Skip to main content

கொரானாவும் பொறுப்பற்ற அரசும்!

கொரானா பெரும்தொற்று இன்று இந்திய ஒன்றியத்தைச் சுனாமி போலத் தாக்கி வருகிறது. தினந்தோறும்  மூன்று இலட்சம் பேருக்கு மேல் புதியதாகத் தொற்று ஏற்பட்டு வருகிறது. இன்னும் பன்மடங்கு தொற்று அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.  தொற்று ஏற்பட்டதிலிருந்து இது வரையிலும்  இரண்டு இலட்சம் மக்கள் கொரானாவிற்குப் பலியாகி உள்ளனர்.

இந்தக் கொடூரமான அவலங்களுக்குக் காரணாமான மோடியின் அரசு, ‘வருங்காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகும்.அதை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்’ எனக் கூறிப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. 

 

இரண்டாவது அலை பற்றிய எச்சரிக்கையும் மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளும்!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கிலேயே கொரானாத் தாக்குதலின் இரண்டாவது அலை வரும் ஆபத்து உள்ளது என்று மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் எச்சரித்தனர். அதை எதிர் கொள்ளும் வகையில் அரசு முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனக் கோரினர். ஆனால் மோடியும்   அவருடைய  துதிபாடிகளும் கொரானாவை இந்தியா வெற்றி கொண்ட விதம் குறித்து உலக நாடுகள் அனைத்தும் பாராட்டி வருவதாக நம் மக்களிடம் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டனரே தவிர மருத்துவர்களின் , ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கையை ஒரு சிறிதும் பொருட்படுத்தவில்லை. இரண்டாவது அலையை எதிர்கொள்ளப் போதுமான  முன் தயாரிப்புகள் எதையும் செய்யவில்லை.

முன் தயாரிப்புகள் செய்வதற்குப் பதிலாக, பெரும் தொற்றின் ஊரடங்குக் கால கட்டத்தில் அவசர அவசரமாக மக்கள் விரோதச் சட்டங்களைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்தியது  மோடியின் அரசு. முதலாளிய வர்க்கத்திற்கு ஆதரவாக  தொழிலாளர் விரோதச் சட்டங்களையும், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களையும் அவசர அவசரமாகக் கொண்டு வந்தது. பொதுத் துறையில் உள்ள நிறுவனங்களைத் தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் சட்டங்களை நிறைவேற்றியது.

கொரோனாவைக் காரணம் காட்டி மக்கள் போராட்டங்களை அடக்கி ஒடுக்கியது இந்த அரசு. மக்கள் விரோத புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தை ஒடுக்கியது. தில்லியில் போராட்டம் நடத்திய மக்களின் மீது குண்டர்களை ஏவிக் கலவரத்தை ஏற்படுத்தி அப்பாவி மக்களின் உயிரைக் குடித்தது.

இன்றும் 150 நாட்களுக்கும் மேலாக விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை  எதிர்த்து தில்லியின் எல்லைகளில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க இந்த இரண்டாவது அலையை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள இந்த அரசு திட்டமிட்டு வருகிறது. 

 

ஆட்சியைக் கைப்பற்றுவதே நோக்கம்!

ஒரு பக்கம் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, இன்னொரு பக்கம் எதிர்க் கட்சிகள் ஆட்சி புரியும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்த்துத் தான் ஆட்சிக்கு வருவதற்கான சதி வேலைகளில்  மோடி- அமித் ஷா கும்பல் கவனம் செலுத்தி வந்தது. .  

மேற்கு வங்கத்தில் மற்ற கட்சிகள் எல்லாம் கொரானாத் தொற்றுக்கு அஞ்சி பிரச்சாரங்களையும் பேரணிகள் நடத்துவதையும் விட்டுவிட்ட நிலையிலும் மோடியும் அமித் ஷாவும் மாபெரும் பேரணிகளை நடத்திக் கொண்டிருந்தனர். சில நாட்களுக்கு முன்பு நாட்டில் இரண்டு இலட்சத்துக்கும் .மேலான மக்கள் கொரானாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் மோடி மேற்கு வங்கத்தில் ஒரு மாபெரும் கூட்டத்தில் “இது வரலாறு காணாத கூட்டம்’ என்று சுய தம்பட்டம் அடித்துக் கொண்டு அகம் மகிழ்ந்து கொண்டிருந்தார்.

அறிவியல் பார்வையற்ற மூடர்கள்!

முழு மூடர்களின் தலைமையில் உள்ள இந்த அரசாங்கம் தொடக்கத்திலிருந்தே கொரோனாவின் பாதிப்பைப் பற்றி அறிவியல் பூர்வமாக அறிந்து அதைத் தடுக்க முன் தயாரிப்பு நடவடிக்கைகளில் இறங்கவில்லை.  இந்துத்துவ சனாதன மூட நம்பிக்கைகளில் மூழ்கிப் போன அவர்களால் அறிவியல்பூர்வமாகச் சிந்திக்க முடியாமல் போனது வியப்புக்குரிய ஒன்றல்ல. இவர்கள் மட்டும் மூடர்களாக இல்லாமல் மக்களையும் மூடர்களாக மாற்றினார்கள். மெழுகுவர்த்தி  ஏற்றினால் கொரானா ஓடி விடும், சாணம் தெளித்தால் கொரோனா செத்துவிடும், கோமியம் குடித்தால் கொரோனாவைக் கொன்று விடும்  என்று புளுகினர். கொரானாவை விரட்ட விளக்குகளை அணையுங்கள், மணி அடியுங்கள் எனக் கூறி மக்களை மடையர்கள் ஆக்கினர். 

அண்மையில் கொரோனாவால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நகரான லக்னோவில் இராம நவமி விழாவில் பேசிய இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘கொரானாவிலிருந்து தப்பிக்க துளசி தாசர் எழுதிய ‘ராம சரித மானஸ்’ என்னும் ராமாயணத்தை வாசியுங்கள். அது கொரோனாவுக்கு சிறந்த மருந்தாகும்’  என அருள் வாக்கு வழங்கியுள்ளார். இவர்களைப் போன்றவர்களை நம்பித்தான் இந்த நாடு இருக்கிறது என்பது எவ்வளவு பெரிய அவலம்! 

அண்மையில் ஹரித்துவாரில் நடந்த கும்பமேளாவை கொரோனாவை விரட்டி அடிக்கும் வகையில் நடத்துங்கள் என்று “தலை சிறந்த அறிஞர்” மோடி வாழ்த்தினார். அதில் . நாற்பது இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இன்று நாடு முழுவதும் கொரோனாவைப் பரப்பி வருகின்றனர். இத்தகைய “தலை சிறந்த மேதைகளின்” தலைமையில்தான் நாடு வரலாறு காணாத அவலத்தைச் சந்தித்து வருகிறது.   

 

ஊதாரித்தனமான செலவும் மக்களின் தேவைகள் புறக்கணிப்பும்!

ரூ.3000 கோடியில் வல்லபாய் பட்டேலுக்குச் சிலை, ரூ. 971 கோடியில் பாராளுமன்றக் கட்டிடம், ரூ.800 கோடியில் மோடி ஸ்டேடியம் என்று மத்திய கால மன்னர்களைப் போலத் தமது பெருமைகளைப் பறை சாற்றுவதற்காகப்  பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஊதாரித்தனமாக வாரி இறைக்கும் மோடி அரசாங்கத்தால் தடுப்பூசி தயாரிக்கவும், உயிர் வாயு (oxygen)  தயாரிக்கவும் சில ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்க முடியவில்லை.

இவர்களுடைய பொறுப்பற்ற தன்மையினால் இன்று மக்களைக் கொரோனாவிலிருந்து காப்பாற்ற போதுமான அளவு தடுப்பூசி இல்லை. எந்தவிதமான தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல் ஆறு கோடித் தடுப்பூசி மருந்துகளை ஐம்பது நாடுகளுக்கும் மேல் ஏற்றுமதி செய்ய அனுமத்தித்துள்ளது இந்த அரசு. இப்பொழுது தடுப்பூசி மருந்துக்காக வெளி நாடுகளிடம் கையேந்தி நிற்கிறது.

இங்கு சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு மருந்தில் 50 விழுக்காட்டை ரூ. 150 க்குத் தனக்கு  விற்க அந்த நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுக்கு ரூ.400க்கும், தனியார் மருத்துவ மனைகளுக்கு ரூ.600 க்கும் விற்க இந்த அரசு அனுமதித்துள்ளது. ஒரே நாடு, ஒரே வரி என்று கூறி வரும் மோடி அரசு இந்த விசயத்தில் மட்டும் இரட்டை விலைக்கு ஒப்புக்கொண்டுள்ளது. அதன் மூலம் ஒரு பக்கம் ஏற்கனவே கொரோனாவின் பாதிப்பால் ஓட்டாண்டியாகிப் போன மாநிலங்களுக்கு மேலும் நிதிச் சுமையைக் கூட்டியுள்ளது. இன்னொரு பக்கம் மக்கள் கொடும் துயரத்தில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலும் மருந்து நிறுவனம் மக்களைக்  கொள்ளையடிக்க இந்த அரசு வழி வகுத்துள்ளது.

மேலும் அதே நிறுவனம் அமெரிக்க உள்ளிட்ட பல வெளி நாடுகளுக்கு ரூ.300க்கும் அதற்குக் கீழும் கோவிஷீல்டு மருந்தை விற்கிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் ரூ.400க்கும், ரூ.600க்கும் விற்றுக் கொள்ளையடிக்க இந்த அரசு அனுமதித்துள்ளது. மக்களின் மரண பயத்தைப்  பயன்படுத்திக் கொள்ளையடிக்கும் அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ.3000 கோடி நிதி உதவியும் வழங்குகிறது.

மரண பயம் நிலவும் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் மருத்துவ மனைகளும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் மக்களைக் கொள்ளையடித்து வருகின்றன. ரூ. 1500 மதிப்புள்ள ரெம்டேசிவர் மருந்து இன்று கள்ளச் சந்தையில் ரூ.15000க்கும் அதற்கு மேலும் விற்கப்படுகிறது. சாதாரண மக்கள் இன்று உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலையில் பரிதவித்து வருகின்றனர்.

தொழிலாளர்கள் உழைக்காவிட்டால் நாடே நிலைகுலைந்து விடும்!

மக்கள் நலன்களில் சிறிதும் அக்கறையற்ற  இந்த அரசின் செயல்பாட்டினால்தான் நாம் இன்று படு மோசமான அவலங்களைச் சந்தித்து  வருகிறோம். கொரோனாவின் தாக்குதலால் இன்று நாடு முழுவதும் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து வருகின்றனர். உயிர்களைக் காப்பாற்றப் போதுமான உயிர் வாயு உருளைகள் (oxygen cylinders) இல்லை. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான படுக்கைகள் இல்லை. கொரோனாவைக் கண்டறியப் போதுமான பரிசோதனைப் பெட்டிகள் இல்லை. சிகிச்சை அளிக்கப் போதுமான அளவுக்கு மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லை.   இறந்தவர்களின் சடலங்களை எரிக்க மயானங்கள் போதவில்லை. தில்லியில் பூங்காக்களில் சடலங்களை எரிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.  

கொரோனாவின் பதிப்பால் பெரும்பான்மையான தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பி விட்டனர். ‘தொழிலாளர்களின் நலன்களைக் கவனித்துக் கொள்வோம், தொழில் செய்யும் இடங்களிலேயே இருங்கள்’ என மோடி கையெடுத்துக் கும்பிட்டாலும் தொழிலாளர்கள் அவருடைய வார்த்தைகளை நம்பத் தயாராக இல்லை. கடந்த கால ஊரடங்கு அனுபவங்கள் தொழிலாளர்களைக் கொடுங்கனவாகத் துன்புறுத்தி வருகின்றன. இதன் விளைவாக ஏற்கனவே மந்த நிலையில் உள்ள நாட்டின் உற்பத்தி மேலும் முடங்கியுள்ளது. பெரும்பான்மையான மக்களின் எதிர்காலம்   கேள்விக் குறியாக மாறியுள்ளது.

“முதலாளிகள்தான்  இந்த நாட்டின் செல்வத்தை  உருவாக்குபவர்கள்”  என்று மோடி புகழ் பாடினார். ஆனால் முதலாளிகள் கொரோனாவிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இன்று வெளி நாடுகளுக்கு ஓடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஓடி விட்டதால் நாட்டில் தொழில் முடக்கம் ஏற்பட்டுவிடவில்லை. ஆனால் தொழிலாளர்கள் வேலையை விட்டுவிட்டுத் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியதால்தான் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் உழைக்காவிட்டால் நாடே நிலைகுலைந்து விடும் என்பதை எதார்த்தம் காட்டி வருகிறது.  உண்மையில் செல்வத்தை  உருவாக்குபவர்கள் தொழிலாளர்கள்தான், முதலாளிகள் அல்ல  என்பதை இந்த இக்கட்டான தருணம் நாட்டு மக்கள் அனைவருக்கும் உரக்க உணர்த்தி வருகிறது.

முட்டுச் சந்தில் நாடு!

‘தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான்  ‘இந்தியா உலக அளவில் பெரும் மதிப்பைப் பெற்றது’, ‘இந்தியா பெரும் வல்லரசு ஆகப் போகிறது’ போன்ற மோடியின், அவருடைய துதிபாடிகளின்  அண்டப் புளுகுகள் எல்லாம் இன்று  உலக அரங்கில் அம்பலப்பட்டு நிற்கின்றன. இந்தியா இன்று உலக நாடுகளின் முன் பரிதாப நிலையில் நிற்கிறது. தடுப்பூசி மருந்துக்காகவும், உயிர் உருளைகளுக்காகவும் உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கிறது. 

முதலாளிகளுக்குச் சேவை செய்வதையும், எத்தகைய கேவலமான,கீழான  முறைகளிலும் சதி செய்து எப்படியாவது தமது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையுமே  நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்த   இந்த ஆட்சியாளர்கள் நாட்டை முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டனர். இனியும் தாங்கள் ஆள்வதற்குத் தகுதியானவர்கள் இல்லை என்பதை நடைமுறையில் நிரூபித்து விட்டனர்.  

மக்கள் இந்த அவலநிலையிலிருந்து மீள வேண்டுமானால் உடனடியாக,

* அனைத்துத் தனியார் மருத்துவ மனைகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும்   மருந்து உற்பத்தி நிறுவனங்கள்  அனைத்தையும்  தேச  உடைமையாக்க வேண்டும்!

* மக்களின் அரிய உயிரைக் காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் மருத்துவ உட்கட்டமைப்புகளை உருவாக்கவும் விரிவுபடுத்தவும் வேண்டும்!

* அனைத்து மக்களுக்கும் கட்டணமில்லா மருத்துவ வசதியை  உறுதிப்படுத்த வேண்டும்!

* வேலையிழந்து, வருமானமின்றி வாடும் மக்கள் அனைவருக்கும் இயல்பு நிலை திரும்பும் வரை வாழ்வாதாரத்திற்குத் தேவையான நிதி மற்றும் உணவுப் பொருள்களை வழங்க வேண்டும்!

இந்தக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி மக்கள் அணி திரள வேண்டும். மக்களின் ஒன்றிணைந்த வலிமை வாய்ந்த போராட்டத்தின் மூலமே மக்கள் தங்களுடைய உயிரையும் வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்! பொறுப்பற்ற அரசாங்கத்திற்குப் பாடமும் கற்பிக்க முடியும்!

 

                                  - சோசலிசத் தொழிலாளர் இயக்கம்,        

                                                                       தமிழ் நாடு            

 

Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட