Skip to main content

சிறுபான்மையினரைக் குறிவைக்கும் புல்டோசர்கள்!

தில்லிக்குத் தெற்குப் பகுதியில் அரியானா மாநிலத்தில் அமைந்துள்ள நுஹ் பகுதி முன்பு மேவாட் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இந்த மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 11 இலட்சம். அதில் 79% மக்கள் முஸ்லீம் மக்கள். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். கால்நடை வளர்த்தலும் பால் பண்ணைகளும் அவர்களுக்கு வருமானம் அளிக்கும் தொழிலாக உள்ளது. இது ஆரவல்லி மலைத்தொடர்களை ஒட்டி அமைந்துள்ள வளமான, அழகான பகுதியாகும். நுஹ் பகுதியில் பண்டைய கால மூன்று சிவன் கோயில்கள் உள்ளன. மேலும் இந்தப் பகுதியைத் தன் மாடுகள் மேயக் கிருஷ்ணன் பயன்படுத்தி வந்ததாக இந்துக்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை அரசியலாக்கி அரசியல் இலாபம் தேடத் திட்டமிட்டுள்ளனர் இந்துத்துவவாதிகள். அதற்காக இந்துக்களின் புனிதமான இந்தப் பகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் விஸ்வ இந்து பரிசத் மூன்றாண்டுகளுக்கு முன்பு பிராஜ்மண்டல் யாத்திரையைத் தொடங்கியது. பிராஜ் மண்டல் என்றால் கிருஷ்ணனின் மண்டலம் என்று பொருள். முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் இந்த வளமான பகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் சங் பரிவாரங்களின் திட்டம். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் விஷ்வ இந்து பரிஷத்தும் அதன் இளைஞர் அமைப்பான பஜ்ரங்தளமும் இணைந்து பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக யாத்திரையை (Brij Mandal Jalabhishek Yatra) ஜூலை 31 ஆம் தேதி அரியானாவில் தொடங்கின. நுஹ் பகுதியில் அந்த யாத்திரை வந்தபோது கலவரம் வெடித்தது.

இந்த ஊர்வலத்தில் பஜ்ரங்தள அமைப்பின் ஒரு பிரிவான பசு பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் மோனு மானேசர் கலந்து கொள்வதாகவும் இந்துக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் எனவும் சங்பரிவார் அமைப்புகளால் சமூக ஊடகங்களில் பரப்பரை செய்யப்பட்டு வந்தது. இந்த மோனு மானேசர் என்பவன் மாட்டிறைச்சியை விற்பனை செய்ததாகக் கூறி ராஜஸ்தானில் இரண்டு முஸ்லீம் இளைஞர்களைக் கொலை செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாவான்.

மோனு மானேசரும், வி எச் பி நடத்தும் இந்த யாத்திரையில் தான் கலந்து கொள்வதாகவும், அனைத்து இந்துக்களும் இதில் கலந்து கொள்ள வருமாறும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். தேடப்படும் குற்றவாளியான மோனு மானேசர் வெளிப்படையாக இந்த அறிவிப்பைச் செய்தும் அரசு குற்றவாளியைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இவன் கலந்து கொள்வதால் மதரீதியான வன்முறைகள் உருவாகும் சூழல் ஏற்படும் என்பதை உணர்ந்து யாத்திரைக்குத் தடையும் விதிக்கவில்லை. மாறாக ஆளும் கட்சியியான பாஜகவே இந்த நிகழச்சியில் பங்கு கொண்டு இருந்தது. பாஜக மாவட்டத் தலைவர் கார்க்கி கக்கார் குருகிராம் பகுதியில் கொடியசைத்து யாத்திரையைத் தொடங்கி வைத்தார்.

யாத்திரை நுஹ் மாவட்டத்தில் கேட்லா மோட்என்னுமிடத்தில் சில இளைஞர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதால் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர், பலர் படுகாயமடைந்துள்ளனர். நுஹ் மாவட்டத்தில் ஊரடங்கு உத்திரவை அரசு பிறப்பித்ததோடு, இணையச் சேவையையும் முடக்கியுள்ளது.

இந்த சம்பவத்திற்குக் காரணமானவர்கள் எனக் கூறி இதுவரை 393 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 160 வழக்குகள் போடப்பட்டுள்ளன. கைதுகளும் வழக்குகளும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் முஸ்லீம்களாகவே உள்ளனர். பொய் வழக்கில் கைது செய்யப்படுவோமென்ற அச்சத்தில் அந்தப் பகுதியில் உள்ள முஸ்லீம் இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியேறி மற்ற இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, பாஜக ஆளும் மாநிலங்களில் மதத்தின் பெயரால் வன்முறைகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன. மாட்டிறைச்சி வைத்திருந்ததாகவும், விற்பனை செய்வதாகவும் கூறி ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மீதும், சிறுபான்மை மதத்தினர் மீதும் தாக்குதல் நடத்துவதும், அவர்கள் கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருகின்றது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் இந்துத்துவா அமைப்புகள் நடத்திய இராம நவமி யாத்திரையில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் புல்டோசர்கள் கொண்டு இடித்துத் தள்ளப்பட்டன. இவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லீம்கள் ஆவர். இதே போன்று குஜராத் மாநிலத்திலும் அரசு முஸ்லீம்களின் வீடுகளை இடித்துத் தள்ளியது.

உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அசாம், குஜராத், டெல்லி, தற்போது ஹரியானா என்று பிஜேபி ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினரின் சொத்துக்கள் சூறையாடப்படுவது தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.

இத்தகைய சம்பவங்கள், சிறுபான்மையினர் மீது மட்டுமல்ல, இனி அரசின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் இது நிகழக் கூடும் என மறைமுகமாக அச்சுறுத்துகின்றது.

அரியானாவின் நுஹ் மாவட்டத்தில் 37 இடங்களில் முஸ்லீம்களுக்குச் சொந்தமான 1200 வீடுகள், கடைகள் மற்றும் கட்டிடங்கள் புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்பட்டன. ‘இடிப்பதற்கான எந்தத் தகவலும் தரப்படாமல், எந்தச் சட்ட வழிமுறைகளையும் பின்பற்றாமல், சட்டம் ஒழுங்கைக் காரணமாக வைத்துக் கட்டிடங்களை இடித்துத் தள்ளியுள்ளீர்கள் எனவும், பெரும்பாலும் முஸ்லீம் மக்களின் கட்டிடங்கள் மட்டுமே குறிவைக்கபட்டுள்ளதால் அரியானா அரசின் ஒரு தலைபட்சமான இந்த நடவடிக்கை இன அழிப்பு நடவடிக்கை போன்று அமைந்துள்ளது’ எனவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் அரியானா உயர்நீதிமன்றம் இந்த இடிப்பு நடவடிக்கைக்குத் தடை விதித்திருக்காவிட்டால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கக் கூடும்.

நகர மற்றும் கிராமத் திட்டதுறை, அரியானா நகர்ப்புற வளர்ச்சி ஆணையம், காவல்துறை, வனத்துறை, உள்ளூர் பஞ்சாயத்து அமைப்புகள் ஆகியவை போர்க் கால அடிப்படையில் ஒன்றிணைந்து எந்தெந்த இடங்களை இடிக்க வேண்டுமெனத் திட்டமிட்டு இதனைச் செய்துள்ளனர்.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களின் குடியிருப்புகள் கடைகள் மற்றும் அவர்களின் கட்டிடங்கள் குறித்தான தகவல்கள் திரட்டப்பட்டு அவர்களின் இடங்கள் அனைத்தும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றங்கள் நிரூபணமாகாத நிலையில் அரசு முறையான விசாரணையின்றி, சட்டப்படியான வழிமுறைகள் எதனையும் பின்பற்றாமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனத் தீர்மானித்ததோடு அவர்களின் வாழ்வாதார உடைமைகளையும் அழித்தொழிக்கும் செயலில் இறங்கியுள்ளது. ஆண்டைகள் தமக்குத் தேவையான பொழுதெல்லாம் தங்களுடைய அடிமைகளின் அற்பசொற்பமான உடைமைகளைப் பறிமுதல் செய்வதும் சேதப்படுத்துவதும் என்ற போக்கைக் கடைப்பிடித்து வந்தனர். ஆனால் அதைவிட மோசமாக இன்று இவர்கள் பெருமை பேசும் “ஜனநாயகத்தின் தாயகத்தில்” அரசும் அதிகார வர்க்கங்களும் செயல்பட்டு வருகின்றன.

ஒரு வேளை குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர்களின் குடும்பத்தின் வாழ்வியலுக்கு ஆதாரமான சொத்துக்களைச் சேதப்படுத்துவது என்பது தான் இவர்கள் சொல்லும் ஜனநாயகமா? சட்டத்தின் ஆட்சியா? வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாக முதலாளிகள், அரசியல் கட்சியினர், அதிகாரிகள் மீது வருமானத்துறையும், அமலாக்கத்துறையும் சோதனை நடத்தினாலும் கூட எந்த இடத்திலும் அவை சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறி இடித்துத் தள்ளப்படவோ அல்லது பறிமுதல் செய்யப்படுவதோ கிடையாது. விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட மற்றும் சட்டத்திற்குப் புறம்பாகப் பொது இடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட முதலாளிகளின் கட்டிடங்கள் எதுவும் இடித்துத் தரைமட்டமாக்கப்படுவதில்லை. இயற்கையை நாசமாக்கும் கழிவுகளை வெளியேற்றும் முதலாளிகளின் மீது இத்தனை தூரம் அவர்கள் பாய்ந்து சென்றதில்லை.

இந்த அதிகார வர்க்கத்தின் கரங்கள் எப்பொழுதும் குரலற்ற ஏழை மக்களை நோக்கியே நீளுகின்றன. தெருவோர வியாபாரிகளும், தள்ளுவண்டிக் கடைக்காரர்களும் அதிகார வர்க்கத்தினரால் துரத்தியடிக்கப்படுவதும் அவர்களின் பொருட்கள் சூறையாடப்படுவதும் நாள்தோறும் அரங்கேறி வரும் காட்சிகள். முதலாளிகள் மீதோ, பணக்காரர்கள் மீதோ, உயர் அதிகாரிகள் மீதோ எப்பொழுதும் அவர்கள் செய்யும் விதி மீறல்களுக்காக அதிகார வர்க்கத்தின் கைகள் நீளுவதில்லை. அவர்களிடமிருந்து கருணையைப் பெற மட்டுமே நீளுகின்றன.

ஜூன் 30 ஆம் தேதியே ஆக்கிரமிப்பு இடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டு விட்டதாகவும் அதற்குப் பின்னர் ஆகஸ்டு முதல் நாளன்று இடிக்கத் திட்டமிட்டதாகவும் அரியானா முதல்வரின் சிறப்பு அலுவலர் ஜவஹர் யாதவ் கூறுகிறார். அதற்காகவே முன் தேதி இடப்பட்ட ஓர் ஆணையைத் தயார் செய்து கொண்டு பொய் பேசுகிறது அதிகார வர்க்கம். சட்டவிரோதமாகக் கட்டிடங்களை இடித்ததைச் சட்ட ரீதியாக நியாயப்படுத்த கூசாமல் பொய் பேசுகிறது அதிகாரவர்க்கம். இவர்களிடமிருந்து நீதியையும் நேர்மையையும் மக்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?

எல்லா இடங்களிலும் மோதல்களுக்குப் பிறகு கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன; ஆனால் அதை நியாயப்படுத்த முன் கூட்டியே ஆணை வழங்கப்பட்டதாக நாடகமாடி வருகின்றனர் பா.ஜ.க ஆட்சியாளர்களும் அதன் எடுபிடிகளான அதிகாரவர்க்கமும். அப்படியே ஜூன் 30 ந்தேதி அறிவிப்புக் கொடுக்கப்பட்டிருந்தாலும் அதற்கான பதில் விளக்கத்தை அளிக்கக் கட்டிட உரிமையாளருக்குச் சட்டரீதியான கால அவகாசம் அளிக்கப்பட வேண்டியது சட்டத்திற்கு உட்பட்ட ஆட்சியின் கடமை இல்லையா? இவர்கள் தங்களுடைய சட்டத்திற்கு மீறிய செயல்பாடுகளின் மூலம் இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல, காட்டாட்சி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்.

மேலும், ஆக்கிரமிப்பு இடங்களில் குடியேறியவர்கள் அனைவரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக இவர்கள் எப்படி முடிவுக்கு வந்தார்கள்? அவர்கள் அனைவரும் (கட்டிட உரிமையாளர்கள் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள்) முஸ்லீம்களாக மட்டுமே அடையாளப்படுத்தப்படுவதன் காரணம் என்ன? இந்தக் கேள்விகள் அனைத்திற்குமான பதில் சாமான்ய மக்கள் அனைவருக்குமே எளிதில் விளங்கக் கூடியதுதான். இதனை அரியானா உயர் நீதிமன்றமே வெளிப்படையாக வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது.

பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானவர்களில் ரோஹிங்கியா முஸ்லீம்களும் அடங்குவர். வீடுகளை இழந்த மக்களில் பெரும்பாலானோர் நிலமற்ற, நிரந்தர வருமானமற்ற வறிய ஏழை மக்கள், ரிக்சா இழுப்பவர்கள், குப்பையில் கிடக்கும் பொருட்களைச் சேகரிப்பவர்கள்(Ragpickers), காய்கறி வியாபாரம் செய்பவர்கள், அன்றாடக் கூலிகள் ஆவர்.

கட்டிடங்கள் இடிக்கப்பட்டபொழுது தடுக்க முயன்ற அப்பாவிகள் வன்முறைக்குத் தொடர்புடையவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். சில வீடுகளை வன்முறையாளர்கள் கல் எறிவதற்கும் ஆயுதங்களை வைப்பதற்கும் பயன்படுத்தினார்கள் எனக் குற்றம் சாட்டி இடித்துள்ளனர். கட்டிடங்களில் உள்ள உடைமைகளை எடுத்துக் கொள்ளக் கூட அந்த மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

அரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜியும் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் கட்டிடங்கள் இடிப்பும் ஒன்றாகும் எனவும், இதற்காக “புல்டோசர் சிகிச்சை” பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறுகிறார்.

நுஹ் காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்ட சந்தேகத்திற்கிடமானவர்களின் சொத்துக்கள் கண்டறியபட்டு இடிக்கப்பட்டதாகவும், அப்பாவிகள் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் துணைக் கோட்டாட்சியர் அஸ்வனி குமார் கூறியுள்ளார்.

வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோத சக்திகள் மற்றும் சட்ட விரோதக் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க அரியான முதல்வர் மனோகர் லால் கட்டார் உத்திரவிட்டதாக முன்னாள் துணைக் கமிசனர் பிரசாந்த் பன்வார் கூறுகிறார்.

நுஹ் மாவட்டத்திற்குப் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் கண்காணிப்பாளர் நரேந்திர பிர்ஜானியா, இது ஒரு நாளில் எடுக்கபட்ட முடிவு அல்ல, மாவட்டத்தின் நகரத் திட்டமிடல் குழு இதற்கான தயாரிப்பை ஏற்கனவே செய்திருந்ததாகக் கூறுகின்றார்.

கட்டிடங்கள் இடிப்பிற்கு அதிகார வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகள் வெவ்வேறு காரணங்களைக் கூறுகின்றன. அரசின் இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து தங்கியுள்ளனர், முறையான கட்டிட அனுமதி பெறவில்லை, சில கட்டிடங்கள் ஜூலை 31 ஆம் தேதியன்று வன்முறைக்கு பயன்படுத்தபட்டது எனவும் கூறப்படுகின்றது. ஆனால், அரசிடம் மின் இணைப்பு பெறப்பட்டும், முறையாக வரி செலுத்தப்பட்டுமே இந்தக் கட்டிடங்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. .

ஆனால், அரசோ எந்தவிதச் சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல், குடியிருப்பாளர்களுக்கு முறையான தகவல் கொடுக்காமல், அவர்களிடம் எந்த வித விளக்கங்களும் கோராமல், அவர்களிடம் உள்ள ஆவணங்களை கூட பரிசீலிக்காமல், அவர்களுக்குக் குறைந்தபட்ச நேரம் கூடக் கொடுக்காமல் அவர்களின் வாழ்வைச் சூறையாடியுள்ளது. அரியானா அரசின் இந்தக் கொடூர நடவடிக்கைகளுக்குக் காரணமாக இருப்பது எது?

அரசின் நோக்கம் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதானா? அப்படியானால் முறையாக விசாரணை செய்து நீதிமன்றத்தின் மூலம் அல்லவா நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அல்லது ஆக்கிரமிப்பு இடங்களை மீட்டெடுப்பது என்றால் அதற்கு உரிய மக்களிடம் கலந்தாலோசித்து அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து உத்திரவாதப்படுத்தி அவர்களுக்கு உரிய நேரம் கொடுத்து அதற்குப் பின்னர் அல்லவா அந்த இடங்களை மீட்க வேண்டும்.

அரியானா வன்முறை சம்பவத்திற்குப் பின்பு அமைதி திரும்ப வேண்டி அரசினால் கூட்டப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அரசானது வன்முறையைத் தடுக்கவும், கட்டுக்கள் கொண்டு வரவும் விரைந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், வன்முறையைத் தூண்டும் விதத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் குறித்து மவுனம் சாதித்ததோடு, மோதல் நிகழ்வதற்கான சூழல் இருந்தும் அதனைக் கைகட்டி வேடிக்கை பார்த்தது எனவும் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர்.

மேலும், சங் பரிவார அமைப்புகளின் தூண்டுதலால், அந்தப் பகுதியில் உள்ள சில பஞ்சாயத்துக்கள் தங்கள் பகுதிகளில் முஸ்லீம் வியாபாரிகள் உள்ளே நுழையக் கூடாது என்று தடை விதித்தனர். எனினும் அவற்றில் சில பஞ்சாயத்துக்கள் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானதென்பதை உணர்ந்து தங்கள் அறிவிப்பை விலக்கிக் கொண்டுள்ளனர்.

எனினும், மீண்டும் வன்முறைகளை உருவாக்கும் நோக்கத்தோடு சங்பரிவார அமைப்புகள் யாத்திரை தொடர வேண்டுமென முடிவு செய்துள்ளனர். விஎச்பி பஜ்ரங்தள் உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் மற்றும் 52 பஞ்சாயத்துகள் இணைந்து அனைத்து இந்துக்கள் சபை என்னும் பெயரில் ஆகஸ்டு 13 அன்று பல்வால் மாவட்டத்தில் ஒரு கூட்டம் கூட்டினர். அரசோ இதற்குத் தடை விதிக்காமல் அனுமதி வழங்கி கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றது.

அரசின் அனுமதி இருந்தாலும், இல்லாவிட்டாலும் மீண்டும் யாத்திரயை ஆகஸ்டு 28 ஆம் தேதி அன்று நடத்துவது என இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நுஹ் மாவட்டத்தைப் பசுவதை இல்லாத மாவட்டமாக அறிவிக்க வேண்டுமெனவும், கைது செய்யப்பட்ட இந்து இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும், இந்துக்கள் தற்காப்புக்காக ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க வேண்டுமெனவும், ரோஹிங்கியா உள்ளிட்ட அகதிகள் அனைவரையும் வெளியேற்ற வேண்டுமெனவும், முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் நுஹ் மாவட்டத்தைப் பிரித்து மற்ற மாவட்டங்களோடு இணைக்க வேண்டுமெனவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசியுள்ளனர்.

எந்த விலை கொடுத்தாகிலும் இந்த யாத்திரையை முழுமையடையச் செய்ய வேண்டுமென சோஹானா தொகுதி பாஜக எம்.எல்.ஏ சஞ்சய் சிங் கூட்டத்தில் பேசியுள்ளார். குடியிருப்புகளை இடிப்பது நீதிமன்றத்தின் தலையீட்டால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது எனவும், அவர்களின் வீடுகள் காப்பாற்றப்படமாட்டாது எனவும் உறுதியளிப்பதாக அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார். ஆனால் இத்தகைய பேச்சுக்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனினும் அரியானாவில் உள்ள விவசாய சங்கங்களும், மற்ற கப் பஞ்சாயத்துக்களும் அமைதி திரும்ப அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த வன்முறை நிகழ்வுகளுக்குக் காரணமான கொலை குற்றவாளி மோனு மானேசரை கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளன.

பாஜக அரசு மதவாதத்தைக் கொண்டு சிறுபான்மை மதத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், அவர்களை எப்பொழுதும் அச்சத்தில் இருத்தி வைப்பதும், பெரும்பான்மை இந்து மக்களிடம் மத உணர்வை ஊட்டி மத மோதல்களை நிகழ்த்தி அதன் மூலம் அப்பாவி உயிர்களைப் பலியாக்குவதுமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அவர்களை ஒருவரோடு ஒருவர் மோத விடுவதன் மூலம் ஆளும் வர்க்கம் மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் தனக்கு எதிராக உருவாகாமல் பார்த்துக் கொள்கிறது. தங்களுடைய வறுமைக்கும் ஏழ்மைக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் காரணம் ஆளும் முதலாளிய வர்க்கத்தின் சுரண்டலும் அரசியலும்தான் காரணம் என்பதை மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்காக மக்களைப் பிளவுபடுத்தி தங்களுக்குள் தொடர்ந்து மோதலில் ஈடுபட வைக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. முதலாளிய வர்க்கத்தின் விசுவாசமான ஏஜண்டான பா.ஜ.க. அந்தப் பணியைத் திறமையாகச் செய்து வருகிறது. 

பெரும்பான்மை இந்து மக்களின் பாதுகாவலன் என்று கூறி கொள்ளும் பாஜக அந்தப் பெரும்பான்மை மக்களின் நலன் மீது உண்மையில் எள்ளளவும் அக்கறை கொள்வதில்லை, அவர்களுக்குத் தகுதியான வேலையும் வேலைக்கேற்ற கூலியும் கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை உருவாக்குவதாகப் பொய்யான வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்த பாஜக, தன்னுடைய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு அரசின் கஜானாவை பெரும் முதலாளிகளுக்குத் திறந்து விட்டது. இந்துமத அரசியலை பெரும்பான்மையாக உள்ள இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறது. உண்மையில் அது கார்பொரேட் முதலாளிகளுக்கே சேவை செய்து வருகிறது.

பாஜகவின் மக்கள் விரோத அரசியலையும் ஆட்சியையும் வீழ்த்துவதற்கு மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டிய வரலாற்றுக் கடமை இன்று எழுந்துள்ளது. இந்த வரலாற்றுக் கடமைக்குத் தலைமை ஏற்று வழி நடத்த வேண்டிய பொறுப்பும் தகுதியும் தொழிலாளர் வர்க்கத்திற்குத்தான் உள்ளது. எனவே தொழிலாளர்கள் அனைவரும் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகள் இல்லாமல், கட்சி, தொழிற்சங்க வேறுபாடுகள் இல்லாமல் தொழிலாளி வர்க்கம் என்ற அடிப்படையில் ஓரணியாகத் திரள வேண்டும். தங்களுடைய தலைமையில் அனைத்து மக்களையும் அணி திரட்ட வேண்டும்.

                                                                            - குமணன்

Comments

  1. நன்று. மிக பெரிய கட்டுரை.

    ReplyDelete
  2. தோழருடைய இந்தக் கட்டுரை அரியானாவில் நூ மாவட்டத்தில் ஆளும் வர்க்கங்கள் நடத்தி வரும் வகுப்புவாத வன்முறை குறித்த எல்லா விவரங்களையும் தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறது. அந்த விவரங்களின் பின்னணியில் கட்டுரை "மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அவர்களை ஒருவரோடு ஒருவர் மோத விடுவதன் மூலம் ஆளும் வர்க்கம் மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் தனக்கு எதிராக உருவாகாமல் பார்த்துக் கொள்கிறது. தங்களுடைய வறுமைக்கும் ஏழ்மைக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் காரணம் ஆளும் முதலாளிய வர்க்கத்தின் சுரண்டலும் அரசியலும்தான் காரணம் என்பதை மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்காக மக்களைப் பிளவுபடுத்தி தங்களுக்குள் தொடர்ந்து மோதலில் ஈடுபட வைக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. முதலாளிய வர்க்கத்தின் விசுவாசமான ஏஜண்டான பா.ஜ.க. அந்தப் பணியைத் திறமையாகச் செய்து வருகிறது." என்றும், "உண்மையில் அது கார்பொரேட் முதலாளிகளுக்கே சேவை செய்து வருகிறது" என்றும் வகுப்புவாத வன்முறையின் சாராம்சத்தை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.

    இந்தியாவில் இன்று நிலவும் சூழ்நிலையில், "தொழிலாளர்கள் அனைவரும் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகள் இல்லாமல், கட்சி, தொழிற்சங்க வேறுபாடுகள் இல்லாமல் தொழிலாளி வர்க்கம் என்ற அடிப்படையில் ஓரணியாகத் திரள வேண்டும். தங்களுடைய தலைமையில் அனைத்து மக்களையும் அணி திரட்ட வேண்டும்" என்று தெள்ளத் தெளிவாக அறைகூவல் விடுத்திருப்பது மிகவும் சரியான அவசியமான நிலைப்பாடாகும். இந்த அணுகுமுறையும், இலக்கு மட்டுமே தொழிலாளர்களையும் எல்லா உழைக்கும் மக்களையும் இந்த சுரண்டல் அமைப்பிலிருந்து விடுவிக்கும். இந்த இலக்கை அடைவதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடுவோம்.

    - தொழிலாளர் ஒற்றுமை இயக்கம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தொழிலாளி வர்க்க ஐக்கியத்தை நோக்கி முன்னேறட்டும்!

  சென்னை , சுங்குவார்சத்திரம் பகுதியில் மின்சாதனப் பொருட்கள் உற்பத்தியில் சாம்சங் நிறுவனம் 2007 இல் இருந்து ஈடுபட்டு வருகின்றது 1700 நிரந்தரத் தொழிலாளர்கள் , இந்த ஆலையில் பணியாற்றி வருகின்றனர் . ஊதியம் , வேலை நேரம், பாதுகாப்பான பணிச்சூழல் , கழிவறை , உணவகம் போன்ற தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்றாமலேயே நிர்வாகம் நீண்டகாலம் இந்த நிறுவனத்தை இயக்கி வருகிறது. தங்களின் வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும் , நல்ல பணிச் சூழலை உருவாக்கவும் வேண்டி தொழிலாளர்கள் தங்களுக்கென்று தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியைத் தொடங்கினர் . எனவே , சிஐடியூவுடன் இணைந்து ' சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் ' என்னும் பெயரில் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யக் கோரி ஜூலை 2 அன்று தொழிலாளர் துறையிடம் விண்ணப்பித்துள்ளனர் . இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து அங்கீகரிக்க வேண்டிய தொழிலாளர் துறையோ அ தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் 45 நாட்கள் கிடப்பில் போட்டது . சாம்சங் நிறுவத்திடமிருந்து இதற்கான எதிர்ப்பு ஆகஸ்டு 20 ஆம் தேதி பெறப்பட்...