Skip to main content

செவிலியர்கள் போராட்டமும், செவி சாய்க்காத திமுக அரசும்!

 

கொரோனா முதல் மழைக்காலம், விபத்து, மகப்பேறு வரை வாழ்க்கையின் எல்லா எல்லைகளிலும் உயிர் காக்கும் முன் வரிசைப் பணியாளர்கள் செவிலியர்கள். அவர்கள் தினமும் நோயாளியின் உயிருக்கும் மரணத்துக்கும் நடுவே நின்று வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், வேலைஉறுதி, நலன்கள், மரியாதைஇவற்றைப் பார்த்தால் அவர்களின் மீதான சுரண்டலும், ஒடுக்குமுறையும் தெளிவாக வெளிப்படுகின்றது

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதியம் அடிப்படையிலும் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர். 8 முதல் 10 ஆண்டுகள் வரை நிரந்தரம் இல்லாமல், குறைந்த சம்பளத்தில், அதிகப் பணிச்சுமையோடு அரசு மருத்துவமனைகளில் சேவை செய்து வருக்கின்றனர். விரிவடைந்த அரசு மருத்துவக் கல்லூரிகள், புதிய மருத்துவமனைகள், மல்டிஸ்பெஷாலிட்டி மையங்கள்எல்லாவற்றிற்கும் முதுகெலும்பாக இருப்பது இந்தச் செவிலியர்களே; ஆனால் அவர்கள் வாழ்க்கை மட்டும் நிச்சயமற்றதாகவே உள்ளது.

பணி நிரந்தரம் செய்வதாகக் கூறி மாறி மாறி மாநில அரசின் ஆட்சிக் கட்டிலுக்கு வரும் திராவிடக் கட்சிகள், ஆட்சிக்கு வந்தவுடன் பெயரளவிற்கு சிலரை மட்டும் பணி நிரந்தரம் செய்துவிட்டு, நாங்கள் மற்றவர்களை விட கருணையுள்ளத்தோடு அதிக செவிலியர்களை நிரந்தரம் செய்து விட்டோம் எனக் கூறி ஏமாற்றி வருகின்றன. இந்த ஆட்சியாளர்களின் இத்தகைய ஏமாற்றும் போக்கையும், கடுமையான சுரண்டலையும் எதிர்த்துத்தான் செவிலியர்களின் சமீபத்திய போராட்டம் வெடித்துள்ளது.

அதிகரித்து வரும் மருத்துவமனைகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்ப போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்படுவதில்லை. சுகாதாரத் தொழிலாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் உட்பட அனைவரையும் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியிலமர்த்தும் நடைமுறையைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. பல்வேறு வகையான வேலைகள், அரசின் புதிய திட்டங்கள் ஆகியவற்றிற்கு இந்த ஊழியர்களையே வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதால், கடும் பணிச்சுமைக்கு ஆளாகி வருகின்றனர். 8 மணி நேர வேலை என்பது இவர்களுக்குக் கானல் நீராக உள்ளது. குறைந்தபட்சம் 12 மணி நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

2016-2017 காலகட்டத்தில் 112 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 38 செவிலியர்கள் இருந்தனர் தற்பொழுது 2025 இல் 244 படுக்கைகள் உள்ள அதே மருத்துவமனையில் செவிலியர் எண்ணிக்கை ஒன்று கூட அதிகரிக்காமல் அதே 38 செவிலியர்களே பணியில் உள்ளனர் இதன் மூலம் பணிச் சுமைக்கும், அதிகப்படியான சுரண்டலுக்கும் செவிலியர்கள் தள்ளப்படுகின்றனர்.

2015 முதல் மருத்துவ தேர்வாணைய வாரியம் (MRB - Medical Recruitment Board) மூலமாக தேர்வு எழுதி 15000 செவிலியர்கள் உள்ளனர், அவர்களுக்கு இதுவரை பணி நியமனம் கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு 7,500 ரூபாய்க்கு சம்பளத்தில் சேர்ந்தனர். பின்பு 2017ல் மிகப்பெரிய போராட்டத்தின் மூலம் ஒரு சிலருக்கு மட்டுமே பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படும் என ஆட்சியாளர்கள் ஏமாற்றி வருவது தொடர்கதையாகி வருகின்றது.

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் 18.12.2025 முதல் தமிழ்நாடு செவிலியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. பணி நிரந்தரம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், சம வேலைக்கு சம ஊதியம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

எங்களை செவிலியர்கள் என்று அழைப்பதற்குப் பதிலாகதினக்கூலி’ என்று அழையுங்கள். நாங்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தால் கூட எங்களுடைய சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது; 5 முதல் 10 ஆண்டுகள் நிரந்தரம் இல்லாமல் வேலை செய்து வருகிறோம் எங்களுடைய எதிர்காலம் மிகவும் அச்சத்துடனே இருக்கின்றது எனக் கண்ணீர் மல்கப் போராட்டக் களத்தில் உள்ள செவிலியர்கள் கூறுகின்றனர்.

”கொரொனா காலகட்டத்தில் எங்களைப் பெண் தேவதைகள் என்று அழைத்தனர் ஆனால் இன்றோ நிரந்தரப் பணி இல்லாமல் எங்களுடைய குடும்பம் மிகவும் பொருளாதாரச் சிக்கல்களில் உள்ளது. பணிச்சுமை எங்களை மிகவும் மன அழுத்தத்திற்கு தள்ளுகிறது. சாதாரண சிகிச்சைப் பிரிவில் மூன்று நோயாளிகளுக்கு ஒரு செவிலியர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர் என்ற விகிதத்தை மாற்றி தற்பொழுது வரையறை இல்லாமல் படுக்கைகளை அதிகரித்துக்கொண்டே செல்கிறது அரசு. ஆனால் அதற்கு ஏற்றவாறு செவிலியர்களின் இடங்களைப் பூர்த்தி செய்வதில்லை.

“‘நலம் காக்கும் ஸ்டாலின்’, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ போன்ற எண்ணற்ற திட்டங்களின் மூலம் மக்களைச் சந்தித்து அவர்களின் நோய் அளவுக்கு ஏற்றாற் போல் மருந்துகளை மாதா மாதம் கவனித்து நேரில் சென்று தர வேண்டும். அந்த வேலைகளையும் நாங்கள் தான் செய்து வருகிறோம். தமிழகத்தில் மொத்தம் 390 மருத்துவமனைகள் உள்ளன. இதில் மருத்துவக் கல்லூரிகளும் அடக்கம். ஆனால் அதற்கு ஏற்றாற் போல புதிய பணியிடங்களை உருவாக்குவது இல்லை.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் (வாக்குறுதி எண் 356) அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு, ஒப்பந்த, நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்களும் செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என பரப்புரை செய்தது தி.மு.க. ஆனால் இதுவரையிலும் 3783 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 8322 பேர் தற்காலிகப் பணியாளர்களாகவே இருக்கின்றனர்” என்கின்றனர் போராட்டக் களத்தில் உள்ள செவிலியர்கள்.

தற்பொழுது காலிப் பணியிடங்கள் எதுவும் இல்லை என அரசு தம் பொறுப்பை தட்டிக் கழிக்கின்றது. போராட்டக் களத்தில் உள்ள செவிலியர்களோ 8000 முதல் 13,000 காலிப் பணியிடங்கள் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் காலிப் பணியிடங்கள் இல்லை என்றால் எதற்காக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களுக்குப் பணி வழங்க வேண்டுமெனப் போராடும் செவிலியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எதிர்காலங்களில் அரசு துறைகளிலும், தனியார் துறைகளிலும் நிரந்தர வேலை என்ற முறை இல்லாமல் செய்யும் வகையில் தற்பொழுது இந்திய ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் நவம்பர் 22ஆம் தேதி மத்திய அரசு புதிய நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது. ஆளும் வர்க்கத்தின் நலனுக்காகத் தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து வரும் அதே சமயத்தில், மக்களுடைய வரிப்பணத்தை பெருமுதலாளிகளுக்குச் சலுகைகளாகவும், கடன் தள்ளுபடிகளாகவும் கொடுத்து விட்டு, அரசிடம் பணம் இல்லை எனக் காரணம் காட்டி அரசு ஊழியர்களை, அதுவும் மக்களுக்கு அத்தியாவசியப் பணிகளைச் செய்யக் கூடிய ஊழியர்களைக் கூடப் போதுமான அளவில் நியமிக்காமலும், குறைந்த அளவிலான தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தும் அவர்களைக் கடுமையாகச் சுரண்டியும் வருகின்றது.

கொரோனா காலகட்டத்தில் பெண் தேவதைகள் என்றும் முன் களப்பணியாளர்கள் என்று கைத்தட்டி, பூ தூவி வரவேற்ற இதே அரசு தற்பொழுது வீதியில் இறங்கிப் போராடுபவர்களை அடக்கி ஒடுக்க நினைக்கிறது; இவை ஒரு பக்கம் இருக்க, வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தி, அடுத்து வரும் சட்டமன்றத்திற்குத் தங்களைத் தயார்படுத்தி விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது ஆனால் களத்தில் போராடும் பெண்கள் மீது காவல்துறையை ஏவி அவர்களை மிரட்டி வருகிறது

செவிலியர் சங்கங்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் தனித்தனியாகப் பிரித்து அவர்களின் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்துள்ளதோடு, பெயரளவிற்கு 1000 பேரை மட்டும் நிரந்தரம் செய்வதாக அறிவித்து போராட்டம் சுமூகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், செவிலியர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. கல்வித்துறை, மருத்துவத்துறை, மின்சாரம், போக்குவரத்துத் துறை, துப்புரவுப் பணி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தொழிலாளர்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல், அவர்களுடைய போராட்டங்கள் சீர்குலைக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வருகின்றன. தங்களுடைய வாழ்வுக்காகப் போராடும் அனைத்து மக்களும் அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி வருகின்றனர். மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதாக வாக்களித்து, மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரும் கட்சிகள் ஆட்சியில் அமர்ந்ததும் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மக்களுடைய போராட்டங்களை அதிகாரவர்க்கத்தின் துணை கொண்டு அடக்கி ஒடுக்குகின்றன. இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசு, பாஜக என்று கட்சி வேறுபாடு ஏதும் இல்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தான் செய்து வருகின்றன. இந்தக் கட்சிகளின் நோக்கம் முதலாளிய வர்க்கத்தின் நலன்களைக் காப்பதுதான். ஆளும் முதலாளிய வர்க்கம் ஆட்சியில் உள்ள கட்சிகளை முகமூடிகளாகப் பயன்படுத்திக்கொண்டு, திரைமறைவில் இருந்து கொண்டு அதிகாரவர்க்கத்தின் துணையோடு தமது ஆட்சியை நடத்தி வருகிறது.

இங்கு நடந்து வருவது மக்களின் நலன்களுக்காக, மக்களால் நடத்தப்படும் ஜனநாயக ஆட்சி அல்ல, அதற்கு மாறாக இங்கு நடப்பது முதலாளிகளின் நலன்களுக்காக நடத்தப்படும் அதிகாரவர்க்கத்தின் ஆட்சிதான் என்பதைப் புரிந்து கொள்ளும்போது உண்மையில் தமக்கான ஆட்சியை மக்கள் அமைத்துக் கொள்வார்கள். அத்தகைய ஓர் ஆட்சியில்தான் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

- மாறன்

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...