Skip to main content

முதலாளிய சமூகமும் வேலையில்லாத் திண்டாட்டமும்



     இந்த ஆண்டு தமிழ் நாட்டில் உள்ள 459 பொறியியல் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 48% இடங்களே நிரம்பியுள்ளன. அதாவது மொத்தம் உள்ள இடங்கள் 1,67,000. அவற்றில் சுமார் 80,000 இடங்களே நிரம்பியுள்ளன.

ஏன் இந்த நிலை?

     தமிழ் நாட்டில் முன்பு 550 பொறியியல் கல்லூரிகளுக்கும் மேல் இருந்தன. அவை வருடம்தோறும் சுமார் இரண்டு இலட்சம் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கி வேலைச் சந்தையில் குவித்தன. பட்டதாரிகளின் எண்ணிக்கை குவிந்ததால், வேலைக்கான போட்டி அதிகரித்தது. ஐ.டி.. கம்பனி முதலாளிகளுக்கும் இதரத் தொழில்துறை முதலாளிகளுக்கும்  குறைந்த சம்பளத்தில் பொறியியல் பட்டதாரிகள் கிடைத்தனர். ரூபாய் நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் எனச் சம்பளம் இருந்த இடத்தில் பத்தாயிரத்திற்கும் பதினைந்தாயிரத்திற்கும் வேலை செய்ய வேண்டிய நிலைக்குப் பட்டதாரிகள் தள்ளப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானப் பட்டதாரிகளுக்கு அந்த வேலைகள் கூடக் கிடைக்கவில்லை; படிப்புக்குச் சம்பந்தமில்லாத வேலைகளுக்கும், மிகக் குறைந்த சம்பளத்திற்கும் கூடச் செல்ல வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

     இதன் காரணமாகப் பொறியியல் படிப்புக்கான மதிப்பு சமூகத்தில் வீழ்ந்தது. அதனால் பல பொறியியல் கல்லூரிகள் இன்று மூடப்பட்டுள்ளன. இன்னும் பல கல்லூரிகள் மூடப்படும் நிலையில் உள்ளன.

வீணாக்கப்பட்ட சமூகத்தின் சேமிப்பு

     ஒரு மாணவனுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் ,உணவுக் கட்டணம், போக்குவரத்துச் செலவு என்று  ஓராண்டுக்குச் கல்லூரிச் செலவு ரூபாய் ஒரு இலட்சம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, இரண்டு இலட்சம் மாணவர்களுக்கு வருடம் ஒன்றிற்கு மொத்தச் செலவு ரூபாய் இரண்டாயிரம் கோடி ஆகும். நான்காண்டுப் படிப்புக்கு மாணவர்களுக்காகப் பெற்றோர்கள் செய்த மொத்தச் செலவு எட்டாயிரம் கோடி ரூபாய். இவ்வளவு செலவு செய்த பிறகும் ஒட்டு மொத்த மாணவர் சமுதாயமும் கண்ட பலன் வேலை யில்லாத் திண்டாட்டம் அல்லது குறைந்த சமபளத்திலான  வேலைதான். இதன் பொருள் சமூகத்தின் சேமிப்பாக இருந்த  கோடிக்கணக்கான ரூபாய் பயனற்ற முறையில் வீணடிக்கப்பட்டது என்பதுதான்.


     இன்னொரு பக்கம் அவர்கள் மீதான கடன் சுமை. கல்விக்காகத் தனியார்களிடமிருந்தும் வங்கிகளிடமிருந்தும் பெற்ற கடன்களைக் கட்ட முடியாமல் இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் பெரும் வேதனையில் உள்ளனர். பெரும் முதலாளிகளுக்கு இலட்சக்கணக்கான கோடி ரூபாய்க் கடன்களைத் தள்ளுபடி செய்து வரும் வங்கிகள் மாணவர்களின் கல்விக் கடன்களை வசூலிப்பதில் பெரும் கெடுபிடிகள் செய்வதன் மூலம் மாணவர்களைத் தற்கொலைக்குத் தள்ளி வருகின்றன.   
     இதனால் பெரும் பயன் அடைந்தவர்கள் யார்? கல்வி வியாபாரிகள், ஐ.டி.. நிறுவன, பிற தொழில்துறை முதலாளிகள், அதிகாரவர்க்கம், ஆட்சியாளர்கள் ஆகியோர்தான்.

கல்வி வியாபாரிகளும் அவர்களின் கூட்டாளிகளும்

     மாணவர்களுக்கு எதிர் காலக் கனவுகளை ஊட்டி கோடிக்கணக்கான ரூபாய்களைக் கல்வி வியாபாரிகள் கொள்ளை அடித்தனர். அதே சமயத்தில் இலட்சக்கணக்கான பட்டதாரிகளை வேலைச் சந்தையில் குவித்தனர். அதன் மூலம் மலிவான சம்பளத்திற்கு ஐ.டி. நிறுவனங்களுக்கும், பிற தொழில்துறைகளுக்கும் பொறியியல் பட்டதாரிகள் கிடைக்க வழி வகுத்தனர். அந்த நிறுவன முதலாளிகள் அதனால் பெரும் பயன் அடைந்தனர்.
     புற்றீசல்கள் போல நூற்றுக்கணக்கான தரமற்ற கல்லூரிகள் தொடங்க ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அனுமதித்தனர். அதன் மூலம் அவர்கள் தங்களுடைய கல்லாப்பெட்டிகளை நிரப்பிக் கொண்டனர்.
     தமிழ் நாட்டிலும் இந்திய அளவிலும் தொழில்துறையில் ஆண்டுதோறும் பொறியியல் பட்டதாரிகளின் தேவை எவ்வளவு, அவர்களை உருவாக்கத் தேவையான கல்லூரிகள் எத்தனை, அவற்றின் தரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் திட்டமிட்டு இந்த ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அனுமதி அளித்து இருந்தால் இந்த நிலை உருவாகி இருக்காது.
     ஆனால் இங்குள்ள முதலாளிய அமைப்பில் அத்தகைய திட்டமிடல் இருப்பதில்லை. இங்கு தீர்மானிப்பவை இலாப நோக்கமும் இலஞ்சமும் ஊழலும்தான்.
     வேலைச் சந்தையில் பொறியியல் பட்டதாரிகளுக்கு உள்ள தேவையைப் பயன்படுத்திக் கொண்டு கல்வி வியாபாரிகள் தங்கள் தொழிலைத் தொடங்கினர். அதற்காக ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பணத்தை அள்ளி வீசிக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றனர். ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கல்லூரிகளின் தரம் பற்றியோ எவ்வளவு பட்டதாரிகள் தேவை என்பது பற்றியோ கவலை இல்லை. அவர்களுக்குத் தேவை பணம். அவ்வளவுதான்.

வேலையில்லாப் பட்டாளமும் முதலாளிகளும்

     தொழில்துறை முதலாளிகளுக்கோ வேலையில்லாப் பட்டாளம் எப்பொழுதும் சந்தையில் வேலை தேடிக் கொண்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் மலிவான கூலிக்கு அவர்களைச் சுரண்ட முடியும். பெரும் இலாபம் அடைய முடியும்.

     இந்த முதலாளிய அமைப்பு நீடிக்கும் வரை படித்த அனைத்து மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலை கிடைக்காது. ஒரு வேலையில்லாப் பட்டாளம் எப்பொழுதும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் முதலாளிகளுக்குக் குறைந்த கூலிக்குத் தொழிலாளர்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள்.
     தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் முதலாளிகளிடமே இருப்பதால் அவர்களுக்குக் கிடைக்கும் இலாபத்தை ஒட்டியே வேலை வழங்கப்படும். அவர்களுக்கு இலாபம் இல்லை என்றால் தொழிற்சாலைகளும்  மூடப்படும். இவ்வாறு  தொழிற்சாலைகளும் நிறுவனங்களும்  முதலாளிகள் கைகளில் இருப்பதால் சமூகத்தில் உள்ள உழைப்பின் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலைமை இங்கு நிலவுகிறது. சமூகத்தின்  உழைப்பு ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை என்பது சமூக வளர்ச்சியைத் தடுப்பது என்பதாகும்.  சமூக வளர்ச்சிக்குத் தடையாக உள்ள இந்த முதலாளிய அமைப்பு நிலவும் வரை அனைவருக்கும் வேலை என்பது இந்த சமூகத்தில் கிடைக்காது.
     தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் சமூகத்திற்குச் சொந்தமாக இருக்கும்போதுதான், உற்பத்தி என்பது தனி முதலாளிகளின் இலாபத்திற்காக என்ற அடிப்படையில் இல்லாமல், சமூகத்தின் ஒட்டு மொத்தத் தேவைகளை நிறைவேற்றுவது  என்ற அடிப்படையில் அமையும். அதைத்தான் சோசலிச சமூக அமைப்பு என்கிறோம். அத்தகைய சோசலிச சமூக அமைப்பில்தான் அனைவருக்கும் வேலை என்பது சாத்தியம். மாணவர்களும் இளைஞர்களும் இதைப் புரிந்து கொண்டு இந்த முதலாளிய அமைப்புக்கு முடிவு கட்டி சோசலிச சமூகத்தை உருவாக்கத்  தொழிலாளர் வர்க்கத்துடன் அணி சேர வேண்டும். 
- புவிமைந்தன்


Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட