Skip to main content

கம்யூனிஸ்டுகளும் குறிப்பான திட்டமும்

 ஏகபோக நிதி மூலதனத்தின் கொடூரமான வெளிப்பாடாக இருக்கும் பாசிசத்தை நிரந்தரமாக முறியடிக்க வேண்டுமானால் சோசலிசப் புரட்சியின் மூலம் இங்கு ஒரு சோசலிச சமூகம் கட்டமைக்கப்பட  வேண்டும் என்பதை வலியுறுத்தும் “பாசிசத்திற்கு முடிவு கட்டுவது எப்படி?” என்ற கட்டுரையை சோசலிசத் தொழிலாளர் இயக்கம் வெளியிட்டது. அதற்கு மறுப்பாகச்  சிலர் சோசலிசத் திட்டம் என்ற உயர்ந்தபட்சத் திட்டத்தை வைத்து விட்டாலே பாசிசத்தை முறியடித்து  விட முடியுமா? குறிப்பான திட்டம் தேவை இல்லையா? என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.

    மேலும் கட்டுரையில் கூறப்படாத விடயங்களை எல்லாம் இவர்களே கற்பனை செய்து கொண்டு, சோசலிசப் புரட்சித் திட்டத்தை கால, இடப் பொருத்தம் இல்லாமல் இந்தக் கட்டுரை முன்வைப்பதாகவும், தொழிற்சங்கங்கள் போன்ற தொழிலாளர் அமைப்புகள் தேவை இல்லை என்று கூறுவதாகவும் இவர்கள் தங்களுடைய அக நிலையிலிருந்து விமர்சனங்களை முன் வைக்கின்றனர். உண்மையில் இவை எல்லாம் இவர்களுடைய கற்பனைகளே. ஒரு சிறு கட்டுரையை முழுமையாகப் படித்து, அதில் சொல்லப்பட்ட கருத்துகளைக் கூட முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாமல், கட்டுரையில் கூறப்படாத கருத்துகளை எல்லாம் இருப்பதாகக் கூறித் தங்கள் மனம்போனபடியெல்லாம் விமர்சனங்களை  முன்வைப்பவர்களால் எப்படி மார்க்சிய மூலவர்களின் ஆழமான நூல்களைப் படித்துப் புரிந்து உள்வாங்கிக் கொள்ள முடியும்?

சோசலிசப் புரட்சிக் கட்டம்

    பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான இந்திய மக்கள் போராட்டத்தின் தலைமையை இந்திய முதலாளிய வர்க்கத்தின் கட்சியான காங்கிரஸ் கைப்பற்றியது. அதன் விளைவாக  1947ல் பிரிட்டன் இந்தியாவில் இருந்து வெளியேறியபோது முதலாளிய வர்க்கம் இங்கு அதிகாரத்திற்கு வந்தது. அதிகாரத்திற்கு வந்த முதலாளிய வர்க்கம் படிப்படியாகச் சீர்திருத்த முறையில் நிலப்பிரபுத்துவத்தை முதலாளியமாக மாற்றி அமைத்தது. அதில் வெற்றியும் பெற்றுள்ளது. எனவே இங்கு நிலவுவது முதலாளியவர்க்கத்தின் ஆட்சி  என்றும், இங்கு முதலாளிய வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடே முதன்மையான முரண்பாடு என்றும் சோசலிசத் தொழிலாளர் இயக்கம் கூறுகிறது. இந்த முரண்பாட்டை சோசலிசப் புரட்சி மூலம்தான் தீர்க்க முடியும் என்றும் கூறுகிறது. “இந்த முதன்மை முரண்பாட்டின் இருத்தலும் வளர்ச்சியுமே பிற முரண்பாடுகளின் இருத்தலையும்  வளர்ச்சியையும் தீர்மானிக்கிறது”

    மாவோ “முரண்பாடு பற்றி” என்னும்  கட்டுரையில்  கூறுவதை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

 “முதலாளிய சமூகத்தில் முரண்பாட்டில் உள்ள இரு சக்திகளான பாட்டாளி வர்க்கமும் முதலாளிகளும் முதன்மை முரண்பாடுகளாக அமைகின்றன. எஞ்சியுள்ள நிலவுடைமை வர்க்கத்திற்கும் முதலாளிகளுக்கும் இடையிலும், விவசாயக் குட்டி முதலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலும்   பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாயக் குட்டி முதலாளிகளுக்கும் இடையிலும், ஏகபோகமற்ற முதலாளிகளுக்கும் ஏகபோக முதலாளிகளுக்கும் இடையிலும், முதலாளிய ஜனநாயகத்திற்கும் முதலாளிய பாசிசத்திற்கு இடையிலும், முதலாளிய நாடுகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும், காலனிகளுக்கு இடையிலும் உள்ள பிற முரண்பாடுகள் இம்முதன்மை முரண்பாட்டினால் தீர்மானிக்கப்படவோ செல்வாக்கு செலுத்தப்படவோ செய்கின்றன.” (அழுத்தம் எமது)

    எனவே பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளிய வர்க்கத்திற்கும் இடையிலான முதன்மை முரண்பாட்டைத் தீர்ப்பதன் மூலமே முதலாளிய ஜனநாயகத்திற்கும் முதலாளிய பாசிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டையும்  ஒழிக்க முடியும் என்பதுதான் உண்மை.

    இருப்பினும் சோசலிசப் புரட்சி நிறைவேறும் வரையிலான வரலாற்று நிகழ்வுப்போக்கில்  சமூகத்தில் உள்ள வர்க்கங்களுக்கு இடையில் உள்ள சில முரண்பாடுகள் கூர்மையடைந்து வர்க்க சேர்க்கைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். அந்த முரண்பாடுகளைச் சரியாகக் கையாள்வதன் மூலம் சோசலிசப் புரட்சியை விரைவு படுத்த முடியும். எனவே சோசலிசப் புரட்சிக் கட்டம் கூட சில இடைக்  கட்டங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவற்றை நாம் முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. சமூகத்தில் நிலவி வரும் வர்க்கங்களுக்கு இடையில் உள்ள உறவுகளில்  ஏற்படும் பருண்மையான மாற்றங்களைப் பொறுத்து அவை அமையும். அத்தகைய தருணங்களில் குறிப்பான திட்டத்தை  முன்வைப்பதன் மூலம் எதிரிகளைப்  பிளவுபடுத்தி, பாட்டாளி வர்க்கத்தின் வலிமையைப் பெருக்கிக் கொள்ள முடியும். குறிப்பான திட்டம் சோசலிசப் புரட்சியை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்.  .

குறிப்பான திட்டமும் உடனடிக் கடமையும்

இப்பொழுது நாம் குறிப்பான திட்டத்தை முன்வைக்க முடியுமா? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.

    முதலாவதாக, முதலாளிய ஜனநாயகத்திற்கும் முதலாளிய பாசிசத்திற்கும் இடையிலான முரண்பாடு கூர்மையடைந்து விட்டதா?  முதலாளிய ஜனநாயகத்திற்காக நிற்கும் முதலாளியக் கட்சிகள் முதலாளியப் பாசிசக் கட்சியோடு சமரசம் காண முடியாத அளவுக்கு இன்று கடுமையான மோதலில் உள்ளனவா? முதலாளியப் பாசிசக் கட்சியை எந்த வழியிலாவது –தேர்தலுக்கு அப்பாற்பட்ட வழியிலாவது- , வீழ்த்த வேண்டும் என்ற அளவில் உறுதியாக நிற்கின்றனவா? உண்மையில் நிலைமை அப்படியில்லை. பாசிசக் கட்சியான பா.ஜ.க.வை வீழ்த்தப் பிற முதலாளியக் கட்சிகள் தேர்தல்களில் கூட ஒன்றிணையவில்லை. இந்தியா முழுவதும் இதைத்தான் நாம் பார்க்கின்றோம். ஆளும் வர்க்கக் கட்சிகளிடையில் பாசிசம் மற்றும் பாசிசத்திற்கு எதிர் என்ற கறாரான பிளவு ஏற்படவில்லை. பாசிசக் கட்சியை வீழ்த்துவதுதான் தங்கள் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கும் என்று பிற  கட்சிகள் நினைக்கவில்லை. பாசிசக் கட்சியை வீழ்த்த  சமூகத்தில் உள்ள பிற வர்க்கங்களையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமும் அவற்றிடம் இல்லை. இந்த நிலையில் பாட்டாளி வர்க்கத்தின் சார்பில் ஒரு குறிப்பான திட்டத்தை முன்வைத்து பாசிசத்திற்கு எதிராக முதலாளிய வர்க்கத்தினரின் ஒரு  பிரிவையும்  வென்றெடுக்க வேண்டும்  எனக் கூறுவது வெறும் காற்றில் கத்தியைச் சுழற்றுவது போன்றதுதான்.  பலன் எதுவுமிருக்காது.

    இரண்டாவதாக, குறிப்பான திட்டம் வைத்து பரந்து பட்ட மக்களையும், எதிரி வர்க்கத்தினரின் ஒரு பிரிவினரையும் இணைத்து ஒரு ஐக்கிய முன்னணி கட்ட  வேண்டுன்றால் அதற்குப் பலமான ஒரு புரட்சிகரக் கட்சி இருக்க வேண்டும். பலமான ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் , அதன் கீழ் திரட்டப்பட்ட பலமான தொழிலாளர் வர்க்கமும் பிற பரந்துபட்ட மக்கள் அமைப்புகளும் இல்லாமல் குறிப்பான திட்டம் வைப்பது வெறும் கையால் முழம் போடுவது போன்றதுதான். நாம் பலமான  நிலையில் இருக்கும்போது மட்டும்தான், நமது  குறிப்பான திட்டத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தனக்கு எதிர்காலம் உண்டு, இல்லாவிட்டால் அழிந்து விடுவோம் என்ற நிலையில் எதிரிகளின் ஒரு பிரிவு இருக்கும்போது மட்டும்தான்,  அது குறிப்பான திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்.

    மேலும் நமது குறிப்பான திட்டம் எதிரிகளைப் பிளவுப்படுத்தி அவர்களைப் பலவீனப்படுத்துவதாகவும், பாட்டாளி வர்க்கத்தைப் பலப்படுத்துவதாகவும் நமது இறுதி இலக்கை நோக்கி நகர்த்துவதாகவும் இருக்க வேண்டும். அதற்கு மாறாக எதிரிகளைப் பலப்படுத்துவதாக, எதிரிகளின் வாலாக நம்மை மாற்றுவதாக இருக்கக் கூடாது.

    எனவே இன்று முதன்மையான  கடமையாக இருப்பது ஒரு பலமான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதுதான். அத்தகைய கட்சியால் மட்டுமே தொழிலாளர்களையும், விவசாயிகளையும் பரந்துபட்ட மக்களையும் ஒன்று  திரட்ட முடியும். எதிரிகளுக்கு இடையில் முரண்பாடுகள் கூர்மையடைந்து மோதல்கள் முற்றும்போது குறிப்பான திட்டத்தை முன்வைத்து எதிரிகளின் ஒரு பிரிவினரை நம்முடன் சேர நிர்ப்பந்திக்க முடியும். எனவே குறிப்பான திட்டத்தை முன்வைப்பதற்கு  முன் பலமான கட்சி தேவை என்பதை அங்கீகரித்து அதைக் கட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதுதான் கம்யூனிஸ்டுகளின் இன்றைய உடனடிக் கடமையாக உள்ளது.  

முரண்பாடுகளின் மூட்டையாய் எம்-எல். குழுக்கள்

    எமது கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத எம்.எல். குழுவைச் சேர்ந்தவர்கள் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். ஆனால் உண்மையில் அந்தக் குழுக்கள் முரண்பாடுகளின் மூட்டைகளாக இருக்கின்றன. 1947ல் முதலாளிய வர்க்கம் இங்கு அதிகாரத்திற்கு வந்ததை ஏற்றுக் கொள்ளாமல் இங்கு அரைக் காலனியமும் அரை நிலப்பிரபுத்துவமும் நிலவி வருகின்றதாகக் கூறி வருகின்றன. ஏகாதிபத்தியமும் தரகு அதிகார வர்க்க முதலாளியமும் நிலப்பிரபுத்துவமும்  இங்கு அதிகாரத்தில் இருந்து கொண்டு முதலாளிய வளர்ச்சியைத் தடுத்து வருவதாகவும், எனவே அவற்றைப் புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் வீழ்த்தி முதலாளியத்தைப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் வளர்த்தெடுக்க  வேண்டும் என்றும் கூறி வருகின்றன. 

 

    அவர்களின் கோட்பாட்டின்படி இங்கு முதலாளியம் வளர முடியாது. ஆனால் பாசிசம் என்பது “நிதி மூலதன ஏகாதிபத்தியக் கூறுகளின் மிகவும் பிற்போக்கான, தேசிய வெறி கொண்ட, வெளிப்படையான பயங்கரவாத சர்வாதிகாரம்தான் பாசிசம்” எனப் பாசிசத்தைப் பற்றி தோழர்  ஜார்ஜ் டிமிட்ரோவ் வரையறுக்கிறார். அப்படியானால் முதலாளியம் வளர முடியாத  இந்தியாவில் முதலாளியம் ஏகபோக நிதி மூலதனமாக   எப்படி வளர்ந்தது? அது பாசிசத்திற்கு அடிப்படையாக எப்படி அமைந்தது?

    அவர்களுடைய கோட்பாட்டின்படி, நிலப்பிரபுத்துவத்திற்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுதான் முதன்மையான முரண்பாடு. அந்த முரண்பாட்டை நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை மூலம்தான் தீர்க்க முடியும்.  ஆனால் அவர்கள் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து நீண்ட கால மக்கள் யுத்தத்தை நடத்தாமல்  கார்ப்போரேட் முதலாளிகளை எதிர்த்து மக்களைத் திரட்ட வேண்டும் என்று ஏன் கூறுகின்றனர்? 

    இவர்கள் புதிய ஜனநாயகப் புரட்சி நடத்தி முடிக்கும் வரையிலும் அரை நிலப்பிரபுத்துவம் அரை நிலப்பிரபுத்துவமாகவே நீடிக்குமா? அதுதான் மார்க்சியம் கூறும் இயங்கியல் வரலாற்றுப் பொருள்முதல்வாதமா?

    இவர்களுடைய கோட்பாட்டிற்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள முரண்பாட்டைப் புரிந்து அதைக் களைவார்களா? இல்லை மற்றவர்களின் மீது பழியைப் போட்டுத் தொடர்ந்து சந்தர்ப்பவாதிகளாகவே இருப்பார்களா?

  அவர்களுடைய கோட்பாட்டிற்கும் நடைமுறைக்கும் இடையிலான முரண்பாட்டிற்குக் காரணமாக இருக்கும் இந்தியாவின் பருண்மையான சூழ்நிலைக்குப் பொருந்தாத கற்பனையான புதிய ஜனநாயகப் புரட்சி என்ற குறைந்த பட்சத் திட்டத்தைக் கை விட்டு, இந்தியாவின் எதார்த்தமான அரசியல், பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றது சோசலிசப் புரட்சிதான் என்ற உண்மையை ஏற்றுக் கொள்வார்களா? அதன் மூலம் தங்களுடைய சந்தர்ப்பவாதத்தைக் களைந்து கொள்வார்களா?

 

சோசலிசத்  தொழிலாளர் இயக்கம்,

தமிழ்நாடு.    

 

 

 

Comments

  1. இந்தியா பற்றிய உங்களது பார்வையும் பகுப்பும் சுத்தமான குழந்தைப் பிள்ளைத்தனமாகத் தெரிகிறது. இந்தியா கிராமங்களில், கிராமியப் பொருளாதாரத்தில், துண்டுதுண்டான விவசாய விளைநிலங்களில், குத்தகைக்கான, வாரத்திற்கான சாகுபடி முறைகளில், ஒழுங்கற்ற கூலி நிலைமைகளில் வாழ்வது தெரியவில்லையா? இந்தியாவில் மெட்ரோபாலிடன்களும் காஸ்மோபாலிடன்களும் கூட்டுப் பண்ணைகளும் இயந்திரமய விவசாய உற்பத்திகளும்தான் உள்ளனவா? புதிய விவசாயச் சட்டங்களைப் போட்டு விவசாயம் கார்பரேட்மயமாக்கப்படுகிறது எனக் குய்யோமுறையோ எனக் கூப்பாடுபோடுவதும் 100க் கணக்கான நாட்களாக எல்லா தட்டு விவசாயிகளும் டெல்லியை முற்றுகையிட்டுள்ளது ஏன்? டிராக்டராகவும் நாற்று பாவுவதற்கும் கதிரறுப்பதற்கும் எந்திரங்கள் வந்துவிட்டால் விவசாயம் நவீனமாகவும் முதலாளித்துவமயமாகவும் ஆகிவிடுமா? விதைப்பதற்கும் களையெடுக்கவும் உரமருந்து, பூச்சுக்கொல்லி தெளிக்கவும் அண்டைவெட்டவும் கரும்பு நடவும் கரும்பு வெட்டவும் புள்ளுபோடவும் பெருமளவில் இயந்திரங்கள் இல்லையே? இந்திய விவசாய வர்க்கங்கள் பற்றிய உங்கள் பகுப்புதான் என்ன?

    ReplyDelete
    Replies
    1. முதலாளிய உற்பத்திமுறை பற்றிய அடிப்படை மார்க்சியப் புரிதல் இல்லாத பின்னூட்டம் இது.

      Delete

Post a Comment

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தொழிலாளி வர்க்க ஐக்கியத்தை நோக்கி முன்னேறட்டும்!

  சென்னை , சுங்குவார்சத்திரம் பகுதியில் மின்சாதனப் பொருட்கள் உற்பத்தியில் சாம்சங் நிறுவனம் 2007 இல் இருந்து ஈடுபட்டு வருகின்றது 1700 நிரந்தரத் தொழிலாளர்கள் , இந்த ஆலையில் பணியாற்றி வருகின்றனர் . ஊதியம் , வேலை நேரம், பாதுகாப்பான பணிச்சூழல் , கழிவறை , உணவகம் போன்ற தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்றாமலேயே நிர்வாகம் நீண்டகாலம் இந்த நிறுவனத்தை இயக்கி வருகிறது. தங்களின் வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும் , நல்ல பணிச் சூழலை உருவாக்கவும் வேண்டி தொழிலாளர்கள் தங்களுக்கென்று தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியைத் தொடங்கினர் . எனவே , சிஐடியூவுடன் இணைந்து ' சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் ' என்னும் பெயரில் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யக் கோரி ஜூலை 2 அன்று தொழிலாளர் துறையிடம் விண்ணப்பித்துள்ளனர் . இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து அங்கீகரிக்க வேண்டிய தொழிலாளர் துறையோ அ தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் 45 நாட்கள் கிடப்பில் போட்டது . சாம்சங் நிறுவத்திடமிருந்து இதற்கான எதிர்ப்பு ஆகஸ்டு 20 ஆம் தேதி பெறப்பட்...