Skip to main content

புவிக் கோளத்தைப் போர்க்களமாக மாற்றி வரும் ஏகாதிபத்தியப் போர் வெறியர்கள்!

 

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்குரைஞர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத் துறை செயலர் யோவவ் கல்லண்ட் இருவர் மீதும் போர் குற்றங்களை செய்ததாகக் குற்றம் சாட்டினார். அதற்கு எதிராக ஏகாதிபத்தியப் போர் குற்றவாளிகள் அனைவரும் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளனர்.

அமெரிக்க தலைவர் ஜோ பைடன், அமெரிக்கச் செயலாளர் ஆண்டனி பிலிங்கன் ஆகிய இருவரும் ஃபாசிஸ்ட் குடியரசுவாதிகளான மைக் ஜான்சன், லின்ட்சே கிரஹாம் ஆகியோருடன் இணைந்து கொண்டு சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தைக் குற்றம் சுமத்தி உள்ளனர்; மேலும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எந்த விதமான தண்டனைகளும் இல்லாமல் போர் குற்றம் புரிய உரிமை இருப்பதாக சவால் விடுகின்றனர். 20.5.2024-- அன்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் நடவடிக்கை குறித்து, " சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய தலைவர்களைக் கைது செய்ய 'அரெஸ்ட் வாரண்ட்டுக்கு' விண்ணப்பித்திருப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்" என்று அறிவித்தார். மேலும் அவர் முட்டாள்தனமாக, "இஸ்ரேல் பொதுமக்களைக் காப்பதற்காக தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தது என்பது தெளிவானது. இஸ்ரேல் மீது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தால் சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு மாறாக, பாலஸ்தீனத்தில் நடப்பது இனப் படுகொலை அல்ல. அதை நாங்கள் மறுக்கிறோம்" என்றார். 

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் "இந்த இருவரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களை எதேச்சையாகக் கொல்லவில்லை; அவர்கள் இனப்படுகொலை என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்தப் படுகொலையை ஆரம்பித்தோம் என்றும் தெளிவாகக் கூறியுள்ளார்கள். நெதன்யாகு பாலஸ்தீனர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது 'ராட்சசர்கள்' என்றும் 'வரலாற்றில் யூதர்களின் எதிரியாக கருதப்படும் அமலேக்கியர்கள்' என்றும் குறிப்பிடுகிறார்; கல்லன்ட் பாலஸ்தீனர்களை, 'மனித உருவிலான மிருகங்கள்' என்று குறிப்பிடுகிறார்" என்றும் விளக்குகிறார்.  

இது இனப்படுகொலை இல்லை என்றால் வேறு என்ன? 

சர்வ தேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமெரிக்காவின் ஆளும் கட்சியான ஜனநாயகக் கட்சியும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியும் கண்டனம் தெரிவிக்கின்றன.

பைடன் வெளிப்படையாக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கண்டனம் தெரிவித்த போது, அவரது தேசிய பாதுகாப்பு அமைப்பின் ஆலோசகர் ஜேக் சல்லிவன் இஸ்ரேலில் யோவோவ் கல்லன்ட்டுடன் கைகுலுக்கிக் கொண்டு கேமராவுக்கு போஸ் கொடுத்து கொண்டு இருந்தார். இது இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் 'பாலஸ்தீனத்தின் ரஃபாவின் மீது தாக்குதலை அதிகப்படுத்துவதே தன்னுடைய முக்கியமான நோக்கம்' என்பதை உறுதியுடன் அறிவித்தபோது நடந்தது. தங்களது சந்திப்பின்போது, "நாங்கள் உறுதியாக ராஃபாவின் மீதான தரைவழி தாக்குதலை அதிகப்படுத்த போகிறோம்" என்று கல்லன்ட், சல்லிவனிடம் கூறினார்.

ஏழரை மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதல் எந்த விதமான இடையூறும் இன்றி தொடர்ந்தது. இது வரையிலும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்களை, குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்துள்ளனர். ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் படு காயங்களால் ஊனமுற்றுள்ளனர். மேலும் மேற்கு கரையின் எழுபது சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டன. இவற்றோடு காசாவின் ஐந்து சதவிகித மக்கள் இஸ்ரேலின் பாதுகாப்பு படைகளால் கொல்லப்பட்டுள்ளனர்; அல்லது மிகக் கொடூரமாக உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். 

எதேச்சாதிகார சக்திகளின் ஆதரவு இல்லாமல் இந்தக் கொடுமைகள் எதையும் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. மேலாதிக்க சக்திகளான அமெரிக்காவும் ஜெர்மனியும் அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களையும் தளவாடங்களையும் மிகத் தீவிர வலதுசாரிகளான யூதர்களின் நாடான இஸ்ரேலுக்கு கொடுத்து இந்த போருக்கு---- அழிவுக்கு வழிவகுத்தன.

உள்நாட்டில், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய எதேச்சாதிகார சக்திகள் மிகத் தந்திரமான முறையில் இனப் படுகொலையின் எதிர்ப்பாளர்களை வேட்டையாடியது; அவர்கள் அனைவரையும் 'யூதர்களுக்கு எதிரானவர்கள்' என்று பொய்யாக அடையாளப்படுத்தி அவர்களது போராட்டங்களைத் தடை செய்தது;

மேலும் போராட்டக் களங்களில் இருந்த போலீஸ்காரர்களை இனப் படுகொலைக்கு எதிரான போராட்டங்களையும் முகாம்களையும் சிதைக்க அனுமதித்தது.

காசாவில் நடக்கும் காட்டுமிராண்டித்தனமான இந்த இனப்படுகொலை "ஜனநாயக பாதுகாவலர்கள் மற்றும் மனித உரிமைகளின் பாதுகாவலர்கள்" என்ற ஆனால் சுயநலம் நிறைந்த அவர்களின் முகத்திரையைக் கிழித்தெறிந்தது; மேலும் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ரஷ்யா சிதைந்ததிலிருந்து, பிற நாடுகளுடன் வலுச் சண்டைக்குப் போகும் நாடுகளின் நியாயமற்ற போக்குக்கு ஒப்புதல் கொடுத்து அங்கு ஆயுத விற்பனைக்கு வழி செய்வதே அவர்களுடைய திட்டமாக உள்ளது என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கியது.

வளைகுடா நாடுகளின் முதல் போரில் இருந்து அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒன்றுக்கு பின் ஒன்றாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான போர்களை ராணுவ முரண்பாடுகள் என்ற பெயரில் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதனுடைய ஐரோப்பிய கூட்டாளிகளும் மனித உரிமைகளுக்கான பணிகளைச் சிறிதும் ஓயாமல் செயல்பட்டு முன்னெடுத்துச் செல்பவர்கள் என்ற (சிறிதும் உண்மை இல்லாத) பெயருடன் அவர்களது அரசியல் அடிவருடிகளும் ஊடகவியலாளர்களும் இவர்களுடைய போர் குற்றங்களை நியாயப்படுத்தி வருகிறார்கள்.

முதல் வளைகுடா போர், சிலுவைப் போரை போன்றது, அப்பாவி மக்களைக் காப்பதற்காக என்று உலகத்திற்கு அறிவிக்கப்பட்டது. அது குவைத் மருத்துவமனைகளில் 'இன்குபேட்டரில்' வைத்திருந்த பச்சிளம் குழந்தைகளைக் கொன்றும் குர்த்தீஸ் மக்களை கொடுமையாக அடக்கி ஆண்டு கொண்டிருந்த காட்டுமிராண்டித் தனமான கொடுங்கோலனான சதாம் உசைனிடம் இருந்து இராக்கை சுதந்திரம் ஆக்குவதற்காகவும் நடத்தப்பட்ட போர் என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் கூறியது. 1999-ஆம் ஆண்டில் நேட்டோ போர் விமானங்கள் ஐரோப்பாவின் முக்கியமான நகரமான பெல்கிரேடை தாக்கி அழித்ததை நியாயப்படுத்த, செர்பிய அதிபரான ஸ்லோபோடன் மிலோசெவிக்கை "ஹிட்லரின் மறுபிறவி ----- ஹிட்லரை போலவே போஸ்னியர்களையும் கொசோவோவின் ஆல்பெனியர்களையும் இனப்படுகொலை செய்தவர்" என்று பொய் பிரச்சாரம் செய்தது.

அல்-கொய்தாவின் 9/11 தீவிரவாதத் தாக்குதலை சாக்காகக் கொண்டு "பெண்ணுரிமைக்காகவும், ஆப்கானிஸ்தானத்தில் குடியாட்சியை நிறுவுவதற்காகவும்" ஏற்கனவே நீண்ட காலமாகத் துன்பப்பட்டு கொண்டிருந்த மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானத்தை வாஷிங்டன் தனது காலனியாக்கி 20 ஆண்டுகள் ஆக்கிரமித்ததை நியாயப்படுத்தியது.

அமெரிக்கா தலைமையேற்று, இராக்கின் “விருப்பத்துடன் அமைந்த கூட்டணி" என்ற பெயரில் நடத்திய போர் இராக்கிய சமுதாயத்தை அழித்ததுடன் 2003 -- ஆம் ஆண்டில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் இராக்கை ஆக்கிரமித்தது. ஆனால் அதை "இராக்கின் விடுதலைக்கான உதவி" என்ற பெயரில் ஏராளமான பொதுமக்களைக் கொன்று குவித்ததுடன், அவர்களுக்குள்ளேயே இனப் போராட்டங்களையும், மதப் போராட்டங்களையும் பற்றி எரியச் செய்தது. 

2011 -- ஆம் ஆண்டில் நேட்டோவினால் லிபியாவில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்கள் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கின; லிபியாவின் தலைவரான மும்மர் கடாஃபி கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்; கண்டத்தின் மிக முன்னேறிய சமூகங்களில் ஒன்றான லிபியாவில் உள்நாட்டு யுத்தத்தை தூண்டிவிட்டது --- அது இன்றுவரை கொடூரமான முறையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேட்டோவின் வழக்கறிஞர்கள் போருக்கு ஆதரவான சட்ட வடிவ கோட்பாட்டின் அடிப்படையில், கனடா அரசாங்கம் நிதி உதவி அளித்த தந்திரமான திட்டம் ஒன்றை வடிவமைத்தனர். அது, கடாஃபியின் திட்டத்தின்படி ஏராளமான மக்களை படுகொலை செய்வதிலிருந்து காப்பாற்றும் பொறுப்பு உள்ளது' என்று அமெரிக்காவின் நாச வேலையை நியாயப்படுத்தியது. மேலும் இதே போன்ற பொய்களை கூறி சிரியாவில் ஆசாத் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டுக் கலகங்களைத் தூண்டினர்; அவை டமாஸ்கசில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பினர்; அங்கு தூண்டிய உள்நாட்டுப் போரை சட்டபூர்வமாக நியாயப்படுத்தினர்.

இத்தகைய குற்றங்கள் இப்பொழுது கொடுங்கோன்மையின் புதிய எல்லையை அடைந்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடைவிடாது தொடர்ந்த போர்கள், உலகளாவிய சந்தைக்காகவும், மூலப்பொருட்களுக்காகவும், உலகளாவிய அரசியல் செல்வாக்குக்காகவும் மற்ற ஆதிக்க சக்திகளுடன் இணைந்து மூன்றாம் உலகப் போர் என்னும் மேலும் மூர்க்கமான நிலைக்கு இட்டுச் செல்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் தனது ஒன்றுபடுத்தப்பட்ட உறுதியான மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் தொலைநோக்கு பார்வையுடன் வாஷிங்டன், இஸ்ரேலின் "பாலஸ்தீன பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு" என்ற அடிப்படையிலான போரை, ஆயுதங்களை அளிப்பதன் மூலம் ஆதரிக்கிறது; அது ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கான போரை வலுப்படுத்தவே ஆகும்.

இத்தகைய நோக்கத்துடன் ஆன அமெரிக்காவின் போர்களின் மற்றொரு முகமாக --- முன்னிலையாக இருப்பது ரஷ்ய--உக்ரைன் போராகும். உக்ரைன் போரில் உண்மையான யூத எதிர்ப்பாளர்களுடனும் நாஜிகளுடன் இணைந்த அரசியல் வாரிசுகளுடனும் "மக்களின் உரிமைக்காக" என்ற முகமூடியுடன் ரஷ்யாவுக்கு எதிராகவும், மேலும் ஆசிய பசிபிக் பகுதிகளில் சீனாவுக்கு எதிராகவும் நடக்கும் போர்களை ஆயுதங்கள் வழங்கி உத்வேகப்படுத்தி வருகின்றனர். 

அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் இந்த இரண்டு நாடுகளையும் வீழ்த்தி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவற்றின் அரைக்காலனிய நாடுகளாக்கி, அதன் மூலமாக அவற்றின் இயற்கை வளங்களை அபகரிப்பதையும் முக்கியமாக சீனாவில் அதனுடைய பொருளாதார, மற்றும் அரசியல் வளர்ச்சியை மிக முக்கியமாக "தனக்கு இணையான போட்டியாளராக "உருவெடுப்பதை"த் தடுக்கவும் திட்டமிட்டு இடைவிடாது தொடர்ந்து முயற்சிக்கின்றன. இதற்காக அவர்கள் எத்தகைய குற்றங்களைப் புரிவதையும், அது இனப்படுகொலையாகட்டும், அணு ஆயுதங்கள் மூலம் மனித வாழ்வையே வேரோடு அழித்தொழிப்பதாகட்டும் என்று எதைப் பற்றியும் பொருட்படுத்தாத ஆதிக்கவெறியுடன் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள்.

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் எதேச்சாதிகார சக்திகளின் பாசாங்குத்தனத்தையும் சட்டங்களுக்கு கட்டுப்படாத போக்கையும் தெளிவாக அறிந்து கொண்டுள்ளனர். காசாவின் இனப்படுகொலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கையும், மேலும் போராட்டக்காரர்களை போலீசார் தாக்கிய நடவடிக்கைக்கு எதிர்ப்பாகவும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகவும் போராட்டத்தில் இறங்கிய கல்வி நிலையங்களின் பணியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எதிராக போலீசார் நடத்திய கடுமையான அடக்குமுறையும் இதற்கான உறுதியான சாட்சியாகும்.

எதேச்சாதிகார மமதை கொண்டு, 'லீக் ஆஃப் நேஷன்ஸ்--- league of Nations' அமைப்பை சேர்ந்த ஒவ்வொரு நாட்டையும் மிகுந்த வன்முறையுடன் சிதைத்து, அபிசீனியா தொடங்கி ஐரோப்பாவின் தலைநகர் ஒவ்வொன்றாக கைப்பற்றிய இத்தாலியின் முசோலினி, ஜெர்மனியின் ஹிட்லர் ஆகியவர்களைப் போல அமெரிக்காவின் அதிபர் பிடன், ஜெர்மனியின் சான்ஸ்லரான ஸ்கோல்ஷ், பிரிட்டனின் சுனாக், மற்றும் பிரான்சின் மேக்ரோன் ஆகிய 21--ஆம் நூற்றாண்டின் காட்டுமிராண்டித்தனமான எதேச்சாதிகாரிகள், ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் அவர்களை கட்டுப்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். போர் குற்றவாளிகளான நெதன்யாகு மற்றும் பிடன் ஆகியவர் பற்றி இந்த அமைப்புகளில் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் தோல்வியே அடைகின்றன.

காட்டுமிராண்டித்தனமான எதேச்சாதிகாரத்தை உருவாக்கும்

முதலாளித்துவ நாடுகளில் ஏற்படும் முரண்பாடுகள், சர்வதேச உழைக்கும் வர்க்கத்தை போராட்டங்களுக்குள் தள்ளுகின்றன. இனப்படுகொலைக்கு எதிராகவும் எதேச்சாதிகார அரசாங்கங்களின் காசாவின் இனப்படுகொலைக்கு உடந்தையான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராடும் மாணவர்களும் இளைஞர்களும் சுதந்திரமான -- தெளிவான அரசியல் இயக்கங்களுக்காக போராட வேண்டும். அதுவே இன்றைய அடிப்படையான அவசியம் ஆகும்.

போர் குற்றவாளிகளை சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதும், இனப்படுகொலையை நிறுத்துவதும் மேலும் மூன்றாம் உலகப் போர் உருவாவதற்கான நிலைமைகளை தடுப்பதும், புரட்சிகரமான சமூக மாற்றத்துடன் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ள கடமைகளாகும்; இந்த புரட்சிகர சமூக மாற்றம் உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் காட்டுமிராண்டித்தனமான முதலாளித்துவத்தை அடியோடு ஒழித்து சோசலிசத்தை நிறுவுவதன் மூலமே சாத்தியமாகும்.

-    கவிதா

 

(மே 24, 2024 Monthly review on Line ல் வெளி வந்த League of imperialist criminal dennounces the International Criminal Court என்ற கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)

Comments

  1. ஏகாதிபத்தியத்தின் போர் வெறியையும், அவர்கள் உலகெங்கிலும் போர்களைத் தூண்டி விட்டு நடத்தி மக்களை வதைத்தும் கொன்றும் வருவதை இக்கட்டுரை மிகவும் தெளிவாக ஆதாரத்துடன் எடுத்து விளக்கியிருக்கிறது. மேலும் கடந்த 20-30 ஆண்டுகளாக, ஏகாதிபத்தியம் மத்திய கிழக்குப் பகுதியில் நடத்திய போர்க் குற்றங்களை பட்டியலிட்டிருக்கிறது.

    தொழிலாளி வர்க்கம், முதலாளி வர்க்கத்தைத் தூக்கியெறிவதன் மூலமும் சோசலிசத்தை நிறுவுவதன் மூலமும் மட்டுமே ஏகாதிபத்திய நாடுகளின் இந்த போர் வெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென அறுதியிட்டுக் கூறியிருப்பது முற்றிலும் உண்மை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட