Skip to main content

கீதா அச்சகத்திற்குக் கொடுக்கப்படும் காந்தி அமைதி விருது - கோட்சேவுக்குக் கொடுக்கப்படும் விருது

உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கோரக்பூரில் உள்ள கீதா அச்சகத்திற்கு 2021 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருதை வழங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையில் உள்ள நடுவர் குழு ஜூன் 18 அன்று முடிவு செய்துள்ளது. காந்தி அமைதி விருதுக்கான பட்டயத்துடன் ஒரு கோடி ரூபாய் பண அன்பளிப்பும் கொண்டது.

“சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்காக அமைதி வழியிலும் பிற காந்திய வழிகள் மூலமும் கீதா அச்சகம் ஆற்றியுள்ள மிகச் சிறந்த பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது” என நடுவர் குழு அறிவித்துள்ளது. ‘அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் காந்திய வழியில் கீதா அச்சகம் ஆற்றியுள்ள சிறந்த பங்களிப்பை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக’ பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வரும் கீதா அச்சகம் காந்தி அமைதி விருதைப் பெற்றுக் கொள்வதாகவும், ஆனால் பண அன்பளிப்பான ஒரு கோடி ரூபாயை ஏற்றுக் கொள்ள மறுப்பதாகவும் அறிவித்துள்ளது.

கீதா அச்சகத்திற்கு காந்தி அமைதி விருதை வழங்கியதற்குக் காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பையும் விமர்சனத்தையும் தெரிவித்துள்ளது. காந்தி அமைதி விருதைக் கீதா அச்சகத்திற்கு அறிவித்துள்ளதைப் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கீதா அச்சகம் காந்தி அமைதி விருதைப் பெறுவதற்குத் தகுதி உள்ளதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள அதன் வரலாற்றையும் நோக்கத்தையும் அறிந்து கொள்வது அவசியம்.

இந்த அச்சகம் 1923 ஆம் ஆண்டு ஜெய தயாள் கோயங்கா, கன்சியாம் தாஸ் ஜலன் என்ற இரண்டு மார்வாரி வணிகர்களால் கோரக்பூரில் 10 ரூபாய் வாடகைக் கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. இன்று அது பல நூறு கோடி சொத்துகளைக் கொண்டதாக மாறியுள்ளது. ‘மக்களிடம் சனாதன தர்மத்தையும் இந்து மதத்தையும் பரப்புவதையும் மேலேடுத்துச் செல்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்து மத நூல்களை வெளியிடும் பெரும் வெளியீட்டு நிறுவனம்’ என கீதா அச்சகம் இன்று தன்னைப் பற்றிப் பெருமையாக அறிவித்துக் கொள்கிறது.

கீதா அச்சகம் பகவத் கீதை, புராணங்கள், உபநிசத்துகள், துளசிதாசரின் ராம சரிதை, இந்து மதச் சாமியார்களின் மதம் பற்றிய நூல்கள் என இதுவரையிலும் 91 கோடி படிகளைக் கொண்டு வந்துள்ளது. இந்தி, வங்காளம், ஒரியா, நேபாளி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் எனப் பதினைந்து மொழிகளில் இதுவரையிலும் 1800 தலைப்பில் மலிவு விலைகளில் நூல்களைக் கொண்டு வந்துள்ளது. பகவத் கீதையை மட்டுமே 16.21 கோடி படிகள் இதுவரை அச்சடித்து மக்களிடையே பரப்பியுள்ளது. புராண நூல்களையும் உபநிசத்துகளையும் 2.68 கோடி படிகள் அச்சடித்து விநியோகம் செய்துள்ளது. 2022 - 2023 மட்டும் ரூ.111 கோடி மதிப்புள்ள புராண நூல்களையும், கீதையும், உபநிசத்துகளையும் 2.4 கோடி படிகள் அச்சடித்து வெளியிட்டுள்ளது. 

வட இந்தியாவில், குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் கீதா அச்சகம் பற்றியும் அதன் நூல்களைப் பற்றியும் அறியாத வீடுகளே இல்லை எனக் கூறலாம். அந்த அளவுக்கு மக்களின் சிந்தனைகள் மீதும், பண்பாட்டின் மீதும் இந்து மதப் புராணங்களின் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு கீதா அச்சகம் விரிவான அளவில் செயல்பட்டு வருகிறது. 2014 ல் பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதன் செயல்பாடுகள் மேலும் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த அச்சகம் தெரிவிக்கிறது. 

கீதா அச்சகத்தின் இந்த நூறாண்டு காலச் சித்தாந்தப் பணியின் பின்னணியில்தான் வட இந்தியாவில் இந்துத்துவ சங் பரிவாரங்களின் வளர்ச்சியையும், பா,ஜ,க.வின் வெற்றியையும் நாம் புரிந்து கொள்ள முடியும். இந்தக் கோரக்பூரில்தான் கோரக்நாத் மடம் உள்ளது. அதனுடைய மடாதிபதிதான் இன்று உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக உள்ள யோகி ஆதித்யநாத். கீதா அச்சகத்தின் இந்துத்துவப் பணியையும், பொதுக் கருத்தை உருவாக்குவதில் அது எவ்வாறு வெற்றி பெற்றுள்ளது என்பதையும் இவற்றிலிருந்து நாம் நன்கு அறியலாம்.

தோற்ற காலத்திலிருந்தே கீதா அச்சகத்தின் பதிப்பாசிரியராக இருந்தவர் அனுமன் பிரசாத் போத்தர். அவர் இந்துத்துவ அமைப்புகளான ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா ஆகியவற்றுடனும் அவற்றின் தலைவர்களாகிய சாவர்க்கர், கோல்வாக்கர் ஆகியோருடனும் மட்டுமல்லாமல் காங்கிரஸ் தலைவர்களுடனும் நெருக்கமான உறவைக் கொண்டு இருந்தவர்.

கீதா அச்சகம் 1926 லிருந்து ‘கல்யாண்’ என்ற மாத இதழையும் நடத்தி வருகிறது. காந்தி கல்யாண் இதழுக்குக் கட்டுரைகள் அளித்துள்ளார். பகவத் கீதை வெளியீடு போன்ற போத்தரின் பணிகளைக் காந்தி மிகவும் பாராட்டியுள்ளார். ஆனால் காந்திக்கும் போத்தருக்கும் பிற்காலத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டன. காந்தியின் கோவில் நுழைவுப் போராட்டம், சம பந்தி போஜனம், தாழ்த்தப்பட்ட மக்களுடன் திருமண உறவு போன்ற தீண்டாமை ஒழிப்புக்கான நடவடிக்கைகளை போத்தர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவற்றைக் கடுமையாக விமர்சித்தார்.

காந்தி பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக மக்களைத் திரட்ட கலாச்சார அடிப்படையிலான ஒரு தேசியத்தைக் கட்டமைக்க முயன்றார். அந்தத் தேசியம் அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய தேசியமாக இருந்தது. அனைத்து மதக் கருத்துகளுடனும் நல்லிணக்கத்தைக் கொண்டதாக இருந்தது. காங்கிரசை கலாச்சார தேசிய அடிப்படையில் ஒரு மக்கள் திரள் இயக்கமாக மாற்றிய காந்தியின் வழிமுறை பிரிட்டிசாருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தின் தலைமையை இந்திய முதலாளிய வர்க்கம் கைப்பற்ற வழிவகுத்தது.

ஆனால் போத்தாருக்கும், அதாவது கீதா அச்சகத்தைச் சார்ந்தவர்களுக்கும், ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா போன்ற அமைப்புகளுக்கும் காந்தியின் தேசியம் ஏற்புடையதாக இல்லை. அவர்கள் இந்து மத அடிப்படையிலான இந்துத்துவத் தேசியத்தைக் கட்டமைக்க விரும்பினர். இந்து மதக் கலாச்சாரத்தைத் தேசியக் கலாச்சாரமாக அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். அதன் அடிப்படையில் ஒரு இந்து நாட்டை, இந்து ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் எனக் கருதினர். ஆனால் காந்திக்கு இந்தத் தேசியம் ஏற்புடையதாக இல்லை.

இந்தியா என்ற பகுதியை இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாகப் பிரிப்பது என்ற உடன்படிக்கையின் கீழ் 1947ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இங்குள்ள முதலாளிய வர்க்கம் அதிகாரத்தைப் பெற்றது. அந்தப் பிரிவினை நாடெங்கும் பெரும் கலவரங்களுக்கு வித்திட்டது; இலட்சக்கணக்கான மக்களின் இடப் பெயர்வுக்கும், பல்லாயிரக்கணக்கான உயிர்ப் பலிகளுக்கும், கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைச் சேதங்களுக்கும் காரணமாக அமைந்தது.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த கலவரங்களில் முஸ்லீம் மக்களுக்கு காந்தி அனுதாபமாக நடந்து கொண்டார் என்றும், காந்திதான் பிரிவினைக்குக் காரணம் என்றும் இந்துத்துவ அமைப்புகள் கருதின. அதன் விளைவாக இந்துத்துவ வெறியன் கோட்சேவால் காந்தி 1948 ஜனவரி 30 அன்று படுகொலை செய்யப்பட்டார்.

காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, கீதா அச்சகத்தின் பதிப்பாசிரியராக இருந்த போத்தாரும், அதன் நிறுவனரும் காந்தி கொலையின் சதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அப்பொழுது அவர்கள் வழக்கிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு செல்வாக்கு மிக்க முதலாளியாக இருந்த கன்ஷ்யாம் தாஸ் பிர்லாவைக் கேட்டனர் என்றும், ஆனால் அவர், போத்தாரும் கீதா அச்சகத்தின் நிறுவனரும் சனாதன தர்மத்தைப் பரப்பவில்லை, சாத்தானின் தர்மத்தையே பரப்பி வந்தனர் என்றும் கூறி அவர்களுக்கு உதவ மறுத்து விட்டார் என்று ‘கீதா அச்சகமும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்’ (Gita Press and the Making of Hindu India) என்ற புகழ் பெற்ற நூலின் ஆசிரியரான அக்சய் முகுல் கூறுகிறார்.

பிறகு போத்தார் விடுதலை செய்யப்பட்டார். காந்தி கொலை செய்யப்பட்ட சதி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்எஸ்எசின் தலைவர் கோல்வாக்கரும் 1949ல் விடுதலை செய்யப்பட்டார். அப்பொழுது அவருக்கு பனாரசில் உள்ள டவுன் ஹாலில் வரவேற்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்திற்கு, ஏற்கனவே அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருந்த போத்தார் தலைமை தாங்கினார்.

இத்தகைய வரலாறும் பின்னணியும் கொண்ட கீதா அச்சகத்திற்குத்தான் காந்திய வழியில் அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் மிகச் சிறந்த பணியாற்றியதாகக் கூறி காந்தி அமைதி விருது அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது பற்றி காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரமேஷ் ஜெய்ராம் கூறியதை இங்கு நினைவுகூர்வது மிகப் பொருத்தமாயிருக்கும்: “கீதா அச்சகத்திற்குக் கொடுத்த காந்தி அமைதி விருது சாவர்க்கருக்கும் கோட்சேவுக்கும் கொடுத்தது போன்றது”

                                                                                                - புவிமைந்தன்

Comments

Post a Comment

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட