Skip to main content

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

 

கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன. 

சினிமாவும் சினிமா அரசியலும் 

எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பத்தையும், இத்துடன் தான் சேர்த்து வைத்துள்ள கோடிக்கணக்கான ரூபாய்களையும் மூலதனமாகக் கொண்டு அவர் சினிமா அரசியல் என்னும் தொழிலைத் தொடங்கியுள்ளார். அவருடைய நிறுவனத்தின் பெயர்தான் தமிழக வெற்றிக் கழகம். அவர் அதனுடைய நிர்வாக இயக்குநர். கட்சி என்று கூறுவதை விட அதை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் என்று கூறலாம். 

சினிமாவுக்கும் எதார்த்த உலகுக்கும் உள்ள வேறுபாடுகளை அறியாமல் அவருடைய சினிமா பிம்பத்தை உண்மை என நம்பும் அப்பாவி இரசிகர்கள், அரசியலைப் பற்றிய புரிதலும் தெளிவும் அற்றவர்கள், கடந்தகாலத் தமிழக அரசியலின் வரலாறு பற்றி அறியாதவர்கள், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளின் ஊழல்களால் அக்கட்சிகளின் மீது அதிருப்தியும் வெறுப்பும் கொண்டவர்கள், அவர் தொடங்கியுள்ள புதிய நிறுவனத்தில் சேர்ந்தால் பதவிகளும் பதவி உயர்வுகளும் விரைவில் கிடைக்கும், நாளைக்கு ஆட்சிக்கு வந்து விட்டால் பதவிகளைப் பயன்படுத்தி மக்கள் வரிப்பணத்தில் தங்களுடைய வாழ்வை வளப்படுத்திக் கொள்ளலாம் என்ற கணக்குடன் இருப்பவர்கள் - இவர்கள்தான் இவருடைய சினிமா அரசியல் தொழிலுக்கு வாடிக்கையாளர்கள். 

தான் ஆட்சிக்கு வந்தால் ஏற்கனவே ஆட்சியில் இருந்த, ஆட்சியில் இருக்கும் கட்சிகளைப் போல் ஊழல்வாதியாக இருக்க மாட்டேன். செய்வதற்கு சாத்தியமானவற்றை மட்டும் வாக்குறுதியாக அளிப்பேன். மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என்று விஜய் மக்கள் முன் மிகச் சிறப்பாக நடித்து வருகிறார். அவருடைய சினிமா கவர்ச்சியும் ஊடகங்களும் மக்கள் கூட்டத்தைத் திரட்டுவதற்கு உதவுகின்றன. அவர் சொல்வதை எல்லாம் உண்மை என மக்கள் நம்புகின்றனர். 

இவ்வாறு வாக்குறுதிகளைத் தந்துதான் தமிழ்நாட்டில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஆட்சியைப் பிடித்தன. ஆனால் அவர்களுடைய ஆட்சியில் ஊழல் பன்மடங்கு பல்கிப் பெருகியதே தவிர ஒழியவில்லை. இதற்குக் காரணம் என்ன? 

அடிப்படைப் பிரச்சினை ஆட்சி அமைப்பு முறையில் உள்ளது 

பாராளுமன்ற ஜனநாயகம் என்ற பெயரில் இங்கு அதிகாரவர்க்கத்தின் ஆட்சிதான் நிரந்தரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த அதிகார வர்க்கத்தினை முதலாளி வர்க்கம் பணம், உறவு, ஓய்வுக்குப் பிறகு தங்கள் நிறுவனங்களில் பதவி போன்ற பல்வேறு வலைப்பின்னலான தொடர்புகளைக் கொண்டு இயக்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் எந்தக் கட்சி ஆட்சிக்குப் போனாலும் அவை மக்களின் நலன்களைக் காப்பாற்ற முடிவதில்லை. முதலாளிகளுக்குத் தேவையான சட்டங்களை நிறைவேற்றி, அவர்களுக்குத் தேவையான காரியங்களைச் செய்து கொடுத்து அவர்களுடைய நலன்களைக் காப்பாற்றுகின்றன. தம்முடைய பணப்பையை நிரப்பிக் கொள்கின்றன. ஆட்சியில் அமரும் கட்சிகள் முடிவில் ஊழல் கட்சிகளாக அம்பலப்பட்டுப் போய் மக்கள் முன் நிற்கின்றன. 

கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக மக்கள் மாற்றி மாற்றி வெவ்வேறு கட்சிகளைத் தேர்ந்தெடுத்து மாநிலத்திலும் ஒன்றியத்திலும் ஆட்சியில் அமர்த்தினாலும் அதே நிலைமைதான் தொடர்கிறது. அடிப்படைப் பிரச்சினை, இங்கு நிலவும் ஆட்சி அமைப்பில்தான் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் இந்த அதிகார வர்க்க ஆட்சி அமைப்புக்கு எதிராக ஒன்று திரள்வார்கள். தங்களுக்கு உண்மையில் அதிகாரத்தை வழங்கும் ஆட்சி முறையை அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். அது முதலாளிய வர்க்க ஆட்சிக்கு ஆபத்தாக முடியும். எனவே இந்த அதிகாரவர்க்க ஆட்சி மக்கள் முன் அம்பலப்பட்டுப் போகாமல் காப்பதில் முதலாளி வர்க்கம் கவனமாக உள்ளது. ஆட்சி அமைப்புமுறை சரிதான். ஆட்சிக்கு வரும் கட்சிகள்தான் சரியில்லை என்ற எண்ணத்தைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது ஆளும் முதலாளி வர்க்கம், அதற்காகத் தனது ஊடகங்கள் அனைத்தையும் பயன்படுத்தி வருகிறது. மக்களும் கட்சிகளை மாற்றி மாற்றித் தேர்ந்தெடுத்து ஆட்சிக்கு அனுப்பினாலும் அவை ஊழல் கட்சிகளாகச் சீரழிந்து போவதைத்தான் பார்க்கின்றனர். எனவே இந்த ஆட்சி அமைப்புமுறையை மாற்றி அமைக்கும் வரை மக்களுக்கு விடிவு இல்லை என்பதுதான் உண்மை. 

மக்கள் மத்தியில் கருத்துகளை உருவாக்கும் ஊடகங்கள் 

இந்த ஆட்சி முறை அம்பலப்பட்டுப் போகாமல் காப்பதில் முதலாளியப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சினிமாக்கள் போன்ற அனைத்து ஊடகங்களும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. ஆட்சியில் இருக்கும் கட்சி மக்கள் முன் அம்பலப்பட்டுப்போகும்போது அதற்கு மாற்றாக புதிய கட்சியை மக்கள் முன் நிறுத்துகின்றன. அந்தக் கட்சிக்கு ஆதரவான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்புகின்றன. அந்தக் கட்சி முன்நிறுத்தும் தலைவரைப் பற்றிய பிம்பத்தைக் கட்டமைக்கின்றன. மக்கள் தாமாகவே அந்தத் தலைவரை ஏற்றுக் கொள்ளும் வகையில் பிரச்சார வியூகங்களைக் கட்டமைக்கின்றன. ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போன நிலையில், 2014ல் அதற்கு மாற்றாக மோடி என்ற பிம்பத்தை மக்கள் முன் ஊடகங்கள் எவ்வாறு கட்டமைத்தன என்பதை நாம் அறிவோம். 

விஜய் பற்றிய சினிமா பிம்பத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் கருத்துகளையும் காட்சிகளையும் பரப்பி வருகின்றன. மாநாடுகளில் அவர் மேடைகளில் தோன்றுவதையும், நடப்பதையும், உரையாற்றுவதையும் கதாநாயக வழிபாட்டுடன் தொலைக்காட்சிகள் காட்டுகின்றன. செல்லும் இடங்களில் எல்லாம் அவரை மாமனிதனாகச் சித்தரிக்கும் பாடல்கள் ஒலி பரப்பப்படுகின்றன. அனைத்துப் பத்திரிகைகளும் அவருடைய உரைகளையும் அறிக்கைகளையும் வரி விடாமல் வெளியிடுகின்றன. மக்கள் மத்தியில் நிலவிவரும் விமர்சனமற்ற பார்வை, அறியாமை, தனிமனித வழிபாடு போன்ற பண்பாடுகளால் மக்கள் ஊடகங்களின் பிரச்சாரத்துக்கு எளிதில் இரையாகின்றனர். 

ஆனால் அதே சமயத்தில், உண்மையான சமூக மாற்றத்திற்காக நிற்கும் அமைப்புகளைப் பற்றியோ, அவை நடத்தும் கூட்டங்களைப் பற்றியோ, அவற்றின் கொள்கைகளைப் பற்றியோ இந்தப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் எந்த விதமான செய்தியையும் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்து வருகின்றன. அதற்குப் பதிலாக அந்த அமைப்புகளைப் பற்றிய அவதூறு செய்திகளைப் பரப்பி வருகின்றன. அதன் மூலம் மக்கள் மத்தியில் சமூக மாற்றத்திற்கான கருத்துகள் சென்றடையாமல் தடுத்து வருகின்றன. நிலவி வருகின்ற அமைப்பை அப்படியே கட்டிக் காப்பாற்ற உதவி வருகின்றன. முதலாளிகளின் கைகளில் இருக்கும் ஊடகங்கள் அதைத்தானே செய்யும். வேறு எதை அவற்றிடமிருந்து எதிர்பார்க்க முடியும்? 

களத்தை விட்டு ஓடிய கதாநாயகன் 

தனது சினிமா கதாநாயகப் பிம்பத்திற்கு எந்த விதமான ஊறும் வராமல் கட்டிக்காப்பதில் விஜயும் அவருடைய தொண்டர்களும், அடியாட்களும் கவனமாக உள்ளனர். கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் வந்து விட்டால் தனது கதாநாயகப் பிம்பம் என்னாவது? அதற்காகவே மக்களை வெயிலில் ஆறு, ஏழு மணிநேரங்கள் காக்க வைத்துக் கூட்டத்தைத் தொடங்குவது, கூட்டத்திற்கு நடுவில் தனது பிரச்சார வாகனத்தின் முன் எந்தவிதமான ஒழுங்கும் கட்டுப்பாடுமின்றி அவருடைய ரசிகர் கூட்டம் ஆடிக் கொண்டே வாகனத்தை மெதுவாக ஊர்ந்து செல்லச் செய்வது, போக்குவரத்து நெரிசலை உருவாக்குவது ஆகியவை அவருடைய பிரச்சார முறைகள். 

கரூரில் கூட்டம் நடந்த இடத்தில் சுமார் இருபதாயிரம் பேருக்குமேல் கூடி உள்ளனர். அவருடைய இரசிகர் கூட்டம் கட்டுப்பாடு ஏதுமின்றி கூரை, மின்மாற்றி, மரங்கள் என எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் தொற்றிக் கொண்டு தங்களுடைய கதாநாயகனின் முக தரிசனத்திற்காகக் காத்துக் கிடந்து உள்ளனர். விஜயின் பிரச்சார வாகனம் வந்த போது சாலை முழுவதும் நிரம்பியிருந்த கூட்டம் முண்டியடித்துக் கொண்டு விஜயைப் பார்க்க முன்னேறிய போது நெரிசலில் சிக்கி 41 அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 

ஒரு நடிகரின் மீதான சினிமா கவர்ச்சியில், ரசிகப் போதையில் பல குழந்தைகளும் பெண்களும் இளைஞர்களும் வீணாகப் பலியாகி உள்ளனர். இங்குள்ள கல்வி முறையும் ஊடகங்களும் கட்சிகளும் பண்பாடும் அறிவியல் மனப்பான்மையை, விமர்சனக் கண்ணோட்டத்தை உருவாக்கவில்லை. அதற்குப் பதிலாக மூட பக்தியையும், தனிநபர் வழிபாட்டையும், ரசிக மனப்பான்மையையுமே உருவாக்கி வருகின்றன என்பதை இந்தப் பரிதாபமான நிகழ்வு தெளிவாகக் காட்டுகிறது. இந்தப் பண்பாடுகளே இந்தச் சமூகத்தைக் கட்டிக் காப்பாற்றியும் வருகின்றன. 

பிரச்சாரத்தின் போது தனது அடியாட்களைக் கொண்டு தனது பாதுகாப்பை மட்டும் உறுதிப்படுத்திக் கொண்ட விஜய் மக்கள் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்து இறந்தவுடன் சினிமாவில் காட்டும் தனது கதாநாயக வீரத்தைக் காட்டுவதற்குப் பதிலாக, உடனே கூட்டத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்று தனி விமானத்தில் சென்னைக்குத் தப்பி ஓடி விட்டார். உயிரிழப்புகளுக்கு எந்த விதமான பொறுப்பும் ஏற்றுக்கொள்ளாமல், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூடக் கூறாமல் கதாநாயகன் ஓடி விட்டார். 

பிணங்களின் மீது அரசியல் இலாபம் தேடுபவர்கள் 

பல உயிர்களைப் பலிகொண்ட நிலையில் அதற்குப் பொறுப்பேற்காமல் விஜய் ஓடிப்போன நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியைக் கேள்விப்பட்டதும் இரவோடு இரவாக கரூர் வந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கும் காயமடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறினார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 10 இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 இலட்சமும் நிவாரணமாக அறிவித்தார். உதவி முதல்வர் உதயநிதி தனது துபாய் பயணத்தை இரத்துசெய்து விட்டுக் கரூர் வந்தார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது பரிவாரங்களுடன் வந்து ஆறுதல் கூறினார். அனைத்துக் கட்சிகளும் ஆறுதல் கூற ஓடோடி வந்துள்ளன. உயிர்ப் பலியினால் விஜய் மீது மக்கள் கோபம் கொண்ட நிலையில், அதைத் தனக்குச் சாதகமாக மாற்றி கொள்ள இந்தக் கட்சிகள் முயற்சி செய்கின்றன. 

அதே சமயத்தில், விஜய்க்கு வக்காலத்து வாங்குவதன் மூலம் அவரது கட்சியைத் தமது கூட்டணியில் சேர்க்க பாஜக பரிவாரங்கள் காய்களை நகர்த்தி வருகின்றன. 

இந்த நிலையில், த.வெ.க. இந்த உயிர்ப்பலிகளுக்குக் காரணம் சதி வேலைதான் எனக் கூறி ஆளும்கட்சியான தி.மு.க. மீது பழிபோட்டுத் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முயற்சி செய்கிறது. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ.20 இலட்சத்தையும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 இலட்சத்தையும் அறிவித்து விஜய் தனது செல்வாக்கிற்கும் அரசியல் வாழ்வுக்கும் ஏற்பட்டுள்ள சேதத்தைக் குறைக்க முயற்சி செய்துள்ளார். 

விஜயின் சினிமாக் கவர்ச்சியைக் காட்டி, ரசிக போதையை மக்கள் மத்தியில் ஊட்டிக் கூட்டத்தைச் சேர்த்தது த.வெ.க.கட்சி. ஆனால் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் முன்னெச்சரிக்கையுடன் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் கண்ணோட்டமோ கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் தொண்டர்கள் அணியோ அக்கட்சியிடம் இல்லை. ஏற்கனவே விஜய் நடத்திய மாநாட்டில் உயிரிழப்பும், கூட்டங்களின் போது நெரிசலில் மக்கள் மயக்கமடைவதும் நடந்துள்ளன. ஆனால் அந்தக் கட்சி இந்த நிழ்வுகளிலிருந்து எந்தப் படிப்பினையையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஏனென்றால் அந்தக் கட்சியே ஒழுங்கும் கட்டுப்பாடும் பொறுப்பும் இல்லாமல் தான்தோன்றித்தனமாகச் செயல்படும் ரசிகர்கள் கூட்டத்தைத்தான் கொண்டுள்ளது. இந்த நிலையில், ஒழுங்குபடுத்தப்படாத மக்கள் கூட்டம் நெரிசலில் மாட்டி இறக்க நேரிடுவதைத் தவிர்க்க முடியாது. 

இன்னொரு பக்கம், மக்கள் உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு போலீசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் உள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்த போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. போலீஸ் வெறும் பார்வையாளராகவே இருந்துள்ளது. தனது பொறுப்பைத் தட்டிக்கழித்துள்ளது. 

இந்த நிலையில், அரிய உயிர்ப் பலிகளுக்குக் காரணமான விஜய்யும் அவருடைய கட்சிப் பொறுப்பாளர்களும் கைது செய்யப்பட்டு, நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.  அரிய உயிர்களைக் காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியரும் போலீசின் உயர் அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும். இது போன்ற ஒரு துயரமான நிகழ்வு மீண்டும் அரங்கேறாமல் தடுக்கப்பட வேண்டும். 

மு.வசந்தகுமார்

Comments

  1. இன்று நடைபெற்று வரும் அரசியலையும், அதில் போட்டியிடும் முதலாளி வர்க்கக் கட்சிகள் மக்களை முட்டாளாக்குவதற்காகவும், அதன் மூலம் அதிகாரத்தில் அமர்வதற்காகவும் பல்வேறு மிருகத்தனமான யுக்திகளையும், சதிகளையும் மேற்கொண்டு வருவதை தோழர் வசந்தகுமார் மிகவும் தெள்ளத் தெளிவாக வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார்.

    நேரத்திற்கு கூட்டத்திற்கு வந்துவிட்டால் தான் மிகப்பெரிய அரசியல் தலைவராக மக்களிடம் காட்டிக் கொள்ள முடியாது. அரசு மற்றும் காவல்துறையின் முழு ஆதரவோடு போக்குவரத்தையும், மக்களுடைய இயல்பு வாழ்க்கையையும் தடை செய்வதன் மூலம் மிகப் பெரிய மக்கள் பட்டாளம் தனக்கு இருப்பதாகக் காட்டுவதற்காக திட்டமிட்ட முறையில் முதலாளி வர்க்கக் கட்சிகள் - பாஜக, காங்கிரசு, திமுக, அதிமுக, தவெக போன்ற கட்சிகள் பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுடைய கூட்டங்களில் எத்தனை பேர் சிக்கி இறந்தனர், காயமடைந்தனர் என்பதெல்லாம் இவர்களுக்கு மக்களிடையே உள்ள பேராதரவைக் காட்டும் குறியீடுகளாக ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

    படுகொலைகளையும், கற்பழிப்புகளையும், படுபாதகமான கொடூரங்களையும் செய்யத் தயங்காத அரசில்வாதிகளையும், நடிகர்களையும், கட்சிகளையும் மாற்றுக்களாக முதலாளி வர்க்கம் மக்கள் முன் வைத்து முன்னேற்றி வருகிறது. அதன் மூலம் தன்னுடைய சுரண்டல் அமைப்பு அச்சுறுத்தலின்றி நீடிப்பதை உறுதி செய்ய முயற்சித்து வருகிறது.
    இன்னொரு பக்கம் கம்யூனிஸ்டுகளும், தொழிலாளர்களும் நியாயமான உரிமைகள் கோரியும், முற்போக்கான அரசியலை வைத்தும் கூட்டங்கள் அல்லது ஆர்பாட்டங்கள் நடத்துவதற்கு காவல் துறையும், ஆட்சி அமைப்பும் எண்ணற்ற தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து கூட்டங்களை நடக்கவிடாமலும், ஓரங்கட்டியும் வருகிறார்கள்.

    இந்த முதலாளி வர்க்க மக்கள் விரோத அமைப்பை மாற்றி, தொழிலாளிகள் - விவசாயிகளுடைய ஆட்சி அதிகாரத்தை அமைக்காமல் முதலாளி வர்க்கக் கட்சிகளுடைய பித்தலாட்டங்களுக்கும் அநீதிகளுக்கும், முதலாளி வர்க்கத்தின் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் முடிவுகட்ட முடியாது என்பது நிதர்சனமான உண்மை. முதலாளி வர்க்கத்தின் ஒரு கட்சியை மாற்றி இன்னொரு கட்சியை தீர்வாக முன்வைத்து வரும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, உழைக்கும் மக்களுடைய ஆட்சி அதிகாரத்தை அமைப்பதற்காக, கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட்டு போராடுவது இன்றியமையாததாகும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...