Skip to main content

ஆளும் வர்க்கமும், ஆளும் கட்சிகளின் ஏமாற்றுச் சித்து வேலைகளும்!

பாஜகவும், அதன் சங்பரிவாரங்களும் தொடர்ந்து மத நச்சுக் கருத்துகளைப் பரப்புவதும், சிறுபான்மை மதத்தினரின் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அச்சத்தில் வைத்திருப்பதும், பெரும்பான்மை இந்து மதத்தை ஆதிக்க அடையாளமாகப் பயன்படுத்துவதுமாகவும் செய்து வருகின்றன. மேலும், வரலாற்றைத் திரிப்பதும், அறிவியலுக்கு எதிராகப் போலி அறிவியலைப் பரப்புவதும், இதன் மூலம் தன்னுடைய மதரீதியிலான ஆதிக்கத்தை வலுப்படுத்தவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.

இந்திய முதலாளிய ஆளும் வர்க்கத்தின் அகோரப் பசிக்காக அனைத்து வளங்களையும், செல்வங்களையும் தாரை வார்க்கவும், வரைமுறையின்றி, கேள்விக்கிடமின்றித் தொழிலாளர்களைச் சுரண்டவும் பல்வேறு வழிவகைகளைச் செய்துக் கொடுத்து வருகிறது பிஜேபி அரசு, இதனால் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் கடுமையான நெருக்கடிகளைப் பற்றி மக்கள் சிந்திக்காமல் தடுப்பதற்காக  அவர்களை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிரித்து வைக்கவும், ஒருவருக்கொருவரை எதிரியாக்கி மோதவிட்டு அதன் மூலம் அவர்களிடையே வர்க்க ஒற்றுமை ஏற்பட்டு விடாமலும் பார்த்துக் கொள்கிறது.

அந்த வகையில் தற்பொழுது பிஜேபி கர்நாடகாவில் எடுத்துள்ள ஆயுதம் தான் விநாயகர் சதுர்த்தி. இன்னும் ஒன்பது மாதங்களில் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த மத அடையாள ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளது.

கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும், முழுச் சுதந்திரத்துடன் வழக்கம் போலக் கொண்டாடலாம் என்றும் கர்நாடகக் கல்வித்துறை அமைச்சர் பி சி நாகேஷ் அறிவித்துள்ளார்.

இந்திய அரசு மதச் சார்பற்ற அரசு என்று கூறிக் கொண்டாலும் கூட இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அரசு விழாக்களிலும், அலுவலகங்களிலும் இந்து மதச் சடங்குகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிராக முற்போக்குச் சக்திகள் சட்டப்படியாக தொடர்ந்து போராடி வந்தாலும், பெரும்பாலான இடங்களில் அவை நீடித்து வருகின்றன.

ஆளும் கட்சிகள் மக்களிடையே மத உணர்வுகளை ஊட்டி அதன் மூலம் தங்களுடைய முதலாளிய வர்க்கச் சார்பையும், உழைக்கும் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் மூடிமறைக்கப் பல்வேறு வழிகளைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத் தான் கர்நாடகாவில் கல்வித்துறை அமைச்சர் கல்விக் கூடங்களில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடத் தடையில்லை எனக் கூறி அதனைக் கொண்டாடுவதற்கு மறைமுக அழைப்பு விடுத்ததாகும். விநாயகர் சதுர்த்தி என்பது இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய ஆயுதமாக விளங்கியது எனக் கூறி அதற்கு ஒரு தேச பக்தக் கதையை உள்நுழைக்கிறார். அதே சமயத்தில் பிற மத பண்டிகைகளுக்குக் கல்விக் கூடங்களில் இடமில்லை எனக் கூறுகிறார்.

கடந்த ஆண்டு இறுதியிலும், இந்த ஆண்டுத் தொடக்கத்திலும் எழுந்த ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சனையில் இதேக் கல்வித்துறை அமைச்சர் கல்விக் கூடங்களில் மத அடையாளங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று கூறினார். கர்நாடக அரசும், கல்விக் கூடங்களில் எந்த மத அடையாளங்களையும் அனுமதிக்க முடியாது எனப் பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அம்பேத்கரின் கூற்றை   நீண்ட மேற்கோளாகக் காட்டிக் கல்விக் கூடங்களில் மத அடையாளங்கள் அனுமதிக்க முடியாது என மார்ச் 15 ஆம் தேதி தீர்ப்பளித்தது. கர்நாடக அரசின் இந்தச் செயல்பாடுகள் எல்லாம், மதச் சார்பின்மைக்கான முன்னெடுப்புகள் என்று கருதினால் அது முட்டாள்தனமாகும்.

அவர்களின் நோக்கம் சிறுபான்மை மதத்தினர், அதுவும் குறிப்பாக முஸ்லீம் மக்கள் அரசு சார்ந்த இடங்களில் மத அடையாளங்களைப் பின்பற்றுவதைத் தடுப்பது என்பது தான். மற்றபடி, பெரும்பான்மை இந்து மக்களுக்கு மத அடிப்படையிலான சலுகைகளை வழங்குவது, மத அடையாளங்களை அரசு சார்ந்த இடங்களில் பின்பற்ற அனுமதிப்பது மற்றும் அதனைத் தானே திட்டமிட்டு ஊக்குவிப்பது என்பது தான் பிஜேபி-யின் உண்மையான நோக்கம்.

இந்து மத அடிப்படைவாதிகளின் இந்துத்துவ அடையாளச்  செயல்பாடுகளை ஒரு வாய்ப்பாகக் கொண்டு முஸ்லீம் மத அடிப்படைவாதிகளும் தங்கள் மதக் கருத்தியல்களைக் கல்விக் கூடங்களில் பரப்புவதற்கு முயற்சி செய்கின்றனர். கர்நாடகா வக்பு வாரியத் தலைவர் ஷபி ஷாதி, முஸ்லீம் மாணவர்கள் தினந்தோறும் வழிபாடு செய்வதற்குக் கல்விக் கூடங்களில் தனியான இடம் ஒதுக்க வேண்டும், முஸ்லீம் பண்டிகைகளைக் கொண்டாட அனுமதிக்க வேண்டும், இஸ்லாமிய மதக் கருத்துக்களைப் போதனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை இந்து மக்களின் வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதற்கான பாஜகவின் சூழ்ச்சி தான் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டத்திற்கான அறிவிப்பாகும். சிறுபான்மை முஸ்லீம் மக்கள் மீது மத வெறுப்புகளைக் கட்டவிழ்த்து விட்டு அதன் மூலம், இந்து மக்களைத் தன் பக்கம் இழுத்து பெரும்பான்மையாக உள்ள அவர்களின் வாக்குகளைப் பெற  பாஜக செய்யும் மலிவான தந்திரம் தான் இது. அதன் ஒரு பகுதியாகவே, காசி யாத்திரைக்குச் செல்லும் இந்துக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயை மானியமாக வழங்குவதைக் கடந்த ஜூன் மாதம் முதல் அமல்படுத்தி வருகின்றது கர்நாடக பாஜக அரசு.

ஹஜ் பயணத்தின் மூலம் ஏர் இந்தியா நிறுவனம் அதிக இலாபத்தை ஈட்டி வந்ததால், தனியார் விமான நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனால், தனியார் விமான நிறுவனங்களின் இலாபத்தைப் பெருக்கவும், இந்து மத அடிப்படைவாதிகளின் நன்மதிப்பை அதிகரித்துக் கொள்ளவும் முஸ்லீம்களுக்கு ஹஜ் பயணத்திற்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை 2018 இல் மோடி அரசு ஒழித்துக் கட்டியது. ஆனால், கும்பமேளா, மானோசரோவர் யாத்திரை ஆகியவற்றிற்கு இந்திய அரசு தொடர்ந்து மானியங்களை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும், கடந்த மார்ச் மாதத்தில் கர்நாடகாவின் ஷிவ்மோகா மற்றும் காவ் பகுதியில் நடைபெற்ற இந்து மதப் பண்டிகைகளில் முஸ்லீம் வியாபாரிகளுக்குக் கடைகள் ஒதுக்கக் கூடாது எனக் கூறி இந்துத்துவ அமைப்புகள் கோவில் நிர்வாகக் கமிட்டிகளை அச்சுறுத்தி, அவர்களே (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு) கடைகளை ஒதுக்கும் முடிவை எடுத்துச் செயல்படுத்தினர்.

மத்தியில் மோடி அரசுநான் இதற்குக் கொஞ்சமும் சளைத்தவனல்ல எனக் கூறி 75வது  சுதந்திர தின நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் அடிபணிந்து மன்னிப்புக் கேட்ட ஆர்எஸ்எஸ் இன் நிறுவனர் சாவர்க்கரை சுதந்திரத் தியாகியாகச் சித்தரித்து வரலாற்றைத் திரித்து வருகின்றது. தொடர்ந்து வரலாற்றைத் திரிப்பதும், அறிவியலுக்கு எதிராக மூடநம்பிக்கை கருத்துகளை பரப்புவதும், போலி அறிவியல் கருத்துகளைப் பரப்புவதும் எனச் சமூகத்தைப் பின்னோக்கிக் கொண்டு செல்லப் பார்க்கிறது.

கடுமையான சுரண்டலும் பெரும் ஏற்றத்தாழ்வும் நிலவி வரும் சமூகத்தில், பெரும் துன்பங்களிலும் துயரங்களிலும் உழன்று வரும் மக்களை பொய்யான வாக்குறுதிகளை அளித்தும் சில்லறைச் சீர்த்திருத்தங்களைச் செய்தும் ஆளும் வர்க்கத்தின் ஏஜண்டுகளான முதலாளியக் கட்சிகள் ஏமாற்றி வருகின்றன; அடிப்படையான பிரச்சனைகளிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்குச் சாதி மத அடையாளங்களைப் பயன்படுத்துதல் என்று பல்வேறு வகைகளில் ஆளும் கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. இதற்கு எந்தக் கட்சிகளும் விதி விலக்கல்ல என்பதைத் தொடர்ந்து அனுபவப்பூர்வமாக மக்கள் உணர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக முதலாளியக் கட்சிகள் செய்து வரும் பல்வேறு ஏமாற்றுச் சித்து வேலைகளையும், மக்கள் மீது தொடுத்து வரும் ஜனநாயக விரோதச் செயல்களையும் அம்பலப்படுத்துவதும், அதன் மூலம் மக்களிடத்தில் அரசியல் பற்றிய விழிப்புணர்வூட்டி அவர்களை ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அணி திரட்ட வேண்டியதுமான மாபெரும் கடமை வர்க்க உணர்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு இன்று இருக்கிறது.

குமணன்

சோசலிசத் தொழிலாளர் இயக்கம்


Comments

  1. பல்வேறு வகைகளில் ஆளும் கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. இதற்கு எந்தக் கட்சிகளும் விதி விலக்கல்ல என்பதைத் தொடர்ந்து அனுபவப்பூர்வமாக மக்கள் உணர்ந்து வருகின்றனர்.
    Is it really so.i doubt people have realised.

    ReplyDelete
    Replies
    1. மக்களுக்கு மாற்று வழி தெரியாதால் வேறு வழியின்றி கட்சிகளை மாற்றி மாற்றித் தேர்ந்தெடுக்கின்றனர். சரியான அரசியல் மாற்று இருக்குமானால் அதன் பின் அணி திரள்வார்கள்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட