Skip to main content

ஒரு நாள் என் கண்மணியைப் பார்த்தேன்!

 
கொலை நிகழ்ந்த முந்திய இரவு சூரியனும் சந்திரனும்

பணப்பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தன

இந்தியக் கொடியை அவளுடைய வாயில் திணித்து

அவளுடைய பேச்சைப் பறித்திருந்தார்கள்

பல மனிதர்கள் மின்னும் வாள்களுடன் விரைந்தார்கள்

தீரச் செயலுக்குப் பெற்ற பரிசைப் போல

அவளை உயரத் தூக்கிப்பிடித்திருந்தார்கள்

அவர்களுடைய முகத்தில் காறித் துப்பிவிட அவள் விரும்பினாள்

ஆனால் அவர்களுக்கு முகங்கள் இல்லை

ஏழு கடல்களின் சக்தியும் தாக்கியதைப் போல

அவளைச் சங்கிலியால் பிணைத்திருந்தனர்

அந்தக் காமுகர்கள்

அவள் மீது வீசப்பட்ட வேட்டைக்காரர்கள் வலைக்கு எதிராக

போராடிக் கொண்டிருந்த அவள்

சுற்றியிருந்த விளக்குகளுக்குப் பின்னால் மறைந்து போனாள்

மழையெனக் கொட்டிக்கொண்டிருந்தது

அவளுடைய கண்ணீர்

ஆனாலும் தாகமெடுத்த நூற்றுக்கணக்கான நாக்குகளுக்கு

தாகம் தீரவில்லை.

ஆற்றின் கரைகளில் சதைக் கோளங்கள்  

சிதறிக் கிடந்தன

அவளுடைய ஆடைகள் கந்தல் கந்தலாய்

கிழிக்கப்பட்டிருந்தன

அந்த நெறித்த தழுவலில் அவளது உயிரின்

தசை நார்கள்  மண்ணில் இரத்தத்தைக் கொட்டித் தீர்த்தன

இருளின் அரக்கர்கள் அவளுடைய கண் விழிகளைக்

கோலியாக்கி விளையாடினார்கள்

அவளுடைய தாலியை வணிகனிடம் விற்று

குடித்துக் களிவெறியாடினார்கள்

அவளுடைய மலருடலின் இதழ்களை

ஒவ்வொன்றாகக் கசக்கினார்கள்  

பின்னர் அவளை எடுத்துச் சென்றார்கள்

எங்கென்று யாருக்குத் தெரியும்?

எனது கண்மணியை ஒருநாள் பார்த்தேன்

என்னை நான் கண்ணாடியில் பார்த்தேன்

அவளுடைய முகம் கறையான் புற்றாக உயர்ந்திருந்தது

அதன் உச்சியில் ஒரு செந்நாகம் படமெடுத்து

ஆடிக்கொண்டிருந்தது

கண்ணீர் வற்றிய அவளுடைய விழிகள்

மின்னும் குத்துவாள்களாக வானோக்கி முளைத்திருந்தன

அவளுடைய கருத்த உடலில் கங்கையும்

யமுனையும் ஓடின

அவளுடைய வாயில் நெருப்பு எரிந்தது

கிராமத்துப் புதரில் நச்சரவம் ஒன்று

தங்கியிருந்தது

அதன் மொத்த உடலும் நோய் பிடித்து

பல வண்ணப் புள்ளிகளைக் கொண்டிருந்தது

பார்க்கும் இடங்களிலெல்லாம்

நான் புலிகளைப் பார்க்கிறேன்

சிங்கங்களைப் பார்க்கிறேன்

சிறுத்தைகளைப் பார்க்கிறேன்

எனது கண்மணியின் உடலைக் கிழித்துப் போட்டது

எந்த மிருகம்?

மரங்களும் கற்பாறைகளும் நிமிர்ந்து நிற்கின்றன

வானை நிரம்பிக் கொண்டிருப்பது யாருடைய குரல்?

இந்தியாவின் தெருக்களில் வெள்ளிக் குத்துவாட்கள்

அணிவகுத்துச் செல்கின்றன  

இரத்தத்தில் முக்கியெடுத்த கந்தைகள்

ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படுகின்றன.

 

சித்தலிங்கய்யா

தமிழில் நிழல்வண்ணன்

 

கர்நாடகாவின் எதிர்க் கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழும் சித்தலிங்கய்யா தேவய்யா (1954, பெங்களூர்) 1970 களில் கன்னடத்தில் தலித் இலக்கியத்தைத் தொடங்கிவைத்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். கர்நாடகா தலித் சங்கர்ஷ சமிதியின் நிறுவன உறுப்பினரான அவர் தனது கவிதை மூலமாகவும் எடுத்துக்காட்டாகத் திகழும் எதிர்ப்புப் பாடல்கள் மூலமாகவும் தலித்துக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பல தலைமுறைகளுக்குத் தூண்டுகோளாக இருந்துவருகிறார். ஐம்பது ஆண்டுகளாக சித்தலிங்கய்யாவின் கவிதைகள் ஆணாதிக்க சாதி அமைப்பு முறையின் தீவிர விமர்சனங்களாக இருந்துவருகின்றன.

 

நன்றி: ஜனதா வீக்லி

Comments

Popular posts from this blog

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...

தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் தொழிலாளர் வர்க்கமும்!

  இன்போசிஸ் நாராயணமூர்த்தி 19-11-2025 அன்று தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தொழிலாளர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியதோடு, மோடி அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் வேலை செய்வதாகவும் கூறினார். இதற்காக 9 -9 – 6 என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார், சீனாவில் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மனமுவந்து பாராட்டியதோடு இந்தியாவில் சட்டப்படியாக இதனை அமல்படுத்த வேண்டும் என்றார். அதன்படி தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வீதம், வாரத்திற்கு 6 நாள் என 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார். 2021இல் சீன அரசு 12 மணி நேர வேலையை சட்டவிரோதம் என அறிவித்தது. வேலை நேர அதிகரிப்பால் தொழிலாளர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பணிச்சுமை காரணமாக தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது. ஆனால், சீனாவில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்ளாத இன்போசிஸ் நாராயண மூர்த்தி வேலை நேரத்தை ...