Skip to main content

இலவசங்களால் உயிர் வாழ்வது யார்? மக்களா? இல்லை ஆளும் வர்க்கமும் ஆட்சியாளர்களுமா?

அரசு மக்களுக்கு வழங்கிய வண்ணத் தொலைக்காட்சி, மின்விசிறி, கிரைண்டர், மிக்சி, ஆடு, மாடு, கோழி, மருத்துவச் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டங்கள், நூறு யூனிட் மின்சாரம் மாணவர்களுக்கு சைக்கிள்மடிக்கணினி, புத்தகங்கள், பை, பல்பொடி, செருப்பு, சீருடை உள்ளிட்ட இத்தியாதிகள் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம், வருடாந்திர மானியம், மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணம், கருவுற்ற மகளிருக்கான உதவித்திட்டங்கள், மாணவிகளுக்கான உயர்கல்வி உதவித்தொகை, கிராமப்புறங்களில் நூறுநாள் வேலை, இலவசக்கல்வி, இலவச மருத்துவம் இப்படி நீள்கின்றன அரசுகளின் மக்களுக்கான திட்டங்கள். மானியங்கள், விலையில்லாப் பொருட்கள், பரிசுப்பொருட்கள் எனப் பெயரிடப்பட்டாலும் இவைகள் இலவசங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. இவைகள் எதுவும் மக்கள் கேட்டு அரசுகள் வழங்கியதல்ல; பெரும்பாலும் அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்பு நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் தான்.

இந்த இலவசங்கள் ஆட்சேபனைக்குரியவை என்றும், தவறான முன்னுதாரணங்கள் எனவும், சில அரசியல் தலைவர்கள் கருத்துகளை உதிர்க்கிறார்கள். அவர்கள் இலவசங்கள் நாட்டை அழித்துவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள். இந்த நாட்டின் பிரதமர் இன்னும் ஒருபடி மேலே போய் நாட்டுக்கும் அதன் வளர்ச்சிக்கும் பேராபத்தாக விளங்கும் இலவசத் திட்டங்கள் குறித்து மக்கள் குறிப்பாக இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார். (இந்து தமிழ்திசை - தலையங்கம் 1-8-2022)

மக்கள் கேட்டுப் பெறாத இந்த இலவசங்கள் அவ்வளவு ஆபத்தானவையா? எனில் ஏன் எல்லா அரசியல் கட்சிகளும் தானாக முன் வந்து தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கிறார்கள்? இவர்களைப் பின்னிருந்து இயக்குகிற ஆளும் வர்க்கத்திற்கு இது தெரியாதா? தெரிந்தும் இவற்றை ஏன் அனுமதிக்கிறார்கள்? இந்த முரணில் தான் எல்லாப் புதிர்களுக்குமான விடை ஒளிந்திருக்கிறது.

உற்பத்தி சாதனங்களான தொழிற்சாலைகள், இயந்திரங்கள், கட்டிடங்கள், நிலம் ஆகியவற்றை உடைமையாகக் கொண்டிருக்கும்  ஆளும் வர்க்கத்திற்கும், தான் உயிர் வாழ்வதற்காகத் தனது உழைப்புச் சக்தியை விற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ள  உழைக்கும் வர்க்கத்திற்கும் தான் நேரடிப்பகை.

நேரடியான பொருளில் சுரண்டும் முதலாளி சுரண்டலுக்கு ஆளாகும் தொழிலாளி இவர்களுக்கான களம் தான் இது. இங்கே தான்அரசுஎன்றஆளும் வர்க்கத்தின் புலிசமூகத்தை ஒழுங்குபடுத்துகிறேன் பேர் வழி என்று இருவேறு பகைவர்க்கங்களுக்கிடையில் மக்கள் நலன் என்ற பசுத்தோல் போர்த்திக் களத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறது.

தொழிலாளி தன் ஒவ்வொரு போராட்டத்தின் போதும் முதலாளிக்கு எந்தவொரு பங்கமும் ஏற்பட்டு விடாமல் குறுக்கே வந்து பாதுகாப்பாக நிற்கிற அரசு என்கிற ஆளும் வர்க்கத்தின் கட்டமைப்பைப் புரிந்து கொள்கிறான்.

ஆனால் சமூகத்தில் பெரும் தொகையில் வாழ்கிற உழைக்கும் மக்கள்திரள் தன்னுடைய உண்மையான வடிவத்தை அறிந்து கொள்ளக் கூடாது என அஞ்சுகின்ற ஆளும்வர்க்கம் எல்லோருக்கும் மேலானபொதுவானபோர்வையில் அரசாகிய தனக்குச் சமூகப்பொறுப்பும் இருப்பதாக காட்டிக் கொள்கிறது; அதற்காகவே  மக்கள் நலத்திட்டங்கள்என்ற பெயரில் சிலவற்றை ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இப்படியொரு நல்லவன்ங்கிற பட்டத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பதால் தான் தொழிலாளர் விரோதச் சட்டங்களையும், ஏன் மக்கள் விரோதப் போக்குகளையும் அதே மக்கள் ஆதரவோடு ஆளும் வர்க்கத்துக்கு அணுசரணையாக செய்து கொடுக்க முடிகிறது.

எந்தக் கட்சி  ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை முதலாளிய ஆளும்வர்க்கம் தான் தீர்மானிக்கிறது. அதற்கென்று தனிப்பட்ட அரசியல் கட்சி எதுவுமில்லை. இருப்பதில் எது நிலவுகின்ற சூழலுக்குச் சாதகமானதோ அந்தக் கட்சியை மக்களுடைய ஒப்புதலுடன் ஆட்சியில் அமர்த்த அனைத்துத் தேர்தல் விளையாட்டுகளையும் அது மேற்கொள்கிறது. பொதுமக்கள் கருத்துகளை அந்தக் கட்சிக்குச் சாதகமாக மாற்ற அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்திக் கொள்கிறது. அனைத்துத் தில்லுமுல்லுகளையும் பயன்படுத்தித் தனக்குச் சாதகமான கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வருகிறது. ஓட்டளிக்காமலேயே ஆளும் வர்க்கம் தனக்கான ஏஜண்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.  ஓட்டுரிமை, அது நம் பிறப்புரிமை என்பதெல்லாம் மக்களுக்கு மட்டும் தான். இதற்கு மேல் பி.ஜே.பி.  நீடித்தால் பல தலைமுறைகளாகக் கட்சியைக் காட்டித் தலைமறைவாக வாழும் ஆளும்வர்க்கம் அம்பலமாகிப் போகும் என்று நினைக்கிற அடுத்த நொடியில் காங்கிரஸ் ஆளும் கட்சியாகி விடும். அப்போதும் நமது இடதுசாரிகள்(!) காங்கிரசின்  பாசிசத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பார்கள். (ஆளும் வர்க்கம் நெடுங்கால தலைமறைவாக நீடிப்பதும், அதை அடையாளம் காணமுடியாமல், அவ்வப்போது தலைமறைவுக்குப் போன நமது இடதுசாரிகள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் கட்சியை மட்டும் எதிர்த்துப் போராடுவதும் வேடிக்கைதான்.)

இப்போது விஷயத்திற்கு வருவோம். ரூபாய் மதிப்பிழப்பு, விலைவாசி ஏற்றம், உச்சபட்சமான வரிகள், இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்றிருக்கும் மக்களிடம் அரசு இனியேதும் தண்டல் செய்ய முடியாது என்பது நிதர்சனம். இப்போது சந்தை நெருக்கடி முற்றிப் போய் நிலை குலையக் காத்திருக்கும் ஆளும் வர்க்கத்திற்கு அரசு வேறென்ன செய்வது என்பதற்கான விடைதான் நிலவும் நலத்திட்ட ஒதுக்கீடுகளை மடைமாற்றி விடுவது.

அதற்கு என்ன செய்யலாம்? அதற்குத் தான் அரசும், அதிகார வர்க்கங்களும் கருவியாக ஆளும் வர்க்கத்தின் கைகளில் வந்தமர்கிறது. கொள்கையும், கோட்பாடுமாக இவர்கள் திருவாய் மலர்கிறார்கள் அவர்களுக்காக. சமூகப் பொறுப்புக்கான செலவினங்களை இலவசங்கள் என்று இகழ்வாக்கி அவற்றையும் கார்ப்பரேட், பெருமுதலாளிகளுக்கு அள்ளிக் கொடுப்பது தான் அரசின் நோக்கம். மக்களிடத்தில் இதற்கான பொதுக் கருத்தை உருவாக்கித் தருவதே ஊடகங்கள், அரசியல் கட்சிகள், கூலி அறிஞர்களின் தற்போதைய தலையாய பணி.

2004 தொடங்கி 2014 வரையான காலகட்டத்தில் மத்திய அரசின் மூலதனச் செலவினங்கள் 11% குறைந்து, மானியங்களுக்கான செலவுகள் 7% அதிகரித்து விட்டன. பிரதமர் மோடியின் காலத்தில் தான் குறைவாகிப் போன மூலதனச் செலவினங்கள் 7% ஏற்றம் கண்டிருக்கிறது; மானியங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. (அதே இந்து தலையங்கம்-1-8-2022).

விஷயம் இப்போது தெளிவாகிப் போனது. இந்த மடைமாற்றத்தின் தொடர்ச்சி தான் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான 2022-2023 மதிப்பீட்டில் ரூ.25,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது உட்பட இன்னும் பல மானியக் குறைப்புக்கள்.

மக்களுக்கானவை மட்டுந்தான் இலவசங்களா? அதற்கு வேறு பரிமாணங்கள் ஏதேனுமுண்டா?

ஏன் இல்லை?

இதோ அப்படியான அரசின் அணிவகுக்கும் இலவசங்களின் பட்டியல்.

பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க சலுகை விலையில் நிலம், அரசின் தொழிற்பேட்டைகளில் (Industrial Estate) அவற்றுக்குக் குறைந்த வாடகையில் இடஒதுக்கீடு, நீண்ட காலக்குத்தகைக்கு ஆகக்குறைந்த விலையில் அரசு நிலம், தொழில் தொடக்கத்தில் பல்லாண்டுகளுக்கு வரிவிலக்கு (Tax Holiday), பெருநிறுவனங்களுக்கான வரி குறைப்புக்கள் (தற்போது கார்ப்பரேட் வரி 30% லிருந்து 20% ஆக குறைக்கப்பட்டுள்ளது), அவர்களுக்கு அரசின் முனைப்பிலான பல லட்சம் கோடி வங்கிக் கடன் ரத்துக்கள். இவைகள் அனைத்தும் அரசே வழங்கினாலும் இவைகளில் எதுவும் இலவசங்களில் இடம் பெறுவதில்லை; இலவசங்கள் என பெயரிடப்படுவதும் இல்லை, ஏன்?

தடையில்லா மின்சாரம், பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கத் தாமதமில்லா உடனடி அனுமதிக்கு ஒற்றைச் சாளரமுறை, நிலத்தடி நீர் உறிஞ்ச அனுமதி, பொதுத்துறை நிறுவனங்களைச் சலுகை விலையில் தனியார் முதலாளிகளுக்குத்  தாரை வார்ப்பு என விரிகின்ற சலுகைகள் அனைத்துமே மக்களின் சொத்துக்களை கார்ப்பரேட்களுக்கு அரசு கையளிக்கும் இலவசங்கள் தான்.

மின் உபயோகத்திற்கான நிலக்கரி கொள்முதலில் டன் ஒன்றுக்கு உற்பத்திச்செலவு (லாபம் சேர்த்து) ரூ.22,000 எனும்போது மத்திய அரசு அதானியிடம் ரூ.40,000 விலையில் வாங்கச் சொல்வதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வெளிப்படையாக விமர்சித்தார். இந்தக் கூடுதல் விலை டன்னுக்கு ரூ.18,000 என்பது இந்தியா முழுமைக்குமான கொள்முதல் எனக் கணக்கிட்டால் பல லட்சம் கோடிகளில் அரசின் துறைகளுக்குச் செலவு பிடிக்குமே? அது யார் பணம்? இந்த பல லட்சம் கோடிகளும் அரசு அதானிக்கு வழங்கும் இலவசம் இல்லையா?

பொது நிறுவனமான பி.எஸ்.என்.எல்.யை மத்தியஅரசே பலவீனப்படுத்தி விட்டு அலைக்கற்றைகளைத் தனியாரிடம் விற்றதன் மூலம் அவர்கள் மக்களிடம் கொள்ளையிடும் பல லட்சம் கோடிகளும் அரசு தனியாருக்கு வழங்கிய வெகுமதி இல்லையா? அதன் பேர் இலவசம் இல்லையா?

தற்போதைய 5ஜி ஏலத்தின் நிலை என்ன? ஏலம் விடப்பட்ட அலைக்கற்றைகளின் மதிப்பீட்டுத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் என்று வரையறுத்து விட்டு வெறும் 1.5 லட்சம் கோடிக்கு ஏலம் விற்பனையாகி இருக்கிறது. அநாமத்துக் கணக்கில் போகும் இந்த 1.5 லட்சம் கோடி ரூபாயும் மத்திய அரசு அம்பானி, அதானி, டாட்டா, மிட்டல்களுக்கு வழங்கியிருக்கும் இலவசங்கள் இல்லையா?

மத்திய அரசின் விளம்பரச் செலவுகள் மட்டுமே ஆண்டுக்கு ஆயிரம் கோடி என்கிறது தரவுகள். இன்னும் மாநில அரசுகள், பொதுத்துறை இவைகளும் சேர்த்தால் பல்லாயிரம் கோடிகளில் ஒளிரும் விளம்பரங்கள். அவைகள் மக்களின் வரிப்பணத்திலிருந்து அரசுகள் தங்களுக்குத் தாங்களே எடுத்துக்கொள்ளும் இலவசம் இல்லையா? அரசியல் கட்சிகள் கார்ப்பரேட்களிடம் கோடிகளில் பெறுகின்ற நிதிகளை எதில் சேர்ப்பது? அவைகள் இலவசங்கள் இல்லையா? மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் துய்க்கிற சாலை, கடல், வான்வழி கட்டணமில்லாப் பயணங்கள் மக்களின் வியர்வையிலும், இரத்தத்திலும் பெற்ற சலுகை இல்லையா? அதற்கு இலவசம் என்பதில்லாமல் வேறென்ன பெயர்? அவர்களுக்கு வழங்கப்படும் வசதியான வீடுகள், வாகனங்கள், வேலையாட்கள், மின்சாரம், கேஸ் இணைப்புக்கள், தொலைபேசிகள் இவையெல்லாம் கூட எந்தவிதப் பிரதிபலனும் பெறாத மக்கள் இவர்களுக்கு வழங்கும் இனாமும் இலவசமும் தானே?

முன்னேறிய அய்ரோப்பிய நாடுகளில் முதியோர் பென்ஷன், அவர்களுக்கான மருத்துவம், ஓய்வு இல்லங்கள், வேலை வாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை அனைத்துக்கும் அரசே பொறுப்பேற்கிறது. ஸ்பெயின் போன்ற நாடுகளில் தொடர்வண்டிப் பயணங்களில் முதியோருக்கு கட்டணமில்லை. வேளாண்மை, கூட்டுறவு, காடுவளர்ப்பு இவைகளுக்கு அரசுமானியம் வழங்குகிறது. பொதுவாக அங்கே கல்வியும், மருத்துவமும் அரசின் கடமையாக இருகிறது. அங்கு இலவசம் என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுவதில்லை. அவை மக்களுடைய உரிமைகள் எனப் பார்க்கப்படுகின்றன. அரசுகளும், தலைவர்களும் தங்களின் கடமையென்றே அவற்றைச் செயல்படுத்துகிறார்கள். மக்கள் விழிப்புணர்வு அங்கே உயிர்ப்புடன் உள்ளதால் அரசின் சமூகப்பொறுப்பை எவரேனும் இலவசம் என்று சொன்னால் அடுத்த நொடி அவர்கள் பொறுப்பிலிருந்து தூக்கியெறியப்பட்டு விடுவர் என்பதே உண்மை.

அதற்கு மாறாக இங்கே கட்சிகளும், ஊடகங்களும் இலவசம் என்று விஷமப் பிரச்சாரம் செய்வதோடு அவற்றுக்கு எதிரான கருத்தியல் போரைக் கட்டவிழ்க்கும் கயமையையும் செய்கிறார்கள். எதுவுமற்ற இல்லாத மக்களுக்குக் கடுகளவு கடமையாற்றிச் சமூக ஏற்றத்தாழ்வை சிறிதளவாவது குறைக்க எத்தனிக்கும் முயற்சிகளை முளையிலேயே கிள்ளும் இவர்களின் மனக்கோணல்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கார்ப்பரேட்கள், பெருமுதலாளிகள் உள்ளிட்ட ஆளும் வர்க்கம் தொழிலாளரிடம் பகுதி உழைப்புக்கு மட்டும் கூலி கொடுத்து விட்டு பெரும் பகுதி உழைப்பை நேரடியாகச் சுரண்டுகிறது. அரசாங்கமோ மக்களிடமிருந்து (மறைமுக, நேர்முக எனப்) பல முனைகளிலும் தண்டல் செய்து சூறையாடிய வரி வருவாயிலிருந்து தங்களை வளப்படுத்திக் கொள்வதோடு அதன் பெரும்பகுதியை ஆளும் வர்க்கத்துக்கு அள்ளிக் கொடுக்கிறது. மிச்சம் மீதியை மக்களுக்குக் கிள்ளிக் கொடுப்பதைத்தான் இவர்கள் இலவசம் என கூச்சலிடுகிறார்கள்.

உண்மையில் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டித்தான் ஆளும் வர்க்கம் உயிர் வாழ்கிறது. அவர்களின் கொடுபடா ஊதியத்தில் தான் இவர்கள் கொழுத்துப் பெருக்கின்றனர். பாதி வருவாய் போக மீதி வருவாயை அரசாங்கம் வரி, வட்டி என்று பிடுங்கிக் கொண்டு பட்ஜெட் போடுகிறது. ஆக தொழிலாளர்களிடமிருந்தும், மக்களிடமிருந்தும் பெற்றுக் கொண்ட வருவாய் எனும் மானியத்திலும், இலவசத்திலும் தான் ஆளும் வர்க்கமும் ஆட்சியாளர்களும் உயிர் வாழ்கின்றனர்.

எங்களது வரியும், வட்டியும் எங்களுக்கானவை; அவை உங்களுக்கான இலவசங்கள் இல்லை எனப் போராடினால் அரசும், ஆளும் வர்க்கமும் துடிதுடித்துப் போகும். அதிகாரம் என்பதே மக்கள் மேல் அரசின் பெயரால் ஆளும் வர்க்கம் எடுத்துக் கொண்ட அதீத வன்முறைஅதிலிருந்து விடுதலையடையப் போராடுவதே புரட்சி. அதற்கு மக்கள் தயாராகும் போது அரசு இன்னும் பல நலத் திட்டங்களைத் தன் சமூக பொறுப்புக்கள் என்று கெளரவமாக அறிவித்து வழங்க முன் வரும். அப்போது மறந்தும் உதட்டளவில் கூட இலவசம் என்று பேசாது.

மொத்தமாக முதலாளித்துவத்தின் ஆதிக்கத்திலிருந்தும் சுரண்டலிலிருந்தும்  விடுபடுதலே வாழ்வாதாரப் பிரச்சினையின் தீர்வு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இனி உழைக்கும் வர்க்கமாய் திரள்வதில் தான் விடியல் என்று உணர்தல் அவசியம். மூலதனத்துக்கு எதிரான போராட்டமே சமூக ஏற்றத்தாழ்வை முடிவுக்குக் கொண்டு வரும். இதைப் புரிந்து கொண்டு போராடுதலே தற்போதைய நிலைமைகளின் அவசரத் தேவை.

       பாவெல்சூரியன்


Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...