Skip to main content

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

 

மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் (MRF) நிறுவனம் திருச்சி, பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அடிபணிய வைத்து கோரிக்கைகளை வென்றெடுத்தனர். தொழிலாளர்களின் வர்க்க உணர்வு மிக்க போராட்டங்கள்தான் இந்த வெற்றிகளுக்கு அடிப்படையாக இருந்தது. 2007-ஆம் ஆண்டு நிர்வாகம் சட்டவிரோதக் கதவடைப்பு செய்தது, இதை எதிர்த்து தொழிற்சங்கம் தொடர்ச்சியாக 64 நாட்கள் போராடி தமிழக சட்டமன்றத்தில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழிலாளர்களின் பணி ஓய்வு மற்றும் மரணத்தினால் ஏற்பட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரந்தர தொழிலாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்றும், அதற்காக, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் பயிற்சித் தொழிலாளர்களை 1996 ஆம் ஆண்டு முத்தரப்பு ஒப்பந்தத்தின்படியும், தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தொழிலாளர்களுக்கு நிரந்தர நிலையை அளித்தல்) சட்டம், 1981 அடிப்படையில் 480 நாட்கள் பணி செய்தவர்களை நிரந்தரப்படுத்தக் கோரியும் சங்கத்தின் சார்பில் 06.09.2025 அன்று ஒரு நாள் அடையாளப் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த 21 ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த முன்கடன்(Loan), குடும்ப மருத்துவக் காப்பீடு (Medical Insurance Policy) ஆகியவற்றை நிர்வாகம் தர மறுத்து வருகின்றது.

NAPS (National Apprenticeship Promotion Scheme) பயிற்சித் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யாமல் அவர்களைப் பயிற்சித் தொழிலாளர்களாகவே வைத்து அவர்களின் உழைப்பைச் சுரண்டும் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தும், தொழிலாளர்களின் நலத்திட்டங்களை மறுத்து மிரட்டும் போக்கைக் கண்டித்தும், தொழிலாளர்கள் இரண்டு நாள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

NAPS திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்தல் என்ற பெயரில் ஓராண்டு முதல் மூன்றாண்டுகள் வரை அவர்களின் உழைப்பை சுரண்டும் முறையானது இந்தியாவில் பரவலாக அனைத்து இடங்களிலும் நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றது. தொழிற்கல்வி பயின்ற இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கபட்டு வந்த பயிற்சி முறையானது தற்பொழுது, பள்ளிக் கல்வி முதல் பல்கலைகழக கல்வி வரை பயின்ற அனைத்து இளைஞர்களையும் பயிற்சி அளித்து மேம்படுத்துதல் என்ற பெயரில் முதலாளிகள் சுரண்டி வருகின்றனர். எம்.ஆர்.எப் நிறுவனமும் இத்தகைய சுரண்டல் முறையை கையாண்டு வந்த நிலையில் அதனை கைவிடக் கோரியும், அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க கோரியும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர்களின் உணர்வு மிக்க போராட்டத்தை ஒடுக்கும் வகையில் நிர்வாகம் உணவகத்தை மூடியும், பேருந்து வசதியை நிறுத்தியும் உள்ளது. மேலும் 13.09.2025 அன்று முதல் தொழிலாளர்களை ஆலைக்கு உள்ளே அனுமதிக்க மறுத்து, நிர்வாகம் தரும் ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்து இட்டால் மட்டும்தான் உள்ளே விட முடியும் எனக் கூறி ஆலைக் கதவை மூடி உள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வேலைக்கு வந்த தொழிலாளர்களை அனுமதிக்க மறுத்து கடந்து 14 நாட்களாக சட்டவிரோதக் கதவடைப்பு செய்து வருகிறது

ஆலை வாயில் முன் நடைபெற்று வந்த தொழிலாளர்களின் போராட்டத்தை நீதிமன்றத்தின் துணையைக் கொண்டு நிர்வாகம் அப்புறப்படுத்தியது. தொழிலாளர்கள் வேறு இடத்தில் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

NAPS பயிற்சித் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யாமல் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்த ஒப்புக் கொண்டால் மட்டுமே கதவடைப்பை நீக்கம் செய்யவும், பறிக்கப்பட்ட நலத்திட்டங்களை வழங்கவும் முடியும் என நிர்வாக மிரட்டல் விடுக்கின்றது. தொழிலாளர் நலத்துறை, நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கையும், சட்டத்திற்குப் புறம்பான மிரட்டல் போக்கையும், கண்டிக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றது.

திராவிட மாடல், சமூகநீதி, உழைக்கும் மக்களுக்கான அரசு எனத் தம்பட்டம் அடிக்கும் திமுக அரசு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், உள்ளாட்சி துறைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்த அடிப்படையிலேயே தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திச் சுரண்டி வருவதால், முதலாளிகளின் இத்தகைய சுரண்டல் போக்குக்கு உடந்தையாகவும், பாதுகாவலனாகவும் இருந்து வருகின்றது.

வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டை ஈர்ப்பது, முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது, ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது என்பதெல்லாம் முதலாளிகள் இலாபத்தைப் பெருக்குவதற்கும், மக்களின் வரிப்பணத்தை சலுகைகளாக அவர்களுக்கு அள்ளிக் கொடுப்பதற்கும், அனைத்து வளங்களையும் முதலாளிகள் வரைமுறையின்றிப் பயன்படுத்திக் கொழுப்பதற்கும் தேவையான சேவைகளைச் செய்யும் சேவகனாக திராவிட மாடல் திமுக அரசு உள்ளது.

சமீபத்தில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், தூய்மை தொழிலாளர்கள் போராட்டம், தற்பொழுது எம் ஆர் எப் தொழிலாளர்கள் போராட்டம் எனத் தமிழகம் தழுவிய அளவில் கவனம் பெற்ற வீரியம் செறிந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதே சமயத்தில், தொழிலாளர்களின் மீதான ஒடுக்குமுறைகளும், சட்டவிரோத போக்குகளும் ஏராளமாக அரங்கேறி வருகின்றன. இந்த ஒடுக்குமுறைகளும் தொழிலாளர் விரோதப் போக்குகளும் இந்த அரசு முதலாளி வர்க்கத்திற்கான அரசு என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தி வருகின்றன.

இந்திய ஒன்றிய அரசிலும், மாநில அரசுகளிலும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இத்தகையை தொழிலாளர் விரோதப் போக்கை, உழைக்கும் மக்கள் விரோதப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றன என்பதையும். இந்த அரசு முதலாளி வர்க்கத்தின் நலன்களைக் காப்பாற்றும் அரசுதான் என்பதையும் தொழிலாளர்கள் தங்களுடைய போராட்டத்தின் மூலம் அறிந்து வருகின்றனர்.

முதலாளி வர்க்க அரசின் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளவும், அவற்றிலிருந்து விடுதலை பெறவும் வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து சோசலிச சமூகத்திற்கான அரசியல் போராட்டத்தைக் கட்டமைக்க வேண்டும். அதுவே இன்று தொழிலாளி வர்க்கத்தின் முன்னுள்ள உடனடிக் கடமையாக உள்ளது.


- மாறன்

Comments

  1. எம். ஆர். எப் நிறுவனத் தொழிலாளர்களுடைய போராட்டம் குறித்து விவரங்களையும், இந்த நியாயமான போராட்டத்திற்கு எதிராக நிறுவனமும், அரசு அதிகாரிகளும், நீதி மன்றமும் செயல்பட்டு வருவதையும் இக்கட்டுரை மிகவும் தெளிவாக முன்வைத்திருக்கிறது.

    இன்று நாடெங்கிலும் பணி நிரந்தரமின்றி தொழிலாளர்களைப் பயிற்சித் தொழிலாளர்களாகவும், தற்காலிக மற்றும் குறிப்பிட்ட கால ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் வைத்து அவர்களைப் பல்வேறு வழிகளில் மிகக் கடுமையாகச் சுரண்டி முதலாளிகள் கொழுத்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சுரண்டலை எதிர்த்துப் போராடி வரும் எம்.ஆர்.எப் தொழிலாளர்களுடைய போராட்டம் வெற்றி பெற வேண்டும்.

    முதலாளி வர்க்கக் கட்சிகள் இந்துத்துவா அரசு, திராவிட மாதிரி அரசு, உழைக்கும் மக்களுக்கான அரசு என்று எல்லா வித முழக்கங்களோடு ஆட்சி செய்தாலும், அடிப்படையில் பெரு முதலாளி வர்க்கத்தின் நலன்களைப் பாதுக்காக்கும் அரசாங்கங்களாக அவர்கள் செய்பட்டு வருகிறார்கள் என்பதைக் கட்டுரை மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறது.

    ReplyDelete
  2. மாணவர் போராடினால்
    நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.

    அவர்கள் எரிமலைக்கு சமம்.

    மாணவர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்
    👍👍
    ⭐⭐

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...

தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் தொழிலாளர் வர்க்கமும்!

  இன்போசிஸ் நாராயணமூர்த்தி 19-11-2025 அன்று தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தொழிலாளர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியதோடு, மோடி அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் வேலை செய்வதாகவும் கூறினார். இதற்காக 9 -9 – 6 என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார், சீனாவில் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மனமுவந்து பாராட்டியதோடு இந்தியாவில் சட்டப்படியாக இதனை அமல்படுத்த வேண்டும் என்றார். அதன்படி தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வீதம், வாரத்திற்கு 6 நாள் என 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார். 2021இல் சீன அரசு 12 மணி நேர வேலையை சட்டவிரோதம் என அறிவித்தது. வேலை நேர அதிகரிப்பால் தொழிலாளர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பணிச்சுமை காரணமாக தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது. ஆனால், சீனாவில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்ளாத இன்போசிஸ் நாராயண மூர்த்தி வேலை நேரத்தை ...