பயங்கரவாதம் என்பது வன்முறைச் செயலாகும் --- அது
பெரும்பாலும் அரசியல் ரீதியான அல்லது ஒரு கருத்தியல் ரீதியான நோக்கத்துடன் அப்பாவி மக்களைத் துன்புறுத்தும் செயலாகும். இதன் அடிப்படையில் அமேசான் நிறுவனம்
கனடாவின் குவெபெக் நகரத்திலிருந்த
தனது இருப்புக்
கிடங்கு ஒன்றில்
தொழிற்சங்கம் உருவாவதைத் தடுப்பதற்காக
அங்கிருந்த தனது 7 இருப்புக் கிடங்குகளையும் மூடியது ஒரு பொருளாதார வன்முறைச் செயலாகும். இதனால் வேலை இழக்கும் 1700 தொழிலாளர்களின் வாழ்க்கை மிக மோசமாகச் சீரழியும்; சிலர் இதிலிருந்து எப்பொழுதுமே மீண்டு வர மாட்டார்கள்.
இந்த வேதனை அவர்களது குடும்பம் மற்றும் அவர்களது சமூகம் முழுவதையும் பாதிக்கும்
ஒன்றாகும்.
இந்தக் கிடங்குகளை
மூடுவதற்கு இட்டுச் சென்ற தொடர் நிகழ்வுகளில் இந்தத் தொழிலாளர்களின் பங்கு ஒன்றும் இல்லை. லாவல் நகரத்தில் இருந்த ஒரு கிடங்கில் 2024-ஆம் ஆண்டில் தொழிற்சங்கம் சட்டரீதியாக
அமைக்கப்பட்டது. மற்ற ஆறு கிடங்குகளில் பணிபுரிந்த
தொழிலாளர்கள் இதில் இணையவில்லை என்றாலும் தொழிற்சங்கத்தை உடைத்து நொறுக்கும்
அமேசான் நிறுவனத்தின் செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தங்களைச் சரியாக நடத்த வேண்டும் என்ற போராட்டத்திற்காகவே லாவல் கிடங்கின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்
பாதிக்கப்பட்டார்கள்; உண்மையில் அவர்கள்
கார்ப்பரேட் அதிகாரிகள் சொல்வது போல விஷமிகள் அல்ல; வன்முறையாளர்களும் அல்ல; அவர்கள் அப்பாவிகளே. அந்தத் தொழிலாளர்கள் தாங்கள் ஒன்று
கூடுவதற்கான ஜனநாயக உரிமைகளையே பின்பற்றினார்கள்; அதோடு, ஆபத்தான வேலைகளில் அவர்களுக்கான
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதையே அவர்கள் கோரினார்கள்.
கனடாவின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தொழிலாளர்
சட்டத்தின்படி தொழிலாளர்கள் சுதந்திரமாகச் சங்கங்களில் கூடுவதற்கான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்பது
அங்கு நீண்ட காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்
சட்டமாகும். இதன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் தொழிலாளர் சங்கங்களில் ஒன்று கூடி முதலாளிகளுடன் பேரம்
பேச முடியும். தொழிலாளர்கள் ஒன்று
கூடி பேரம்
பேசும் சங்கம் மற்றும்
தொழிலாளர் சட்டங்களின் ஒழுங்கமைப்பின் அடிப்படையிலான குறைந்தபட்ச ஊதியம் என்பது போன்றவை இல்லாவிட்டால்
கூலி என்பது வெறும் பிழைப்பு ஊதியமாகக் குறைந்துவிடும்.
முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான அதிகார
வேறுபாடு முதலாளித்துவத்தில் இயல்பான ஒன்றாகும்; அது அமேசான் நிறுவனத்தில் மிக
உச்சபட்சமாக உள்ளது. அமேசான் மிக அதிகமாகத் தொழிலாளர்களைக் கொண்ட உலகின்
இரண்டாவது மிகப்பெரிய தனியார் நிறுவனமாகும்; உலக அளவில் 2024--ஆம் வருடத்தில் 15 இலட்சம் தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனம் ஆகும். இது அமேசானுக்காக வேலை
செய்யும் பல நூறு ஆயிரம் பணி
நிரந்தரமற்ற தொழிலாளர்களைக் கணக்கில்
கொள்ளவில்லை; பொருள்களை
வாடிக்கையாளருக்கு கொண்டு சேர்க்கும் ஓட்டுநர்கள் மற்றும் குறைந்த ஊதியம் பெறும்
ஒப்பந்தத் தொழிலாளர்கள்
ஆகியவர்கள் இதில் அடங்குவார்கள்.
பல நாடுகளில் அமேசான் ஏகபோக நிறுவனமாக
மாறியுள்ளது. பல அமைப்புகளில்
இருந்து பொருட்களை வாங்கும் நிறுவனமாக உள்ளது; அதாவது தனக்குப் பொருட்களை
விற்பவர்களிடம் விலைகளை நிர்ணயிக்கும் முறையிலேயே அது தனது பொருட்களை வாங்குபவர்களிடமும் விலையை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்த
ஏகபோக நிறுவனமாக உள்ளது. மிக அதிக லாபமடையும் உலகின் பெரும் ஏகபோக நிறுவனம்
ஒன்றில் பணிபுரியும் தொழிலாளர்கள், அந்த அதீத
லாபத்திலிருந்து சிறு உபரியைக் கூடப் பெற முடியாத
நிலையில் உள்ளார்கள் என்பதை இந்த அதிகாரம் விளக்குகிறது. மிகவும் அவசியமான திறன் மிகுந்த ஆனால்
ஆபத்தான வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அமேசானின் கிடங்குகளில் ஆரம்ப ஊதியம் அந்த நாடுகளின் குறைந்த பட்ச
ஊதியத்தை விட சிறிய அளவிலேயே அதிகமாக உள்ளது.
இத்தகைய உள்ளார்ந்த சமநிலையற்ற அதிகாரத்தை எதிர்ப்பதற்காகத் தொழிலாளர்கள் சங்கங்களை அமைக்கவும்
தங்களது கோரிக்கைகளைப் பற்றிப் பேரம் பேசவும் அதற்கான தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடவுமான உரிமைகளை உச்ச நீதிமன்றத்தின் சட்டங்களும்
திட்டங்களும் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
ஆனால் அமேசான் நிறுவனம், லாவலில் உள்ள தன்னுடைய முதல்
தொழிற்சங்கத்தின் பதிவை கனடாவின் மக்களின் சுதந்திரமான - உரிமைகளை
உறுதிப்படுத்தும் அரசியலமைப்புச் சட்டத்தை குறிப்பிட்டு எதிர்த்தது; தொழிலாளர்களில் --- குவெபெக் தொழிற்சங்கபதிவு
விதிகளின் அடிப்படையில், பெரும்பான்மையானவர்களை
உறுப்பினர்களாகக் கொண்ட தொழிற்சங்கம்
பதிவு செய்வது அரசியலமைப்புக்கு எதிரானது என்று குறிப்பிட்டு அந்தத் தொழிற்சங்கத்தை எதிர்த்தது. அந்த
நிறுவனத்தின் கோரிக்கை நீதிமன்றத்தால் எள்ளி நகையாடப்பட்டது. லாவல் தொழிற்சங்கத்தின் பதிவு
உறுதிப்படுத்தப்பட்டு பேச்சுவார்தை மீண்டும் தொடங்கியது .
அமேசான் அவர்களுடன் பேச்சு
வார்த்தைகளை நடத்தத் தாமதப்படுத்துவது அல்லது பேச்சு
வார்த்தைகளைத் தடை செய்வது ஆகிய யுத்திகளின் மூலம் தொழிற்சங்கத்தைப் பலவீனப்படுத்த
முயன்றது. அமெரிக்காவின் ஸ்டேட்டென் தீவில் உள்ள அமேசானின் ஒரே தொழிற்சங்கத்தின்
மீதும் அமேசான் இத்தகைய யுக்திகளையே மேற்கொண்டது. இந்த மாகாணத்தின் தொழிலாளர்களுக்கான முதலாவது ஒப்பந்த நடுவர்மன்ற அமைப்பின் காரணமாக இது குவெபெக்கில் சாத்தியப்படாது, ஒப்பந்த காலத்தின் தொடக்க நிலையில் தொழிலாளர்களுக்கான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தாலும், தொழிலாளர் வாரியம் தொடக்க நிலை
நிபந்தனைகளையும் விதிகளையும் வகுப்பதற்கான அடிப்படை கூட்டு ஒப்பந்தத்தை
கட்டாயப்படுத்தும். .
எனவே, இவ்வாறு தொழிற்சங்கம் அமைவதற்கு
அமேசானின் தந்திரமான எதிர்ப்பு குவெபெக் அமைப்பால் தோற்கடிக்கப்பட்டது.
தொழிற்சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு நீதிமன்றங்களால் உறுதிப்படுத்தப்பட்டது; மேலும் சில வாரங்களில் தொழிலாளர்
வாரியத்தால் அது இயங்குவதற்கான கூட்டு ஒப்பந்தம் உருவாக்கப்படும். லாவல் தொழிற்சங்கத்தின் வெற்றி, குவெபெக்கின் பிற இடங்களிலும்
தொழிற்சங்கம் அமைப்பதில் வெற்றி பெறும்.
சுருக்கமாகக் கூறினால் லாவல், அளவிட முடியாத அதிகாரம் கொண்ட, ஏராளமான லாபம் குவிக்கும் அமேசான்
நிறுவனம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றைச் சாதித்தது. ஆகையால் அமேசான் நிறுவனம், குவெபெக்கின் அனைத்து பகுதிகளிலும், ஏராளமான சீரழிவை ஏற்படுத்தும்
நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அந்நிறுவனம், இந்த முடிவு தொழிற்சங்கத்துடன் தொடர்பு இல்லாதவை என்று கூறியது --- இது
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் கூட நம்ப முடியாத
பொய்யாகும்.
அமேசான், லாவலில் ஏற்படுத்தப்பட்ட ஒரு புது
ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதிகரிக்கும் தொழிலாளர்களின் கூலியைத் தவிர்ப்பதற்காகவும், மற்ற இடங்களிலும்
இந்த உயர்வைத்
தவிர்ப்பதற்காகவும் தொழிற்சங்கக் கலைப்புகளில் ஈடுபட்டது. ஆனால் அதன்
முக்கியமான குறிக்கோள், 1700 அப்பாவித் தொழிலாளர்களை பணியில் இருந்து
நீக்குவதன் மூலம், குவெபெக், கனடா மட்டுமல்ல உலகம் முழுவதும் அதன் அதிகாரம் மிக்க, அச்சத்தை ஏற்படுத்தும் கருத்தியலை தொழிலாளர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்
என்பதுதான் அதன் நோக்கம். ஆகும். ‘அதிகமான சம்பளத்தையும் தகுந்த வேலை நிலைமைகளையும்
நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது; நாங்கள் உங்களை ஒடுக்குவோம் --- உங்களின்
வாழ்வை அழித்து ஒழிப்போம்’ என்பதே அமேசானின் செய்தி.
இதுதான் பொருளாதார பயங்கரவாதம்.
வலது சாரி வணிக செய்தித்தாள்களும்
சமூக வலைத்தளங்களும், 'தொழிற் சங்கங்களின்
பேராசையால்' தவிர்க்கவே
முடியாமல் இந்த கதவடைப்பு நிகழ்ந்தது’ என்று உரக்க கூறின. இலட்சம் கோடிகள் அமெரிக்க டாலர் மதிப்புடைய, மிக அதிக லாபம் ஈட்டும் ஒரு
நிறுவனத்திடம் இருந்து, நடைமுறையில் உள்ள மிகச் சிறிய ஊதியத்தைச் சிறிதளவு உயர்த்தக் கூறும்
தொழிற்சங்கத்தின் கோரிக்கை 'பேராசை' என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.
தொழிலாளர்கள் கோரிக்கை மிக அதிகமாக
இருக்கும் பொழுது, அவர்களுக்கு வேலை
வாய்ப்பு கொடுக்கும் முதலாளிகள் அங்கிருந்து வெளியேறி விடுவார்கள் என்று வழக்கமான கார்ப்பரேட்டுகள் கூறுவது இங்கு பொருந்தாது. அமேசான்
குவெபெக்கை விட்டு வெளியேறவில்லை; அங்குள்ள
வாடிக்கையாளர்களிடம் தனது வியாபாரத்தைத் தொடர விரும்புவதால்
அது வெளியேற முடியாது. ஒரு தொழிற்சாலை அல்லது வணிகத் தகவல் அழைப்பு மையம் போல, அமேசான் மிக மிகக் குறைந்த ஊதியத்தில்
தொழிலாளர்கள் கிடைக்கக்கூடிய நாட்டுக்குத் தனது நிறுவனத்தின் கிளையை மாற்ற முடியாது; ஏனென்றால் தங்களுக்குத் வேண்டிய பொருட்கள் தங்களது வாசலிலேயே
கிடைப்பதை விரும்பும் ஏராளமான வாடிக்கையாளர்கள் குவெபெக்கில் உள்ளார்கள்.
மாறாக அமேசான், குவெபெக்கின் தொழிலாளர் உரிமைகளுக்கு எதிராகத் தனது இறுதி முயற்சியை எடுத்துள்ளது. அது தனது பொருட்களையும் பொட்டலங்களையும் எடுத்துச் செல்லும் வேலையை “குவெபெக் சிறு நிறுவனங்களிடம்” ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இவை பணி நிரந்தரமற்ற கிக் (gig) அடிப்படையிலான தொழிலாளர் முறையைக் கடைப்பிடிக்கின்றன; இங்கு ஓட்டுநர்களுக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் செய்து முடித்த வேலையின் அடிப்படையில் கூலி கொடுக்கப்படுகிறது; இவர்களுக்கு வழக்கத்தில் உள்ள மணி கணக்கில் அளவிடப்படும் சம்பளம் வழங்கப்படுவதில்லை; இவர்களுக்கு தொடர்ந்து வேலை கிடைப்பது என்பது வாடிக்கையாளர்களின் தேவையைச் சார்ந்துள்ளது; அதாவது இந்த வியாபாரத்தின் தொய்வுகள் தொழிலாளர்கள் மீது போடப்படுகின்றன.
இப்படிப் பொருள்களை எடுத்துச் சென்று
கொடுக்கும் ஒப்பந்ததாரர்ககள் சிதறுண்டு இருப்பதால், மத்தியப்படுத்தப்பட்ட கிடங்கில் உள்ள தொழிலாளர்களை விட இவர்களை
ஒன்றிணைத்துச் சங்கம் அமைப்பது
என்பது மிகக் கடினமானது. பணி நிரந்தரமற்ற கிக் தொழிலாளர்கள், சட்ட ரீதியாக
தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு விதிகளுக்குள் வருவது இல்லை.
ஒன்றுபடுத்தப்பட்ட அச்சமூட்டும் சக்தியை அமேசான்
கொண்டிருந்தாலும் அதனுடைய சுரண்டல்
எதிர்க்க முடியாதது என்ற முடிவுக்கு வருவது தவறானது ஆகும். குவெபேக்கை விட்டுப் போகாமல், அதே சமயத்தில், தன்னுடைய கிடங்குகளில் முன்பு பணிபுரிந்து வந்த
தொழிலாளர்களுக்குப் பதிலாக உரிமைகள் மறுக்கப்பட்ட புதிய தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துவது மீண்டும் ஒரு
போராட்டத்திற்கான முக்கியமான தெளிவான முன்னறிவிப்பாகும்.
உண்மையில் அமேசான் நிறுவனம் நேரடியாகவும்
மறைமுகமாகவும் கனடா அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் மானியங்களைப் பெற்றுப் பயனடைந்துள்ளது. மாண்ட்ரியலுக்கு
அருகில் அமைந்துள்ள, அசுரத்தனமாக
மின்சார சக்தியை உறிஞ்சும் அமேசானின் டேட்டா சென்டர், கனடாவின் ஹைட்ரோ - குவெபெக்
அமைப்பிலிருந்து முன்னுரிமை அடிப்படையில், குறைந்த விலையில் வழங்கப்படும்
மின்சாரத்தைப் பெறுவது இவற்றில்
ஒன்றாகும்; மேலும் அமேசான் வலைத்தள சேவை (AWS) நிறுவனத்திலிருந்து கனடா அரசாங்கம்
மிகப்பெரிய அளவில் கணினி சார்ந்த சேவைகளை விலைக்கு வாங்குகிறது.
மேலும் கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் கனடாவின் கூட்டரசாங்கம் அவசியமான மருத்துவ உபகரணங்களையும் மருந்துகளையும் விநியோகிக்க அமேசான் நிறுவனத்தை பயன்படுத்திக் கொண்டது.
மக்கள் நலனை லட்சியமாக கொண்ட ஒரு
அரசாங்கம், அமேசானுக்குத் தான் அளிக்கும் ஆதரவைப் பயன்படுத்தியும், அந்த
நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு
எதிராக மிகப்பெரிய அளவில் எழுந்துள்ள பொதுமக்கள் கொந்தளிப்பைப் பயன்படுத்தியும் அதனைக் கட்டுப்படுத்தலாம். (இந்தக் கட்டுரையை எழுதிக்
கொண்டிருக்கும் பொழுது ஊடகங்களின் அறிக்கைகள் கனடா அரசாங்கம் அமேசான் உடன் செய்து
கொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக மிரட்டி அந்நிறுவனத்தின் தொழிலாளர் விரோத
நடவடிக்கையை மாற்றுவதற்கு அழுத்தம் கொடுத்த செய்தியை அறிவித்தன).
அமேசானின் அபரிமிதமான சொத்து குவிப்பு
மற்றும் பல விதங்களிலும் கனடாவுக்குத் தொடர்ந்து
நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின்
நிர்வாகத்துடன் அது கொண்டிருக்கும் நெருக்கம் ஆகியவை, தொழிலாளர்களின் கஷ்டங்களுக்கும், அவர்களின் மீதான சுரண்டலுக்கும் உண்மையான
மூலாதாரங்களாக இருப்பது எவை என அம்பலப்படுத்துகின்றன.
அமேசான் குவெபெக்கில் உள்ள தனது கிடங்கை மூடுவதாக அறிவித்த அதே நாள் எப்போதுமே
இல்லாத அளவுக்கு 235 அமெரிக்க டாலர்களாக
அமேசானின் பங்குகளின் விலை அதிகரித்தது; இதனால் மிகப்பெரிய சாதனையாக 2.5 இலட்சம் கோடி டாலர்களாக அதன் மூலதனத்தின் மதிப்பு
அதிகரித்தது; மேலும் உலக அளவில்
அமேசான் நான்காவது பணக்கார நிறுவனமாக உயர்ந்தது.
குவெபெக் கிட்டங்கி மூடப்படுவதற்கு
இரண்டு நாட்களுக்கு முன்புதான் அமேசானின் தலைவரும் மிக அதிக அளவில் அதன் பங்குகளைக்
கொண்டுள்ளவருமான ஜெஃப் பெஷோஷ், டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் முன்
வரிசையில் அமர்ந்து கொண்டு, ஜனநாயக விரோதமான
கொள்கைகளையும், கனடா மற்றும் பிற
நாடுகளின் இறையாண்மையையும் அவற்றின் எல்லைகளையும் அச்சுறுத்தும் அறிக்கையை ட்ரம்ப்
அறிவித்தபோது, அதை கைதட்டிப் பாராட்டிக்
கொண்டிருந்தார்.
ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் 80 நாட்களில் அமேசானின் சந்தை மூலதன மதிப்பு 20% அதிகரித்து 420 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
மதிப்புக்கு உயர்ந்தது. அந்த நிறுவனத்தில் பெஷோஷுக்கு சொந்தமான 9% பங்குகள் மதிப்பு 36 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. இதனால் அவரது சொத்து மதிப்பு 210 பில்லியன் அமெரிக்க டாலர்களாக
உயர்ந்தது. இப்போது உலக அளவில் உள்ள அமேசானின் 15 இலட்சம் தொழிலாளர்களில் ஒவ்வொருவருக்கும் அமேசானின் சந்தை மூலதனத்தின் மதிப்பு 16 இலட்சம் டாலர்களாக உள்ளது. ஆனால் தொழிலாளர்கள் தங்கள் உழைப்பில்
இருந்து உருவான அந்த லாபத்தின் மிகச்
சிறிய பகுதியைக் கூட அடைவதைத் தடுக்க அந்த
நிறுவனம் உறுதியாக உள்ளது.
அமேசான் கனடாவில் தனது வியாபாரத்திற்கான நிதி அறிக்கையை வெளியிடுவதில்லை. அது
இனிமையான மென்மையான விதத்தில் அது சமூகத்திற்கு செய்த “சிறந்த தொண்டுகள்” என்று
தனது வருடாந்திர சமூக நல அறிக்கையை அளிக்கிறது. இதில் “வருமானம்” என்றோ “லாபம்”
என்றோ எங்குமே குறிப்பிடப்படுவதில்லை. கனடாவின் உள்ள 45,000 தொழிலாளர்களில்
ஒவ்வொருவருக்கும் அது 30,000 டாலர்கள் லாபம் அடைகிறது என நான்
மதிப்பீடு செய்கிறேன்.
அமெரிக்காவின் வலிமை மிக்க சிறு
குழுவின் ஆட்சி, கார்ப்பரேட்
ஏகபோகம் மற்றும் சந்தையை தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வலிமை, ஜனநாயகம் மற்றும் இறையாண்மையின்
சிதைவு, தொழிலாளர்களின்
வாழ்க்கை நிலைமைகளில் ஏற்படும் தாக்குதல்கள் இவற்றுக்குள் உள்ள தொடர்பு
வெளிப்படையாகத் தெளிவாகத் தெரியாது; தொழிலாளர்களின் பிரச்சினைகளின்
அடிப்படை கார்ப்பரேட் அதிகாரத்தில் இருந்தே உருவாகிறது என்பதை அமேசானின் செயல்பாடுகள் தெளிவாக
உணர்த்துகின்றன.
கனடாவின் ஒவ்வொரு பகுதியிலுமுள்ள தொழிற்சங்கங்களும் சமூக இயக்கங்களும் அமேசானின் கிளைகள் அச்சமூட்டும் விதத்தில் மூடப்படுவதையும், தொழிலாளர்கள் மீது அது தொடுக்கும் ஜனநாயக விரோதமான நடவடிக்கைகளையும் எதிர்த்து உறுதியுடன் செயல்பட வேண்டியது அவசியம் ஆகும்.
ஆங்கில மூலம்: ஜிம் ஸ்டேன்ஃபோர்ட்
[ஆசிரியர் பற்றிய
குறிப்பு: ஜிம் ஸ்டேன்ஃபோர்ட்
(Jim
Stanford), பொருளாதார அறிஞர், வான்கௌவரில் உள்ள எதிர்காலப்
பணிக்கான மையம் (Centre for Future Work) என்ற அமைப்பின் இயக்குநர்.]
நன்றி. Monthly Review Online
நவீன சனநாயக நாடாக பிரபலப்படுத்தப்படும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தொழிலாளர் உரிமைகள் எந்த அளவில் இருக்கின்றன என்பதற்கு அமேசான் தொழிலாளர்களுடைய போராட்டமும், அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களும் சிறந்த எடுத்துக் காட்டாகும். அங்குள்ள நீதி மன்றங்களும், அரசாங்கமும் அப்பட்டமாக முதலாளி வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கும் நிறுவனங்கள் என்பதை நாம் கண்கூடாகக் காண முடிகிறது.
ReplyDeleteகனடாவில் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், இந்திய முதலாளிகள் நம் தொழிலாளிகள் மீது நடத்தும் தாக்குதல்கள் போலவே மிகவும் கொடூரமானதாகவும், வஞ்சகம் நிறைந்ததாகவும் இருப்பது, முதலாளித்துவ அமைப்பில் சனநாயகமானது ஆளும் முதலாளி வர்க்கத்திற்கு மட்டும் தானே ஒழிய பெரும்பாலான தொழிலாளர்களுக்கு இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டுகிறது.
முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டாமல், தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை நிலைநாட்ட முடியாது என்பது உண்மை. அதற்காக தொழிலாளி வர்க்கம் அணி திரள வேண்டும்.