Skip to main content

ஜார்ஜ் ப்ளாய்டும் - இடையப்பட்டி முருகேசனும்

   நேற்று (23.6.2021) சேலம் மாவட்டம் இடையப்பட்டி முருகேசனும் அவருடையை இரண்டு நண்பர்களும் மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பி வரும் பொழுது அவர்களைப் பிடித்த  உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவர் முருகேசன் மீது கண் முடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார். அதனால் முருகேசன் உயிர் இழந்துள்ளார்.

         முருகேன்  மீது  வெறித்தனமாக  லத்தியைக்  கொண்டு தாக்கிய பொழுது 'சார், சார், அடிக்காதீங்க விடுங்க, சார்' என அவர் கெஞ்சுவதைக் காணொளியில் காணமுடிகிறது. ஆனால், அவர் அடி தாங்க முடியாமல் வலியால் கதறுவதையும்   பொருட்படுத்தாமல், ஈவு இரக்கம் சிறிதும் இல்லாமல் அவர் உயிர் போகும் அளவுக்கு அந்த அதிகார வெறி கொண்ட உதவி ஆய்வாளர்  தாக்கியுள்ளார். 

           இந்தக் காணொளி அமெரிக்க போலிஸ் அதிகாரி கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டின் மீது நடத்திய  கொடூரமான தாக்குதலை நமக்கு நினைவுபடுத்துகிறது. அப்பொழுது  ஜார்ஜ் பிளாய்ட், 'என்னால் மூச்சு விட முடியவில்லை, ப்ளீஸ், ப்ளீஸ்' எனத் தொடர்ந்து  சொல்லிக் கொண்டே இருக்கிறார்.  ஆனால்,  எட்டு நிமிடங்களுக்கும் மேலாக, அவருடைய கழுத்தின் மீது காலை வைத்து  இறுக்கி அவரை மூச்சுத் திணற வைத்துச் சாகடித்தான் இன வெறி கொண்ட   ஒரு வெள்ளைப் போலீஸ்காரன்.

           இங்கு மது குடிப்பது சட்ட விரோதமனதல்ல.  அரசே சாராயக் கடைகளை நடத்தி மக்களைக் குடிக்கப் பழக்கி வருகிறது. அதன் மூலம் கணிசமான வருமானத்தையும் அடைந்து வருகிறது.  இந்த நிலையில் முருகேசனை அடிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? அவர் மது அருந்தி இருந்ததுதான் காரணமா? உறுதியாக அது காரணமாக இருக்க முடியாது. அப்படியே அவர் வேறு ஏதாவது சட்ட விதிகளை மீறி இருந்தால் கூட அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே அந்தப் போலிஸ் அதிகாரியின் கடமையாக இருக்க முடியும். அதை விட்டு அவரை உயிர் போகும் அளவுக்கு அடிப்பதற்கு போலிசுக்கு சட்டப்படி என்ன அதிகாரம் உள்ளது?

    மக்களை போலிஸ் அடிப்பதற்கு சட்டப்படி எந்த அதிகாரமுமில்லை; மக்களை போலிஸ் அடிப்பது என்பது சட்டவிரோதமானது  என்ற கருத்தை இங்குள்ள ஆட்சியாளர்கள் வலியுறுத்துவதில்லை. அவ்வாறு சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எதுவும் இங்கு எடுக்கப்படுவதும் இல்லை. போலிசின் சித்திரவதைகளால் மனித உயிர்கள் பலி கொள்ளப்படும் சமயங்களில் மட்டும் மக்களின் கடுமையான எதிர்ப்புகளைச் சமாளிக்கவும், மக்களை அமைதிப்படுத்தவும் பணி இடை நீக்கம் போன்ற சில கண் துடைப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படுகின்றன.  சிலர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டாலும் சில ஆண்டுகளில் அவர்கள் மீது  குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுவிக்கப்பட்டு, மீண்டும் பதவிக்கு வந்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் பதவி உயர்வும் பெறுகின்றனர்.

    இங்குள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டங்களுக்கு அடிப்படையாக இருப்பது பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்கள்தான். அடிமை நாட்டில் உள்ள அடிமைகளை ஆள்வதற்காக எஜமானர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் அவை. மக்கள் மீது அதிகார வர்க்கம் எவ்வளவுதான் அடக்குமுறைகளைச் செலுத்தினாலும் அதிகாரவர்க்கத்தைத் தண்டிக்க முடியாத வகையிலும், அவர்களைப் பாதுகாக்கும் வகையிலும் அந்தச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அந்தச் சட்டங்களை அப்படியே எடுத்துக் கொண்டு ஆங்காங்கு  சில பிரிவுகளை மாற்றியமைத்து, மக்களை அடக்கி ஒடுக்க இங்குள்ள ஆளும் முதலாளிய வர்க்கம் பயன்படுத்தி வருகிறது. அதனால்தான் இந்தச் சட்டங்களைப் பயன்படுத்தி  மக்கள் மீது அடக்குமுறைகளைச் செலுத்தும் அதிகாரவர்க்கத்தின் மீது நடவடிக்கை எடுப்பது சாத்தியமாவதில்லை.

        அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீது அரசின் ஒடுக்குமுறை கருவிகளான போலீசு, இராணுவம், நீதிமன்றம் ஆகியவை எப்பொழுதும் அடக்குமுறைகளையும், வன்முறைகளையும்  ஏவி வருகின்றன. இதன் மூலம் மக்களிடையே எப்பொழுதும் ஒருவித அச்ச உணர்வை உளவியல் ரீதியாக உருவாக்கி வருகிறது ஆளும் வர்க்கம்.  அரசுக்கு எதிராக மக்கள் கருத்துகள் தெரிவிப்பதையோ, போராடுவதையோ முடக்குவதற்கான செயல்பாடுகள்தான் இவை.

        2020 ஜூன் 9 ஆம்தேதி அன்று ஜார்ஜ் பிளாய்ட்டின் மீதான தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க மக்களின் தொடர் போராட்டங்கள் அந்த அரசைப் பணிய வைத்தன. ஜார்ஜ் பிளாய்ட்டை படுகொலை செய்த போலிஸ் அதிகாரி டெரெக்சாவின்மீது கொலை வழக்கு பதிவு  செய்து, கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று, நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜார்ஜ் பிளாய்ட்டின் பெயரிலேயே போலிஸ்  சீர்த்திருத்த மசோதாவையும் அமெரிக்க அரசு தாக்கல் செய்துள்ளது. கொலை நடந்து 10 மாதங்களிலேயே விரைவான விசாரணை  நடத்தப்பட்டு  தண்டனை  வ ழங்கபட்டுள்ளது.

         ஆனால், ஏறக்குறைய இதே காலகட்டத்தில் 2020 ஜூன் 19 ஆம் தேதியன்று சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸை படுகொலை செய்த வழக்கில் போலிஸ் அதிகாரிகள் கைது மட்டுமே செய்யப்பட்டுள்ளனர்.  விசாரணை இன்னும் தொடக்க கட்டத்திலேயே உள்ளது. இந்த விசாரணை முடிய இன்னும் சில ஆண்டுகள் ஆகும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. இதே நிலைமைதான் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட இடையப்பட்டி முருகேசன் வழக்கிற்கும் நிகழும்.  மக்களின் கோப உணர்ச்சிகளை தணிக்க போலிஸ் அதிகாரி பெரியசாமி கைது செய்யப்பட்டாலும், அவர் மீதான வழக்கும்  கிடப்பில்  போடப்படும்.

        தன்னிடம் உள்ள அதிகார பலத்தைக் கொண்டு மக்கள் மீது தன்னுடைய வன்முறையை  நிகழ்த்தும் அரசின் போக்கு தமிழ் நாட்டில் மட்டுமில்லாமல் இந்திய ஒன்றியம் எங்கும் நிறைந்து காணப்படுகின்றன. அவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  முதலாளித்துவ ஜனநாயகத்தில் இருக்கும் குறைந்தபட்ச உரிமைகள் கூட இங்கு மறுக்கப்படுகின்றன. இந்த உரிமைகளைப்  பெறுவதற்கே பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.

        ஜார்ஜ் பிளாய்டின் நினைவாக அமெரிக்காவில் போலிஸ்  சீர்த்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  உரிமைகளைப் பற்றிய மக்களிடையே இருந்த விழிப்புணர்வும் ஒற்றுமையும் போராட்ட குணமுமே அத்தகைய சீர்திருத்த மசோதாவுக்குக் காரணமாக இருந்தன. மக்கள் தங்களுடைய உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு பெற்று ஒற்றுமையுடன் போராடுவதன் மூலமே இங்கும் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்! உறுதிப்படுத்த முடியும்!

சோசலிசத் தொழிலாளர் இயக்கம்

தமிழ் நாடு

Comments

  1. 100% கரெக்ட். அங்கேயும் பல போராட்டங்களுக்கு அப்புறம்தான் அரசு நடவடிக்கை எடுத்தது. விரைவான தீர்ப்பளித்தது. இங்கும் போராட்டங்கள் பலனளிக்கும். ஆனால் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் என்ன அடுத்த கிரகத்திலிருந்து வந்தவர்களா? அவர்களுக்கு தெரியாதா என்ன செய்ய வேண்டும் என்று. போராட்டம் செய்துதான் ஒவ்வொன்றையும் சாதிக்க வேண்டுமா? அதிகார வர்க்கம் யோசிக்க வேண்டும்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...