Skip to main content

உலக மதங்களுக்கு டார்வினின் அறைகூவல்

 

டார்வின் பிப்ரவரி 12, 1809 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் தென் அமெரிக்காவின் கேலபோகஸ்தீவில் ஆமைகளின் பரிணாமத்தைப் பற்றி படித்தார். அவர் இன்றைய மனிதன் குரங்குகளிலிருந்து பரிணாம வளர்ச்சி மூலம் உருவானான் என்னும் கோட்பாட்டை அடைந்தார். அப்போது ஒரு சிற்பி, சுத்தி மற்றும் உளி கொண்டு சிலைகளை உருவாக்குவது போல கடவுள் மனிதனை படைத்தார் என்று தீவிரமான நம்பிக்கையை மேற்குலகு கொண்டிருந்தது. “கடவுள் தனது உருவத்தைப் போலவே மனித இனத்தைப் படைத்தார் ஆணையம் பெண்ணையும் அவர் படைத்தார்" என்று பைபிள் (ஜெனிசிஸ் 1:27) கூறுகிறது. ஆனால் டார்வின், மனித இனம் உருவான நிகழ்வுப்போக்கில் கடவுள் போன்ற எந்தப் புறப்பொருளின் தலையீடும் இல்லை என்று கூறினார்; மனித இனம் இயற்கைத் தேர்வு என்னும் நிகழ்வுப்போக்கின் மூலமே பரிணமித்தது என்றார். எல்லா உயிரினங்களிலும் வேறுபாடுகள் உள்ளன. சில குரங்குகள் மென்மையாகவும் சில வலிமையாகவும் இருக்கின்றன. இவற்றில் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டவை ஏராளமான எண்ணிக்கையில் தனது இனத்தைப் பெருக்கி தங்களது இனத்தை நிலை நிறுத்திக் கொண்டன; அதே சமயத்தில் அப்படித் தன்னை தகவமைத்துக் கொள்ளாதவை அழிந்து போயின. அவருடைய கோட்பாடு கடவுள் மனித குலத்தை “படைத்தார்' என்னும் பைபிளின் கருத்துக்கு அறைகூவல் விட்டது. 

1860 -ஆம் ஆண்டு, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், டார்வின் கருத்தை ஆதரித்த இயற்கைவாதி தாமஸ் ஹென்றி ஹக்சிலிக்கும் பிஷப் சாமுவேல் வில்பர்போர்சுக்கும் இடையில் நடந்த விவாதத்திலிருந்து டார்வின் கோட்பாட்டுக்கு எந்த அளவு எதிர்ப்பு இருந்தது என்பதை அறியலாம். பிஷப் வில்பர்ஃபோர்ஸ், ஹக்சிலியின் பாட்டியோ பாட்டனாரோ குரங்கிலிருந்து வந்தார்கள் என்பது உண்மை என்று கருதுகிறாரா என்று கேட்டார். அதற்கு ஹக்சிலி, மிக முக்கியமான விஞ்ஞானத்தைப் பற்றிய விவாதத்தின் போது அதைக் கேலி செய்ய தனது திறமையைப் பயன்படுத்தும் மனிதனிலிருந்து வருவதை விட குரங்கிலிருந்து உருவாவது சிறந்தது என்று பதில் அளித்தார். டார்வின் கோட்பாடு மனிதன் உருவானதைப் பற்றிய பைபிளின் கதைக்கு எதிரானது என்பதையே பிஷப்பின் கேள்வி காட்டுகிறது. 

அந்தக் காலகட்டத்திலோ அல்லது இப்போதோ இந்தப் பிரச்சினை விவாதிக்கப்படாவிட்டாலும் கூட இந்து மதத்திற்கும் இந்த விவாதம் பொருந்துகிறது. கடவுளே மனிதனைப் படைத்தார் என்று பைபிள்கூறுவதைப் போலவே, பிரம்மன் நான்கு தொகுதிகளாக ஆயிரம் ஜோடி ஆண்களையும் பெண்களையும் படைத்ததாக வாயு புராணம் சொல்கிறது (8:37-40). மேலும், கடவுள் “தான் சுவாசித்த உயிர் மூச்சு காற்றில் இருந்த தூசி, சாம்பல் , குப்பையில் இருந்து மனிதனை உருவாக்கினார், இவ்வாறே மனித உயிரினம் தோன்றியது” என்று பைபிள் (ஜெனிசிஸ் 2:7) கூறுகிறது. இதற்கு இணையாக வாயு புராணம், அரக்கர்கள், தேவர்கள், மனிதர்கள் மூதாதையர்கள் மற்றும் பறவைகள் விலங்குகளை "இருளில்" இருந்து (9:6), பிரம்மன் ஐந்து விதமான முயற்சிகளில் படைத்தான் என்று கூறுகிறது. அடுத்ததாக, ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் படைக்கப்பட்டதாக பைபிள் (ஜெனிசிஸ் 2: 21 -22) கூறுகிறது. இதற்கு இணையாக வாயுபுராணம், பிரம்மனின் உடலைப் பிளந்து சுவயம்புவும் அவனது மனைவி ஷதரூப்பாவும்(10 : 7-8) படைக்கப்பட்டதாக கூறுகிறது. அடுத்து, இறைவனின் தோட்டத்திலிருந்து ஆதாம் வெளியேற்றப்பட்டவுடன் அவன் நிலத்தை உழ ஆரம்பித்ததாக (ஜெனிசிஸ் 3:23) கூறுகிறது. இதை ஒத்ததாகவே வாயு புராணம் ஒரு சமயத்தில் மரங்கள் இறக்க ஆரம்பித்தன; இதனால் மக்கள் பொருள் பற்றி தவமிருந்தார்கள். இதன்பின் மரங்கள் அவர்களது வீடுகளில் வளர ஆரம்பித்தன (8 :83- 90) என்று கூறுகிறது. எனவே, மனிதனைக் கடவுள் படைத்ததாகக் கூறும் பைபிளின் கருத்தை ஆதாரம் அற்றது என்று மறுப்பது போலவே, பிரம்மன் மனிதனைப் படைத்தான் என்னும் இந்து மதக் கருத்தையும் டார்வின் கோட்பாடு உறுதியுடன் மறுக்கிறது. 

ஒரு காலத்தில் பிரபஞ்சம் முழுவதும் "கருந்துளையில்" உள்ளடங்கியிருந்ததாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதன் பிறகு ஏற்பட்ட ஒரு மிகப்பெரும் வெடிப்பில் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், பூமி, தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதன் ஆகிய அனைத்தும் வரிசைக்கிரமமாக ஒன்றின்பின் ஒன்றாகத் தோன்றின. "கடவுளோ" "பிரம்மனோ" பிரபஞ்சம் முழுவதும் கருந்துளையில் இருந்த போது எங்கு இருந்தார்கள்? என்ற கேள்வி எழுகிறது. 

ஆதாமின் விலா எலும்புகளில் இருந்து ஏவாளை கடவுள் படைத்தார் (ஜெனிசிஸ் 2: 21-, 22) என்னும் பைபிளின் கருத்தையோ அல்லது வாயு புராணம் சொல்வது போல பிரம்மன் இருளாகிய தன்னுடைய உடலை ஸ்வயம்பு மனுவாகவும் அவனது மனைவி ஷதரூப்பாவாகவும் பிளந்து உருவாக்கினார் என்ற கருத்தையோ நாம் மனிதனின் உணர்வுகள் ஆண் மற்றும் பெண்ணின் உணர்வுகளாகப் பரிணமித்தன என்று புரிந்து கொள்ளலாம். பைபிள் மற்றும் வாயுபுராணம் கூறுவதைப் போல மனித இனம் ஏற்கனவே படைக்கப்பட்டு விட்டது. எனினும், குரங்குகளுக்கும் மற்ற மிருகங்களுக்கும் இடையில் உள்ளதைப் போல ஆணும் பெண்ணும் உடல் மற்றும் மூளை உழைப்பு என்ற பிரிவினை இல்லாமல் வாழ்ந்து இருக்கலாம். இத்தகைய ஒன்றுபட்ட மனித இனம், காலப்போக்கில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உடல் மற்றும் மூளை சார்ந்த உழைப்பாகப் பிரித்து இருக்கலாம். JPS பைபிள் விளக்கங்கள் என்ற நூலின் ஆசிரியரும் பைபிளில் ஆழ்ந்த அறிவு கொண்டவருமான நஹும் M சர்னா என்னும் அறிஞர் மற்றும் உலக பைபிள் விளக்கங்கள் என்ற நூலின் ஆசிரியரான டேவிட் வென்ஹாம் என்பவரும், ஆதாமின் விலா எலும்புகளிலிருந்து ஏவாள் தோன்றியதாகக் கூறுவது, திருமணம் என்னும் நிறுவனத்தின் தோற்றத்தைக் குறிப்பதாகும் என்கின்றனர். முன்பு, பெண் எந்த ஆணுடனும் சேர்ந்து வாழ்ந்தாள். கடவுள் ஆதாமின் விலா எலும்புகளில் இருந்து ஏவாளை "படைத்ததில்" இருந்து, ஒரு பெண் ஒரு ஆணுடன் இணைந்து வாழ ஆரம்பித்தாள். இந்த கருத்து வாயு புராணத்தில், ஷதரூப்பா, ஸ்வயம்பு மனுவை தன்னுடைய கணவனாக ஏற்றுக்கொண்டாள் என்ற கருத்துடன் ஒத்துப் போகிறது. 

டார்வின், கடவுள் பற்றிய புரிதலில் அடிப்படையான மாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். கடவுள் வெளியே இருந்து சுத்தியும் உளியும் கொண்டு மனிதனை உருவாக்கினாரா என்ற சிந்தனையை டார்வின் நமக்குள் உருவாக்குகிறார்.

ஆங்கில மூலம் :  பரத் ஜன்ஜன்வாலா

தமிழில்: கவிதா

நன்றி :Frontier 


Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...