Skip to main content

ஒரு நாள் என் கண்மணியைப் பார்த்தேன்!

 
கொலை நிகழ்ந்த முந்திய இரவு சூரியனும் சந்திரனும்

பணப்பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தன

இந்தியக் கொடியை அவளுடைய வாயில் திணித்து

அவளுடைய பேச்சைப் பறித்திருந்தார்கள்

பல மனிதர்கள் மின்னும் வாள்களுடன் விரைந்தார்கள்

தீரச் செயலுக்குப் பெற்ற பரிசைப் போல

அவளை உயரத் தூக்கிப்பிடித்திருந்தார்கள்

அவர்களுடைய முகத்தில் காறித் துப்பிவிட அவள் விரும்பினாள்

ஆனால் அவர்களுக்கு முகங்கள் இல்லை

ஏழு கடல்களின் சக்தியும் தாக்கியதைப் போல

அவளைச் சங்கிலியால் பிணைத்திருந்தனர்

அந்தக் காமுகர்கள்

அவள் மீது வீசப்பட்ட வேட்டைக்காரர்கள் வலைக்கு எதிராக

போராடிக் கொண்டிருந்த அவள்

சுற்றியிருந்த விளக்குகளுக்குப் பின்னால் மறைந்து போனாள்

மழையெனக் கொட்டிக்கொண்டிருந்தது

அவளுடைய கண்ணீர்

ஆனாலும் தாகமெடுத்த நூற்றுக்கணக்கான நாக்குகளுக்கு

தாகம் தீரவில்லை.

ஆற்றின் கரைகளில் சதைக் கோளங்கள்  

சிதறிக் கிடந்தன

அவளுடைய ஆடைகள் கந்தல் கந்தலாய்

கிழிக்கப்பட்டிருந்தன

அந்த நெறித்த தழுவலில் அவளது உயிரின்

தசை நார்கள்  மண்ணில் இரத்தத்தைக் கொட்டித் தீர்த்தன

இருளின் அரக்கர்கள் அவளுடைய கண் விழிகளைக்

கோலியாக்கி விளையாடினார்கள்

அவளுடைய தாலியை வணிகனிடம் விற்று

குடித்துக் களிவெறியாடினார்கள்

அவளுடைய மலருடலின் இதழ்களை

ஒவ்வொன்றாகக் கசக்கினார்கள்  

பின்னர் அவளை எடுத்துச் சென்றார்கள்

எங்கென்று யாருக்குத் தெரியும்?

எனது கண்மணியை ஒருநாள் பார்த்தேன்

என்னை நான் கண்ணாடியில் பார்த்தேன்

அவளுடைய முகம் கறையான் புற்றாக உயர்ந்திருந்தது

அதன் உச்சியில் ஒரு செந்நாகம் படமெடுத்து

ஆடிக்கொண்டிருந்தது

கண்ணீர் வற்றிய அவளுடைய விழிகள்

மின்னும் குத்துவாள்களாக வானோக்கி முளைத்திருந்தன

அவளுடைய கருத்த உடலில் கங்கையும்

யமுனையும் ஓடின

அவளுடைய வாயில் நெருப்பு எரிந்தது

கிராமத்துப் புதரில் நச்சரவம் ஒன்று

தங்கியிருந்தது

அதன் மொத்த உடலும் நோய் பிடித்து

பல வண்ணப் புள்ளிகளைக் கொண்டிருந்தது

பார்க்கும் இடங்களிலெல்லாம்

நான் புலிகளைப் பார்க்கிறேன்

சிங்கங்களைப் பார்க்கிறேன்

சிறுத்தைகளைப் பார்க்கிறேன்

எனது கண்மணியின் உடலைக் கிழித்துப் போட்டது

எந்த மிருகம்?

மரங்களும் கற்பாறைகளும் நிமிர்ந்து நிற்கின்றன

வானை நிரம்பிக் கொண்டிருப்பது யாருடைய குரல்?

இந்தியாவின் தெருக்களில் வெள்ளிக் குத்துவாட்கள்

அணிவகுத்துச் செல்கின்றன  

இரத்தத்தில் முக்கியெடுத்த கந்தைகள்

ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படுகின்றன.

 

சித்தலிங்கய்யா

தமிழில் நிழல்வண்ணன்

 

கர்நாடகாவின் எதிர்க் கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழும் சித்தலிங்கய்யா தேவய்யா (1954, பெங்களூர்) 1970 களில் கன்னடத்தில் தலித் இலக்கியத்தைத் தொடங்கிவைத்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். கர்நாடகா தலித் சங்கர்ஷ சமிதியின் நிறுவன உறுப்பினரான அவர் தனது கவிதை மூலமாகவும் எடுத்துக்காட்டாகத் திகழும் எதிர்ப்புப் பாடல்கள் மூலமாகவும் தலித்துக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பல தலைமுறைகளுக்குத் தூண்டுகோளாக இருந்துவருகிறார். ஐம்பது ஆண்டுகளாக சித்தலிங்கய்யாவின் கவிதைகள் ஆணாதிக்க சாதி அமைப்பு முறையின் தீவிர விமர்சனங்களாக இருந்துவருகின்றன.

 

நன்றி: ஜனதா வீக்லி

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...