலாமே தோழர்...!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...