Skip to main content

தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவதில் முதலாளிகளின் கைத்தடியாக அரசு!

    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் நரசபுரத்தில், தைவான் நாட்டை சேர்ந்த விஸ்ட்ரான் எனும் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனமானது அமெரிக்காவைச்  சேர்ந்த ஆப்பிள் செல்போன் நிறுவனத்திற்கான பாகங்களை உற்பத்தி செய்து வருகிறது. இதில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியக் குறைப்பு செய்ததாலும், ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாலும், மிகைப்பணி நேரத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து 12 மணி நேரம் வேலை செய்யத் தொழிலாளர்கள் நிர்ப்பந்தம் செய்யப்பட்டதாலும் டிசம்பர் 12 அன்று தொழிலாளர்கள் நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டமானது ஆலையை நொறுக்குமளவிற்குத் தீவிரமானது. இதனையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டதோடு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டதற்காக  160க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஐபோன் உற்பத்தியில் முதன்மையாக விளங்கும் ஆப்பிள் நிறுவனமானது தானே நேரடி உற்பத்தியில் முழுவதுமாக ஈடுபடாமல் முகவர்கள் மூலமாக உதிரிப் பாகங்களைத் தயாரித்தல் அல்லது முழுப் பொருளையும்  உற்பத்தி செய்தல் ஆகியவற்றில் ஈடுபடுகின்றது. இந்த உற்பத்தி முகவர்களும் தொழிலாளர்களை நேரடியாகப் பணிக்கு அமர்த்தாமல் மூன்றாம் தரப்பு முகவர்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திச் சொற்பமான  கூலிக்கு அவர்களை கடுமையாகச் சுரண்டி வருகின்றனர்.  இந்த ஆலையில் மொத்தமுள்ள 9840 தொழிலாளர்களில் பெரும்பகுதியான 8490 தொழிலாளர்கள் (86%) ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், 1340 தொழிலாளர்கள் (14%) மட்டுமே நிரந்தரத் தன்மையுடையவர்களாகவும் உள்ளனர்.

    பல ஆயிரக்கணக்கான மதிப்புடைய செல்போன் தயாரிப்பில் ஈடுபடும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ஒரு சில ஆயிரங்களே அதாவது 8000 முதல் 12000 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகின்றது. சீனாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் உப நிறுவனம் ஒரு ஐ போனின் விற்பனை மதிப்பில் 3.6 விழுக்காடுதான் கூலியாகச் சீனத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.  இந்தியாவில்  அதன் பங்கு அதை விடக் குறைவாகவே இருக்கும் என்பதில் எந்தவிதமான ஐய்யமுமில்லை. அந்த அளவுக்கு நமது நாட்டுத் தொழிலாளர்களை மலிவான கூலிக்கு வேலைக்கமர்த்திச்  சுரண்டி இலாபம் சம்பாதித்து வருகிறது ஆப்பிள் நிறுவனம்.

    ஆப்பிள் நிறுவனம் நேரடியாகத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி இவ்வாறு அவர்களை சுரண்டினால் அந்த நிறுவனமானது சமூகத்தில் கட்டமைத்துள்ள (தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்ட நிறுவனம் போன்ற) பிம்பம் உடைந்து அம்பலமாகி விடும் என்பதால் பிற முதலாளிகளை இடைத்தரகர்களாகக் கொண்டு அவர்கள் மூலம் இந்த உற்பத்தியைச் செய்வது அல்லது தன்னுடைய  நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களிலும் இடைத்தரகர்கள் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களை அமர்த்திச் சுரண்டுவது என்ற செயலுத்தியை கடைப்பிடிக்கின்றது. இந்தச் சுரண்டலினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் வீறுகொண்டு  எழுந்து போராட்டம் நடத்தும் பொழுது தனக்கும் அதற்கு சம்பந்தம் இல்லாதது போன்று காட்டிக் கொண்டு தன்னைத் தற்காத்துக் கொள்கின்றது. தொழிலாளர்களுக்குப் போதுமான  கூலி,  போதிய பணிப் பாதுகாப்பு, ஆரோக்கியமான பணிச் சூழலை ஏற்படுத்துதல், மருத்துவக் காப்பீடு ஆகிய பொறுப்புகளிலிருந்து   அது தப்பித்துக் கொள்கிறது. இடைத்தரகர்களாகச் செயல்படும் முதலாளிகளின் மீது அந்தப் பொறுப்புகளைத் தள்ளி விடுகிறது. பிரச்சினைகள் வரும்போது இடைத் தரகர்கள் மீது பழியைப் போட்டுத் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்கிறது. ஆப்பிள் நிறுவனம் மட்டுமல்லாமல் பெருவீத உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைத்து முதலாளிகளும் தங்களுடைய சுரண்டலை மறைக்கவே இத்தகைய செயலுத்தியைக்  கையாண்டு வருகின்றனர்.

    கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் தொழிலாளர்களின் இந்த வன்முறையைக் கண்டிப்பதாகவும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது  சட்ட நடவடிக்கைகள் பாயும் என்று கூறி முதலாளிகளின் விசுவாசமான ஏஜண்டாகத் தன்னை உறுதிப்படுத்திக் கொள்கிறார். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான ஊதியத்தை வழங்காத, ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்திக் கசக்கிப் பிழியும் முதலாளிகளின் சட்ட விரோதச் செயலைக் கண்டிக்காத துணைமுதல்வர், அநீதிக்கு எதிராக போராடிய தொழிலாளர்கள் மீது கண்டன கணைகளை வீசுவதன் மூலம் தனது முதலாளிய வர்க்கப் பாசத்தை வெளிப்படுத்திக் கொள்கிறார்.

    ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக், ஐபோன் தயாரிப்புகளுக்கு சீனாவைச் சார்ந்து இருப்பதை விரும்பவில்லை. அமெரிக்கா-சீனாவிற்கு இடையேயான வர்த்தகப் போர், சீனாவில் உயர்ந்து வரும் ஊதிய விகிதங்கள் ஆகியவை மலிவான கூலிக்குத் தொழிலாளர்கள் கிடைக்கும்  பிற  நாடுகளை நோக்கி டிம் குக்கின் கவனத்தைத் திரும்ப வைத்தது.  அப்படியான நாடுகளில் ஒன்றுதான் இந்தியா. குறைந்த கூலி, அரசின் பல்வேறு சலுகைகள், முதலாளிகளுக்கு ஆதரவாகவும் தொழிலாளர்களுக்கு எதிராகவும் உள்ள சட்டங்கள் ஆகிய காரணங்களால் பன்னாட்டு முதலாளிகளுக்குக் கொள்ளையடிப்பதற்கான பெருவாய்ப்பாக இந்தியா  இருப்பதால் டிம் குக்குக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

    பன்னாட்டு நிறுவனங்களுக்கான உதிரிப்பாகங்கள் தயாரிப்பு அல்லது முழுமையடைந்த பொருளாக உற்பத்தி செய்வது ஆகியவற்றைக் கூட இந்திய முதலாளிகள் மட்டுமல்லாமல் விஸ்ட்ரான் போன்ற பன்னாட்டு முதலாளிகளும் தங்கள் மூலதனத்தை இந்தியாவில் முதலீடு செய்து குறைந்த கூலிக்கு உழைப்புச்சக்தியை சுரண்டி வருகின்றனர்.  

    விஸ்ட்ரான் நிறுவனத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஆப்பிள் நிறுவனம் நடத்திய விசாரணையில் விஸ்ட்ரான் நிறுவனமானது தொழிலாளர் சட்டங்களை அப்பட்டமாக மீறியுள்ளது தெரிய வந்துள்ளது. கொரானா காலத்தில் ஏற்பட்ட  தொழில் முடக்கத்தைச் சரிக்கட்ட  பெரும் அளவு உற்பத்தி செய்யத் திட்டமிட்டது அந்த நிறுவனம்.  அதனால் ஒப்பந்தத் தொழிலாளர்களை அதிக அளவு  பணிக்கு அமர்த்தியது. 

    பணி நியமன ஆணை வழங்காமல் வேலைக்கு அமர்த்துதல், சம்பளப் பட்டுவாடா மற்றும் வருகைப் பதிவு குறித்த முறையான ஆவணங்கள் இல்லாமை, அரசு உரிமம் அளித்ததை விட அதிகளவில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துதல், தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்ட விவரங்கள் இல்லாமை, 8 மணி நேரத்திற்கு மேல் பணிபுரியும் நேரத்திற்கு மிகை ஊதியம் வழங்காமல் கட்டாய 12 மணி நேர வேலை செய்ய நிர்ப்பந்தித்தல், ஊதியங்கள் வழங்காதிருத்தல் போன்ற சட்டமீறல்களை செய்திருப்பதாக கர்நாடகத் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனமும், தொழிலாளர் துறையும் விஸ்ட்ரான் நிறுவனமானது தொழிலாளர் சட்டங்களை அப்பட்டமாக மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டினாலும், கர்நாடகவின்  துணைமுதல்வர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் என்கிறார். எஜமானனை விட அதிகமான அளவு  விசுவாசமான கொண்ட  வேலையாளாக அவர் இருக்கிறார். 

டொயொட்டா கார் நிறுவனம்

    கர்நாடக மாநிலம் பிடுதியில் அமைந்துள்ளது ஜப்பானைத் தலைமையாகக் கொண்டுள்ள டொயொட்டா கார் நிறுவனம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொழிலாளர்கள் மீது 20 சதவீதம் கூடுதல் பணிச்சுமையை திணித்தது. ஒரு நாளைக்கு 300 கார்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடத்தில் 360 கார்கள் உற்பத்தி செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியது.

    நிறுவனத்தின் இந்தத் தொழிலாளர் விரோதப்போக்கைக் கைவிட வேண்டும் எனத் தொழிற்சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுப்பட்டது. இதனையடுத்து டொயோட்டா நிறுவனமானது சட்டவிரோதமாக ஆலையைக் கதவடைப்புச் செய்ததோடு மட்டுமல்லாமல் 66 தொழிலாளர்களைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளது. தொழிலாளர்கள் கூடுதல் பணிச்சுமையை ஏற்றுக் கொள்வதோடு நன்னடத்தை விதிகள் மற்றும் பொறுப்பேற்பு பத்திரத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என்று நிர்வாகம் தொழிலாளர் விரோதப் போக்கை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.

    விஸ்ட்ரான் மற்றும் டொயோட்டா ஆலைகளின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டிக்காமல், தொழிலாளர்களின் போராட்டங்களினால் முதலீடுகள் வருவது பாதிக்கப்படும் என்றும், தொழிலாளர்கள் இது போன்ற போராட்டங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கைகள் பாயும் என்றும் கர்நாடக அரசு தொழிலாளர்களை எச்சரிக்கின்றது.

    வேலையிழந்து நிற்கும் ஆயிரகணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் குறித்தோ, சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டுள்ள 160க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நிலைமை குறித்தோ எவ்வித அக்கறையுமின்றி ஆளும் முதலாளி வர்க்கத்தையும், அவர்களின் சுரண்டல் நலனையும் - அபரிமித இலாபத்தையும், அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பதே தமது கடமையாக அரசு கொண்டுள்ளது.

    இது எங்கோ சில இடங்களில் மட்டும் நடப்பதல்ல, இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் போராட்டங்களை நோக்கித் தள்ளப்பட்டு வருவது தற்பொழுது அதிகரித்து வருகின்றது. அரசே தங்களுடைய ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காமலும், பணி நிரந்தரம் செய்யாமலும், சுரண்டுகின்றது.

    குஜராத்தில் கிராமப்புறச் சுகாதாரப் பணியாளர்கள், ஜம்மு காஷ்மீரில் பொதுத்துறை ஊழியர்கள், டெல்லி மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் முறையாக  ஊதியம் வழங்காததைக் கண்டித்துப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    டெல்லி மாநகராட்சி உயர் அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்களுக்கு ஊதியமும் சலுகைகளும் எந்தவிதமான  தாமதமும் இல்லாமல் வழங்கப்படும் பொழுது தொழிலாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு மட்டும் நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டுவது ஏன் என்று டெல்லி உயர் நீதிமன்றம் டெல்லி மாநகராட்சியைக் கேட்கிறது.  உயர் அதிகாரிகளும், கவுன்சிலர்களும் பிரபுத்துவக் கோமான்கள் போன்று வாழும்பொழுது தொழிலாளர்களுக்கு ஏன் அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஓலா, உபர் நிறுவனங்கள் தரகுத் தொகையை 20 சதவீதமாக உயர்த்தியதை கண்டித்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஸ்விக்கி தொழிலாளர்கள் ஊதிய குறைப்பு மற்றும் ஊக்கத் தொகை நிறுத்தத்தைக் கண்டித்து சென்னை, ஹைதாராபாத், நொய்டா நகரங்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஒரு டெலிவரிக்கு 35 ரூபாய் என்பதிலிருந்து 15 ரூபாய் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் நகரில் ஒரு பகுதித் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்க, மற்றொரு பகுதி தொழிலாளர்கள் இந்த நெருக்கடியான காலகட்டத்தைச் சமாளிப்பதற்காக தொடர்ந்து வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால் இரண்டு தரப்பு தொழிலாளர்களுக்குமிடையே மோதல் உருவானது.

    வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை மிகுந்துள்ளதால் கூலியைக் குறைத்தாலும் அந்த வேலைக்கும் போட்டி அதிகளவில் உள்ளது. இதனை முதலாளி வர்க்கமானது கூலியின் அளவை மேலும் மேலும் வெட்டுவதற்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றது.

    சர்வதேசத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (International Trade Union Confederation) சார்பாக உலகளாவிய உரிமைக்கான குறியீடு 2020 (Global Rights Index) என்ற தலைப்பின் கீழ் சர்வதேச அளவில் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றியதான ஆய்வில் இந்தியா மிகவும் மோசமான 10 நாடுகள்என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளது. வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் மீதான மிருகத்தனமான அடக்குமுறை (Brutal Repression on Strikes), பெருந்திரளான வேலை நீக்கம் (Mass Dismissal), பிற்போக்குத் தனமான சட்டங்கள் (Regressive Laws) ஆகிய வழிமுறைகள் மூலம் இந்தியாவில் உள்ள தொழிலாளர்களின் மீது ஒடுக்குமுறை நிகழ்த்தப்படுவதாக  அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஏற்படும் பொருளாதார நெருக்கடியிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள முதலாளி வர்க்கமானது தொழிலாளி வர்க்கத்தின் மீது கூடுதல் பணிச்சுமை, ஊதிய வெட்டு, கதவடைப்பு, வேலையிழப்பு ஆகிய தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.  அரசானது முதலாளி வர்க்கத்தினை நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு மக்களின் வரிப்பணத்தை பல்வேறு சலுகைகளாக வாரி வழங்குகின்றது. இதனால், தற்காலிகமாக முதலாளி வர்க்கம் நெருக்கடியிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டாலும் மீண்டும் மீண்டும் நெருக்கடி சுழலில் சிக்கி வருகின்றது. இந்தத் தொடர் நெருக்கடிகளினால் தொழிலாளி வர்க்கம் மேலும் மேலும் வேலையிழப்பு, ஊதிய வெட்டு போன்றவற்றிற்கு ஆட்பட்டு போராட்டக் களத்தை நோக்கித் தள்ளப்படுகின்றனர்.

    ஆனால், தொழிலாளர்களின் இந்தப் போராட்டங்கள் தன்னெழுச்சிப் போராட்டங்களாக, பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களாக மட்டுமே இருக்கின்றன. இந்தப் போராட்டங்களைத் திட்டமிட்ட அரசியல் போராட்டமாக ஒருங்கிணைத்து சோசலிச சமூகத்தை நிறுவுவதற்கான போராட்டக் களத்தைக் கட்டியமைக்கும் முதன்மையான பணி அரசியல் உணர்வு பெற்ற பாட்டாளி வர்க்கத்தின்  முன்னணிப் படையினரின்  முக்கிய கடமையாக இன்று உள்ளது.

-                                                                                                                                                                                                            - குமணன்

Comments

  1. நல்ல சமுக பகுப்பாய்வு,அப்படியே விவசாய வர்க்கம் பற்றிய சமுக பகுப்பும் அதன் தேவையும் வெளிவருதல் அவசியம் என கருதுகிறேன் தோழர்
    ,
    பதிவு அருமை தோழர்
    புரட்சிகர வாழ்த்துக்கள்
    ☺☺☺

    புரட்சிகர மக்கள் இயக்கம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட