Skip to main content

அடையாளப் போராட்டங்களும் அரசியல் நீக்கமும்!

போராட்டங்களில் என்ன அடையாளப் போராட்டங்கள்? போராட்டங்களைப் பொருளாதாரப் போராட்டங்களாகக் குறுக்கிவிடுவதும், சீர்திருத்தக் கோரிக்கைகளுக்கானவையாக மாற்றீடு செய்வதும், தெளிவான அரசியல் போராட்டங்களாக அதைப் பரிணமிக்க விடாமல் பார்த்துக் கொள்வதும், பெயரளவுக்கு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதுடன் திருப்தி அடைவதும் தான் அடையாளப் போராட்டங்கள்

இவை ஆளும் வர்க்கத்தை எதிர்ப்பது போல் போக்குக் காட்டி, அதை ஆதரிக்கும் அடையாளப் போராட்டமாக வடிவமெடுத்து வர்க்க எதிர்ப்புச் சாரத்தைப் பேரிழப்புக்கு உள்ளாக்கும். மிகத் தெளிவாகத் தெரியும் வர்க்க அரசியலைக் கைவிட்டுவிட்டு ஆளும் வர்க்கத்திற்கு எதிராக என்ன வகையான போராட்டத்தை முன்னெடுத்தாலும், அவை வர்க்கக் காட்டிக் கொடுத்தல்களுக்கு தான் இட்டுச் செல்லும்.

தொலைநோக்கோடு கூடிய, தத்துவார்த்த அடித்தளத்தோடு இணைந்த, அதிகார மாற்றத்திற்கான பொருளாதாரப் போராட்டங்களும், அரசியல், கலாச்சாரப் போராட்டங்களும் தான் வர்க்கப் போராட்டங்கள். வர்க்க உணர்வோடு கூடிய இந்தப் போராட்டங்கள் பொருளாதாரப் போராட்டத்தோடு நின்றுவிடாமல் வர்க்க அதிகாரத்திற்காக நீள்கிறது. ஆளும் வர்க்கத்துக்கு எதிரான அனைத்துப் போராட்டங்களும் உடைமை வர்க்கத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், உழைக்கும் வர்க்க அதிகாரத்தை நிறுவக்கூடிய நோக்கத்தோடும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வர்க்கக் கண்ணோட்டம் இல்லாத இதரப் போராட்டங்கள் யாவும் நிகழ்காலத் தேவையை மட்டுமே பிரதிபலிப்பவை. வர்க்கப் போராட்டம் மட்டுமே எதிர்கால நோக்கங்களை ஈடேற்றும் வகையானவை மட்டுமல்ல, இதுவரை சமூகத்தில் நிலவுகிற தனி உடைமையை எதிர்த்துத் தகர்ப்பவையாகும்.

தற்போது நடைபெறுகின்ற போராட்டங்களின் ஒரு சுற்றை நிகழ்வோட்டமாக இங்கே பார்க்கலாம். தொழிலாளர் விரோதச் சட்டங்கள், பொதுத் துறைகளைத் தனியார்மயமாக்கல் சட்டங்கள் போன்றவை நாடாளுமன்ற அவைகளில் இயற்றப்படுகின்றன. அங்கே அவற்றை எதிர்த்துப் பேசுகிறார்கள் இடதுசாரிகள் என்றறியப்படுகிற சி.பி., சி.பி.ஐ(எம்) கட்சியினர். எண்ணிக்கை அருகியிருப்பதால் எதிர்ப்புக் குரல்களும் ஈனஸ்வரத்தில் ஒலிக்கிறது. பொலிட்பீரோவும், தலைமையும் இவற்றை எதிர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுகிறது. பொது வெளியிலும், மக்கள் மன்றத்திலும் உரிமைகள் பறிபோகின்றன; நாம் ஒடுக்கப்படுகிறோம்; இதைக் கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும் என்று கட்சியின் நிர்வாகிகள் பேசுகிறார்கள். போராட்டத்திற்கான இடமும், காலமும் கூடத் தாங்களே முடிவு செய்து விட முடியாத நிலையில் அவற்றை உத்தேசமாகக் குறிப்பிட்டுக் காவல்துறைக்கு மனு செய்து கொள்கிறார்கள்.

இடத்தேர்வில் குழப்பம் வருகிறபோது மாற்று இடங்களை விருப்பத்தேர்வாக(!) நிர்வாகம் கோரும். மாவட்ட ஆட்சியரகம், வட்டாட்சியர் அலுவலகம், சட்டமன்றத்துக்கு எதிரே, ஆளுநர் மாளிகை அருகே என்று இடங்கள் சுட்டப்படும். போக்குவரத்துக்குக் குறுக்கீடில்லாமல், பொது அமைதிக்குக் குந்தகம் விளையாமல் என்று அரசே போராடுவதற்கென்று சில இடங்களைத் தேர்வு செய்து தயார் நிலையில் வைத்திருக்கும். எந்தச் சந்தடியுமில்லாத, ஒதுக்குப்புறங்கள், சுற்றுச்சுவர் சூழ்ந்த விளையாட்டுத்திடல்கள், கூவத்தின் கரைகள் இப்படி இடத்தை அவர்கள் அறிவிப்பார்கள். காலமும், நேரமும் கூட அவர்களின்(நிர்வாகம்) கட்டுப்பாட்டில்தான். முழுநாள் கிடையாதென்று முகூர்த்த நேரம் மாதிரி காலை 10 முதல் 12 வரை என்பார்கள். இத்தனை கெடுபிடிகளுக்கும் செவி கொடுத்து நின்றாலும் சில நேரங்களில் நிர்வாகம் அனுமதிக்காத போது நீதிமன்றத்தை அணுக வேண்டியிருக்கும்.

நீதிமன்றம் ஆழ்ந்து பரிசீலிக்கும்; சாலையின் ஓரமாகவே போக வேண்டும், முழக்கங்கள் யாரையும் பாதிக்கக் கூடாது; ஒலிபெருக்கி கூடாது; முடிந்த பிறகு அமைதியாகக் கலைய வேண்டும், என்றெல்லாம் நிபந்தனையோடு அனுமதி அளிப்பார்கள். இவ்வளவு விருப்பத் தேர்வுகளையும் அரசு தன்னிடம் வைத்துக் கொண்டு இவர்களைப் போராட அனுமதிப்பார்கள். இதை மீறினால் சட்ட விரோதம் என்றும் அறிவித்து விடுவார்கள். போராட்டத்துக்காக எவ்வளவு போராட்டம் பாருங்கள்.

இப்போது போராட்டக் களத்துக்கு வருவோம். தலைவர்கள் சட்டத் திருத்தங்கள் எப்படி தொழிலாளர் விரோதமானவை என்று ஒருவர் பின் ஒருவராகப் பேசுகிறார்கள். எல்லோரும் ஆளும் கட்சியை எதிர்த்தும், சட்டத் திருத்தத்தை ரத்து செய்யவும் கோரி முழக்கமிடுகிறார்கள். சில வேளைகளில் காவல் துறை கைது செய்கிறது; மதிய உணவு வாங்கிக் கொடுத்து மாலையில் விடுதலை செய்கிறது. இதுதான் போராட்டங்களின் தொடர்கதையாக இருக்கிறது. எப்போதாவது ஆட்சியாளர்கள் இவர்களை அச்சுறுத்தவும், அடக்கி வைக்கவும் நினைக்கிற போது காவல்துறைக்கு “கொஞ்சம் கவனிஎன்று உத்தரவு போட்டால், சோம்பல் முறித்துக் கொண்டிருந்த காவல்துறை தலைவர்களைக் கைது செய்த பிறகு, தடியடி நடத்தும். ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து பாதிக்கப்பட்டால் நமது வரிப் பணத்திலிருந்தே நமக்கு இழப்பீடு வழங்கப்படும்.

இந்த போராட்டங்களின் முடிவு தான் என்ன? அரசு இதைக் கவனத்தில் எடுத்ததா? அப்படி அரசு புறக்கணித்தால் இவர்களின் அசைவு என்ன? அடுத்த கட்ட நகர்வு என்ன? இவர்களும் சொல்ல மாட்டார்கள்; பழக்கப்பட்டுப் போனதால் தொண்டர்களும் கேட்க மாட்டார்கள். இனி முதலாளித்துவம் கொடுக்கும் அடுத்த அடிக்காக காத்திருப்பார்கள்.

இதற்கிடையில் தேர்தல் வரும்; ஆளும் அல்லது ஆளப்போகும் கட்சிகளோடு கூட்டணி அமையும். இப்போது எந்தப் போராட்டமும் இல்லாமல் சீட்டுக்களோடு நோட்டுக்களும் சேர்ந்தே முடிவாகும்இந்த வகை போராட்டங்களுக்காக அரசும் ஒன்றும் அலட்டிக் கொள்வதில்லை. “யாமிருக்க பயமேன்என்று இடையில் ஒரு கை உயர்த்தியபடி இவர்கள் இருக்க -அரசுக்கு, முதலாளிகளின் முகமைக்கு என்ன பயம்? மக்களுக்குத் தான் பயம். போராட்டத்தின் போது பட்டியல் எடுத்துப் பதிந்து கொண்டதே காவல் துறை-அடுத்து நம் பகுதியில் ஏதேனும் பிரச்சினை என்றால் நம் தலையைத் தானே உருட்டும் என்ற பயம். பயந்த இவர்களுக்கும் பாசத்தோடு கட்சி இன்னொரு கை உயர்த்தி யாமிருக்க பயமேன்என்று முழங்கும். அரசில் இருப்பது கூட்டணிக் கட்சி தானே, பார்த்துக் கொள்கிறோம் என்று ஆளும் வர்க்கத்துக்கும் உழைக்கும் மக்களுக்கும் ஊடே “பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல்” -கதை தான் இந்த கட்சிகளின், இவர்கள் நடத்தும் போராட்டங்களின் கதை.

இந்த கட்சிகளின் தலைமைக்கு இது தெரியாதா? தெரிந்தே தான் அவர்களை எதிர்ப்பது மக்களுக்காகவே என்று ஒருபுறமும். அவர்களோடு இணைவதும் மக்களுக்காகவே என்று இன்னொரு புறமும் களத்தில் கள்ளாட்டம் ஆடுகிறார்கள். எதிர்க்கிற போது விட்டுக் கொடுத்தும், அவர்களோடு இணைகிற போது பதவி பெறுவதுமாக (எம்.எல்./ எம்.பி.க்கள்) இவையெல்லாமும் ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகங்களே. மக்கள் விரோத செயல்பாடுகளை கட்டம் கட்டமாக முதலாளித்துவ அரசு முன்னெடுக்கும்பொழுது அப்பொழுது மட்டும் பெயரளவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் மக்களிடையே விழிப்புணர்வூட்டி ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டமாக அதனைக் கட்டியமைக்காமல் கிடப்பில் போடுவதும் என நாடக காட்சிகள் விரிகின்றன. இத்தகைய அடையாளப் போராட்டங்களின் பலன்கள் என்பவை தலைமைக்கு சட்டமன்ற, பாராளுமன்றப் பதவிகளும், மாவட்ட, வட்டாரத் தலைமைக்கு ஊராட்சி, உள்ளாட்சிப் பதவிகளும், தொழிற்சங்கக் கனதனவான்களுக்கான வசதிகளும், வாழ்க்கையுமாக அமையும்.

மக்கள் திரளின் ஒடுக்கப்பட்டு கீழ்நிலையில் இருப்பவர்கள் இவர்களைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தங்கள் தரப்பிலிருந்து சிலரை இழக்க வேண்டியிருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். போராட்டங்களில் கைது செய்யப்பட்ட தலைவர்கள் சிறை செல்வது அவர்கள் பிம்பத்தை மென்மேலும் மெருகேற்றிக் கொள்ளவும் சட்டமன்ற, பாராளுமன்ற, உள்ளாட்சிகளில் பதவி பெறவும் உதவுகிறது. தொண்டர்களோ வேலைக்கும் போகாமல், நீதிமன்றப் படிகளை மிதித்து மீள வேண்டியிருக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களோடு இந்த புதிய தண்டனைகளை ஏற்க வேண்டியதிருக்கிறது. இதனால் தான் உழைக்கும் மக்களின் நம்பகத் தன்மையை இவர்கள் இழந்திருக்கிறார்கள். அதை ஏற்கத் திராணியில்லாமல் மக்கள் இன்னமும் தங்களை அடையாளம் காணவில்லை எனவும், விழிப்புணர்வு பெறாமல் பின்தங்கி இருப்பதாகவும் பேசுகிறார்கள்.

மலிவான கூலி உழைப்பின் சந்தை என மனதில் அசைபோட்டுக் கொண்டே பொதுவெளியில் மனிதவளம் நிறைந்த இந்தியா என்று ஏகாதிபத்தியமும், கார்ப்பரேட்டுக்களும் கூட நமது உழைப்புச் சக்தியைச் சுரண்டுவதற்காகப் பெருமை பேசுகிறார்கள். அதற்குக் கொஞ்சமும் குறையாமல் இங்குள்ள முதலாளித்துவ அரசு உழைக்கும் மக்களின் பெரும்பான்மையை உலகச் சந்தையில் கடை விரித்து அவர்களிடம் சொற்ப கூலிக்கு ஒப்பந்தம் செய்து கொள்கிறது. இங்கேயே உற்பத்தி செய்யுங்கள் என்று அனுமதித்து மேக் இன் இந்தியாவின் மூலம் இங்குள்ள சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தி அழிக்கிறது. அவர்களுக்குத் தெரிந்த பெரும்பான்மை இவர்களின் கண்களில் ஏன் காட்சிப்படவில்லை? பெரும்பான்மையாகத் தொழிலாளர்கள் நிறைந்த இந்த நாட்டில் தங்களைக் கடுமையாகப் பாதிக்கும் பிரச்சினைகளை ஒட்டி அவர்களை ஒருமுகப்படுத்திப் போராடுவதற்குத் திரட்ட முடியாதா? பாரத் பந்த் என்று ஒருநாள் போராட்டமாகக் குறுக்காமல் நெடிய போராட்டமாக ஆளும் வர்க்கத்தை அசைக்க முடியாதா? முதலாளித்துவத்தோடு இணங்கிப் போய்விட்டால் முடியாது தான். இதுதான் கள யதார்த்தம்.

சமீபத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டால், முழுமையாக ஒரு ஆண்டு விடாப்பிடியான போராட்டம் நடத்தினார்கள். விவசாய விளைபொருட்களுக்கான சந்தையில் கிடைக்கும் இலாபத்தில் அதிகப் பங்கு பெறுவது நிலவுடமையாளர்களா, இல்லை கார்ப்பரேட் முதலாளிகளா என்பதுதான் போராட்டத்தின் மையம். முதலாளித்துவ அரசை விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க வைத்தார்கள். உண்மையில் தோற்றது திரைமறைவில் நின்ற ஏகாதிபத்தியமும், கார்ப்பரேட்டுக்களும் தான். இத்தனைக்கும் போராடியது இன்னொரு உடைமை வர்க்கம். முதலாளிய விவசாயிகள் தான் தலைமை தாங்கி வழி நடத்தினார்கள்; சிறுவிவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் முழுமூச்சாய் ஆதரித்தார்கள், எனில் வாழ்க்கையே போராட்டமாகிப் போன, இழப்பதற்கு இனி ஏதுமற்ற தொழிலாளர் போராட்டங்கள் எப்படித் தோற்கும்? எனவே தான் இந்த அடையாளப் போராட்டங்கள் உழைக்கும் வர்க்கத்தை அவர்களின் அரசியலிலிருந்து அப்புறப்படுத்துவதாகவும், பெருந்திரளாக உருவெடுக்காமலும் வைத்திருக்கிறது என்கிறோம்.

மேற்காணும் இவர்களின் நடைமுறைகள் போராட்டங்கள் பற்றிய சில படிப்பினைகளை உருவாக்கிப் பொது வெளியில் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. போராட்டங்கள் எதிர்ப்பின் அடையாளங்கள் மட்டும் தானா? எனில் அதில் அரசியல் இருக்கிறதா? இல்லையா? போராட்டங்கள் துண்டு துண்டான நிகழ்வுகளா? அவற்றுக்குத் தொடர்ச்சியான இணைப்பு உண்டா? இல்லையா? மக்கள் இவைகளைப் பரிசீலிக்கவும் கேள்வி எழுப்பவும் வேண்டியிருக்கிறது. எல்லா நடைமுறைகள், செயல்கள், சொற்களுக்குப் பின்னாலும் ஒரு வர்க்கம் இருக்கும் எனில் போராட்டங்கள் ஆளும் வர்க்கத்துக்கு எதிராகவா? அதன் எடுபிடியான ஆளும் கட்சிக்கு எதிராகவா? என்றறியப்படல் வேண்டும். எதிராக மட்டுமல்ல; அதை பலவீனப்படுத்துமா? அல்லது அதற்குப் பணிந்து போகுமா? அதன் இருப்பை அங்குலமேனும் நகர்த்துமா? என்று பார்க்கப்பட வேண்டும். அவ்வப்போதைய விளைவுகளுக்கு எதிரான போராட்டங்கள் என்பவை தோன்றி மறையும் தன்மை கொண்டவை; தற்காலிகமானவை; அவை அதிகாரத்திடம் கோரிக்கை வைக்கும்; கோரிக்கையை வலியுறுத்திப் போராடும். அவ்வளவு தான். மாற்று அதிகாரத்தைப் பற்றிப் பேசாது. மக்களிடம் அது பற்றிப் பரப்புரை செய்யாது. அதற்கான நோக்கமும் அதற்கில்லை.

நீண்ட இலக்கோடு இணைக்கப்பட்டவைகளாக வெளிப்படுகிற போராட்டங்கள் மூல உத்தியுடன் இணைக்கப்பட்ட செயலுத்திகள்; அவை தொடர் போராட்டங்களின் நீட்சியானவை. இது நிகழ்காலச் சிக்கலின் விளைவுகளுக்கல்ல - ”காரணங்களுக்குஎதிரான போராட்டங்கள்.

எனவே விளைவுகளுக்கு எதிரான அடையாளப் போராட்டங்கள், ஆதிக்கம் செலுத்தும் ஆளும் வர்க்கத்தை விட்டுவிட்டு அதன் கருவியாகச் செயல்படுகிற ஆளும் கட்சிக்கு எதிரான போராட்டங்களாகவே கட்டமைக்கப்படும். சொல்லில் மட்டும் புரட்சி இருக்கும், செயலில் புரட்சிக்கான நோக்கமோ, திட்டங்களோ இருக்காது. முதலாளித்துவத்தின் ஜனநாயகம், மக்களாட்சி, பிரதிநிதித்துவ அரசியல், பாராளுமன்றப் பங்கேற்பு இவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு அரசிடம் அவ்வப்போது கோரிக்கை வைத்துப் போராடும். இவையெல்லாம் முதலாளித்துவ அரசால் செய்து தரக்கூடியவையென மக்களை நம்ப வைக்கும். மேலோட்டமாக பார்க்கிற போது நோக்கமற்றவையாகத் தோன்றினாலும் வர்க்கமும், வர்க்கப் போராட்டங்களும் முதன்மையானவைகளாக எழுந்து விடக்கூடாதென்ற உள்நோக்கம் கொண்டவை தான் இந்த வகை அடையாளப் போராட்டங்கள்.

முதலாளித்துவ சமூகம் இரண்டு எதிரெதிர் வர்க்கங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. ஒன்று எண்ணிக்கையில் சிறுபான்மையாகயாக இருக்கும் ஆளும் வர்க்கம்; மற்றது பெரும்பான்மை உழைக்கும் வர்க்கம். தனி உடைமையின் நீட்சியாகத் தாங்கள் கைப்பற்றியும், தொழில் நுட்பத்தால் மேம்படுத்தியும் வைத்திருக்கும் உற்பத்திக் கருவிகள், மூலதனம், நில உடைமை இவற்றைக் கொண்டு பெரும்பான்மை உழைக்கும் மக்களைத் தங்களின் ஆதிக்கத்திற்குள் இருத்திக் கொண்டுள்ளனர். புராதனப் பொது உடைமைச் சமூகத்தில் இயற்கை எந்தத் தனிமனிதனுக்கும் அல்லது கும்பலுக்கும் சொந்தமாகாமல் இருந்தது. அந்த இயற்கையோடு ஒன்றி, அதன் சுதந்திரமான குலக்குழு உறுப்பினராக வேட்டைத் தொழிலில் இருந்தவன் நில உடைமையில் பண்ணை அடிமையாகி, வேட்டையையும், விவசாயத்தையும் இழந்து முதலாளித்துவத்தில் “சுதந்திரமான” தொழிலாளியாகி விட்டான்.

இப்படியான தனி உடைமையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தம் உழைக்கும் வர்க்கத்திற்கு இருக்கிறது. தன் உண்மையான மனித இருத்தலையும், இயங்குதலையும் உறுதிப்படுத்தவும் எல்லா மனிதர்களும் சமமானவர்கள் என்ற சமநிலை சமூகத்தைப் படைக்கவுமான கடமை முழுக்க முழுக்க உழைக்கும் வர்க்கத்திற்கே உள்ளது.

கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலுமாக உடைமை வர்க்கம் பறித்துக் கொண்ட தங்களது வாழ்க்கையை மீட்டெடுத்துக் கொள்வதற்கான யுத்தமே உழைக்கும் வர்க்கத்துக்கான போராட்டம். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட உழைப்பு சொத்தாகி ஆளும் வர்க்கத்திடம் குவிந்து கிடக்கிறது. அதன் காவலுக்கும், தொடர்ந்து அந்தப் பறிமுதலை நீட்டிக்கிற ஆளும் வர்க்கத்தின் கருவியாகவும் காவல்துறை, இராணுவம், நீதி நிர்வாகம் இருக்கிறது; அதன் இடைத்தட்டிலும், அடி மட்டத்திலும் நிற்பவர்கள்பறி கொடுத்த உழைக்கும் மக்களும், அவர்களின் வாரிசுகளும் தான். ஆளும் வர்க்கத்தின் பல தலைமுறையினருக்காகச் சேர்த்துக் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்களுக்குத் தங்கள் உழைப்பே காரணம் என்பதை உணராமலேயே எதிரிகளுக்குக் கருவியும், காவலுமாக நிற்கிறார்கள். தன்னுடைய கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் பறித்துக் கொண்டு எதிர்காலத்தையும் நெருங்க விடாமல் குறுக்கே நிற்பவனிடம் நிகழ்காலத் தேவைகளுக்காக எதிர்பார்த்து நிற்கவும், போராடவுமான இழிநிலையில் இருத்தப்பட்டிருகிறது பாட்டாளி வர்க்கம்.

வர்க்கப் போராட்டத்திற்கான வடிவங்களை, அதன் சாரத்தை, வரலாற்றை உழைக்கும் வர்க்கத்துக்கு உணர்த்த வேண்டும். தனி உடமையை எப்படித் தொடங்கி நீண்ட நிலைபேற்றுக்குப் பின்னும் தொடர்ச்சியாக முதலாளித்துவம் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்குக் கோடிட்டுச் சொன்னால் போதும். நடைமுறையில் அனுபவிப்பவர்களுக்கு காலங்காலமாக பெரிய மனிதர்களின், ஆதிக்கச் சக்திகளின் கையாள்கையில் இருந்தவர்களுக்கு அவர்களை எப்படித் திரும்பக் கையாள்வதென்பது தெரியும். அதன் தொடக்கமும், முடிவும் அவர்களுக்குத் தெளிவாகி விடும். என்ன மாதிரியான வாழ்க்கை தன்மேல் சுமத்தப்பட்டிருக்கிறது; சுமையை குறைக்கவோ, மாற்றவோ முடியாதபடி எது வழிமறித்து இடைநிற்கிறது? இந்தப் பறி கொடுத்தஇடத்தின் பள்ளங்கள் எங்கே மேடுற்று மேரு மலையாகி நிற்கிறது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாதா என்ன? அவர்களுக்குத் தெரிய வேண்டியதெல்லாம் வரலாற்றில் அவர்கள் யாராக இருந்தார்கள்? ஏன் இப்படியே நிராகரிக்கப்பட்ட நரகத்தில் நின்ற நிலையாய் நிற்கிறார்கள்? பொருளும், அதைக் காப்பாற்றும் அதிகாரமும் அதன் அடிஎன்ன? முடிஎன்ன? இவைகள் புலப்பட்டால் போதும், புறப்பட்டு விடுவார்கள். எனவே அடையாளப் போராட்டங்கள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் செல்வாக்குச் சரியாமல், குலையாமல் கட்டுண்டு நிற்பவை. மூலதனத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் ஒவ்வொரு போராட்டமுமே வர்க்கப் போராட்டமாகும்.

தனி உடைமையின் முடிவான பயணத்தில் நிற்கிற முதலாளித்துவம் நெருக்கடியின் உச்சத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதிகார மாற்றத்தை, அதாவது தனியுடமை அதிகாரத்தின் முடிவைக் கோருகிற அனைத்துப் போராட்டங்களும் அவர்களைச் சில்லிட வைக்கும். ஏற்கனவே அத்தகைய வரலாறு உயிர்பெற்று ஒரு நூற்றாண்டுக்கு மேலாகி விட்டது. சரிந்து போனது, சிதைந்து போனது என்றெல்லாம் பிரச்சாரம் செய்தாலும் அதன் உண்மையான இருப்பும், உயிர்ப்பும் மக்களிடத்து இருக்கிறது-கருவடிவாக. எப்போது என்பது தெரியாதே தவிர தனக்கான முடிவுரையை பாட்டாளி வர்க்கம் தான் எழுதும் என்பதும் முதலாளித்துவம் அறிந்தது தான்.

தற்போதைய போராட்டங்களின் முழக்கமும், அடிப்படையும் அனைத்துத் தனி உடைமைகளையும் சமூக உடைமையாக்கு என்பதாகவே இருக்க வேண்டும். மூலதனத்தை வீழ்த்துகிற போராட்டங்கள் மட்டுமே முதன்மையாக்கப்பட வேண்டும். அனைவருக்கும் கல்வி வேண்டும், வேலை வேண்டும், மருத்துவ வசதி வேண்டும், வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும், விலையேற்றங்கள், வரிகள் களையப்பட வேண்டும், வட்டி மற்றும் அபராதங்கள் மூலம் மக்களிடம் அடிக்கும் கொள்ளைகள் அகற்றப்பட வேண்டும், மக்களுக்காக என்று அன்னியக் கடன்களை பெருமளவில் வாங்கி தன் சொத்தாக மாற்றிக் கொள்ளும் முதலாளிகள், அதிகார வர்க்கம், முதலாளித்துவக் கட்சிகள் என்றமுக்கூட்டுச் சதிகள்முறியடிக்கப்பட வேண்டும், அன்னியக் கடன்ளுக்கான வட்டியை ரத்து செய்திட வேண்டும், அன்னியக் கடன்களை பிரித்துத் தலைக்கு இவ்வளவு என்று மக்களுக்குப் படியளந்துவிட்டு, அதானி-அம்பானிகளுக்கு செல்வம் குவிந்திட வரிப்பணத்தை வாரி இறைப்பதை நிறுத்த வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைகள் நிறைய வரிசை கட்டி நிற்கிறது. இந்தக் கோரிக்கைகள் அனைத்துமே மக்களின் கோரிக்கைகள். இது மக்களுக்கான போராட்டம்; இதை அவர்கள் தான் முன்னெடுக்க வேண்டும். இது உங்களுக்கான களம், இந்த தனிச் சொத்துக்கள் யாவும் உங்களுடையவை என்பதை அவர்களுக்கு உணர்த்துவதும், விழிப்புணர்வு கொடுப்பதும், எழுச்சி கொள்ளும் போது வழிநடத்துவதும் தான் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் பணி. அவர்களது போராட்டங்களை அவர்களே வரலாறு ஆக்கிக் கொள்வார்கள். எனவே அடையாளப் போராட்டங்களை விட்டு வெளியேறுங்கள்; அல்லது உங்களையும் சேர்த்து மக்கள் வெளியேற்றுவார்கள். 

பாவெல்சூரியன்

Comments

  1. இங்கு அடையாள போரட்டம் மட்டுமே நடைபெறுகிறது.
    வர்க்கப் போராட்டம் இல்லை.
    எல்லாம் சீர்திருத்த போராட்டம் தான்.

    எதிர் கட்சியின் போராட்டம் தான்.
    வர்க்கப் போராட்டம் மட்டுமே
    ஆளப்படும் வர்க்கத்துக்கு தேவை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட