Skip to main content

கவிதை - ஊசி துளைக்கப்பட்ட கரங்கள்


ஊசி துளைக்கப்பட்ட கரங்கள் 

அவள் கரங்களின் சித்திரவேலைப்  பின்னலில் 

பேரழகு வடிவங்கள் மிளிர்ந்தன

அழுக்கடைந்த சிறிய இருட்டறையில்

ஒளிமிக்க நிலாக்களும் விண்மீன்களும் 

அவளுடைய தோல் போர்த்திய கரங்களால்

ஆடைகளில் உயிர்பெற்று மின்னின.

குவிந்து கிடந்த நூற்கண்டுகள்

அவளுடைய ஊசி துளைத்த விரல்களால்

இரவின் ஒளியில் மின்மினிகளாய்

துணிமணிகளில் மாயம் புரிந்தன

கடிகாரம் நள்ளிரவு மணியை ஒலித்தபோது

அவளது காய்த்துப் போன கரங்களால் 

அவள் படைத்த மெல்லிய அலங்கார  ஆடைகளை 

அணியும் பேறு அவளுக்கில்லை என்பது

அவளுக்குத் தெரியும்

அனைத்து வலிகளும் 

உங்கள் வாழ்வின் அனைத்து உயிராற்றல்களையும்

உறிஞ்சக் கூடிய ஒரு கருந்துளையின் 

ஆற்றல் போல் வருவதில்லை 

சில வலிகள்

நீங்கள் உருவாக்கிய அந்தக் கணத்தில் 

உங்கள் கரங்களிலிருந்து பறித்துச் செல்லப்படும் போது.  

பளிச்சிடும் வண்ண ஆடைகள் 

வடிவத்திலும் வரும். 


மகிழ்ச்சியற்ற  கொண்டாட்டம்

அவர்கள் ஜொலிக்கும் சிவப்பு வண்ண

மேலங்கிகளை அணிந்திருக்கிறார்கள்

இடுப்பில் தங்கமென மின்னும் கச்சைகள்

படாபடோபமான மணவிழாத் தலைப்பாகை

தூரத்தில் இருந்தாலும் கூட்டத்தில்

அவர்கள் தனித்துத் தெரிகிறார்கள்

ஆனால் அவர்களை யாரும் பார்க்கவில்லை 

தங்களுடன் கொண்டுவந்த

பித்தளை இசைக்கருவிகளை இசைத்தவாறே

பின்னணியில் அவர்கள் கரைந்து போனார்கள்

மணவிழா அரங்குக்கு பேருந்தில் வந்து

இறங்கியதிலிருந்து அனைவரும் ஆயத்தமாகும் வரை

மணிக் கணக்கில் காத்திருந்தார்கள்

அவர்கள் உரத்து எழுப்பிய இசையில் 

அழகிய ஆடை அணிந்த மனிதர்கள்

மகிழ்ச்சியுடன் நடனமாடினார்கள்

ஆனால் இசைக் கலைஞனிடமிருந்து 

ஒருவர்  எதிர்பார்ப்பதைப் போல

அவர்கள் விழிகள் மூடியிருக்கவில்லை

அவர்களுடைய முகங்கள் 

இசையின் களிப்பில் மகிழ்ந்திருக்கும் 

அமைதியான முகக்கவசமாக இல்லை.

அவர்கள் சோர்ந்து போயிருந்தார்கள் 

அவர்கள் அணிந்திருந்த மின்னும் ஆடைகளால்

கண்களின் கருவட்டங்களை மறைக்க முடியவில்லை

அவர்களுடைய உற்சாகம் பொங்கும் இசையால்

அவர்களுடைய அவநம்பிக்கையை  

மறைக்க முடியவில்லை. 

அவர்கள் பிற சிறுசிறு வேலைகள் தவிர்த்து

சிறிது கூடுதலாகப் பணம் ஈட்ட வந்திருந்தார்கள்

அவர்கள் மகிழ்ச்சி பொங்கத் திரிந்த

விருந்தினர்களைக் கவனித்தார்கள்

வான வேடிக்கைகளைக் கவனித்தார்கள்

குதிரைமீது வந்த மணமகனைக் கவனித்தார்கள்

ஆனால் எந்தக் கொண்டாட்ட மனநிலையும்

அவர்களுடைய இதயங்களுக்கு ஒளியூட்டவில்லை

இரவினூடே அழகிய வண்ண உடைகளில் திரும்பிய அவர்கள்

காரை உதிர்ந்த சுவர்களில்  

தங்கள் இசைக்கருவிகளைத்

தொங்கவிட்டார்கள் 


தழும்பேறிய மனிதர்கள்

வியர்வையும் கரிப்புகையும் படிந்திருந்தன 

அவர்களுடைய முகங்களில் 

அவர்களுடைய உருவங்கள் மாறியிருந்தன

நிலக்கரி சுமக்கும் இயந்திரங்களைப் போல 

குறுகிய பாதாளப் பாதைகளில் 

புழுதி நிறைந்த காற்றைச் சுவாசித்து 

நுரையீரல்கள் கருத்துத் தடித்தன

அவர்களுடைய பாதங்களுக்கடியில் 

அகழ்வுண்ட பூமி துடித்தது. 

மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன 

மண் வாரி இயந்திரத்தின் கொடுங்கரங்களால் 

மண் சுரண்டி எடுக்கப்பட்டது.

அவர்கள் தழும்பேறிய பூமியில்

உழைத்துக் கொண்டிருக்கும்  

தழும்பேறிய  மனிதர்கள்.


மூன்று கவிதைகளும் அலிகாரைச் சேர்ந்த மாணவர், எழுத்தாளர்.

மாளிகா இக்பால் மே நாளை ஒட்டி எழுதியவை. 

தமிழில்: நிழல்வண்ணன்

நன்றி: countercurrents.org. 


Comments

  1. Three different situations how they labour for their livelihood for others to enjoy. Really nice 👍

    ReplyDelete
  2. மூன்று கவிதைகளும் அருமை. எழுதிய
    தோழர் இக்பாலுக்கும்,
    மொழி பெயர்த்த
    தோழர்
    நிழல் வண்ணன் அவர்களுக்கும்
    மனமார்ந்த வாழ்த்துகளும், வணக்கங்களும்..
    அதிலும் மகிழ்ச்சியற்ற கொண்டாட்டங்கள் கவிதை மனதை பிசைந்துவிட்டது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...

தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் தொழிலாளர் வர்க்கமும்!

  இன்போசிஸ் நாராயணமூர்த்தி 19-11-2025 அன்று தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தொழிலாளர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியதோடு, மோடி அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் வேலை செய்வதாகவும் கூறினார். இதற்காக 9 -9 – 6 என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார், சீனாவில் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மனமுவந்து பாராட்டியதோடு இந்தியாவில் சட்டப்படியாக இதனை அமல்படுத்த வேண்டும் என்றார். அதன்படி தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வீதம், வாரத்திற்கு 6 நாள் என 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார். 2021இல் சீன அரசு 12 மணி நேர வேலையை சட்டவிரோதம் என அறிவித்தது. வேலை நேர அதிகரிப்பால் தொழிலாளர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பணிச்சுமை காரணமாக தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது. ஆனால், சீனாவில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்ளாத இன்போசிஸ் நாராயண மூர்த்தி வேலை நேரத்தை ...