Skip to main content

தொழிலாளர்கள் நலனில் அக்கறையற்ற தமிழ்நாடு அரசும் தொழிற்சங்கத் தலைமைகளும் !

 இந்திய அரசினால் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டு 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நான்கு புதிய சட்டத்தொகுப்புகளாக மாற்றப்பட்டன. இந்த சட்டத் திருத்தங்களுக்கு எதிராகத்  தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் தங்கள் எதிர்ப்புகளைப் பலவகைகளில் தெரிவித்து வந்தாலும் இந்திய அரசோ புதிய தொழிலாளர் விரோதச்  சட்டங்களை நிறைவேற்றியதோடு அதனை நடைமுறைப்படுத்தும் வேலையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.

அந்த வகையில் மாநில அரசுகள் இந்தச் சட்டங்களையொட்டி மாநில அளவில் அதற்கான விதிமுறைகளை வகுக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசின் உத்தரவையொட்டி அனைத்து மாநில அரசுகளும் அதற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கின்றன.

தமிழ்நாட்டிலும், மாநில அரசானது மூன்று சட்டத் தொகுப்புகளுக்கான   (ஊதிய சட்டத் தொகுப்பு, பணியிடப் பாதுகாப்பு ஆரோக்கியம் மற்றும் பணிநிலைமைகள் குறித்த சட்டத்தொகுப்பு, தொழில் உறவுகள் சட்டத்தொகுப்பு) விதிமுறைகளை ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியிட்டிருக்கின்றது. இதன் மீதான கருத்துகள், ஆலோசனைகள், ஆட்சேபனைகளை  45 நாட்களுக்குள் தெரிவிக்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கின்றது.


ஆனால், இந்த விதிமுறைகள் அனைத்துத்  தொழிலாளர்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் தாய் மொழியான தமிழில் இல்லை. பெரும்பாலான தொழிலாளர்கள் புரிந்துகொள்ள முடியாத வகையில் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சட்டத் துறையில் உள்ளவர்களே புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அதிகாரவர்க்கத்தினால் ஆங்கிலத்தில் தயாரிக்கப்படும் அரசு ஆணைகள் எப்பொழுதும் சிக்கலான வாக்கியங்களையும், சொற்றொடர்களையும் கொண்டிருக்கும்.

இந்த நிலையில் குறைந்த அளவே படிப்பறிவு கொண்ட தொழிலாளர்களால்  அந்த அரசாணையைப் படித்துப் புரிந்து கொண்டு ஆலோசனைகளும் கருத்துகளும், ஆட்சேபனைகளும் எப்படித் தெரிவிக்க முடியும்? தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு அரசாக இருந்தால் அரசாணையைத் தாய் மொழியில் கொண்டு வந்திருக்க வேண்டாமா? அதுவும்எங்கும் தமிழ்’,  ‘எதிலும் தமிழ்’  எனக் கூறிக் கொள்ளும் கட்சியின் தலைமையின் கீழ் உள்ள  அரசு, ‘தமிழினத் தலைவரின் வாரிசுகளின் அரசுஎனக் கூறிக் கொள்ளும் ஒரு அரசு ஏன் பாமரர்கள் புரிந்து கொள்ள முடியாத ஒரு அந்நிய மொழியில் அரசாணையைக் கொண்டு வர வேண்டும்? அப்படியானால் அரசின் உண்மையான நோக்கம் என்னவாக இருக்கும்? தொழிலாளர்கள் இந்தச் சட்டத்தைப் படித்துப் புரிந்து கொண்டு, அதற்கு எதிரான கருத்துகளை, ஆட்சேபனைகளை முன் வைத்துவிடக் கூடாது கூடாது என்பதைத் தவிர அதன் நோக்கம் வேறு எதுவாக இருக்க முடியும்? தொழிலாளர்கள் மத்தியிலிருந்து எந்தவிதமான ஆட்சேபனைகளும் எதிர்ப்பும் இல்லை எனக் கூறி சட்டத்தை எளிதாக நிறைவேற்றி விடலாம் இல்லையா?

அரசு மட்டும் அல்லாமல்,  இங்குள்ள தொழிற்சங்கத் தலைமைகளும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டதாக இல்லை. எந்தத் தொழிற்சங்கத் தலைமையும் அந்தச் சட்ட முன் வரைவைத் தமிழில் கொண்டு வர வேண்டும் எனக் கோரவில்லை. தொழிலாளர்கள் புரிந்துக் கொள்ளும் வகையில் தமிழில் சட்ட முன் வரைவைக் கொண்டு வந்து அதைத் தொழிலாளர்கள் மத்தியில் வைத்து விவாதித்து, அந்தச் சட்டத்த்தினால் தொழிலாளர்களுக்கு விளையப்போகும் பாதகமான விசயங்களைப் பற்றிய விழிப்புணர்வைத் தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்க வேண்டும் என்ற அக்கறை சிறிதும் அந்தத் தொழிற்சங்கத் தலைமைகளுக்கு இல்லை.


தனது அரசியல் இலாபத்திற்காக வேளாண் சட்டங்களைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றிய தமிழக அரசு தொழிலாளர் சட்டத்திருத்தங்களைத் தமிழ்நாட்டில் கொண்டு வர முடியாது என்ற தீர்மானம் இயற்றாமல் இந்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு ஒத்து ஊதுகின்றது. அதன் மூலம் தான் முதலாளிய வர்க்கத்திற்கான அரசுதான் என்பதை அப்பட்டமாக ஒத்துக் கொள்கிறது.

இந்திய அரசு தொழிலாளர் சட்டங்களை இயற்றியபொழுது அதனைத் தொழிலாளர்களிடம் கொண்டு சென்று அவர்களை அணிதிரட்டிப் பரந்துபட்ட போராட்டங்களை கட்டியமைக்காமல் பெயரளவிற்கு அறிக்கைகளை மட்டும் விட்டுத் தங்கள் பாட்டாளி வர்க்கக் கடமைகளை ஆற்றி விட்டதாகத்  தொழிற்சங்கத் தலைமைகள் திருப்தி அடைந்து விட்டன.  இவர்களின் சந்தர்ப்பவாதப் போக்கைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மோடி அரசு கடுமையான எதிர்ப்புகள் எதுவுமில்லாமல் தொழிலாளர் விரோதச் சட்டங்களை தடலாடியாக நிறைவேற்றியது.

அதேபோன்று தமிழக அரசு தற்பொழுது கொண்டு வந்துள்ள விதிமுறைகள் குறித்துத் தொழிலாளர்களிடம் தொழிற்சங்கத் தலைமைகள் கொண்டு சென்று  பரந்துபட்ட விவாதங்களை நடத்தவில்லை. தொழிலாளர் நலன்களுக்கு எதிரான சட்டவிதிகளை எதிர்த்துத் தொழிலாளர்களை அணி திரட்டவில்லை.  

இப்படி ஒரு சட்ட விதிமுறைகள் அரசால் வெளியிடப்படட்டதையே தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சங்கத் தலைமைகள் மூடிமறைத்துள்ளன. இடதுசாரிக் கட்சிகளின் தலைமையில் உள்ள தொழிற்சங்கத் தலைமைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

தொழிலாளர்களின் நலனில் அக்கறையற்ற இத்தகைய தொழிற்சங்கத் தலைமைகளின் பிடியிலிருக்கும் தொழிலாளர்கள் அவர்களின் சந்தர்ப்பவாதப் போக்கிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு பாட்டாளி வர்க்கமாய் ஓர் அணிதிரள வேண்டும்.

தமிழக அரசு வெளியிட்டிருக்கும் தொழிலாளர் சட்டவிதிமுறைகளை அனைத்துத் தொழிலாளர்களும், புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் வெளியிட வேண்டும் என்றும், அதுவரை இந்தச் சட்ட விதிமுறைகளை இறுதி செய்வதை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும்.

-                                                                                                                                                       சோசலிசத் தொழிலாளர் இயக்கம்.





Comments

  1. சோசலிச தொழிலாளர் இயக்கம் குறிப்பிட்டிருப்பது போல, தமிழக அரசு பெரு முதலாளிகளுடைய நலனைப் பாதுகாப்பதற்காகவே இந்த தொழிலாளர் விரோத தொகுப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது. தமிழக அரசு இந்த தொகுப்புச் சட்டங்களுக்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென பல்வேறு தொழிற் சங்கங்கள், தமிழக அரசாங்கத்தைக் கேட்டிருந்துங்கூட அவற்றை தமிழக அரசு ஒரு பொருட்டாகவோ விவாதப் பொருளாகவோ எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்திருக்கிறது. மேலும் இந்த தொகுப்புச் சட்டம் குறித்த ஆணையை தமிழக அரசு தமிழில் வெளியிட வேண்டும். மேலும் அது குறித்து தொழிலாளர்களிடையே விவாதிக்கவும், கருத்துக்களை அரசுக்கு அனுப்பி வைக்கவும் குறைந்தபட்ச மாக 3 மாதங்கள் தரப்பட வேண்டும் என்று எல்லா தொழிற் சங்கங்களும் ஒரு சேர கோர வேண்டும். எல்லா தொழிற் சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த தொகுப்புச் சட்டங்களுக்கு எதிராக ஒரு பரந்துபட்ட போராட்டத்தை மேற் கொள்ள வேண்டும். பெரு முதலாளி வர்க்கத்தின் நலன்களையொட்டி எல்லா முதலாளித்துவ கட்சிகளும் எப்படி செயல்படுகிறார்கள் என்பதற்கு இந்த தொழிலாளர் விரோத தொகுப்புச் சட்டங்கள் பற்றிய அவர்களுடைய ஆதரவே அப்பட்டமான சாட்சியாகும். தொழிலாளி வர்க்கம் ஒன்று திரண்டு இந்த தொகுப்புச் சட்டத்தை கிழித்தெறிய போராட வேண்டும். -- தொழிலாளர் ஒற்றுமை இயக்கம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட