Skip to main content

எது வன்முறை? எவர் வன்முறையாளர்?

ஒரு நபர் () குழுவுக்கு எதிராக காயம், மரணம், உளவியல் தீங்கு, வளர்ச்சியின்மை () இழப்பு இவற்றை ஏற்படுத்தும்படியாக, இவை நிகழும் வாய்ப்புக்களை உருவாக்கும்படியாக உண்மையாகவோ () அச்சுறுத்தும்படியாகவோ உடல் வலிமை () அதிகாரத்தை வேண்டுமென்றே பயன்படுத்துவது வன்முறையாகும்இது வன்முறை பற்றிய உலக சுகாதார அமைப்பின் வரையறை.

பொதுவெளியில் வன்முறை என்பதற்கான சாதாரணப் புரிதல் என்னவாக இருக்கிறது? ஒரு மனிதனை சிலர் சேர்ந்து தாக்குவது, சிலரை பலர் தாக்குவது, அதிகாரத்தின் வழியாக கட்டுக்குள் வைப்பது, ஆக்கிரமிப்பது. இதுதான் பிரதானமான சமூகப் புரிதல். இதை வரலாற்று வழியிலும் சற்று விரிவாக, ஆழமாக பார்க்க வேண்டியதிருக்கிறது. விலங்கினங்கள் தன் உணவுக்கும் வேட்டையாடுவதற்கும், தனது வசிப்பிடத்தில் வேறு விலங்குகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் சக விலங்குகள் மேல் வன்முறையை மேற்கொள்ளும். இதுதான் வன்முறையின் ஆதிப் பருவமாக இருந்தது. இதை விலங்கின உணர்வு என்கிறோம்.

அதுவே, மனிதர்களின் வேட்டையில் வேறு வடிவம் எடுத்தது. அப்போது அது தாய்வழிச் சமூகம். தங்கள் உணவிற்காக விலங்குகளின் மீதான வேட்டையைத்தான் சமூகம் பெரிதும் சார்ந்திருந்தது. தனது தேவைக்கு மிகுதியான எதுவும் அங்கு வேட்டையாடப்பட்டதில்லை; அப்படி சேமித்து பின்பு பயன்படுத்தும் அறிவும் அன்றைக்கு அவனுக்கில்லை. அடிப்படையில் இது வன்முறைதான்; விலங்குகளின் மீதான வன்முறை. அந்த மனிதர்கள் தங்களுக்குள் வேட்டையை, வன்முறையை பிரயோகித்ததில்லை. அது காட்டின் விலங்கின உணர்ச்சியாக மட்டுமே நிலைத்திருந்தது. விலங்குகள் மட்டுமே ஒன்றையொன்று வேட்டையாடிக் கொண்டன. மனிதனுக்கு அது புராதனப் பொது உடைமைச் சமூகம்.

அதன் பிறகு தோன்றிய அனைத்து சமூகங்களும் தனியுடைமைச் சமூகங்களே. தனியுடமைச் சமூகத்தின் இருப்புக்கு முன் நிபந்தனையாக இருப்பதே வன்முறை அடிப்படையிலான அதிகார கட்டமைப்புத் தான். இங்கே தான் பலரை, அவர்களின் வாழ்க்கையை, உழைப்பை அடிமையாக்கிக் கொள்ளும் சிலராக தனிச்சொத்து மனிதர்கள் உருப்பெற்றதும், அவர்களின் அதிகாரத்தின் வழியாக பெரும்பான்மையான உழைக்கும் மக்களைச் சில வன்முறைக் கருவிகளின் வழியாகத் தங்களின் ஆதிக்கத்தில் இருத்திக் கொண்டதும் நிலைபெற்றது. உற்பத்திக் கருவிகளை உடைமையாகப் பெற்றவர்கள் தான் மற்றவர்களை அடிமைகளாக்கிக் கொள்வதற்காக அரசு, ஆயுதப்படை என்ற வன்முறைக் கருவிகளையும் உருவாக்கிக்கொண்டார்கள்.

சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பம் வரை இந்த வன்முறை குடிபுகுந்து கொண்டது. குடும்பத்தில் ஆணுக்குப் பெண் அடிமை என்பதான குடும்ப வன்முறையின் தொடக்க வடிவமாகவும் மாறியது.

தற்போதைய தனியுடமைச் சமூகம் முதலாளிகள், பெரும் நிலவுடைமையாளர்கள், கார்ப்பரேட்கள் என ஆதிக்கத் தரப்பும், தொழிலாளர்கள் ,சிறு வியாபாரிகள், வறிய, ஏழை விவசாயிகள், விவசாயக் கூலிகள் இதர அடித்தட்டினர் என்று அடிமையாக இருத்தி வைக்கப்பட்டுள்ள எதிர்த்தரப்புமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பே பெரும்பான்மையினரின் மீதான வன்முறை கட்டமைப்புதான். அளவியலில், தொகையில் அடிமையாக்கப்பட்ட தரப்பினர் பெரும்பான்மையிலிருப்பதால் சிறுபான்மைத் தரப்பு தன்னை, தன் சுரண்டலை நடத்தவும், நீட்டித்துக் கொள்ளவும், அதற்கு எதிராகத் திரளும் எதிர்ப்பை நசுக்கவும் நிலைத்த வன்முறைக் கட்டமைப்போடு இயங்குகிறது. தான் நினைக்கிற சட்டம் ஒழுங்கிற்குள், பொதுவில் அநீதியாக இருப்பதை தனது நியதியாக, வன்முறையின் அடிப்படையில் அமைந்துள்ள இந்தக் கட்டமைப்பை எதிர்ப்பதுதான் வன்முறை என வரையறுப்பதாகவுமே முதலாளித்துவ சமூகத்தின் நியதி இருப்புக் கொள்கிறது.

மூலதனச் சமூகமாக மேற்கொள்ளும் தவறுகள், இயற்கை அழிப்புகள், உழைப்புச் சுரண்டல்கள், வரிகள், அபராதங்கள் இந்தத் தவற்றின் வடிவமாக அமைந்துள்ள இதன் வரையறைகள் தனிமனிதத் தவறுகளை மட்டுமே தண்டிக்கிறது. இங்கே அறம் என்னவாக இருக்கிறது? வர்க்கமாகச் சேர்ந்து கொள்ளையடிப்பது தொழிலியல் நியதி; தனிமனிதன் கொள்ளையடிக்கிறபோது குற்றமாக்கப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். பெரும்பான்மை சமூகத்தின் மீதான கூட்டுக் கொள்ளை அறம். முதலாளித்துவத்துக்கு எதிரான தனிமனித திருட்டு தண்டனைக்குரியது. எனவே நியதி, அறம், அமைதி, ஒழுக்கம் என்பதெல்லாம் இங்கு உடைமை வர்க்கச் சார்புடையதாக நிறுவப்பட்டிருக்கிறது. தங்களது சிறுபான்மையைப் பலமாக்கிக் கொள்ள பெரும்பான்மையாக உள்ள சமூகதைத் தொகுதிகளாக மதங்கள், சாதிகள், இனங்கள், தேசங்கள், கட்சிகள் என்று பிரித்துக் கூறுகளாக்கி அவை ஒன்றையொன்று எதிரெதிராக நிற்கும்படியாகவும் நிறுவிக் கொண்டிருக்கிறது முதலாளித்துவம்.

ஆதிக்கத்தின் சக்திகளாக ஆண்டைகள், மன்னர்கள், மந்திரிகள்,தலைவர்கள் என வெவ்வேறு பிருகிருதிகள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அவர்கள் தனியுடைமையின் தானாக்காரர்கள் தான். அவர்கள் தான் விலங்கின உணர்வை மனித சமூகத்திற்குள் கடத்தி வந்தவர்கள். தனியுடைமைக்கு முன் வரை விலங்குகளை வேட்டையாடியவர்கள் இப்போது சக மனிதர்களின் வேட்டைக்காரர்களாக பரிணாமம் பெற்றார்கள். சமூக வளர்ச்சி என்பது ஆதிக்க வளர்ச்சியாகவும் பரிணமித்தது. ஆதிக்கத்தின் ஒவ்வொரு பகுதியும், அலகும் தனித்தனியாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு பெயரளவில் எல்லோருக்கும் பொது என்று அறிவித்துக் கொண்டாலும் அனைத்துத் துறைகளும் தனிச்சொத்தைத் தற்காத்து அந்த சிலருக்கான கட்டமைப்பாக மாற்றும் முகமையாக தன்னை நிறுவிக்கொண்டது.

அரசு நிர்வாகம், நீதித்துறை, சட்டமியற்றும் சட்டமன்ற, பாராளுமன்றங்கள், இராணுவம், போலீஸ், உற்பத்தி உள்ளிட்ட பொருளாதார அலகுகள், அரசின் ஏனையத் துறைகள் என பல்கிப் பெருகியத் துறைகள் அந்த சில மனிதர்களுக்காக ஏற்படுத்திக் கொண்ட சேவைக்களங்களாக மாற்றம் பெற்றன.

இயற்கைப் பேரழிவை, அதன் ஆற்றலைக் கண்டு பயந்த மனிதன் பின்னர் வெப்பமாக, ஒளியாக(சூரியன்), நீராக(மழை), நெருப்பாக இயற்கை அவனுக்குத் தரும் கொடைகளை எண்ணி அவற்றை வழிபட்டான். இயற்கை தான் மனித வழிபாட்டின் தொடக்கம். இயற்கையை மீமனிதனின் படைப்பாக்கி அந்த மீமனிதனைக் கடவுள் என்றது தனியுடைமைதான். மனிதர்களின் தொகுப்பை கட்டுக்குள் வைக்க கடவுளை ஒத்தவன் அரசன் என்றது அது. படைத்தவனோடு படைகொண்டவனை ஒப்புவைத்தது.

அதற்குப் பிறகான சமூக வளர்ச்சியில் அரசன் அமைச்சராகி தலைவன் ஆனான். கடவுள் வழிபாடு தலைமை வழிபாடாக பரிணமித்தது. தலைவன் பெரும் சமூகத்தின் பிரதிநிதி என்பதாக அறியப்பட்டான். அவன் முன்செல்லவும், இவர்கள் பின்தொடரவுமான தலைவர்களும், தொண்டர்களுமானது முதலாளித்துவ சமூகத்தின் அரசியல். வேறு வேறு கட்சிகளில் இவர்கள் திரண்டிருந்ததால் முரண்பட்ட இவர்களை மோதவிட்டுவிட்டு தலைவர்களை(கட்சியை) தன் கைக்குள் வைத்துக்கொண்டு தன் கொள்ளையைத் தொடர்ந்தது முதலாளித்துவம். தனக்கு எதிரானவனை தானே தேர்ந்து கொண்டதாக தனிமனிதனும் அவன் சார்ந்த பெரும்பான்மைச் சமூகமும் நம்ப வைக்கப்பட்டனர். ஆக நம்பிக்கைத் துரோகத்தையும் கூடுதலாக தனியுடைமை தனது சொத்தாக்கிக் கொண்டது.

தலைவிதி, முன்னோர் வினைப்பயன், செய்த பாவம் என்பதான கற்பிதங்களும் இவர்களின் மூளையில் அடித்துச் செருகப்பட்டது. ஆக கடவுள் வழி உளவியலாகவும், உழைப்பின் வழி உடலியலாகவும், உழைப்பு தந்த விளைச்சல் வழி பொருளியலாகவும், வன்முறை எனும் சட்டகத்துக்குள் அரசியலாகவும் நவீன அடிமை வாழ்க்கை பல்முனைச் சிறைச்சாலையாக்கப்பட்டிருக்கிறது.

இயற்கை இந்தச் சிலரின் கைகளில் சிக்கிய பின்புதான் இவர்களுடைய அரசின் சரக்காகிப் போனது. தாரளமான தண்ணீர் - புட்டியிலும், உருளையிலும் விற்பனைச் சரக்கானது. இப்படியே தான் ஆற்று மணல், கல், மலைக்குவாரிகள், இயற்கையான காற்றையும் விடாமல் காற்றாலைகள் என்று இயற்கை அனைத்தையும் விற்பனைச் சரக்காக்கி அந்தச் சிலருக்கான தனிச்சொத்தாக்கிக் கொடுக்கிறது அரசு. தேவைக்கு மிகுதியான எதுவும் வேட்டையாடப்படாத; அப்படி சேமித்துப் பயன்படுத்தும் அறிவும் இல்லாத வேட்டைச் சமூகத்தின் நியதியை மீறியதாக இப்போது வேட்டை வேறு வடிவமெடுத்தது. அந்தச் சிலர் தங்களின் வாழ்க்கையின் வேட்கைக்கும், துய்ப்பிற்கும் மட்டுமல்ல; தலைமுறை தலைமுறையான தங்களின் வாரிசுகளுக்கும் சேர்த்து வேட்டையாடினார்கள். அவர்களுக்குச் சேமித்து பயன்படுத்தும் அறிவையும், அறிவியலையும் வளர்ச்சியடைந்த முதலாளித்துவம் வழங்கியது. இவர்கள் வேட்டையின் வீரியம் பெருகப் பெருக வேட்டையாடப்பட்டவர்கள் இவர்களுக்கு மனிதப் பெயரிலிகள் ஆனார்கள்.

மனிதக் கூட்டமானது இவர்களைப் பொறுத்து ஆறறிவு, சிந்தனை என்பதெல்லாம் அற்ற உயிருள்ள சரக்கானார்கள். இப்படித்தான் வரலாற்றில் குண்டாந்தடிகள் செங்கோலாகியது. வீட்டுச் சிறைக்குள்ளிருந்து வெளியேறும் குழந்தைகளை பள்ளிச்சிறைக்குள் மாணவர்களாக்குவது, சாதிகள், மதங்கள், கட்சிகள் என்று மாறிமாறிச் சிறைக்கூடங்களுக்குள் கடத்துவதும் இந்த வன்முறைதான். சிரச்சேதம், குடிவிலக்கம், நாடு கடத்தல், சிறைச்சாலை என்று தண்டனை முறையும் நவீன வடிவமெடுத்தது.

இயற்கையைச் சொந்தம் கொண்டாடி அதை விற்று, பணமும் பார்த்துவிட்டு குற்றத்தை இழைத்த இந்தச் சிலர் தன்னை மறைத்துக்கொண்டு பொறுப்பை மட்டும் பொதுவாக மனிதர்கள் என்று பழி சுமத்தினார்கள். இதில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் இதே விஷயத்தை முன்வைத்தார்கள். மக்களுக்காக கடன் என்று சொல்லி வெளிநாட்டுக் கடன்களை வாங்கி அந்தச் சிலரை வளமாக்கிக் கொடுத்து, தங்களையும் வளமாக்கிக் கொண்டு கடன்களை பொதுமக்களுக்கானதாக்கி ஒவ்வொரு தலைக்கும் கடன்களைச் சுமையாக்கினார்கள்.

எவர் வன்முறையாளர்? அடுத்த வேளை உணவிற்கு வழிதேடிப் பரிதவிக்கும் எளியவர்களா? அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் செல்வத்தைச்சேர்த்து வைத்திருந்தும் இன்னமும் தேடிச் சுரண்டும் வலியரா? படித்த எல்லோருக்கும் வேலை கிடைக்கவில்லையெனில் அது கல்வியின் மீதான, படித்த இளைஞர்களின் மீதான வன்முறையில்லையா?

சமூகத்தின் முதலாளித்துவச் சிறுபன்மையினர் அனைத்து வகையான மருத்துவ தேவைகளையும் ஈடேற்றிக்கொள்ள முடிகிறபோது, சமூகத்துக்குத் தன் இடையறா உழைப்பின் மூலம் செல்வ வளங்களைத் தருகிற பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு மறுக்கப்படுவதாக, அல்லது எட்டாக் கனியாக அது இருப்பதென்பது அவர்கள் மீதான வன்முறையில்லையா? நகரிய வளர்ச்சி, சாலை விரிவாக்கம், ரியல் எஸ்டேட், தொழிற்சாலைகள், சுரங்கங்கள் என்று சமூகத்திற்குச் சொந்தமான வனத்தை, மலையை, விவசாயத்தை, தாதுவளத்தை கார்ப்பரேட்டுக்கும், தனியாருக்கும் தாரை வார்ப்பது வளர்ச்சியின் பெயரிலான வன்முறையில்லையா?

பல்லாயிரம் மக்களின் வாழ்க்கைப் பிழிவான சேமிப்பில் விளைந்த வங்கிப் பணத்தைத் தொழிற்கடன் எனும் பேரில் சூறையாடி அதைத் தள்ளுபடி எனும் பெயரில் எளியோரின் சேமிப்பை, அவர்களின் வாழ்க்கையையே தள்ளுபடியாக்கியது வங்கிகளின் வன்முறை இல்லையா? அப்படி மோசடி செய்பவர்களை வெளிநாட்டு விருந்தினர்களாக அனுப்பிவைக்கும் நாட்டின் ஆட்சியாளர்கள் தன் சொந்த குடிமக்களின் மேல் செலுத்தும் வன்முறை இல்லையா?

நாடு முழுக்க பல்லாயிரக்கணக்கானோரை விசாரணைக் கைதிகளாகவே பல்லாண்டுகள் சிறைக்குள் வைத்திருக்கும் நீதித்துறை மற்றொரு புறத்தில் கார்ப்பரேட்டு, பெரு நிறுவன, அரசியல் வழக்குகளில் உடனுக்குடன் தீர்ப்பு வாசிக்கும் அவசர, உடனடி கோர்ட்டுகளையும் உள்ளடக்கியிருப்பது என்ன முரண்? படிக்கிற மாணவர்கள் நாட்டின் எதிர்காலம் எனப்படுவோர் பேருந்தின் படிகளில் தொற்றிக்கொண்டும், ஜன்னல்களைப் பற்றிக்கொண்டும் உயிர் ஆபத்தில் பயணிக்கிறபோது 5 முதல் 10 பேர் பயணிக்கிற சொகுசுக் காரில் ஒற்றை ஆளாய் பயணம் செய்ய அனுமதிக்கிற அவலம் நன்முறையா? வன்முறையா? பொது விநியோகத் திட்டத்தில் எளிய மக்களுக்கு வழங்கப்படுகிற ஆதார உணவுப்பொருட்களை இலவசங்கள் என்று சொல்லி அதைத் தடுத்து நிறுத்தச் சொல்கிற ஆளும் கட்சிகள், அரசுகளை என்ன முறைக்குள் வைத்துப் பார்ப்பது?

மாநிலங்களின் சம வளர்ச்சிக்கு வித்திடாமல் அவைகளுக்கிடையிலான பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கிச் சீர்குலைத்தது, வாழ்வாதாரத்திற்காக தொழிலாளர் இடம்பெயரும் நிர்ப்பந்தத்தை உருவாக்கியது, வளர்ந்த பகுதிகளில் உள்ள முதலாளிகள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் உழைப்பை மலிவான விலைக்குச் சுரண்டுவது, புலம் பெயர் தொழிலாளரை கொத்தடிமைகளாக நடத்துவதை அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பது, அவர்களை உள்நாட்டுக்குள்ளேயே அகதிகளாக்கி எவ்வித உயிர்ப் பாதுகாப்புமற்ற சூழல்களில் இருத்துவது, அன்னியர்களால் ஆபத்து என்ற பெயரில் குட்டி முதலாளிய அரசியல் அமைப்புகள் தங்கள் அரசியல் இலாபத்திற்காகப் போராட்டங்களை நடத்தி புலம்பெயர் தொழிலாளரை இன்னும் வலுவாக அடிமைத்தனத்திலும் அச்சத்திலும் இருத்திவைப்பது, அந்தப் போராட்டங்களால் மக்கள் பிளவுபடுவதைத் தமக்குச் சாதமாக ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் கொள்வது - இவையனைத்தும் புலம்பெயர் தொழிலாளர் மீதான அக்கறையா? வன்முறையா?

அறிவை வளர்ப்பதாக அறிவித்துக்கொண்டு அறிஞர்களைக் கொல்வது, சிறைசெய்வது - மதங்கள் அன்பை மட்டுமே போதிப்பதாக சொல்லிக்கொண்டு மற்ற மதங்களைப் பின்பற்றும் மக்களை வெறி கொண்டு தாக்கி அழிப்பது - வரலாற்றில் சமண, புத்த, ஆசீவக, சிறு வழிபாட்டு மதங்கள் உட்பட சமீபத்திய கிருஸ்துவ, இஸ்லாமிய மத அழிப்பு நடைமுறை வரையிலும் ஆன அனைத்தும் நன்முறைகளா? மக்கள் பிரதிநிதிகளாக வென்றவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் சரி பாதியினர் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்கிறது அரசின் தரவுகள். இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கில்லை. இது என்னவகையான முறை?

இங்கிருந்து ஏற்றுமதியாகிற பொருட்களுக்கு சென்று சேர்கிறவரையும், அன்னியர்கள் இங்குவந்து தொழில்செய்து முதலீட்டைப் பலமடங்கு பெருக்கி எடுத்துச் செல்லவும் பாதுகாக்கிற இறையாண்மை - அயல்நாட்டிற்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளரைக் கைவிட்டுவிடுவது என்னமுறை? உயிரற்ற பொருளுக்கு, உடைமைக்கு கொடுக்கும் உத்திரவாதம் உயிருள்ள மனிதனுக்கில்லை என்பது வன்முறையல்லாமல் வேறென்ன? இருக்க இடமில்லாத தெருவோர மக்களின் தேசத்தில், இவர்களின் பிரதிநிதிகள் என்று பிரகடனப்படுத்திக்கொள்ளும் தலைவர்கள் பல நூற்றுவர் வசிக்கும் அளவிற் பெரியதான அரண்மனைகளில் (பழைய மாமன்னர்கள் வசித்தவை) கோலோச்சுகிறார்களே இது என்ன முறைமைக்குள் அடங்கும்? நூற்றுக்கணக்கான சேவகர்கள், பெரும் பெரும் தோட்டங்கள், எல்லா வாயில்களிலும் காத்திருக்கும் கார்கள் என வாழும் வரம்பற்ற வசதிகள் எந்த நியாயத்தில் இடம்பெறும்?

நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்த வன்முறை அமைப்பு எப்படி முடிவுக்கு வரும்? மக்களை கருத்தியல் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கான வேலைகள் வேகம்பெற வேண்டும். இந்த மக்கள் விரோத அமைப்பை விளக்கப்படுத்தி விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.

மருத்துவ முகாம்கள், சமபந்தி போஜனங்கள், அன்னதானங்கள், பொருளாதார நிவாரணங்கள், ரத்த தானங்கள், தேர்தல் முறைகள், நிவாரணத் திட்டங்கள், அடையாளப் போராட்டங்கள் இவைகள் சரியான மாற்றாக அமையுமா? இவைகள் தொண்டு சார்ந்த நிறுவனங்களாக (NGO க்கள்) வினையாற்றும் - மக்கள் எதிர்ப்பை மழுங்க வைக்கும் வழிமுறைகள் மட்டுமே.

பெரும்பான்மை உழைக்கும் மக்கள் சாதி, மதம், கட்சி என்று தங்களுக்குள்ளேயே போட்டியாளராக நிறுத்தியிருப்பதை உணர்ந்து, பொது எதிரியைப் புரிந்து முதலில் சாதி, மதம். கட்சி கடந்த மனிதராய் திரளவேண்டும். பெரும்பான்மையின் திரட்சியே முதல் வெற்றி என உணர்தல் வேண்டும். பல நூற்றாண்டுகளாக பல வடிவங்களிலும் வன்முறைகளை எதிர்கொண்டவர்கள் மக்கள். ஒடுக்குதலுக்கு ஆளாகி ஆளாகி அதன் நுணுக்கம் தெரிகிறபோது எதிரியின் மீதான அறிவு துலக்கம் பெற்றுவிடுகிறது. எனவே நடைமுறை () செய்முறை நுணுக்கம் தெரிந்தவர்களுக்கு வெளியிலிருந்து சித்தாந்த வழிகாட்டல் மட்டுமே தேவை.

இத்தகைய வன்முறைகளுக்கு எல்லாம் அடிப்படையாக இருக்கும் தனியுடைமைச் சமூக அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். இயற்கையை, தனிப்பட்ட உடமையை சிலரின் கைகளிலிருந்து விடுவிக்க வேண்டும். இதுவரையான மக்களின் உழைப்பினால் தனி உடைமையாகச் சிலரிடம் குவிந்திருக்கும் செல்வத்தை மீண்டும் சமூக உடைமையாக்க வேண்டும். அதுதான் வன்முறையின் அடிப்படையில் அமைந்துள்ள சமூக அமைப்புக்கு முடிவு கட்டும்.

                                                                                    -      பாவெல் சூரியன்

 

 

Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட