Skip to main content

தேசியம் முதலாளி வர்க்கத்திற்கானதா? பாட்டாளி வர்க்கத்திற்கானதா?

 

14.05.2023 அன்று சென்னையில் மார்க்சியர் மேடை என்னும் குழுவினர் "தேசியம் முதலாளித்துவத்திற்கானதா அல்லது பாட்டாளி வர்க்கத்திற்கானதா என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த விவாதக் கூட்டத்தில் சோசலிசத் தொழிலாளர் இயக்கம் சார்பில் கலந்து கொண்டு முன்வைத்த உரையினைத் தொகுத்து இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. நேரமின்மையின் காரணமாக அந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்படாத ஒரு சில செய்திகளும் இந்தக் கட்டுரையில் இணைக்கபட்டுள்ளன. 

* * * * * 

தொடக்க கால முதலாளித்துவம் தன்னுடைய சந்தை நலனுக்காக சிறு சிறு அரசுகளாக இருந்த ஒரே மொழி பேசக் கூடிய பல்வேறு பகுதிகளை ஒன்றிணைத்து ஒற்றை அரசாக நிறுவுவதற்கும், அதே போன்று பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வந்த பேரரசுகளில் முதலாளித்துவம் அரசதிகாரத்தைக் கைப்பற்றியபொழுது ஒடுக்கும் தேசிய இன முதலாளி வர்க்கம் சந்தையைத் தன்னுடைய ஆதிக்கத்தில் வைத்திருந்த நிலையில், ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் முதலாளி வர்க்கம் தனக்கான சந்தை நலனை முன்னிறுத்துவதற்கும் தேசிய இன இயக்கத்தை முன்னெடுத்தது. 

பல்தேசிய அரசுகளில் ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த முதலாளி வர்க்கம், பரந்து விரிந்த சந்தையைத் தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இதர தேசிய இனங்கள் மீது ஆதிக்கத்தைச் செலுத்துகின்றது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த மக்களிடையே இனவாத உணர்வை ஊட்டி மற்ற தேசிய இன மக்கள் மீது வேற்றுமையுணர்வை உருவாக்குகின்றது. இதனால் ஒடுக்கும் தேசிய இன மக்கள் மற்றும் ஒடுக்கப்படும் தேசிய இன மக்களிடையே கசப்புணர்வுகள் மேலோங்குகின்றன. இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஒடுக்கப்படும் தேசிய இன முதலாளி வர்க்கம் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை என்ற பெயரில் சந்தையைக் கைப்பற்றப் பிரிந்து போகும் கோரிக்கையை முன்னிறுத்துகின்றது. 

முதலாளியப் புரட்சி காலகட்டத்தில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை விட ஒப்பு நோக்கில் முதலாளி வர்க்கத்தின் தேசிய இயக்கங்கள் முற்போக்குப் பாத்திரத்தை வகித்தன. ஆனால், ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்கப் புரட்சியுமான இன்றைய சகாப்தத்தில் தேசிய இனப்பிரச்சனை என்பது பல்வேறு ஜனநாயகக் கோரிக்கைகளில் ஒன்றே தவிர, இது முதன்மையானதோ அல்லது முழுமையானதோ கிடையாது. 

இனி மேலும் சகித்துக் கொண்டு தொடர்ந்து இணைந்து வாழமுடியாத நிலையைத் தவிர மற்ற நிலைமைகளில் ஒடுக்கும் தேசிய இனம் மற்றும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்கம் ஐக்கியத்தையே கோருகின்றன. (குட்டி) முதலாளி வர்க்கத்தின் தேசியவாத மாயைகளிலிருந்து உழைக்கும் மக்களை விடுவிக்க வேண்டிய அதே நேரத்தில், எந்த ஒரு தேசிய இனமும் தான் விரும்புகின்ற பொழுது தனித்து பிரிந்து செல்வதற்கான உரிமையை அங்கீகரிக்கும் வகையில் சுயநிர்ணய உரிமையை கம்யூனிஸ்டுகள் தேசிய இன வேலைத் திட்டமாக கொள்ள வேண்டும். 

முதலாளியம், தன்னுடைய சந்தையைத் தேச எல்லைகளைக் கடந்து சர்வதேச அளவில் விரித்துச் சென்று கொண்டிருக்கின்றது. தொடக்கத்தில் காலனிகளைக் கைப்பற்றியதன் மூலம் ஒரு சில ஏகாதிபத்திய நாடுகள் மட்டும் விரிந்த சந்தையைக் கொண்டிருந்தன. ஒடுக்கும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒடுக்கப்படும் காலனிய நாடுகளின் விடுதலைப் போராட்டங்கள் தேச விடுதலைப் போராட்டங்கள் என்று வரையறுக்கப்பட்டன. இங்கு தேச விடுதலைப் போராட்டம் என்பது தேசிய இன அடிப்படையிலானது அல்ல. மாறாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான காலனி நாட்டு (அவை பெரும்பாலும் பல தேசிய இனங்களை உள்ளடக்கியது) மக்களின் விடுதலைப் போராட்டத்தைக் குறிக்கின்றது. பிரிட்டன் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்தியத் தேச விடுதலைப் போராட்டம், ஜப்பான் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சீனாவின் தேச விடுதலைப் போராட்டம், இரண்டுமே பல தேசிய இனங்களை உள்ளடக்கிய பல்தேசிய நாட்டின் தேச விடுதலைப் போராட்டத்தைக் குறிப்பவையாகும். 

தற்பொழுது பல்வேறு கூட்டுகளின் மூலம் நாடுகளுக்கிடையே சந்தை, மூலதன நுழைவு ஆகியவற்றிற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதும், தடையற்ற சந்தைகளை உருவாக்குவதுமாக முதலாளித்துவம் உலகு தழுவிய அளவில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றது. 

தன்னுடைய பொருளாதார நலனிற்காக எந்த முதலாளி வர்க்கம் தேசிய இன இயக்கங்களைத் தட்டியெழுப்பி தேசிய அரசுகளை அமைக்க முயன்றதோ, அவை இன்று உலகளாவிய சந்தையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால் தேசிய இயக்கங்களைக் கைவிட்டுவிட்டன. அவர்களுக்கு அடுத்ததாக இருக்கும் குட்டி முதலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியினரின் சந்தைகளும் தேச எல்லைகளுக்கு அப்பால் நீண்டுள்ளதால் அவையும் தேசிய இன இயக்கங்களைக் கைவிட்டு விட்டன. 

ஆனாலும், பல்வேறு இன மக்களைக் கொண்ட பல்தேசிய இன அரசில் தேசிய இனப் பிரச்சனை என்பது என்னவாக இருக்கின்றது? பெரும்பான்மை தேசிய இனம் சிறுபான்மை தேசிய இனத்தின் மீது ஒடுக்குமுறையை நிகழ்த்துதல், தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையை மறுத்தல், குறிப்பிட்ட சில தேசிய இனங்களுக்குச் சலுகைகளை வழங்குதல், தேசிய இனங்களுக்கிடையே எழக்கூடிய சிக்கல்களைத் தீர்க்காமல் அவற்றை இனங்களுக்கிடையிலான முரண்களாக வளர்த்தல் ஆகிய பிரச்சனைகளே இன்றையக் காலகட்டத்தில் பல்தேசிய நாடுகளில் தேசிய இனப் பிரச்சனைகளாக உள்ளன. 

முதலாளி வர்க்கம் தேசிய இனங்களின் சமத்துவம், சுயநிர்ணய உரிமை ஆகிய ஜனநாயகக் கோரிக்கைகளை என்றும் செயல்படுத்த முன்வராது. பொதுவாகவே முதலாளித்துவ சமூகத்தில் ஜனநாயக உரிமைகள் என்பது ஏட்டளவில் மட்டுமே மக்களுக்கு இருக்கும், உண்மையில் அது ஆளும் வர்க்கத்திற்கானது தான். எனினும் சில பகுதிகளில் (பெயரளவில் மட்டுமே) சலுகைகள் வழங்குவதும், சில பகுதிகளில் உரிமைகள் பறிப்பதும் என ஆளும் வர்க்கங்கள் மக்களிடையே வேற்றுமைகளை உருவாக்க முயல்கின்றன. பாட்டாளி வர்க்கம் அரசியலதிகாரத்தை வென்றெடுக்கும் பொழுது மட்டுமே தேசிய இனப்பிரச்சனை உள்ளிட்ட அனைத்து ஜனநாயகக் கோரிக்கைகளும் உண்மையிலேயே நடைமுறையில் நிறைவேற்றப்படும். 

அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சம உரிமை, எந்த ஒரு தேசிய இனத்துக்கும் தனிச் சலுகைகள் இல்லை, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, அனைத்துத் தேசிய இனங்களின் தொழிலாளர்களின் ஐக்கியம் இதுவே பல்தேசிய அரசில் பாட்டாளி வர்க்கத்தின் தேசிய இன வேலைத் திட்டமாக இருக்கும் என்கிறார் லெனின். பல்தேசிய அரசிலிருந்து ஒவ்வொரு தேசிய இனமும் தனித்துப் பிரிந்து போவதன் மூலம் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வது என்பது பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம் இல்லை. தேசிய இன இலட்சியமே முதலாவது இலட்சியம் பாட்டாளி வர்க்க இலட்சியம் பிறகுதான் என்கிறார்கள் பூர்ஷ்வா தேசியவாதிகள் என லெனின் இவர்களை அம்பலப்படுத்துகிறார். 

மேலும், சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்பு என்பது பிரிவினையை எதிர்த்துப் பிரச்சாரம், கிளர்ச்சி செய்தல், பூர்ஷ்வா தேசியத்தை அம்பலப்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து விலக்கி விடாது என்றும் லெனின் வலியுறுத்துகிறார். 

பல்தேசிய அரசில் ஒவ்வொரு தேசிய இனமும் தேசிய விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துபவர்கள், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்துப் பேசும் லெனின் மற்றும் ஸ்டாலினின் வாதங்களை ஆதாரமாக முன்வைக்கின்றனர். அடிப்படையில் இரண்டும் வேறு வேறானது. பல்தேசிய அரசில் ஒரு தேசிய இனம் தனியாகப் பிரிந்து செல்வதையே முதன்மை இலக்காக கொள்வதும், பிரிந்து செல்வதற்கான உரிமையுடன் கூடிய ஐக்கியம் என்பதற்கும் வேறுபாடு உண்டு. 

மண விலக்கு உரிமை என்பது இணையர்கள் தனியாகப் பிரிந்து செல்வதற்கான உரிமையை வழங்குகின்றது. ஆனால், மணவிலக்கு உரிமை இருப்பதாலேயே அவர்கள் தனித்துப் பிரிந்து இருக்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. மண விலக்கு உரிமை என்பது கணவன், மனைவி இருவருக்கும் இடையில் சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவது. சமத்துவமும் ஜனநாயகமும் மீறப்படும்போது மண விலக்கு உரிமையைப் பயன்படுத்தி இருவரும் தனித்தனியே பிரிந்து போகலாம். அது போன்று தான் சுயநிர்ணய உரிமை என்பது எந்த ஒரு தேசிய இனமும் தனித்துப் பிரிந்து செல்வதற்கான உரிமையைக் குறிக்கின்றதே தவிர, ஒவ்வொரு தேசிய இனமும் தனியாகப் பிரிந்து சென்று அரசமைக்க வேண்டும் என்பதல்ல. எப்பொழுது சமத்துவமும் ஜனநாயகமும் மீறப்படுகிறதோ, எப்பொழுது அறவே சேர்ந்து இருக்க முடியாத சூழ்நிலை எழுகின்றதோ, அன்றாட இயல்பான செயல்பாட்டிற்கே சாத்தியமில்லாத நிலை எழுகின்றதோ அப்பொழுது மட்டுமே தனித்துப் பிரிந்து போவதை முன்னெடுக்க வேண்டும். 

இதன் மூலம், பல்தேசிய அரசில் பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி அமையும் என்பது தெளிவாகின்றது. கட்சியானது அரசின் எல்லைகள் அடிப்படையில் அமையும், அந்த அரசின் எல்லைக்குள் இருக்கும் அனைத்துத் தேசிய இனத் தொழிலாளர்களும் ஒரே கட்சித் தலைமையின் கீழ் அணிதிரட்டப்பட வேண்டும். இது ஒன்றே அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தை வலுப்படுத்தும். அரசு பெரிய அளவில் இருப்பது தான் நல்லது என்றும் அப்பொழுதுதான் முதலாளி வர்க்கத்துக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் போராட்டம் விரிவான அளவில் வளரும் என்றும் லெனின் கூறுகின்றார். 

அப்படியானால் ஏற்றத் தாழ்வான வளர்ச்சி உள்ள பல்தேசிய அரசில் மற்ற தேசிய இனங்கள் புரட்சிக்குத் தயாராகும் வரை காத்திருக்க வேண்டுமா என்று சிலர் கேட்கின்றனர். இல்லை, அனைத்துத் தேசிய இனங்களிடமும் புரட்சிக்கான வேலைத்திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்கிறார் லெனின். 

பல்தேசிய அரசில் உள்ள தேசிய இனங்கள் விருப்பத்தின் அடிப்படையில் அல்லாமல் வலுக்கட்டாயத்தின் அடிப்படையிலேயே இணைக்கப்பட்டது. எனவே, தேசிய இனங்கள் சுதந்திரமான தேசிய அரசுகளை அமைத்துக் கொள்ள அவர்கள் தனியே பிரிந்து செல்வதுதான் சரியானது என்ற வாதத்தை தேசியவாதிகள் முன்வைக்கின்றனர். 

எந்த ஒரு அரசின் கீழ் இருக்கும் பிரதேசங்களும் ஏதோ ஒரு காலகட்டத்தில் அரசுகளால் ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காக வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டவையே. எவையும் தாமாக விரும்பி இணைந்து கொண்டதில்லை. அதனால்தான், எந்தவொரு தேசிய இனமும் தான் விரும்பினால் தனித்துப் பிரிந்து தனியரசு அமைத்துக் கொள்ளும் சுயநிர்ணய உரிமையைப் பாட்டாளி வர்க்கம் தனது தேசிய இனவேலைத் திட்டமாக முன் வைத்து, சுய விருப்பத்தின் அடிப்படையிலான இணைவை வலியுறுத்துகின்றது.  

எனினும், பாட்டாளி வர்க்கம் முடிந்தவரை ஒன்றுபட்ட அரசாகவே இருக்க விரும்புகிறது. மார்க்சியவாதிகள் வாக்கெடுப்பின் பொழுது பிரிந்து போதலுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், ஒரு வேளை பெரும்பான்மை மக்கள் பிரிந்து போதலை ஆதரித்து வாக்களித்தால் அதனை அங்கீகரித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் லெனின் கூறுகிறார்.  

இந்தியாவில் செயல்படும் முதலாளித்துவ கட்சிகளும், குட்டி முதலாளித்துவ இயக்கங்களும் இடதுசாரிக் கட்சிகளும் இயக்கங்களும் பல்வேறு வகையான தேசிய இன வேலைத் திட்டத்தைக் கொண்டுள்ளன. 

இந்தியா முழுவதும் பரந்து விரிந்து வலுவான கட்டமைப்பைக் கொண்ட முதலாளியக் கட்சிகள் இத்தகைய வேலைத் திட்டம் எதையும் தன்னிடம் கொண்டிருப்பதில்லை, தேசிய இனங்களிடையே சிக்கல்கள் ஏற்படும் பொழுது அவற்றைத் தீர்க்க அக்கறை கொள்ளாமல், வாக்கு வங்கி நலனுக்காக அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. அவை எந்த ஒரு தேசிய இன மக்களின் மீதும் எள்ளளவும் அக்கறை கொண்டிருப்பதில்லை. 

முதலாளிய அமைப்பிற்குள்ளேயே, இந்திய அரசின் கீழ் சுயாட்சி அந்தஸ்துடன் இருத்தல் என்னும் திட்டம் - இது பெரும்பாலும் இந்திய அரசியலதிகாரத்தில் பங்கு பெற்றிருக்கும் பிராந்திய கட்சிகள் அல்லது மாநிலங்களில் அரசியலதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் மற்றும் அதற்கான போட்டியில் இருக்கும் கட்சிகள் ஆகியவை முன்வைக்கும் திட்டமாகும். இந்தக் கோரிக்கையையும் இவர்கள் திட்டவட்டமாக முன்னெடுப்பதில்லை. அரசியலதிகாரப் போட்டியில் இந்திய ஆட்சியாளர்களுக்கும் மாநில ஆட்சியாளர்களுக்கும் எப்பொழுது முரண்பாடுகள் எழுகின்றதோ அப்பொழுது இந்தத் தேசிய இனக் கோரிக்கையைக் கையிலெடுக்கின்றனர். உண்மையில், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய இனத்தைச் சார்ந்த உழைக்கும் மக்களின் நலனுக்காக இவர்கள் என்றும் குரல் கொடுப்பதில்லை, மாறாக, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக வெகு மக்களிடையே வெற்று வாக்குறுதிகளை வழங்கியும், தேசிய இன உணர்வைப் பயன்படுத்தியும் வெற்றி பெற முயல்கின்றனர். 

குட்டி முதலாளிய வர்க்கத்தின் தலைமையில் தேசிய விடுதலைத் திட்டத்தைக் கொண்டுள்ள அமைப்புகள், தங்களுடைய தேசிய இனத்திற்குள்ளாக தேசிய முதலாளிகள் இருப்பதாகக் கூறி இதனை முன்னெடுக்கின்றனர், ஆனால், இந்தியாவில் முதலாளிகள் எவரும் தேசியத்தன்மை பெற்றவர்கள் அல்ல. மேலும், இவர்கள் இந்தியாவிற்குள் மட்டும் தம்முடைய செயல்பாட்டை சுருக்கிக் கொண்டவர்களும் அல்ல. உலகம் முழுவதும் முதலாளி வர்க்கம் தேசியத்தை உடைத்து சர்வதேசிய அளவில் தம்முடைய செயல்பாட்டை விரிவுபடுத்திச் செல்வதைப் போன்று தான் இங்குள்ள பல்வேறு தேசிய இனத்தை சார்ந்த முதலாளிகளும் உள்ளனர். குட்டி முதலாளி வர்க்கமும் இந்திய முதலாளி வர்க்கத்தை அடியொற்றிச் சர்வதேச அளவில் விரிந்து செல்கின்றது. எனினும் வணிக முதலாளிகளின் ஒரு பிரிவினர், சிறு முதலாளிகளின் ஒரு பிரிவினர் மற்றும் ஆட்சியதிகாரத்தில் போட்டியிடத் துடிக்கும் சலுகை பெற்ற குட்டி முதலாளிய பகுதியினர் ஆகியோரே முதலாளி வர்க்கம் கைவிட்டுவிட்ட தேசிய இனக் கோரிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

அடுத்ததாக, பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தேசிய விடுதலை என்னும் அரசியல் திட்டத்தை முன்வைத்துச் செயல்படுபவர்கள், பூர்ஷ்வா தேசியவாதிகளை விடவும், குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளை விடவும் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனெனில் பூர்ஷ்வா தேசியவாதிகளும், குட்டி முதலாளிய தேசியவாதிகளும் தங்கள் வர்க்கச் சார்பை தெளிவாக வெளிப்படுத்துகின்றனர். ஆனால், இவர்களோ பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளாகத் தங்களை வெளிக்காட்டிக் கொண்டு ஆளும் முதலாளி வர்க்கத்திற்குச் சேவை செய்கின்றனர். தங்களுடைய தேசியவாதப் போக்கிற்கு மார்க்சிய ஆசான்களின் கருத்துகளை வெட்டியும், ஒட்டியும், தவறான விளக்கங்கள் கொடுத்தும் சான்றுகளாகக் காட்ட முனைகின்றனர். மார்க்சியத்தின் பெயரால் தொழிலாளர்களிடம் தேசியவாத நச்சுக் கருத்துகளை விதைக்கின்றனர். இத்தகையவர்களின் திரிபுகளை அம்பலப்படுத்த வேண்டியதே கம்யூனிஸ்டுகளின் தேசிய இன வேலைத் திட்டம் குறித்த பணியில் முதன்மையானதாக உள்ளது. இவர்கள் சமதர்ம தமிழ் குடியரசு என்றும் சமத்துவ சோசலிசக் கூட்டாட்சி குடியரசு என்றும் வார்த்தை ஜாலங்களின் மூலம் தங்களுடைய தேசியவாத முழக்கத்தை நியாயப்படுத்துகின்றனர். 

இந்தியா முழுமைக்கும் ஒரே அரசியல் கட்சி கட்டி வேலைத்திட்டத்தை வகுத்துக் கொண்டுள்ள சிபிஐ, சிபிஎம் போன்ற சில இடதுசாரிகள் இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் ஏற்கனவே ஒரு அரசின் கீழ் ஒன்றிணைந்துள்ளன. எனவே, இங்கு சுயநிர்ணய உரிமை என்ற வேலைத்திட்டம் தேவையற்றது. எந்த ஒரு தேசிய இனமும் பிரிந்து போவது தேவையற்றது என்றும் வலியுறுத்துகின்றனர். இவர்கள் தேசிய இனங்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஒற்றுமைக்கு முக்கியத்துவம் தருவதில்லை. மாறாக, நிலவுகின்ற அரசின் எல்லைகளில் எந்த மாற்றத்தையும் யாரும் கோருவது கூடாது, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது காலங்கடந்தது, அப்படிக் கோரினாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். 

இந்தியாவில் மொழி வாரி மாநிலங்களாக அமைக்கப்பட்ட பின்பு தேசங்களின் உருவாக்கம் அமைந்து விட்டது. ஆனால் அவை தனி அரசுரிமை கொண்ட தேசங்கள் அல்ல. ஆனால், ஒவ்வொரு தேசமும் தனி அரசை நிறுவ வேண்டும் என்பது அவசியமுமல்ல. சுயநிர்ணய உரிமையுடன் இணைந்திருக்க முடியும். ஆனால், இந்திய அரசு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவில்லை. தேசிய இனங்களுக்கிடையே சிக்கல்கள் எழும்பொழுது அதனைத் தீர்ப்பதற்கு முயற்சிகள் செய்யாமல், முரண்களைக் கூர்மைபடுத்துகின்றது. காசுமீரை இந்தியா ஆக்கிரமித்த பொழுது வாக்களித்தபடி, அந்த மக்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பை இன்று வரை நடத்த முன்வரவில்லை. 

இந்திய ஆளும் வர்க்கம் தனது சந்தை நலன்களுக்காகவும், மலிவான கூலி உழைப்பிற்காகவும், மூலப் பொருட்களுக்காக இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்காகவும் தம் ஆட்சியதிகாரத்தின் கீழ் இருக்கும் எந்த ஒரு நிலப்பரப்பையும் இழக்கத் தயாராக இல்லை. எனவே, தேசிய இனங்களுக்கான பிரிந்து போகின்ற உரிமை என்னும் ஜனநாயக உரிமையை அது எள்ளளவும் நினைத்துக் கூடப் பார்க்க மறுக்கின்றது. 

தேசிய இன சுயநிர்ணய உரிமை மட்டுமல்ல, அனைத்து ஜனநாயக உரிமைகளும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் ஆட்சியதிகாரம் அமையும் பொழுது உண்மையில் நடைமுறைக்கு வரும் என்ற உறுதியை கம்யூனிஸ்டுகள் மட்டுமே கொடுக்க முடியும். 

ஆனால், இனவாதச் சகதிகளில் சிக்கிக் கொண்ட தேசியவாதிகளோ, இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் தொடங்கி அரை நூற்றாண்டுகள் ஆகியும் அவர்களால் புரட்சியை நடத்த முடியவில்லை. ஏனெனில் அவர்களின் திட்டங்களில் தேசிய இனப் பிரச்சனையைச் சரியாக உள்வாங்கிக் கொள்ளாததே காரணம் எனத் தேசிய விடுதலையைக் கோருபவர்கள் 1970களில் ஒரு வாதம் வைத்தனர், இன்றும் தொடர்ந்து வைத்து வருகின்றனர். ஆனால், தேசிய விடுதலைக் கோட்பாட்டை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் இயக்கங்கள் தொடங்கி இதே அளவு காலகட்டத்தை கடந்து விட்டது என்பதையும், அவர்களால் இம்மியளவு கூட நகரமுடியவில்லை என்பதையும் அவர்கள் வசதியாக மறைத்து விடுகின்றனர். இந்தியப் பொதுவுடைமை இயக்கம் முதல் 50 ஆண்டுகளில் அடைந்திருந்த வளர்ச்சியில் நூற்றில் ஒரு பங்கு அளவு கூட இத்தகைய தேசியவாத இயக்கங்களால் அடைய முடியவில்லை. 

இங்குள்ள இனவாதிகள், தம்முடைய இனத்தை இந்தியா ஒடுக்குகின்றது, எனவே இந்தியாவிலிருந்து பிரிந்து தனி அரசை அமைத்துக் கொள்வதே எமது இன நலனுக்கு முதன்மையானது என்கின்றனர். ஆனால், இவர்கள் இந்தியா என்று எதனை வரையறுக்கின்றனர்? இவர்கள் பிற தேசிய இன மக்கள் தொகுதி அடங்கிய பகுதியை இந்தியா எனக் குறிக்கின்றனர். அப்படியானால் மற்ற தேசிய இனங்களை உள்ளடக்கிய இந்தியா தங்களை அடக்கி ஒடுக்கி வருகின்றது என்று கூறுகின்றனர். இவ்வாறு தெலுங்கு தேச மக்கள் கருதினால், தமிழ் நாடு இந்தியாவின் பகுதியாக மாறி, தெலுங்கு தேச மக்களை ஒடுக்கும் இந்தியாவின் பகுதியாக மாறிவிடும். இது அறிவுக்குச் சிறிதும் பொருத்தமற்ற வாதமாகவே இருக்கும். இந்தியா என்பது அனைத்துத் தேசிய இனங்களையும் உள்ளடக்கிய முழுமையின் பெயர்தான். இந்தியா என்று தனித்து எங்கும் இல்லை. அனைத்துத் தேசிய இனப் பகுதிகளும் இந்தியாவிலிருந்து தனித்தனியே பிரிந்து சென்று விட்டால் இந்தியா என்று எதுவும் இருக்காது. அருவமான சொல் மட்டுமே மிஞ்சும். 

அப்படியானால், இந்தியா என்பது என்ன? அனைத்துத் தேசிய இனங்களையும் உள்ளடக்கிய பல்தேசிய அரசை குறிக்கும் சொல். இந்தியாவின் அரசியலதிகாரம் யாரிடம் உள்ளது? அனைத்துத் தேசிய இனங்களையும் சார்ந்த முதலாளி வர்க்கத்திடம் உள்ளது. இதில் எந்த ஒரு தேசிய இன முதலாளி வர்க்கமும் சலுகை பெற்றதோ, ஆதிக்கம் கொண்டதோ கிடையாது. இவர்களிடையே வழக்கமான முதலாளித்துவப் போட்டி இருக்கிறது. அனைத்து விதமான வழிகளையும் பின்பற்றித் தன் மூலதனத்தைப் பெருக்கி கொள்ள முனைகின்றனர். 

இங்கு ஒடுக்கபடுபவர்கள் யார்? அனைத்துத் தேசிய இனங்களையும் சார்ந்த தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், அரைப் பாட்டாளிகள், சிறு, குறு விவசாயிகள், இவர்களே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர். இவர்களே மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களின் மீதான ஒடுக்குமுறை வர்க்க அடிப்படையிலானதே தவிர தேசிய இன அடிப்படையிலானது அல்ல. 

தேசியவாதத்தை உயர்த்திப் பிடிப்போர் மற்றொரு வாதத்தை முன்வைக்கின்றனர். ரசியாவில் ஒடுக்கும் தேசிய இனமான இரசியப் பெருந்தேசிய இனப் பாட்டாளி வர்க்கக் கட்சி பிற ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்குத் தேசிய சுய நிர்ணய உரிமையை வழங்குவதற்கு உத்திரவாதம் அளித்ததன் மூலம், ஒடுக்கப்படும் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களோடு இணைந்து புரட்சி நடத்தினர் எனவும், இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனம் என்பது இல்லை, ஒடுக்கும் தேசிய இனம் இருந்து அதில் பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்கக் கூடிய நிலைமை இருந்தால் மட்டுமே, ஒடுக்கும் தேசிய இனம் பிற ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்குவதாக உத்திரவாதம் அளித்து அவர்களின் ஆதரவைப் பெறுவதன் மூலம், ஒடுக்கும் தேசிய இனம் பிற ஒடுக்கப்படும் தேசிய இனங்களையும் இணைத்துக் கொண்டு ஒரே கட்சி, இந்தியா முழுவதற்குமான ஒட்டு மொத்தப் புரட்சித் திட்டத்தைச் செயல்படுத்த முடியும் என்கின்றனர். 

இவர்களின் கூற்றுபடி, ரசியாவில் ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கம் மட்டும் புரட்சிக்குத் தலைமை தாங்கியதா? இல்லை. 

ருசியாவிலுள்ள எல்லா தேசிய இனங்களின் ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்கத்தினர் மட்டுமே இந்த முடியாட்சியைத் தூக்கியெறிய முடியும். இந்தப் பாட்டாளி வர்க்கத்தினர் எல்லாத் தேசிய இனங்களின் உழைக்கும் மக்களைச் சேர்ந்த, புரட்சிகரமாகப் போராடக் கூடிய முரணில்லாத ஜனநாயக சக்திகளுக்குத் தலைமை வகிக்கிறார்கள் என லெனின் கூறுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

ருசிய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி என்பது இரசியப் பெருந்தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி அல்ல. அது அனைத்து தேசிய இனப் பாட்டாளிகளின் கட்சி என்ற உண்மையை இவர்கள் திரித்துத் தங்களின் வாதத்திற்குச் சாட்சியாக முன்வைக்கின்றனர். சீனாவிலும் நிலைமை இவ்வாறே இருந்தது. 

தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையைக் கம்யூனிஸ்டுகள் அங்கீகரிக்கும் அதே நேரத்தில் அது செயலாக்கப்படும் பொழுது எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை ஸ்வீடனிலிருந்து நார்வே பிரிந்த பொழுது லெனின் தெளிவுபடுத்துகிறார்.

பிரிந்து போவதைப் பற்றி நார்வே மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எனினும், நார்வே கம்யூனிஸ்ட் கட்சியினர், சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரும் அதே வேளையில் பிரிந்து செல்வதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யவும், பிரிந்து போவதற்கு எதிராக வாக்களிக்கவும் செய்யலாம் எனவும், ஸ்வீடன் கம்யூனிஸ்டுகள் சுயநிர்ணய உரிமைய அங்கீகரிக்கும் அதே வேளையில் பிரிந்து செல்வதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யலாம் எனவும் கூறுகின்றார். 

அதே சமயத்தில் பெரும்பான்மை மக்களின் சித்தம் பிரிந்து செல்வதற்குச் சாதகமாக இருந்தால் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும், நார்வே பிரிந்து சென்றபொழுது ஸ்வீடிஷ் மத குருமார்கள், நிலவுடைமையாளர்கள் ஆகியோர் அதற்கெதிராக போர் தொடங்க முடிவு செய்த நிலையில், நார்வே மக்களின் விருப்பத்தை அங்கீகரித்து ஸ்வீடிஷ் பாட்டாளி வர்க்கம் தம் சொந்த அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்டதையும் லெனின் விளக்குகிறார். 

சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசிய இனமும் தனித் தனியே பிரிந்து சென்று தனக்கான தேசிய அரசை அமைத்துக் கொள்வதல்ல. அது அனைத்துத் தேசிய இனங்களும் சமத்துவத்துடனும் ஜனநாயக உரிமைகளுடனும் ஐக்கியப்பட்டு இருப்பதற்கான வழிமுறை; அது அனைத்துத் தேசிய இனங்களுக்கும் இடையில் சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துகிறது. ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனம் தனக்குச் சமத்துவமும் ஜனநாயகமும் மறுக்கப்படும்போது, அந்த உரிமையைப் பயன்படுத்தித் தனித்து பிரிந்து செல்வதை செயலாக்கம் செய்யவே அத்திட்டம் முன் வைக்கப்படுகின்றது. எனினும், இடதுசாரிகள் பிரிந்து செல்வதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதையோ, கிளர்ச்சி செய்வதையோ இது ஒரு போதும் தடுக்காது என்றும், அதே சமயத்தில் தேசிய இனங்களுக்கு இடையிலான சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் கோர வேண்டும் என்றும் லெனின் கூறுகிறார்.

விவசாயிகளின் சித்தத்திற்கு மாறாக எப்படி கூட்டுப் பண்ணைகளில் இணைய அவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாதோ அதே போன்று எந்த ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்த மக்களும் தனித்து இருக்க விரும்பினால் அவர்கள் பிரிந்து போதலைத் தடுக்கக் கூடாது. இரண்டிலும், கூட்டு பண்ணைக்கு ஆதரவாகவும் அல்லது தேசிய இனங்களின் ஐக்கியத்திற்கு ஆதரவாகவும் கம்யூனிஸ்டுகள் பிரச்சாரம் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. 

எதனுடைய வெற்றி தேசிய இனப் பிரச்சினைகளைத் தீர்க்கும்? 

இந்திய முதலாளி வர்க்கத்தின் அரசதிகாரத்தைப் பாட்டாளி வர்க்கம் கைப்பற்றும் வெற்றியேதேசிய இனப் பிரச்சினைகள் மட்டுமல்லாமல் அனைத்து ஜனநாயகப் பிரச்சினைகளையும் தீர்க்கும். பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் உள்ள அரசு மட்டுமே அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சமத்துவம், எந்த ஒரு தேசிய இனத்திற்கு தனிச் சலுகைகள் கிடையாது, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றைத் தன்னுடைய தேசிய இன வேலைத்திட்டமாக ஏட்டளவில் மட்டுமல்லாமல் உண்மையிலேயே நடைமுறையிலும் கொண்டிருக்கும். 

எனவேதேசிய இன அடிப்படையில் பிரிந்து செல்வது என்பது எந்தக் கால கட்டத்திலும் பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல. தற்காலத்தில், அது முதலாளி வர்க்கத்தினுடையதும் அல்ல; இன்று ஒரு பகுதி குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் கோரிக்கையாக மட்டுமே அது உள்ளது.

 

- குமணன்

 

Comments

  1. தேச சுய நிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட்ட
    ஒரு தேசிய புரட்சியே
    அவசியம்.

    கட்டுரை மிக நீளம்
    தமிழ் தேசியம் பேசும்
    அமைப்புகளுக்கு
    விமர்சனம் தேவை இல்லை.

    ஓரு... ஓரு...
    ஐக்கிய பட்ட " இந்திய
    புரட்சிகர கட்சி" தான்
    தற்போதைய அவசியம்...!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரியான கருத்து - "ஓரு ஐக்கிய பட்ட " இந்திய புரட்சிகர கட்சி" தான் தற்போதைய அவசியம்..."

      Delete
  2. கட்டுரை நன்று.

    ReplyDelete
  3. தேசிய இனப் பிரச்சனை குறித்து மிகவும் தெளிவாகவும், இதில் நிலவுகின்ற பல்வேறு போக்குகளையும், அதில் கம்யூனிஸ்டுகளுடைய நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆணித்தரமான கருத்துக்களையும், தோழர் லெனினுடைய முக்கியமான மேற்கோள்களையும் கொண்டு விளக்கி இருப்பதன் மூலம் இந்த ஆய்வுக் கட்டுரை மிகவும் சிறப்பான பங்காற்றியிருக்கிறது.

    இக்கட்டுரை தேசிய இனப் பிரச்சனை குறித்த கருத்துக்களை பல்வேறு முக்கிய கோணங்களிலிருந்து விளக்கியிருக்கிறது. அதே நேரத்தில் பொறுத்தமற்ற மேற்கோள்கள் மூலம் சிந்தனையைத் திசை திருப்பாமல் மையக் கருத்தின் மீதும் அதன் தீர்வின் மீதும் முழு கவனத்தையும் ஒருங்கிணைத்திருக்கிறது.

    இந்தியாவிலும், குறிப்பாக தமிழ் நாட்டில் தேசிய இனப் பிரச்சனையை மையப்படுத்தி அதே நேரத்தில் பாட்டாளி வர்க்க அரசியலை முன்னெடுப்பதாக கூறிக்கொள்ளும் போக்கையும், அதன் சாராம்சத்தையும் நன்கு விளக்கப்பட்டிருக்கிறது.

    இத்தகைய அரசியல் கொண்ட இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் தங்களுடைய கருத்தைத் திருத்திக் கொண்டு, முழு மூச்சாகவும், முதன்மையான நோக்கமாகவும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் உழைக்கும் வர்க்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வேலையில் இறங்கினால் அவர்களால் முக்கிய பங்களிப்பைச் செய்ய முடியும்.

    இக்கட்டுரையின் மிக மிக மையக் கருத்தான - "பாட்டாளி வர்க்கப் புரட்சி மட்டுமே எல்லா உழைக்கும் மக்களுக்கு மட்டுமன்றி எல்லா தேசிய இனங்களுக்கும் சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் ஒழித்துக் கட்டி விட்டு ஒளிமயமான வளமான சுரண்டலற்ற சமத்துமான எதிர்காலத்தை நிலைநாட்ட முடியும்" என்ற மறுக்க முடியாத அறிவியல் கருத்தை முன்வைத்து எல்லா முற்போக்கு - கம்யூனிஸ்டுகளும் ஒன்றுபட்டு, எல்லா தேசிய இனங்களையும் ஒடுக்குகின்ற பிற்போக்கான இந்திய முதலாளி வர்க்கத்திற்கும் அதன் ஆட்சிக்கும் முடிவு கட்ட முன்வர வேண்டும்.

    - தொழிலாளர் ஒற்றுமை இயக்கம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட