Skip to main content

அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய கொள்ளை - லட்சக்கணக்கான மக்களின் கல்லறையின் மீது மகா கோடீஸ்வரர்களுக்கு எழுப்பப்பட்ட கோட்டை!

 

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 'ஒரு பெரிய அழகான மசோதா இப்போது சட்டமாகி விட்டது. அது பெரியது-- ஆனால் உண்மையில் அதில் அழகானது ஒன்றுமே இல்லை.

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய செல்வம் சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்துக்கு மாற்றப்படுவதை நாம் காணப் போகிறோம். அது அமெரிக்க வரலாற்றிலேயே அமெரிக்க மக்களின் ஆரோக்கியத்திற்கான திட்டத்தில் மிகப்பெரிய மானியக் குறைப்பை ஏற்படுத்தும். அமெரிக்க மக்களின் ஆரோக்கியத்திற்கான திட்டங்களான மருத்துவ உதவி (Medicaid), மருத்துவப் பராமரிப்பு (Medicare), மற்றும் மலிவான பராமரிப்புக்கான சட்டம் (Affordable Care Act (ACA) ஆகியவற்றுக்கான திட்ட ஒதுக்கீட்டில் ஒரு இலட்சம் கோடிக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களைக் குறைப்பது இந்த பெரிய மசோதாவின் முக்கியமான ஒரு அம்சமாகும்.

ஏறக்குறைய 6.6 கோடி அமெரிக்க மக்கள் அல்லது 20% அமெரிக்க மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். முக்கியமாக இவர்கள் இந்த மசோதாவால் பாதிக்கப்படுவார்கள். மருத்துவ உதவித் திட்டம் ஒன்று மட்டுமே ஏராளமான கிராமப்புற மருத்துவமனைகளுக்கு ஆதரவான அடிப்படை உதவியாக இருக்கிறது. கிராமப்புற மருத்துவமனைகள் மக்கள் அணுகக்கூடிய நிலைமையில் இருப்பது நீண்ட காலமாகவே குறைந்து வருகிறது. மருத்துவ உதவித்திட்டத்திற்கான மானியம் குறைக்கப்படுவதால் அவை பாதிப்பில் உள்ளன.

குறைந்த பட்சம் கிராமங்களில் உள்ள 338 மருத்துவமனைகள் உடனடியாக மூடப்படும். மாரடைப்பு வந்த தாத்தா பாட்டி போன்ற முதியவர்கள் மருத்துவமனைகள் இல்லாததால் மரணம் அடைவார்கள் என்பது இதன் அர்த்தமாகும். ஒவ்வாமை உள்ள குழந்தைகள் அனபைலாக்டிக் ஷாக் எனப்படும் கடுமையான ஒவ்வாமை எதிர்வினையால் மிக மோசமாக பாதிக்கப்படும்போது அல்லது உயிருக்கே ஆபத்தான எதிர்வினையால் பாதிக்கப்படும்போது அவர்களைக் கொண்டு செல்ல அவசர துறைகள் இருக்காது; அதனால் குழந்தைகளின் மரணங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இதனால் மக்களுக்குக்குரிய பணத்தை சுயநலமிக்க மகா கோடீசுவரர்கள் திருட முடியும். இந்தப் பணம் போர் ஆயுத உற்பத்தியாளர்களின் கருவூலத்தை நிறைக்கவும், தனியார் சிறை ஒப்பந்தாரர்களின் பணப்பைகளை நிரப்பவும் பயன்படுத்தப்படும். இந்தச் சட்ட முன்வரைவை எழுதியவர்களுக்கும், அது நிறைவேற வாக்களித்தவர்களுக்கும் அது ஏராளமான எளிய மக்களின் இறப்புக்கு வழிவகுக்கும் என்பது தெரியும்.ஆனால் அது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

வரி மற்றும் பொருளாதாரக் கொள்கைக்கான நிறுவனம், வரி பிடிப்புக்கான திட்டங்களை தீட்டும் சட்ட மாமன்றங்களின் கூட்டுக் கமிட்டியின் தரவுகள் மற்றும் பிற நிறுவனங்களின் தரவுகளையும் முழுமையாக அலசி ஆராய்ந்து, இந்த மசோதாவால் யார் பயனடைவார்கள், யார் பெரும் இழப்பைச் சந்திப்பார்கள் என்பதை பின்வருமாறு கூறுகிறது: "செல்வாக்கு மிகுந்த அமெரிக்க பணக்காரர்கள் குறிப்பாக மிக மேல்மட்டத்தில் உள்ள ஒரு சதவிகிதம் பில்லியனர்கள் அடுத்த பத்து வருடங்களில் 1.02 இலட்சம் கோடி டாலர்களை வரிச் சலுகையாகப் பெறுவார்கள். ஆனால் அதே காலகட்டத்தில் அமெரிக்க மக்களின் ஆரோக்கியத்திற்கான திட்டமான மருத்துவ உதவி திட்டத்திற்கான சலுகை குறைப்புகள் மொத்தமாக 93,000 கோடி டாலர்கள் இருக்கும்".

மேலும் ஏல் பல்கலைக்கழகம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் ஆய்வின்படி இந்தச் சட்டத்தின் விளைவாக அமெரிக்காவில் ஆண்டுதோறும் 51000 மிகை மரணங்கள் ஏற்படும் என்று தெளிவாகக் கூறுகிறார்கள். அவர்கள் தங்கள் ஆய்வுக்கு மருத்துவ ரீதியான அதாவது, மக்களின் ஆரோக்கியத்திற்கான திட்டங்கள் மற்றும் அதைப் போன்ற பிற விஷயங்களை மட்டும் கணக்கில் கொண்டு இதைக் கூறுகின்றார்கள். அவர்கள் மக்களுக்குக் கிடைக்கும் உணவு மற்றும் உயர்ந்து கொண்டிருக்கும் விலைவாசி ஆகியவற்றை இந்த ஆய்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

இது பற்றி விரிவான விவரங்களை செனட் (பாராளுமன்ற) உறுப்பினர்களுக்கு அனுப்பி உள்ளார்கள்; ஆனால் இந்த விவரங்களை அவர்கள் அனுப்பாவிட்டாலும் கூட செனட் உறுப்பினர்களுக்கு, இந்த மசோதா ஏராளமான மக்களைக் காவு வாங்கும் என்பது தெளிவாகத் தெரியும். இதே அரசியல்வாதிகள் கோவிட்--19 பெருந்தொற்றால் 10 லட்சம் அமெரிக்கர்கள் இறந்தபோது அதைப்பற்றிக் கவலைப்படவில்லை; மேலும் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் இறந்ததைப் பற்றியும் இவர்கள் பொருட்படுத்தவே இல்லை. இன்றைக்கு அமெரிக்க அரசியலில் அவர்கள் இந்த மரணங்கள் பற்றிச் சிறிது கூட குறிப்பிடுவது இல்லை.

அமெரிக்கா ஆட்சியாளர்களும் அவர்களுடைய வாஷிங்டன் கூட்டாளிகளும் இதைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்துவதில்லை. உண்மையில் ஏராளமான மக்களைக் கொல்லும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்து அதை நிறைவேற்றிய போது பெரிய கரகோஷம் எழுப்பி பாராட்டினார்கள். சுயநலம் மட்டுமே கொண்ட பெரும் பணக்காரர்களின் கும்பல் அமெரிக்காவை ஆளுகிறது. அவர்களின் ஆட்சியைத் தூக்கி எறிந்து, அதற்கு மாற்றாக சமத்துவம் மிக்க சோசலிச அமைப்பை ஏற்படுத்துவது இந்தக் காலகட்டத்தின் மிக அவசியமான செயலாகும்.

ஆங்கிலம்:கிரிகோரிஇ.வில்லியம்ஸ்

தமிழில் : கவிதா 

(Monthly Review online ல் ஜூலை 15, 2025ல் வெளிவந்த கட்டுரை)

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...