Skip to main content

எது வளர்ச்சி?

 

உலகப் பெரும் பணக்காரர் பட்டியலில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர்(2014ல்) 642-வது இடத்திலிருந்த அதானி தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்திருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அவர் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் உலக பணக்காரர்கள் 80 பேரைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறியிருக்கிறார். அவரது வருமானம் நாளொன்றுக்கு 1612 கோடி. தற்போது திடீரென்று -அதிகச் சொத்துக்கள் கொண்ட வெளிநாடு வாழ் இந்தியராக அவரது சகோதரர் பெயரும் பட்டியலுக்கு வந்திருக்கிறது. இன்னும் கூடப் பல பினாமிகள் பெயரில் சொத்துக்கள் பகிரப்பட்டிருக்கும். அதற்கு வேறுவேறு காரணங்களும், கண்ணோட்டங்களும் கூட இருக்கலாம். இவ்வளவுக்குப் பின்னரும் கூட முன்னேறி உலக அளவில் இரண்டாம் இடம் பிடிக்கிறார் எனில் என்ன ஒரு முன்னேற்றம்! இது சாதாரண வளர்ச்சியல்ல; அசுர வளர்ச்சி.

அம்பானியின் வளர்ச்சியும் ஒன்றும் சளைத்ததல்ல. அவரது வளர்ச்சி எந்தப் பின்னணியும் இல்லாமல் திடீர் பிரவாகம் என்கிறார்கள் அம்பானியின் அடிப்பொடிகள். நான்கு லட்சம் சதுர அடிகளில் இருபத்து ஏழு தளங்களில் எண்ணற்ற அறைகள், நீச்சல் குளங்கள், ஹெலிபேட், கோவில், திரையரங்கம், அறுநூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இப்படிப் போகிறது அவரது வசதிகள். உலகிலேயே தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் ஆகப் பெரிய வசிப்பிடமாக அதைச் சொல்கிறார்கள்.  எனில் குடும்பம் பெரிதாக இருக்குமோ என்று நீங்கள் நினைப்பது கொஞ்சங்கூட சரியில்லை. இவ்வளவு சொத்துக்களையும் ஆண்டு அனுபவிக்க அவரது குடும்பத்திற்குஆண்டவன் அருளியிருப்பது  5 பேரை மட்டும் தான். இது போதாதென்று, அம்பானி குடும்பம் கடந்த ஏப்ரலில் துபாயில் 640 கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளது. அதானி பதினோரு லட்சம் கோடிகளோடும், அம்பானி எட்டு லட்சம் கோடிகளோடும் அடுத்தடுத்து இடம் பிடித்திருக்கிறார்கள். இந்தியாவில் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துள்ளவர்களின் எண்ணிக்கை 1103 பேர் எனவும் அந்த அறிக்கை சொல்கிறது.

இந்தியா பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி உலகின் 5-வது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்திருப்பதாக பேச்சில், எழுத்தில், ஊடகத்தில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதானியும், அம்பானியும் இந்தியர்கள் தான், சந்தேகமில்லை. அதற்காக அதானி, அம்பானிகளின் வளர்ச்சிதான் இந்தியாவின், இந்தியர்களின் வளர்ச்சியா? இந்திய வளர்ச்சியின் இன்னொரு முகம் எப்படியிருக்கிறது?

மொத்த மக்கள் தொகை 140  கோடியில் கோடீஸ்வரர்கள், இலட்சாதிபதிகள் ஒரு கோடி பேரென்றாலும்  மிச்சமுள்ள 139 கோடி மக்கள் சாதாரணர்கள். இதில் 42 விழுக்காட்டினர், அதாவது சுமார் 59 கோடி பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழானவர்கள் என தரவுகள் தெரிவித்தாலும், கொரானா முடக்க காலத்தில் பிரதமமந்திரி ஏழைகள் நல்வாழ்வு உணவுத்திட்டத்தின் படி 80 கோடி ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மக்கள் தொகையில்  80 கோடி பேரின் சொத்து ’வறுமை’ மட்டுமே. வறுமைக்கோட்டிற்குக் கீழானவர்கள் நாளொன்றுக்கு நகர்புரத்தில்  47 ரூபாயும், கிராமப்புறத்தில் 32 ரூபாயும் மட்டுமே வருவாய் உள்ளவர்கள். இவர்களால் பசி, பட்டினியோடு மட்டுமே உலகத்தை எதிர்கொள்ள முடியும். அதில் 20 விழுக்காடு நடுத்தர, மேல்நடுத்தர வர்க்கத்தினர் என்றாலும் மீதமுள்ள  34  கோடி மக்கள் விளிம்பு நிலையினர். இதுதான் உலகின் அதிகப்படியான ஏற்றத்தாழ்வு நிலவுகிற இன்னொரு இந்தியா.

இந்தச் செல்வங்கள் திரள்வது எப்படி? அம்பானி, அதானி 24 மணி நேரமும் மிகக் கடுமையாக உழைக்கிறார்களா? ஏழைகள் எல்லோரும் சோம்பல் பேர்வழிகளா?  கடும் உழைப்பாளிகள் ஏழைகளாகவும், சோம்பேறிகள் பெரும் பணக்காரர்களாகவும் இருப்பது தான் உண்மையில் முரண்நகை. இந்த நாட்டின் செல்வாதாரங்கள் அனைத்தையும் உருவாக்கியவர்கள் தொழிலாளர்கள். கருவிகளின் துணைக்கொண்டு இயற்கையிலிருந்து எல்லா பொருட்களையும் படைத்தவர்கள் அவர்கள்தான். ஒரு பக்கம் வளர்ச்சியும் இன்னொரு பக்கத்தில் வீழ்ச்சியும் (எதிர்மறை வளர்ச்சியும்) இங்கே அக்கம் பக்கமாக நிலவுகிறது. எதிர்மறை வளர்ச்சி எப்படியிருக்கிறது? நாட்டின் 42 விழுக்காட்டினர் வறுமையின் கோரப்பிடியில். அவர்களும் வளர்ந்துதான் பெருகியிருக்கிறார்கள்- பின்னோக்கி.

ஒரு மனிதனின் அடிப்படைத் தேவை இருக்க இடம், உடுத்த உடை, உண்ண உணவு என்பீர்கள். இது பழங்கணக்கு. இப்போது குடிக்கத் தண்ணீரும், மின்சாரமும், வேலைக்குப் போகவர போக்குவரத்துச் செலவும், மாத்திரை மருந்துகளும், பிள்ளைகள் படிக்க, வேலைதேட என எல்லாமும் அடிப்படைப் பட்டியலில் இணைந்து கொண்டு விட்டன. ஒரு முழுமையான மனிதனுக்குரிய இன்றைய குறைந்தபட்சத் தேவைகள் இவை.

கோடிக்கணக்கான மக்களை உள்ளடக்கிய ஒரு சமூகம் தன் உயிரைக் கொடுத்து ஈந்த உழைப்பு என்னவானது? எங்கே போனது? சமூகம் உழைத்திருக்கிறது, சொத்து பெருகியிருக்கிறது. எண்ணிக்கையில் பெரும்பான்மையிடம் வறுமையும் ஆகச் சிறுபான்மையிடம் சொத்தும் குவிந்திருக்கிறது. இதன் பொருள் என்ன? கோடிக்கணக்கானோரின் உழைப்பு சூறையாடப்பட்டு ஒரு சிலரின் கைகளில் குவிக்கப்பட்டிருக்கிறது. உழைப்புக்கு ஈடாக கொடுக்கப்படாத ஊதியம் தனிச் சொத்தாக திரண்டிருக்கிறது. மொத்தச் சமூகமும் கைவிடப்பட்டு அதன் சொத்துக்கள் களவாடப்பட்டு சேர்ந்திருக்கிறது சிலரின் கைகளில். தனிச்சொத்துக்கள் அனைத்தும் இந்தச் சமூகம் உழைத்து உற்பத்தி பண்ணிய சமூகத்தின் சொத்துக்கள்.

இந்த வாழ்க்கையில் நாம் படுகிற கஷ்டங்கள் எந்தக் கடவுளும் கொடுத்ததல்ல. இதை அவரவர் கடவுள் கொடுத்ததாகச் சொல்லி பாதிரிகளும், இமாம்களும், பார்ப்பனர்களும், பூசாரிகளும் உண்மையான தங்கள் கடவுளை ஆளும் வர்க்கத்தைவாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் அவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற சூட்சமத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு சாதிகள், மதங்கள், இனங்கள் இவற்றை எல்லாம் கடந்த முற்போக்குச் சங்கமம் என்று கட்சிகள் முழக்கமிடுகின்றன. ஆனால் முன்பு நிலவுடைமையில் மதம் வகித்த பாத்திரத்தைத்தான் இப்போது அவைகளும் வகிக்கின்றன. மக்கள் ஏதாவதொன்றை தேர்வு செய்யும்படியாக அவைகள் இடம், வலமாக எதிரிகள் போல் நின்று ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்கின்றன.

இருப்பதில் ஏதாவதொன்றை மட்டுமே தேர்வு செய்யும் உரிமை / சுதந்திரம் மக்களுக்கு. மக்களின் பிரதிநிதிகள் என்ற போர்வையில் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் கட்சிகளின் வழியாக பாராளுமன்றத்திற்குப் போகிறார்கள். அங்கே அவர்கள் கட்சியின் கட்டளைகளை மட்டுமே ஏற்று நடக்க முடியும். கட்சிகள் ஆளும் வர்க்கம் சொல்வதை மட்டுமே கேட்டு நடக்கும். அப்போது தான் அவர்களுக்கும் எல்லாமும் நடக்கும். நிலங்கள் மடத்துக்கு சொந்தம்; மடம் மடாதிபதிக்குச் சொந்தம் என்று சுற்றிவளைக்கும் சொல்தந்திரம் போல. கட்சிகள் எத்தனை கூட்டணிகள் வைத்துக் கொண்டாலும் அவைகள் ஆளும் வர்க்கத்தின் ஒரே ஒற்றை அணிதான். இந்தத் தனியுடமையை எதிர்த்து களத்தில் நிற்க வேண்டிய பொதுவுடைமைவாதிகள் எனப்படுகிற கம்யூனிஸ்டுகள் ஒற்றை எதிர் அணியாக நிற்காமல் எங்கே போனார்கள் என்பது தான் மக்களின் கேள்வி.

பறித்தெடுக்கப்பட்ட இந்த சமூக உடைமைகள் மக்களுடையவை என்பதை பொதுவுடமைவாதிகள் விளக்கப்படுத்த வேண்டும். ஆளும் வர்க்கத்தை ஆதரிக்கும் முதலாளித்துவக் கட்சிகள் எப்போதும் பிற்போக்குவாத வலதுசாரிகளாகத்தான் இருப்பார்கள். இது வரலாற்று உண்மை. ஆளும் வர்க்கத்திற்கு பணியாற்ற பொய்யாக அணி பிரிந்து நிற்கும் முதலாளித்துவ கட்சிகளின் மாற்றாக எதிரணியாக பாட்டாளி வர்க்கத்தின் ஒரே அணியாக அல்லவா இடதுசாரிகள் நிற்க வேண்டும். அணி பிரிந்து நிற்கும் முதலாளித்துவக் கட்சிகளின் ஆடுகளங்களில் இவர்களும் ஏன் நிற்கிறார்கள் எனக் குழப்பம் வருகிறதல்லவா

இப்போதல்ல மக்களுக்கு இது நீண்டநாள் குழப்பம். ஏதாவது ஒரு அணியுடன் கூட்டணியில் இடம்பெற்று பாட்டாளி வர்க்கத்தையும் துணைக்கழைக்கிறார்களே எப்படி?   அப்படியெனில் இப்போது அறியப்படுகிற அல்லது அறிவித்துக் கொள்கிற கம்யூனிஸ்டு கட்சிகள் அந்த ஆளும் வர்க்கம் நிர்வகிக்கிற அரசை, அதன் நீதி, நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டு அதன் கீழ் தீர்வைத் தேடிப் போராடுகிறார்களா? வெறும் அடையாளப் போராட்டங்களை ஆயுதங்களாக வைத்துக் கொண்டு, ஆளும் வர்க்கத்தின் பாராளுமன்றத்தில் பங்கெடுத்துக் கொண்டு முடிந்தால் ஆட்சியைக் கூட பிடிப்பது என்ற நோக்கில் செயல்படும் இவர்கள் என்ன வகை கம்யூனிஸ்டுகள்? இப்படி வேண்டுமானால் சொல்லலாமா?  முன்பு காங்கிரசில் சோசலிஸ்டாக இருந்தவர்கள் இப்போது ஆளும் வர்க்கத்தின் முதலாளித்துவக் கட்சிகளுடைய இடதுசாரிகளாக பரிணமித்து விட்டார்கள். அவர்களின் இடதுசாரி பிரிவு அதாவது பிற்போக்கின் முற்போக்கு அணி.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதன் பொருளாதார அடிப்படையில் பார்க்கப்படுகிறது. அதன் சமூக வளர்ச்சி பார்க்கப்படுவதில்லை. ஒட்டு மொத்த  சமூகத்தின் வேலைவாய்ப்பு, வாங்கும்திறன், அதன் அடிப்படை வசதிகள், வாழ்க்கைத்தரம், கல்வி, ஆரோக்கியம், சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் இப்படியான அலகுகள் பார்க்கப்பட வேண்டும். தனிநபர் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியல்ல. தன்னைச் சுற்றிலும் பட்டினிப் பட்டாளத்தை வைத்துக் கொண்டு தான் மட்டும் சுவைத்து சாப்பிடுகிறவன் மனநோயாளி அல்லவா? அதை வளர்ச்சி என்று பிரகடனப்படுத்திக் கொள்வது பெரும் கேலிக்கூத்து. உண்மையான இந்தியாவின் வளர்ச்சி என்பது ஒவ்வொரு இந்தியனின் வளர்ச்சி என்பதே சரியானது. ஒட்டு மொத்த சமூகத்தின் வளர்ச்சி தான் ஒரு நாட்டின் வளர்ச்சி. இந்த அளவுகோலில் பார்க்கப்படும் போது தான் உண்மையான வளர்ச்சியின் சரித்தன்மை உறுதிப்படுத்தப்படும்.

                                                    பாவெல்சூரியன்

Comments

  1. முதலாளிகளும் முதலாளித்த ஊடகங்களும் இந்தியாவின் வளர்ச்சி என்று கூறுவதன் உண்மையான பொருள் பற்றி இந்த கட்டுரை சிறப்பாக விளக்கி இருக்கிறது.

    பொருளாதாரத்தின் உண்மை நிலை குறித்த பல தெள்ளத் தெளிவான புள்ளி விவரங்கள் இந்த வளர்ச்சி ஒரு தலைப்பட்சமானது என்பதை விளக்குகின்றன.

    இந்த அமைப்பில் கட்சிகள் எப்படிப்பட்ட பங்கு வகிக்கிறார்கள் என்பது குறித்தும், மதவாதிகளுடைய பங்கு குறித்தும் மிகவும் எளிமையான முறையில் முக்கிய கருத்துக்கள் விளக்கப்பட்டு இருக்கின்றன.

    இத்தகைய சூழலில் கம்யூனிஸ்டுகள் எப்படிப்பட்ட பங்காற்ற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டிருப்பது மிகவும் சிறப்பு.

    நன்றி

    ReplyDelete
  2. கொடுத்தது எல்லாம் கொடுத்தான்..
    அவன் யாருக்காக கொடுத்தான்...?.
    தனி மனிதனுக்கு உணவு
    இல்லையேல் ஜகத்தினை
    அழித்திடுவோம்...

    எத்தனை ஜகத்தினை
    அழிப்பது...???

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட