Skip to main content

ஆளும் வர்க்கமும், ஆளும் கட்சிகளின் ஏமாற்றுச் சித்து வேலைகளும்!

பாஜகவும், அதன் சங்பரிவாரங்களும் தொடர்ந்து மத நச்சுக் கருத்துகளைப் பரப்புவதும், சிறுபான்மை மதத்தினரின் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அச்சத்தில் வைத்திருப்பதும், பெரும்பான்மை இந்து மதத்தை ஆதிக்க அடையாளமாகப் பயன்படுத்துவதுமாகவும் செய்து வருகின்றன. மேலும், வரலாற்றைத் திரிப்பதும், அறிவியலுக்கு எதிராகப் போலி அறிவியலைப் பரப்புவதும், இதன் மூலம் தன்னுடைய மதரீதியிலான ஆதிக்கத்தை வலுப்படுத்தவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.

இந்திய முதலாளிய ஆளும் வர்க்கத்தின் அகோரப் பசிக்காக அனைத்து வளங்களையும், செல்வங்களையும் தாரை வார்க்கவும், வரைமுறையின்றி, கேள்விக்கிடமின்றித் தொழிலாளர்களைச் சுரண்டவும் பல்வேறு வழிவகைகளைச் செய்துக் கொடுத்து வருகிறது பிஜேபி அரசு, இதனால் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் கடுமையான நெருக்கடிகளைப் பற்றி மக்கள் சிந்திக்காமல் தடுப்பதற்காக  அவர்களை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிரித்து வைக்கவும், ஒருவருக்கொருவரை எதிரியாக்கி மோதவிட்டு அதன் மூலம் அவர்களிடையே வர்க்க ஒற்றுமை ஏற்பட்டு விடாமலும் பார்த்துக் கொள்கிறது.

அந்த வகையில் தற்பொழுது பிஜேபி கர்நாடகாவில் எடுத்துள்ள ஆயுதம் தான் விநாயகர் சதுர்த்தி. இன்னும் ஒன்பது மாதங்களில் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த மத அடையாள ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளது.

கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும், முழுச் சுதந்திரத்துடன் வழக்கம் போலக் கொண்டாடலாம் என்றும் கர்நாடகக் கல்வித்துறை அமைச்சர் பி சி நாகேஷ் அறிவித்துள்ளார்.

இந்திய அரசு மதச் சார்பற்ற அரசு என்று கூறிக் கொண்டாலும் கூட இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அரசு விழாக்களிலும், அலுவலகங்களிலும் இந்து மதச் சடங்குகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிராக முற்போக்குச் சக்திகள் சட்டப்படியாக தொடர்ந்து போராடி வந்தாலும், பெரும்பாலான இடங்களில் அவை நீடித்து வருகின்றன.

ஆளும் கட்சிகள் மக்களிடையே மத உணர்வுகளை ஊட்டி அதன் மூலம் தங்களுடைய முதலாளிய வர்க்கச் சார்பையும், உழைக்கும் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் மூடிமறைக்கப் பல்வேறு வழிகளைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத் தான் கர்நாடகாவில் கல்வித்துறை அமைச்சர் கல்விக் கூடங்களில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடத் தடையில்லை எனக் கூறி அதனைக் கொண்டாடுவதற்கு மறைமுக அழைப்பு விடுத்ததாகும். விநாயகர் சதுர்த்தி என்பது இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய ஆயுதமாக விளங்கியது எனக் கூறி அதற்கு ஒரு தேச பக்தக் கதையை உள்நுழைக்கிறார். அதே சமயத்தில் பிற மத பண்டிகைகளுக்குக் கல்விக் கூடங்களில் இடமில்லை எனக் கூறுகிறார்.

கடந்த ஆண்டு இறுதியிலும், இந்த ஆண்டுத் தொடக்கத்திலும் எழுந்த ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சனையில் இதேக் கல்வித்துறை அமைச்சர் கல்விக் கூடங்களில் மத அடையாளங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று கூறினார். கர்நாடக அரசும், கல்விக் கூடங்களில் எந்த மத அடையாளங்களையும் அனுமதிக்க முடியாது எனப் பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அம்பேத்கரின் கூற்றை   நீண்ட மேற்கோளாகக் காட்டிக் கல்விக் கூடங்களில் மத அடையாளங்கள் அனுமதிக்க முடியாது என மார்ச் 15 ஆம் தேதி தீர்ப்பளித்தது. கர்நாடக அரசின் இந்தச் செயல்பாடுகள் எல்லாம், மதச் சார்பின்மைக்கான முன்னெடுப்புகள் என்று கருதினால் அது முட்டாள்தனமாகும்.

அவர்களின் நோக்கம் சிறுபான்மை மதத்தினர், அதுவும் குறிப்பாக முஸ்லீம் மக்கள் அரசு சார்ந்த இடங்களில் மத அடையாளங்களைப் பின்பற்றுவதைத் தடுப்பது என்பது தான். மற்றபடி, பெரும்பான்மை இந்து மக்களுக்கு மத அடிப்படையிலான சலுகைகளை வழங்குவது, மத அடையாளங்களை அரசு சார்ந்த இடங்களில் பின்பற்ற அனுமதிப்பது மற்றும் அதனைத் தானே திட்டமிட்டு ஊக்குவிப்பது என்பது தான் பிஜேபி-யின் உண்மையான நோக்கம்.

இந்து மத அடிப்படைவாதிகளின் இந்துத்துவ அடையாளச்  செயல்பாடுகளை ஒரு வாய்ப்பாகக் கொண்டு முஸ்லீம் மத அடிப்படைவாதிகளும் தங்கள் மதக் கருத்தியல்களைக் கல்விக் கூடங்களில் பரப்புவதற்கு முயற்சி செய்கின்றனர். கர்நாடகா வக்பு வாரியத் தலைவர் ஷபி ஷாதி, முஸ்லீம் மாணவர்கள் தினந்தோறும் வழிபாடு செய்வதற்குக் கல்விக் கூடங்களில் தனியான இடம் ஒதுக்க வேண்டும், முஸ்லீம் பண்டிகைகளைக் கொண்டாட அனுமதிக்க வேண்டும், இஸ்லாமிய மதக் கருத்துக்களைப் போதனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை இந்து மக்களின் வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதற்கான பாஜகவின் சூழ்ச்சி தான் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டத்திற்கான அறிவிப்பாகும். சிறுபான்மை முஸ்லீம் மக்கள் மீது மத வெறுப்புகளைக் கட்டவிழ்த்து விட்டு அதன் மூலம், இந்து மக்களைத் தன் பக்கம் இழுத்து பெரும்பான்மையாக உள்ள அவர்களின் வாக்குகளைப் பெற  பாஜக செய்யும் மலிவான தந்திரம் தான் இது. அதன் ஒரு பகுதியாகவே, காசி யாத்திரைக்குச் செல்லும் இந்துக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயை மானியமாக வழங்குவதைக் கடந்த ஜூன் மாதம் முதல் அமல்படுத்தி வருகின்றது கர்நாடக பாஜக அரசு.

ஹஜ் பயணத்தின் மூலம் ஏர் இந்தியா நிறுவனம் அதிக இலாபத்தை ஈட்டி வந்ததால், தனியார் விமான நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனால், தனியார் விமான நிறுவனங்களின் இலாபத்தைப் பெருக்கவும், இந்து மத அடிப்படைவாதிகளின் நன்மதிப்பை அதிகரித்துக் கொள்ளவும் முஸ்லீம்களுக்கு ஹஜ் பயணத்திற்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை 2018 இல் மோடி அரசு ஒழித்துக் கட்டியது. ஆனால், கும்பமேளா, மானோசரோவர் யாத்திரை ஆகியவற்றிற்கு இந்திய அரசு தொடர்ந்து மானியங்களை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும், கடந்த மார்ச் மாதத்தில் கர்நாடகாவின் ஷிவ்மோகா மற்றும் காவ் பகுதியில் நடைபெற்ற இந்து மதப் பண்டிகைகளில் முஸ்லீம் வியாபாரிகளுக்குக் கடைகள் ஒதுக்கக் கூடாது எனக் கூறி இந்துத்துவ அமைப்புகள் கோவில் நிர்வாகக் கமிட்டிகளை அச்சுறுத்தி, அவர்களே (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு) கடைகளை ஒதுக்கும் முடிவை எடுத்துச் செயல்படுத்தினர்.

மத்தியில் மோடி அரசுநான் இதற்குக் கொஞ்சமும் சளைத்தவனல்ல எனக் கூறி 75வது  சுதந்திர தின நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் அடிபணிந்து மன்னிப்புக் கேட்ட ஆர்எஸ்எஸ் இன் நிறுவனர் சாவர்க்கரை சுதந்திரத் தியாகியாகச் சித்தரித்து வரலாற்றைத் திரித்து வருகின்றது. தொடர்ந்து வரலாற்றைத் திரிப்பதும், அறிவியலுக்கு எதிராக மூடநம்பிக்கை கருத்துகளை பரப்புவதும், போலி அறிவியல் கருத்துகளைப் பரப்புவதும் எனச் சமூகத்தைப் பின்னோக்கிக் கொண்டு செல்லப் பார்க்கிறது.

கடுமையான சுரண்டலும் பெரும் ஏற்றத்தாழ்வும் நிலவி வரும் சமூகத்தில், பெரும் துன்பங்களிலும் துயரங்களிலும் உழன்று வரும் மக்களை பொய்யான வாக்குறுதிகளை அளித்தும் சில்லறைச் சீர்த்திருத்தங்களைச் செய்தும் ஆளும் வர்க்கத்தின் ஏஜண்டுகளான முதலாளியக் கட்சிகள் ஏமாற்றி வருகின்றன; அடிப்படையான பிரச்சனைகளிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்குச் சாதி மத அடையாளங்களைப் பயன்படுத்துதல் என்று பல்வேறு வகைகளில் ஆளும் கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. இதற்கு எந்தக் கட்சிகளும் விதி விலக்கல்ல என்பதைத் தொடர்ந்து அனுபவப்பூர்வமாக மக்கள் உணர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக முதலாளியக் கட்சிகள் செய்து வரும் பல்வேறு ஏமாற்றுச் சித்து வேலைகளையும், மக்கள் மீது தொடுத்து வரும் ஜனநாயக விரோதச் செயல்களையும் அம்பலப்படுத்துவதும், அதன் மூலம் மக்களிடத்தில் அரசியல் பற்றிய விழிப்புணர்வூட்டி அவர்களை ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அணி திரட்ட வேண்டியதுமான மாபெரும் கடமை வர்க்க உணர்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு இன்று இருக்கிறது.

குமணன்

சோசலிசத் தொழிலாளர் இயக்கம்


Comments

  1. பல்வேறு வகைகளில் ஆளும் கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. இதற்கு எந்தக் கட்சிகளும் விதி விலக்கல்ல என்பதைத் தொடர்ந்து அனுபவப்பூர்வமாக மக்கள் உணர்ந்து வருகின்றனர்.
    Is it really so.i doubt people have realised.

    ReplyDelete
    Replies
    1. மக்களுக்கு மாற்று வழி தெரியாதால் வேறு வழியின்றி கட்சிகளை மாற்றி மாற்றித் தேர்ந்தெடுக்கின்றனர். சரியான அரசியல் மாற்று இருக்குமானால் அதன் பின் அணி திரள்வார்கள்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...

தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் தொழிலாளர் வர்க்கமும்!

  இன்போசிஸ் நாராயணமூர்த்தி 19-11-2025 அன்று தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தொழிலாளர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியதோடு, மோடி அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் வேலை செய்வதாகவும் கூறினார். இதற்காக 9 -9 – 6 என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார், சீனாவில் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மனமுவந்து பாராட்டியதோடு இந்தியாவில் சட்டப்படியாக இதனை அமல்படுத்த வேண்டும் என்றார். அதன்படி தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வீதம், வாரத்திற்கு 6 நாள் என 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார். 2021இல் சீன அரசு 12 மணி நேர வேலையை சட்டவிரோதம் என அறிவித்தது. வேலை நேர அதிகரிப்பால் தொழிலாளர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பணிச்சுமை காரணமாக தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது. ஆனால், சீனாவில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்ளாத இன்போசிஸ் நாராயண மூர்த்தி வேலை நேரத்தை ...