Skip to main content

நிலப்பறிப்பும் குண்டர் சட்டமும்!

 

திருவண்ணாமலையில் மேல்மா மற்றும் அதனைச் சுற்றியுள்ள எட்டு கிராமங்களில் மூன்றாவது சிப்காட் பூங்காவை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் 2.7.23 முதல் போராடி வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளில் இருபது பேரை தமிழ் நாடு அரசு கடந்த நான்காம் தேதி (4.11.2023) கைது செய்தது. பிறகு அவர்களில் ஏழு பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க திருவண்ணாமலை ஆட்சியர் ஆணை பிறப்பித்தார். விவசாயிகளைக் குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்தது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. உடனே தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விவசாயிகளில் ஆறு பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து ஆணையிட்டுள்ளார். அவர்களது குடும்பத்தினர் வேண்டிக் கொண்டதாலும் இனிமேல் இது போன்ற தவறுகளைச் செய்ய மாட்டோம் என்று அவர்கள் உறுதி அளித்ததாலும் அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை இரத்து செய்து உள்ளதாக தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது. ஆனால் மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள் என்பவரின் மீதான குண்டர் சட்டம் மட்டும் ரத்து செய்யப்படவில்லை.

எதிர்க் கட்சியாக இருக்கும்போது நண்பன்! ஆளும் கட்சியானதும் வில்லன்!

அ.தி.மு.க. ஆட்சியின்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டம், எட்டு வழிச் சாலைக்கு எதிரான விவசாயிகளின் போராட்டாம் ஆகியவற்றுக்கு எல்லாம் ஆதரவு தி.மு.க. அளித்து வந்தது. அ.தி.மு.க. மக்களின் விருப்பங்களுக்கு எதிராகக் கொடுங்கோலாட்சி செய்து வருகிறது என்றும், தான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் விருப்பத்தின்படிதான் நிலத்தை எடுப்போம் என்றும் கூறி ஆட்சிக்கு வந்தது தி.மு.க.. ஆனால் இன்று நடப்பது என்ன?

தங்களுடைய நிலத்தை சிப்காட்டுக்காகக் கையகப்படுத்தக் கூடாது என்று கூறி அமைதியான முறையில் போராடி வந்த விவசாயிகளைக் கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது குண்டர் சட்டத்தையும் ஏவியுள்ளது தி.மு.க.அரசு. தங்களுடைய வாழ்வாதார உரிமைக்காகப் போராடும் விவசாயிகளை, இந்தச் சமூகத்திற்கு உணவளித்து வரும் விவசாயிகளை இந்த அரசு சமூகத்திற்கு எதிரான குண்டர்களாகக் கருதுகிறது. எதிர்க் கட்சியாக இருந்தபோது விவசாயிகளின் நண்பனாக நடித்த கட்சி, அவர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி கட்டிலேறியதும் அவர்களின் வில்லனாக மாறி விட்டது.

அதிகார வர்க்க ஆட்சிமுறை

தி.மு.க. மட்டும் அல்ல, காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. என அனைத்துக் கட்சிகளும் எதிர்க் கட்சியாக இருக்கும்போது மக்களுக்காகவே தாம் இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும்; வானத்தைப் பிளந்து வைகுண்டத்தை மக்களுக்குக் காட்டப் போவதாகப் பீற்றிக் கொள்ளும். மக்களின் ஒப்புதலைப் பெற்று ஆட்சியைப் பிடித்ததும் மக்களுக்கு விரோதமாகவே நடந்து கொள்ளும். இதைத்தான் கடந்த எழுபது ஆண்டு இந்திய ஒன்றியத்தின் அரசியல் வரலாறு நமக்குக் காட்டுகிறது. ஏனென்றால் ஆட்சிக் கட்டிலின் மகிமை அப்படி. இங்குள்ளது அதிகாரவர்க்க ஆட்சிமுறை. இந்த ஆட்சிமுறை முதலாளிய வர்க்கத்திற்கானது. எந்தக் கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும் அது அதிகார வர்க்கத்தின் அங்கமாக மாறி விடுகிறது. ஆட்சியின் முகமாக கட்சி இருக்கும் அதே சமயத்தில் அதன் மூளையாக இருப்பது அதிகாரவர்க்கம்தான். அதிகாரவர்க்கம் முதலாளிய நலன்களுக்காச் செயல்பட்டுக் கொண்டிருப்பது. எனவே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முதலாளிகளுக்கு ஆதரவாகவே செயல்படும்.

விவசாயிகளுக்கும் தொழில் வளர்ச்சிக்கும் இடையில் உள்ள முரண்பாடு

தொழிற்சாலைகளைக் கட்டமைக்க முதலாளிகளுக்கு நிலம் தேவை. ஏற்கனவே நிலவுடைமையாளர்களாக உள்ள விவசாயிகளிடமிருந்துதான் நிலத்தை எடுக்க முடியும். ஆனால் நிலமோ விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. முதலாளிகளின் நலன்களுக்காகச் செயல்படும் அரசு நிலத்தை வலுக்கட்டாயமாக விவசாயிகளிடமிருந்து பறித்து முதலாளிகளுக்குத் தர வேண்டியுள்ளது. இங்குதான் முரண்பாடு எழுகிறது. நிலத்தின் மீதான விவசாயிகளின் தனி உரிமை முதலாளிய உற்பத்திமுறையின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. ஒரு பக்கம் முதலாளிய வர்க்கம் தொழிற்சாலைகள், இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றின் மீதான தனியுடைமைக்காக நின்றாலும் நிலத்தின் மீதான விவசாயிகளின் தனி உரிமை அதனுடைய வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. இங்குதான் முதலாளிகளின் நலன்களுக்காக அரசு நேரடியாகக் களத்தில் இறங்குகிறது; தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறித்து முதலாளிகளுக்குத் தரும் வேலையைச் செய்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் பற்றியோ அவர்களின் எதிர்காலம் பற்றியோ அரசு பொறுப்பெடுத்துக் கொள்வதில்லை.

மேல்மா மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிராமங்களில்1881 குடும்பங்களுக்குச் சொந்தமாக உள்ள 3174 ஏக்கர் நிலத்தை சிப்காட் -3 தொழிற் பூங்காவிற்கு அரசு எடுக்க உள்ளது. கொடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில் பார்த்தால் இவர்கள் அனைவரும் சிறிய விவசாயிகளாகவும் துண்டு நிலத்தை உடைமையாகக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களுக்கு அரசு வழங்கும் இழப்பீடுகளைக் கொண்டு அவர்கள் கண்ணியமான எதிர்கால வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள முடியாது என்பதுதான் எதார்த்தம். இவர்கள் விவசாயத்தை நம்பியிருப்பவர்கள். விவசாயத்தைத் தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாது. இவர்கள் தங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த நிலத்தை இழந்த பிறகு கூலித் தொழிலாளர்களாக மாறுவதைத் தவிர வேறு வழியில்லை. முதலாளிய அமைப்பு இப்படித்தான் விவசாயிகளின் நிலத்தைப் பறித்து அவர்களை ஓட்டாண்டிகளாக மாற்றி வருகிறது.

கடந்த கால வரலாறும் இதைத்தான் காட்டுகிறது. நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தை வழங்கிய விவசாயிகள் போதுமான இழப்பீடின்றி இன்னும் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது போலத்தான் எட்டு வழிச் சாலைக்கு நிலம் எடுக்கப்பட்டாலும், பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கப்பட்டாலும், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக நிலம் எடுக்கப்பட்டாலும், அந்தப் பகுதிலுள்ள விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து கூலித் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயம் உள்ளது. தொழில் வளர்ச்சி ஒரு நாட்டிற்கு மிகவும் தேவையானது ஒன்றுதான். ஆனால் அதன் வளர்ச்சி சமூகம் முழுமைக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து ஒரு சில ஆயிரம் பேர்களுக்கு மட்டும் வேலை வழங்குவதாகவோ, ஒரு சில முதலாளிகளுக்கு மட்டும் கொள்ளை இலாபம் அளிப்பதாவோ, அதிகாரவர்க்கத்தினரும் ஆட்சியாளர்களும் தங்கள் சொத்துகளைப் பன்மடங்கு பெருக்கிக் கொள்ள வாய்ப்பளிப்பதாகவோ இருக்கக் கூடாது. ஆனால் இங்குள்ள முதலாளிய அமைப்பு ஒரு சிலரின் இலாபத்திற்காகவே விவசாயிகளின் நிலத்தைப் பறித்து அவர்களைப் பஞ்சை பராரிகளாக மாற்றி வருகிறது. இந்த முதலாளிய அமைப்பு நீடிக்கும் வரை விவசாயிகள் தங்கள் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் இழப்பதைத் தவிர்க்க முடியாது. விவசாயிகள் தங்களுடைய நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் இழக்காமல் இருக்க வேண்டுமென்றால், அவர்களுடைய வாழ்வு வளம் பெற வேண்டுமென்றால் இந்த முதலாளிய அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். சோசலிச சமூகம் அமைப்பதை நோக்கி முன்னேற வேண்டும். சோசலிச சமூக அமைப்பு மட்டுமே விவசாயிகளுக்கு வளமான வாழ்க்கைக்கு உத்தரவாதமாக அமையும்.

சோசலிச சமூகத்தில் நிலப் பிரச்சினைக்கான தீர்வு

சோசலிச சமூகத்தில் நிலத்தின் மீதான தனியுரிமை ஒழிக்கப்படும். நிலம் சமூக உடைமையாக்கப்படும். நிலம் சமூக உடைமை ஆக்கப்படுவது என்றால் விவசாயிகள் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று பொருளல்ல. உழைக்கும் விவசாயிகள் அனைவருக்கும் நிலம் பொது உடைமையாக்கப்படும்; கூட்டுப் பண்ணைகள் அமைக்கப்படும். விவசாயிகள் தனி நபருக்கு உரிமையாக உள்ள தமது நிலத்தை இழந்தாலும் சமூக உடைமையாக மாற்றப்பட்டுள்ள நிலத்தில் உரிமையுடையவர்களாக மாறுகின்றனர். கூட்டு வாழ்க்கையின் அங்கமாக மாறுகின்றனர்.

சோசலிச சமூகத்திலும் தொழில் வளர்ச்சிக்காக நிலம் தேவைப்படும். அதற்கான நிலம் ஏற்கனவே பொதுவுடைமையாக்கப்பட்டுச் சமூகத்திற்குச் சொந்தமாக உள்ள நிலத்திலிருந்து ஒதுக்கப்படும். அதனால் தனிப்பட்ட விவசாயிகள் நிலத்தை இழக்க வேண்டிய அவசியமில்லை; வாழ்வாதாரத்தை இழக்க வேண்டியதில்லை. ஏனென்றால் சோசலிச சமூகத்தின் கூட்டு வாழ்க்கையில் ஒவ்வொரு தனி நபரின் நலனும் சமூகத்தின் நலனுடன் இணைந்துள்ளது. மேலும் சோசலிச சமூகத்தில் உருவாகும் தொழில் வளர்ச்சி அனைத்தும், தனிப்பட்ட முதலாளிகளுக்குப் பதிலாக, சமூகம் முழுமைக்கும் பயனளிக்கும். சோசலிச சமூகத்தில் விவசாயிகளுக்கும் தொழில் வளர்ச்சிக்கும் இடையில் உள்ள முரண்பாடு நிலத்தை சமூக உடைமை ஆக்கப்படுவதன் மூலம் தீர்க்கப்படும். விவசாயிகளின் வாழ்வும் வளம் பெறும்;; தொழில் வளர்ச்சியும் ஏற்படும்; சமூகம் முழுமையும் பயன் பெறும்.

                                         - மு.வசந்தகுமார்

Comments

  1. Well written with accurate statistics. The famers have not been paid fair market value on the earlier occasions. Its sad that the left parties are keeping quiet because of their alliance with DMK. Arappor iyakkam has taken the matter to CM. But one thing I doubt is whether a socialist society would compensate properly or not give anything in the name of social good. George orwell has exposed the double standards of communists in Russia.

    ReplyDelete
  2. In Russia there was no true socialism as Marx conceived. Socialism is a free association of producers. There won't be any supervising authority as state. The producers plan the production and distribution among themselves. There won't be commodity production and money. Such a socialism has been never established anywhere in the world so far. We have learnt many lessons from the experiences of Russia and China. True socialism will only be achieved hearafter in the future by the toiling masses.

    ReplyDelete
  3. திருவண்ணாமலை பகுதியில் வலுக்கட்டாயமாக விவசாயிகளுடைய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிரான விவசாயிகளுடைய போராட்டத்தில் அரசின் அடக்குமுறையை வன்மையாக கண்டித்திருப்பதோடு, இந்த பிரச்சனை குறித்தும், முதலாளித்துவ அமைப்பு குறித்தும், தீர்வு குறித்தும் மிக முக்கியமான, சரியான கருத்துக்களை தோழர் வசந்த குமார் முன்வைத்திருக்கிறார்.

    தற்போதைய அமைப்பில் "ஆட்சியின் முகமாக கட்சி இருக்கும். அதே சமயத்தில் அதன் மூளையாக இருப்பது அதிகாரவர்க்கம்தான்." என்று தோழர் குறிப்பிட்டிருப்பது ஆழமான உண்மையாகும்.

    மேலும், "தொழில் வளர்ச்சி ஒரு நாட்டிற்கு மிகவும் தேவையானது ஒன்றுதான். ஆனால் அதன் வளர்ச்சி சமூகம் முழுமைக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும்...." என்று இந்தப் பிரச்சனை குறித்த விளக்கியிருக்கிறார்.

    "விவசாயிகள் தங்களுடைய நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் இழக்காமல் இருக்க வேண்டுமென்றால், அவர்களுடைய வாழ்வு வளம் பெற வேண்டுமென்றால் இந்த முதலாளிய அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். சோசலிச சமூகம் அமைப்பதை நோக்கி முன்னேற வேண்டும். சோசலிச சமூக அமைப்பு மட்டுமே விவசாயிகளுக்கு வளமான வாழ்க்கைக்கு உத்தரவாதமாக அமையும்....."

    "....மேலும் சோசலிச சமூகத்தில் உருவாகும் தொழில் வளர்ச்சி அனைத்தும், தனிப்பட்ட முதலாளிகளுக்குப் பதிலாக, சமூகம் முழுமைக்கும் பயனளிக்கும். சோசலிச சமூகத்தில் விவசாயிகளுக்கும் தொழில் வளர்ச்சிக்கும் இடையில் உள்ள முரண்பாடு நிலத்தை சமூக உடைமை ஆக்கப்படுவதன் மூலம் தீர்க்கப்படும். விவசாயிகளின் வாழ்வும் வளம் பெறும்; தொழில் வளர்ச்சியும் ஏற்படும்; சமூகம் முழுமையும் பயன் பெறும்." என்று தோழர் தொகுத்துக் கூறியிருப்பது இந்தப் பிரச்சனைக்கு மிகவும் சரியான தீர்வாகும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட