Skip to main content

உலகு தழுவிய அளவில் முதலாளிய நெருக்கடியும் மக்களின் போராட்டங்களும்!



தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையானது பின் தங்கிய நாடுகளிலும் முதலாளிய உற்பத்திமுறை மிக வேகமாக வளர வழி வகுத்துள்ளது. உலகத்திலுள்ள எந்த நாடும் உலக முதலாளியத்திலிருந்து  துண்டித்துத் தனியே செயல்பட முடியாத நிலையை இது உருவாக்கியுள்ளது. இந்த மாற்றம் தவிர்க்க இயலாதபடி முதலாளிய சமூகத்திற்கே உரிய நெருக்கடிகளான சமூக ஏற்றத்தாழ்வு, வேலையின்மை,  வறுமை என அனைத்தையும் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தோற்றுவித்துள்ளது. இந்த நெருக்கடிகளின் காரணமாக உழைக்கும் மக்களின் போராட்டங்கள் உலகெங்கும் பல நாடுகளில் வெடிக்கின்றன. தற்சமயம், அத்தகைய போராட்டங்கள்  சிலி, லெபனான், ஈக்குவடார், ஈராக், அமெரிக்கா  ஆகிய  நாடுகளில் வெடித்து அந்த நாடுகளின் அரசுகளை முடக்கும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளன.
சிலி
சிலி அரசானது மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என சாதாரண மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களை வெகுவாக உயர்த்தியது. அதனால் கோபமடைந்த மாணவர்களும் இளைஞர்களும் மக்களும் அந்த நாட்டின் தலைநகரான சான்தியாகோ நகரில் போராட்டத்தில் இறங்கினர். போராட்டம் அடுத்த சில மணி நேரங்களில் நாட்டின் மற்ற நகரங்களுக்கும் வேகமாகப் பரவியது. ஏறக்குறைய 68 தனித்தனி ஆர்ப்பாட்டம், பேரணிகளில் 4,25,000 பேர் பங்கேற்றதாக அரசு செய்திகள் கூறுகின்றன. உண்மை நிலை அதை விடப் பன்மடங்கு இருக்கும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் போராட்டத்தை ஒடுக்க சிலி அதிபர் செபஸ்தியான் பிரனவ் நெருக்கடி நிலையை அமல்படுத்தியுள்ளார்.

இதனால் அரசு படைகள் வீதிகளில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களின் மீது வன்முறையை ஏவி ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. போலிசாரின் துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பெண்கள், சிறுவர்கள் உட்பட 5000 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
லெபனான்
லெபனானில் வாட்ஸ்-ஆப் பயன்பாட்டாளர்கள் மாதம் ஆறு டாலர்கள் வரியாக செலுத்த வேண்டும் என்ற அரசின் ஆணைக்கு எதிராகத் தொடங்கிய போராட்டமானது அரசின் பொருளாதாரக் கொள்கைகள், வரி விதிப்புகள் ஆகியவற்றுக்கு எதிரான மாபெரும் போராட்டமாக மாறி நாடு முழுவதும் பரவியது. அந்த நாட்டில் உள்ள பல்வேறு இஸ்லாமியப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் கிறிஸ்தவர்களும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து உழைக்கும் மக்களாக இணைந்து அரசுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கினர். இப்போராட்டத்தில் சுமார் இருபது இலட்சம் பேர் கலந்து கொண்டதாகச் செய்திகள் கூறுகின்றன.
மக்களின் உறுதியான போராட்டத்தைக் கண்டு அஞ்சிய சிலி அரசு போக்குவரத்துக் கட்டண உயர்வையும்,  லெபனான் அரசு  வாட்ஸ்-ஆப் மீதான வரியையும் திரும்பப் பெற்றன. அத்துடன் குறைந்தபட்சமான சில பொருளாதார நிவாரணங்களையும் அறிவித்தன. இதன் மூலம் மக்களின் கோபத்தைத் தணிக்க முடியுமென அவை நம்பின. ஆனால் மக்கள் இவற்றை ஏற்பதாக இல்லை. நிலவுகின்ற அரசு தங்கள் நலனுக்கான  அரசு இல்லை என்றும், அந்த அரசின் பொருளாதாரக் கொள்கைகளும் வரி விதிப்புகளும் தங்களுடைய வாழ்க்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கித் தங்களை வாழ வழியற்றவர்களாக மாற்றுவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே இந்த அரசானது அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும் என்றும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

ஈராக்
ஈராக்கில் ஊழல் அரசாங்கத்தையும் வேலையின்மையையும்  எதிர்த்து தலைநகர் பாக்தாத்தில் தொடங்கிய போராட்டம் நாடு தழுவிய போராட்டமாக மாறியது. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றான ஈராக்கில் அதில் வரும் பெரும் பகுதி வருமானத்தை பெரும் முதலாளிகள் தங்கள் உடைமையாக மாற்றி வைத்துள்ளனர். இதனால் வறுமையும் வேலையின்மையும் பெருகியதால் மக்கள் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஈராக் அரசானது போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 150 க்கும் மேலான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் தலையிலும் மார்பிலும் குண்டு பாய்ந்து உயிர் இழந்தவர்கள். இந்த ஒடுக்குமுறை எதிர்த்து மக்கள் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.
மக்களின் போராட்டத்தை வன்முறை மூலம் ஒடுக்க முடியாது என்று உணர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்து ஏழைகளுக்கு மானிய விலையில் வீடு, வேலையற்ற இளைஞர்களுக்கு பயிற்சிப் பட்டறைகள் மற்றும் சிறு தொழில்கள் தொடங்க வங்கிக் கடன் எனப் பல்வேறு சலுகைகளை அளிக்க முன்வந்தது அரசு. மக்கள் இவற்றையெல்லாம் நிராகரித்து பிரதமரும் அவருடைய அமைச்சரவையும் பதவி விலகாமல் போராட்டம் ஓயாது என அறிவித்துள்ளனர்.
ஈக்குவடார்
ஈக்குவடார் அரசு இந்த ஆண்டு பட்ஜெட் பற்றாக்குறையைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 420 கோடி டாலர் கோரியிருந்தது. அதற்காக சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்த பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக எரிபொருளுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த மானியம் நீக்கப்பட்டது. மேலும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் 20 விழுக்காடு நீக்கப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கைகள் தொழிலாளர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் பெரும் சுமையாக மாறின. எரிபொருள் மானியம் விலக்கப்பட்டதால் 50 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு எரிபொருளின் விலை 123 விழுக்காடு உயர்ந்தது. அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து இடதுசாரி அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் போராட்டத்திற்கு அழைப்பு  விடுத்தனர். இதில் ஏராளமான மக்கள் நாடு முழுவதும் கலந்து கொண்டனர். இரண்டு வாரங்களாக நடந்த போராட்டத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் உயிரிழந்தனர். இருப்பினும் மக்கள் போராட்டத்திற்குப் பணிந்து பொருளாதாரச் சீர்த்திருத்தங்களை அரசு திரும்பப் பெற்றது.

அமெரிக்கா 
அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார்ஸ்க்கு எதிராக சுமார் 48000 தொழிலாளர்கள் நாற்பது நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மூன்றாவது பெரிய பள்ளி மாநிலமான சிகாகோவில் 32000 ஆசிரியர்கள், பள்ளிப் பணியாளர்கள் ஆகியோரின் வேலைநிறுத்தப் போராட்டம் இரண்டாவது வாரத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்தாண்டு மட்டும் அமெரிக்காவில் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. 
ஏற்றத்தாழ்வு   
உலக வங்கியின் புள்ளி விவரம்  2017 ஆம் ஆண்டில் சிலி நாட்டில் ஒரு விழுக்காடு மட்டுமே உள்ள பணக்கார முதலாளிகள் நாட்டின் தேசிய வருவாயில் 33 விழுக்காட்டினைக் குவித்து வைத்துள்ளதாகக் குறிப்பிடுகிறது. இலத்தின் அமெரிக்க நாடுகளில் மிகவும் முன்னேறிய நாடுகளில் ஒன்றாகவும் அதே சமயத்தில் பெரும் அளவு ஏற்றத்தாழ்வைக் கொண்ட நாடாகவும் சிலி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லெபனானில் 1 விழுக்காடாக உள்ள பணக்கார முதலாளிகள் நாட்டின் 58 விழுக்காடு செல்வத்தைத்  தங்களின் உடைமையாகக் கொண்டுள்ளனர். அதே சமயத்தில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ள உழைக்கும் மக்கள் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான செல்வத்தையே  உடைமையாகக் கொண்டுள்ளனர். இதே போல அமெரிக்காவிலும் 1 விழுக்காடே உள்ள பணக்காரர்கள் நாட்டின் மொத்த செல்வத்தில்  40 விழுக்காட்டைத் தங்களது உடைமையாகக் குவித்து வைத்துள்ளனர்.
இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வு முதலாளிய சமூகத்தின் தவிர்க்க முடியாத இயக்கப் போக்காகும். உலகப் பொருளாதார மந்தநிலையானது வளர்ந்த, வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகள் என்ற பேதம் இல்லாமல் அனைத்து நாடுகளையும் பொருளாதார வீழ்ச்சியை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது. அந்த நாடுகளின் முதலாளிய அரசுகள் நெருக்கடி நிலையைச் சமாளிக்க சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரிலும், பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரிலும்  தொழிலாளி வர்க்கத்திற்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகளையும் சட்ட ரீதியான உரிமைகளையும் திரும்பப் பெற்றும், வரிகளை உயர்த்தியும் தொழிலாளர்களின் வாழ்க்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கி அவர்களைப் போராட்டத்தை நோக்கித் தள்ளி வருகின்றன.
தொழிலாளர்களும், இதர உழைக்கும் மக்களும் சமூகரீதியாக இணைந்து போராடுவதன் மூலமே தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை நெருக்கடிகளுக்கான தீர்வைக் காண முடியும் என்ற உண்மையைத் தங்களுடைய ஒன்றிணைந்த போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் தாம்  விரும்புவது சில சீர்திருத்தங்களை அல்ல, வர்க்கங்களாகப் பிளவுபட்டுள்ள ஏற்றத்தாழ்வான சமூகத்தில் வர்க்கப் போராட்டங்கள் தவிர்க்க இயலாது என்பதையும்,  அவை தவிர்க்க இயலாமல் ஓர் உயர்ந்த சமூக அமைப்பை நோக்கி சமூகத்தைக் கொண்டு செல்லும் என்பதையும் விளக்கும்  மார்க்சியத் தத்துவத்தின் சாட்சியங்களாக இந்தப் போராட்டங்கள் இருக்கின்றன. சமூக மாற்றத்திற்கான சரியான கருத்துகள் போராடும் மக்களிடையே செல்லும்போது நிச்சயம் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என்ற உறுதியான நம்பிக்கையை இந்தப்  போராட்டங்கள் நமக்கு அளிக்கின்றன.

    - செங்கதிர்

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...