Skip to main content

காவித்துண்டும் வேண்டாம்! ஹிஜாப்பும் வேண்டாம்!


கர்நாடகாவிலும், காசுமீரிலும் பெண்கள் ஹிஜாப் அணிவது குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் மூலம் மத உரிமைகளைப் பின்பற்றுவது குறித்து விவாதங்கள் நாடெங்கும் இன்று முன்வந்துள்ளன. இதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி மத அடிப்படையில்  பெரும்பான்மையினராக உள்ள இந்துக்களிடம் தங்களுடைய வாக்கு வங்கியை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அதிகரித்துக் கொள்ளவும்  கர்நாடகத்திலும் மத்தியிலும் ஆட்சியில் உள்ள முதலாளிய வர்க்கத்தின் நம்பகமான ஏஜண்டான  பா.ஜ.க. திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது. 

நடந்தது என்ன?

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் பயின்று வரும் 11 மற்றும் 12-ம் வகுப்பைச் சேர்ந்த 8 மாணவிகள், ஹிஜாப் அணிந்து வந்ததால் வகுப்புகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்தப் பள்ளியில் ஹிஜாப் அணிவது நடைமுறையில் இல்லை. அந்தப் பள்ளியில் மொத்தம் 76 முஸ்லீம் மாணவிகள் பயில்கின்றனர், அதில் 8 மாணவிகள் மட்டும் பெற்றோர் மூலம் டிசம்பர் மாதம் பள்ளித் தலைமையிடம் ஹிஜாப் அணிந்து வர அனுமதி கேட்டனர். பள்ளி நிர்வாகம் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் ஹிஜாப் அணிவது என்ற முடிவைத் தாங்களாகவே எடுத்ததாகவும், மற்ற முஸ்லீம் மாணவிகளை நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என்றும் மாணவிகள் கூறுகின்றனர்.

 

உடுப்பியில் எழுந்த இந்தச் சிக்கலையடுத்து மங்களூர் பகுதியில் இந்துத்துவச் சக்திகள் இதனைக் கையிலெடுத்துக் கொண்டு இந்து மாணவர்களைக் காவித் துண்டு அணிய வைத்து கல்விக் கூடங்களில் மத மோதல்களைக் கொண்டு வந்துள்ளன. இந்து மாணவர்களின் இத்தகைய போராட்டங்களால் ஏற்கனவே ஹிஜாப் அணிந்து வருவதை அனுமதித்து வந்த கல்விக் கூடங்களிலும் அது தடை செய்யப்பட்டது.

கர்நாடக மாநிலம் மாண்டியா நகரில் உள்ள கல்லூரியில் படித்து வந்த முஸ்கான்கான் என்னும் மாணவி பர்தா மற்றும் ஹிஜாப்புடன் கல்லூரியில் நுழைய முற்பட்டபொழுது, கல்லூரிக்குத் தொடர்பில்லாதவர்கள் சிலர் மாணவர்கள் என்னும் பெயரில் காவித் துண்டு அணிந்து கொண்டு அங்கு வந்து குழுமி மாணவிக்கு எதிராக ’ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கத்தை எழுப்பினர். அதற்கு எதிராக முஸ்கான்கான் 'அல்லா ஹு அக்பர்' என முழக்கமிட்டார். மாணவியின் அஞ்சா நெஞ்சத்தைக் கண்டு இந்துத்துவச் சக்திகள் திகைத்து நின்றனர். பின்னர் கல்லூரி ஆசிரியர்கள் மூலம் பாதுகாப்பாக அப்பெண் அழைத்துச்  செல்லப்பட்டார். இந்துத்துவக் கும்பல்களுக்கு எதிரான முஸ்கானின் தன்னெழுச்சியான எதிர்ப்பும் துணிச்சலும் நாடெங்கும் மக்களின் மாபெரும் வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்றது.  

காஸ்மீரில்...

காஸ்மீரத்திலோ ஹிஜாப் பிரச்சனை வேறு வடிவில் வெடித்துள்ளது. பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவி அருசா பர்வேசின் புகைப்படம் ஹிஜாப் அணியாத நிலையில் வெளியிடப்பட்டதால் அந்த மாணவிக்கு இஸ்லாம் மதப் பிற்போக்குவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஹிஜாப்பை அணிவது அல்லது அணியாமல் இருப்பது ஒருவரின் மத நம்பிக்கையை வரையறுப்பதில்லை. என்னை விமர்சனம் செய்பவர்களை விட நான் அல்லாவை அதிகம் நேசிக்கின்றேன். என்னுடைய மனதால் நான் முஸ்லீம் ஆக இருக்கின்றேன். ஹிஜாபால் அல்ல என்று அருசா பர்வேஸ் கூறியுள்ளார்.

மாணவி அருசா பர்வேஸ்க்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இஸ்லாம் அடிப்படைவாதிகளின்  பிற்போக்குவாதத்திற்குள் சிக்கியுள்ள இஸ்லாமியப் பெண்கள் பர்தா, ஹிஜாப் அணிந்து கொண்டு காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் வாயிலில் நின்று கொண்டு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு  மலர்க் கொத்துகள்  கொடுத்து ஹிஜாப் அணிவதை ஆதரித்து நின்றனர்.

காசுமீரத்து இஸ்லாம் பெண்களும், கர்நாடகத்து உடுப்பி மாணவிகளும் முன்வைக்கும் காரணங்கள் ஒன்றே. ”கல்லூரியில் அதிகமான ஆண் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். வெளியிலிருந்தும் நிறைய ஆண்கள் வருகின்றனர். எனவேதான் ஹிஜாப் அணிகிறோம் என்று உடுப்பி பள்ளி மாணவிகளும், ”எங்களது தீர்க்கதரிசியான நபிகளின் அறிவுரைப்படி பெண்கள் முகத்திரையை அணிய வேண்டும் மற்றும் ஆண்களோடு கலக்கக் கூடாதுஎன்று ஹிஜாபை ஆதரிக்கும் காசுமீரத்து முஸ்லீம் பெண்களும் கூறுகின்றனர். இந்த இரண்டு பகுதியைச்  சார்ந்த பெண்களின் முன்வைப்பும் மத நம்பிக்கைகளைக் கல்விக் கூடங்களிலும் பின்பற்ற வேண்டும் என்பதே.

இதனை ஒட்டி, ஹிஜாப் அணிவது ஒரு மத அடையாளம் என்றால் அதைக் கல்விக் கூடங்கள் போன்ற பொதுவான சமூக அரங்குகளில் பெண்கள் அணிவதை நாம் ஆதரிக்கலாமா, கூடாதா என்ற விவாதமும் சமூக மாற்றத்தில் அக்கறை கொண்டவர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

ஒரு குடிமைச் சமூகத்தில், அரசு அலுவலகங்கள், அரசு சார் நிகழ்வுகள், கல்விக்கூடங்களில் பங்கு கொள்ளும்போது, சாதி, மத அடிப்படையிலான வேறுபாடுகளைக் களைந்து, ஒரு ஜனநாயகப் பண்பாட்டின் அடிப்படையில் கலந்து கொள்ள வேண்டும். அதனைக் கொண்டே ஒரு சமூகத்தின்  நாகரிகத்தை அளவிட முடியும். அத்தகைய பண்பாட்டை வளர்த்தெடுக்கும் நோக்கத்தைக் கல்விக் கூடங்களும் கொண்டுள்ளன. அந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே பள்ளிகளில் சீருடை அணிந்து வரும் நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்துமத அடிப்படைவாதிகளின் தாக்குதலும் எதிர்வினையும்

இந்து மத அடிப்படைவாதத்தை உயர்த்திப் பிடிக்கும் இந்துத்துவவாதக் கட்சியான பா.ஜ.க. மத்தியில் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து இந்த நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் பள்ளிகளும் அதனுடைய மத வெறிக் கொள்கைக்கு இரையாகி வருகின்றன. இந்துத்துவக் கோட்பாடுகளை உயர்த்திப் பிடிப்பவர்களே பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களாகவும்  ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைவர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர். இந்துமத வெறியர்களின் விருப்பத்திற்கேற்பப் பழம் பஞ்சாங்கங்களும் புராணக் குப்பைகளும் அறிவியலின் கருவூலங்கள் என்று புகழப்பட்டு பாடத் திட்டங்களில் வைக்கப்பட்டு வருகின்றன. கல்வி நிலையங்கள் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்ப்பதற்குப் பதிலாக மூட நம்பிக்கைகளையும் பிற்போக்குத்தனத்தையும் வளர்த்தெடுக்கும் நாற்றங்கால்களாக மாற்றப்பட்டு  வருகின்றன; காவிகளின் கூடாரங்களாக மாற்றப்பட்டு  வருகின்றன.

அத்தோடு மட்டுமல்லாமல், பா.ஜ.க.ஆட்சியின் கீழ் வானளாவிய அதிகாரங்களைப் பெற்றுள்ள இந்துமத அடிப்படைவாதிகளான இந்துத்துவ வெறியர்கள் இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள்  என அனைத்துச் சிறுபான்மையினரின் மதங்கள் மீதும் வெறித்தனமான பேச்சுகளையும் தாக்குதல்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அந்த மக்களிடையே பெரும் அச்சத்தையும், எதிர்காலத்தில் நம்பிக்கை இன்மையையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இந்துத்துவ வெறியர்களின் இத்தகைய வெறித்தனமான தாக்குதல்களிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள சிறுபான்மை மதத்தினரும் தங்களுடைய மத அடிப்படையில் ஒன்று திரள  கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்த நிலைமையை சிறுபான்மை மதத்திலுள்ள அடிப்படைவாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்;  அந்த மக்கள் மீது காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் பிற்போக்குத்தனங்களையும் திணிப்பதற்கு இதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு தொப்பி அணிந்த முஸ்லீம் ஆண்களையும் ஃபர்தா அணிந்த முஸ்லீம் பெண்களையும் பொது இடங்களில் குறைந்த அளவிலேயே காண முடியும். ஆனால் இன்றோ அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்துத்துவ  அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்கு எதிர்வினையாகவே இதை நாம் பார்க்க முடியும். பெரும்பான்மையினரின்  மதத்திலுள்ள அடிப்படைவாதிகளின் தாக்குதல்கள் சிறுபான்மை மதத்தில் உள்ள  அடிப்படைவாதிகள் ஆதிக்கம் பெற வழிவகுத்துள்ளது.

ஆனால் ஒரு மதத்தின் அடிப்படைவாதத்திற்குப் பதிலாக இன்னொரு மதத்தின் அடிப்படைவாதத்தை எதிர் நிறுத்துவது தீர்வாக அமையாது. அடிப்படைவாதம் எந்த மதத்திலிருந்து தோன்றினாலும், எந்த வடிவத்தில் தோன்றினாலும் அது மக்களைப்  பிற்போக்குத்தனத்திலும் மூடநம்பிக்கைகளிலும் வீழ்த்தவே பயன்படும்; அது ஒரு சிலரின் அதிகாரத்திற்கும் ஆதிக்கத்திற்கும் சுரண்டலுக்குமே வழி வகுக்கும். 

பெரும்பான்மையினர்  மதத்திலுள்ள இந்துத்துவ அடிப்படைவாதிகளின் தாக்குதலை எதிர்த்து அவற்றை முறியடிக்கும் அளவுக்குப் பலமான  புரட்சிகர இயக்கங்களோ ஜனநாயக இயக்கங்களோ இங்கு இல்லை.  அதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைச் சிறுபான்மையினரின் மதமான இஸ்லாமில் உள்ள அடிப்படைவாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்த மக்கள் மீது தங்களின் பிடிப்பை வலுப்படுத்திக் கொள்கின்றனர். 

மக்களுக்கு எதிரானவர்கள் மத அடிப்படைவாதிகள்

மத அடிப்படைவாதிகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மக்களின் ஜனநாயகப் பண்பாட்டுக்கும் உரிமைகளுக்கும் எதிரானவர்கள்தான்; பிற்போக்குத்தனத்தையும் பெண் அடிமைத்தனத்தையும்  மூட நம்பிக்கைகளையும் ஆதரிப்பவர்கள்தான். மத வேறுபாடின்றி உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைவதற்குத் தடையாக இருப்பவர்கள்தான். நிலவி வரும் சுரண்டல் சமூக அமைப்பைக் கட்டிக் காப்பாற்றுபவர்கள்தான்.

எந்த மதத்திலுமுள்ள அடிப்படைவாதிகளும் சுரண்டலற்ற சமூக அமைப்பை உருவாக்கப் போராடும்  புரட்சிகரமான இயக்கங்களை ஆதரிக்க மாட்டார்கள். அவற்றை எதிரிகளாகவே பார்ப்பார்கள். எனவே சிறுபான்மை மதத்தினரின் மீதான  இந்துத்துவவாதிகளின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடும் அதே வேளையில் கம்யூனிஸ்ட்டுகள் அனைத்து மதங்களிலும் உள்ள அடிப்படைவாதிகளையும் எதிர்த்துப் போராட வேண்டும். உழைக்கும் மக்களை மத அடிப்படையில் பிரித்து வைக்கும் அனைத்து மத அடிப்படைவாதிகளின் பிற்போக்கான கருத்துகளையும் எதிர்த்துக்  கம்யூனிஸ்டுகள் விட்டுக் கொடுக்காத கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டும். 

மதம் என்பது தனிப்பட்ட நபர்களின் விவகாரம் ஆகும். தங்களுடைய மதத்தின் நெறிமுறைகளையும் வழிபாட்டு முறைகளையும்  பழக்கவழக்கங்களையும்  பின்பற்றுவதற்கு அனைத்து மதத்தினருக்கும் முழு உரிமை உண்டு. பிற மதத்தினரின் இந்த உரிமையில் தலையிடும் உரிமை வேறொரு மதத்தினருக்கோ அல்லது அரசுக்கோ இல்லை.  ஆனால் அதே சமயத்தில் கல்விக் கூடம், அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள்  போன்ற பொது இடங்களில், மத அடிப்படைவாதிகளின் தூண்டுதலால், தங்களை மத அடிப்படையில் வேறுபடுத்திக் காட்டும் காவித் துண்டுகளையும் ஹிஜாப்புகளையும் அணிந்து வருவது சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்வதாகும்.

மதப் பிடிப்பை வலுப்படுத்தும் அரசியல் கட்சிகள்

மத அடிப்படைவாதிகள் மட்டும் மக்களை மத அடிப்படையிலான பிற்போக்குத்தனக் கருத்துகளிலும் பழக்க வழக்கங்களிலும் ஆழ்த்துவதில்லை. இங்கு பதவி நாற்காலிகளுக்காக நாய்ச் சண்டைகளில்  ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகளும் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக  மக்களைப் பிற்போக்குத்தனமான மதக் கருத்துகளில் ஆழ்த்தி வருகின்றன. போலியான மதச் சார்பின்மைக் கொள்கை அதற்குத் துணையாக இருக்கிறது. உண்மையில் மதச் சார்பின்மை கொண்ட அரசாக இருக்க வேண்டுமென்றால்  மதம் என்பது தனிப்பட்ட நபர்களின் விவகாரம் என்றும்,  அரசுக்கும் மதத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடயாது என்றும் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கும் மதத்திற்கும் எந்தவிதமான ஒட்டுமில்லை,உறவுமில்லை என ஆக்கப்பட்டிருக்க வேண்டும்.   ஆனால் இங்குள்ள அரசின் மதச் சார்பின்மைக் கொள்கை என்பது அனைத்து மதங்களையும் சமமாகப் பாவிப்பது என்ற பெயரில் அரசியலையும் மதத்தையும் ஒன்று கலக்க வழி வகுக்கிறது. அதன் மூலம் கட்சிகள் மக்களிடையே நிலவி வரும் மத நம்பிக்கைகளைப்  பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்கப்  போட்டி போடுகின்றன. அதற்காக மக்களை மத அடிப்படையில் ஒன்று திரட்ட மதவாதக் கருத்துகளைப் பயன்படுத்தி வருகின்றன. 

இந்து மதத்தின் அடிப்படைவாதிகளான இந்துத்துவ ஆர்.எஸ்.எசின் அடிப்படைவாதக் கருத்துகளைக் கொண்ட பா.ஜ.க.  பெரும்பான்மை மதமான இந்து மதத்திலுள்ள மக்களின் வாக்குகளைப் பெற மதத்தை அரசியலில் புகுத்தியது. இராமர் கோயில் கட்டுவதற்காக இரத யாத்திரைகள் நடத்தியும் இராமர் கோயிலை இடித்தும் தான் இந்துக்களின் பாதுகாவலனாகக் காட்டிக் கொண்டது. வரலாற்றைத் திருத்தியும், முஸ்லீம் மக்களுக்கு எதிரான விசமக் கருத்துகளைப் பரப்பியும் மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தியது. மதக் கலவரங்களைத்  தூண்டி விட்டு இரத்த ஆறு ஓட வைத்தது. இத்தகைய செயல்பாடுகளின் மூலம் அது வெற்றி பெற்று 2014ல் மத்தியில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது; ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ந்து மக்களைப் பிளவுபடுத்தும் வேலைகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. பா,ஜ,க,வின் பிரதமர் மோதி காவி உடுத்தி மத நிகழ்வுகளில் கலந்து கொண்டு பூஜைகள் செய்கிறார். அந்தக் கட்சியைச் சேர்ந்த உத்தரப்பிரதேச முதல்வர் காவி உடுத்திக் கொண்டு பண்டாரமாகவே எப்பொழுதும் தோன்றுகிறார். 

காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.க.விற்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல; அதுவும் தன் பங்குக்கு, தனது அரசியல் இலாபத்திற்காக  மத அடிப்படைவாதிகள் இங்கு ஆதிக்கம் பெற வழி வகுத்தது. இராஜீவ் காலத்தில் காங்கிரஸ் அரசு இந்து மதத்தில் உள்ளவர்களின் வாக்கு வங்கியை இழந்து விடக் கூடாது என்பதற்காக அயோத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பாபர் மசூதியில் இராம் சீலா பூஜை நடத்த அனுமதித்தது. பிறகு பி.வி.நரசிம்ம ராவ் காலத்தில் பாபர் மசூதியை இந்து வெறியர்கள் இடிப்பதைக் கைகட்டி வேடிக்கை பார்த்தது. அதைத் தடுப்பதற்கு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அதனால் இந்துத்துவவாதிகள் செல்வாக்கு பெற்றனர். அதே சமயத்தில் காங்கிரசின் மீது நம்பிக்கை இழந்த முஸ்லீம் மக்கள் முஸ்லீம் அடிப்படைவாதிகளின் செல்வாக்கின் கீழ் செல்வதற்கு அந்த நிகழ்ச்சி வழி வகுத்தது.  அது போலவே, ஷா பானு வழக்கு விவகாரத்தில் முஸ்லீம் அடிப்படைவாதிகளைத் திருப்தி செய்வதற்காக இராஜீவ் காலத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு மாறி மாறி மதச் சார்பின்மை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி இரண்டு மதங்களிலுமுள்ள அடிப்படைவாதிகள் பலம் பெற வழி வகுத்தது.

அடிப்படைவாதிகளும் மக்களும்

ஒரு மதத்திலுள்ள மத அடிப்படைவாதிகளையும் அந்த மதத்தில் நம்பிக்கை கொண்டுள்ள சாதாரண மக்களையும் ஒன்று போலக் கருதி அவர்கள் மீது ஒரே மாதிரியான அணுகுமுறையை நாம் மேற்கொள்ளக் கூடாது. அவர்களுக்கு இடையில் உள்ள வேறுபாட்டை நாம் உணர வேண்டும். மத அடிப்படைவாதிகளின் நோக்கம் அந்த மதத்தில் உள்ள வழக்கொழிந்துபோன பிற்போக்கான கருத்துகளையும் மூடநம்பிக்கைகளையும் அந்த மதத்தில் உள்ள மக்கள் மீது திணித்து அவர்களைத் தம் கட்டுப்பாட்டின் கீழ், ஆதிக்கத்தின் கீழ் வைப்பதாகும். அதன் மூலம் தமது அரசியல் செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் வலுப்படுத்திக் கொள்வதாகும். நிலவி வரும்  சுரண்டல் அடிப்படையிலான முதலாளியச் சமூக அமைப்பைக் காப்பாற்றுவதாகும். இவர்கள் மக்களுக்கு எதிரானவர்கள்; சமூக மாற்றத்தை எதிர்ப்பவர்கள். இவர்களை நாம் கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும். இவர்களின் நோக்கத்தை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும். மக்களை இவர்களின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும்.

ஆனால் ஒரு மதத்திலுள்ள சாதாரண மக்களின் நிலைமையோ வேறுபட்டது. அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். தம்முடைய கடவுள்களை வணங்குபவர்கள். அந்தக் கடவுள்கள் இந்த உலகில் தம்மை வாழ்வின் அனைத்துத் துயரங்களிலிருந்தும் வறுமையிலிருந்தும் ஏழ்மையிலிருந்தும் விடுவிக்கும் என்றும், தாம் வாழ்வில்  எதிர்கொள்ளப் போகும் தடைகளிலிருந்து தம்மைக் காப்பாற்றும் என்றும் நம்புபவர்கள்; அவர்களுடைய துயரங்களுக்கு எல்லாம் கடவுள் என்பவர் ஆறுதல் அளிப்பவராகவும்,  அவர்கள் படும் கஷ்டங்களுக்கெல்லாம் கடவுள் என்பவர் அவர்களுடன்  துணை நிற்பவராகவும் தோன்றுகிறார்.

அவர்களுடைய வாழ்வின் வேதனைகளுக்குக் கடவுள் ஒரு வலி நிவாரணியாக இருக்கிறார். ஆனால் அது ஒரு தற்காலிக வலி நிவாரணிதான் என்பதை அவர்கள் அறிவதில்லை. அவர்களுடைய துயரங்களுக்கும் வறுமைக்கும் ஏழ்மைக்கும் மூல காரணமாக இருப்பது இங்குள்ள ஆளும் வர்க்கங்களின் சுரண்டலும் ஒடுக்குமுறையும்தான் என்பதை அவர்கள் அறிவதில்லை. இந்தச் சுரண்டல் அமைப்பின் காரணமாகவே அவர்களுடைய உழைப்பின் முழுப் பலனையும் அவர்களால் அடைய முடிவதில்லை, வளமான வாழ்வைப் பெற முடியவில்லை  என்பதை அவர்கள் அறிவதில்லை. அதை அவர்கள் அறியவிடாமல் தடுப்பது தற்காலிக வலி நிவாரணியான மதமும் கடவுளும்தான். அதை மக்கள் புரிந்து கொள்ளும்போதுதான் அதிலிருந்து அவர்கள் விடுபடுவார்கள். 

கடவுளையும் மதத்தையும் எதிர்த்த பரப்புரைகள் மூலம் மட்டுமே மக்கள் அந்த நம்பிகைகளிலிருந்து விடுபடமாட்டார்கள். தங்களுடைய துயரங்களுக்கு எல்லாம்  காரணமாக இருக்கும் சுரண்டல் வர்க்கத்தினரையும் அவர்களுடைய ஆதிக்கத்தையும்  மக்கள் புரிந்து கொண்டு அவர்களுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் ஒன்று திரண்டு விடுதலை பெறும்பொழுது மட்டுமே அவர்கள் மதத்திலிருந்தும் கடவுளிடமிருந்தும் விடுபடுவார்கள். ஆளும் சுரண்டும் வர்க்கத்தினருக்கு எதிரான போராட்டத்தில் மத அடையாளங்களைக் கடந்து மக்கள் ஒன்றிணையும்போதுதான் புதிய பாட்டாளி வர்க்கக்  கலாச்சாரம் தோன்றும். இத்தகைய புரிதலுடன் மக்களை அணி திரட்டுவதன் மூலமே சமூக மாற்றத்தில் அக்கறை கொண்ட கம்யூனிஸ்டுகள் மக்களை மத அடிப்படைவாதிகளின் பிடிப்பிலிருந்து விடுவிக்க முடியும்.

                                                                       

                                                 -   சோசலிசத் தொழிலாளர் இயக்கம். 

Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட