Skip to main content

ஜெர்மனியில் தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான இயக்கம்--- மூன்று முக்கியமான புரிதல்கள்


2024--ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஜெர்மனியில் வான்சீ 2.0 ஊழல் வெளிப்பட்டதிலிருந்து, ஏறத்தாழ பதினைந்து இலட்சம் மக்கள் வலதுசாரிகள், வலதுசாரி தீவிரவாதிகள் மற்றும் புதிய பாசிஸ்ட் கட்சியான AfD (Alternate for Deutschland - ஜெர்மனிக்கு மாற்று) க்கு எதிராக ஊர்வலங்களை நடத்தி வருகின்றனர். 

சமீபத்தில் நடந்த வான்சீ மாநாட்டில், ஜெர்மனியின் தீவிர வலதுசாரிகளின் திட்டம் ஒன்று என்னவென்றால், ஜெர்மன்” இனம் இல்லை என AfD- கருதும் பெருந்திரளான மக்களை வெளியேற்றுவது என்பதாகும். இதைத் தொடர்ந்து பெர்லினில் மட்டும் பிப்ரவரியின் முதல் வார இறுதியில் 1,50,000பேர் பெருந்திரளாக தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர்.

இந்தப் பெருந்திரள் மக்கள் போராட்டங்களைப் புரிந்துகொள்ள அரசியலில் ஈடுபாடு கொண்ட மக்களின் ஆறு கதைகள் உள்ளன. வர்கள் வலதுசாரிகளுக்கு எதிராக ஜெர்மனி முழுவதும் ஏராளமான ஊர்வலங்களை நடத்தினர். சில வாரங்களுக்கு முன், ஜெர்மனி முழுவதும் 300-க்கும் அதிகமான இடங்களில் நடந்த " AfD--க்கு எதிரா" பேரணிகளில் குறைந்த பட்சமாக 8,20,000 மக்கள் கலந்து கொண்டனர். ‘ஏன்‘, ‘எவ்வாறு’ இந்த மக்கள் திரட்டப்பட்டனர் என்பது பற்றிப் பார்ப்போம்.

1.பிரைட்பெர்க் நகரம்--- கிறிஸ்டின் கூபே 

முதல் கதை ஜெர்மனியின் ஹெஸ்ஸென் மாகாணத்தில் உள்ள பிரைட்பெர்க்கைச் சேர்ந்தவரான, கிறிஸ்டின் கூபே பற்றியது. அவர், தனியாக இருப்பதை விட கருத்துகளைப் பரிமாறுதல் சிறந்தது என்கிறார். அவர், ஜெர்மனி முழுவதும் இப்போராட்டங்கள் நடப்பது குறித்து மகிழ்ச்சி அடைந்தார். எனினும், இந்தப் போராட்டங்கள் நாளடைவில் குறைந்து விடுமோ என்று கவலைப்பட்டார்.

2024--ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான போராட்டங்கள் குறைந்து விடும் என்பதற்கான அறிகுறி சிறிதும் இல்லை; ஆனால் இதற்கு மாறான ஒன்றே நடந்தது. இத்தகைய பெருந்திரள் போராட்டங்களுக்கு முன்பு பிரைட்பெர்கில் வலதுசாரி அரசியல் சூழல் உருவாகி இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் அது மிக அமைதியாகவும் மெதுவாகவும் உருப்பெற்றது. 

அங்கு வசித்த 23% உள்ளூர் மக்கள் தீவிர வலது சாரி அமைப்பான AfD-- க்கு வாக்களித்தது பெரும்பாலானவருக்கு அதிர்ச்சியை அளித்தது. ஆனால், வினோதமாக, தேர்தல் முடிவு பற்றிய விவாதங்கள் அரிதாகவே இருந்தன. என்றாலும், இது ஏராளமானவர்களுக்கு எச்சரிக்கையூட்டியது. இதுவே கூபே அரசியலில் ஈடுபட தீர்மானித்ததன் காரணமாகியது.

இன்று, தனது சொந்த ஊரான பிரைட்பெர்க்கில் AfD-- க்கு எதிரான சில இளைஞர்களைக் கொண்ட அமைப்பின் செயல்பாடுகளில் கூபேயும் ஒருவர். இந்தக் குழு தனியாக இல்லை. மாறாக, பிரைட்பெர்கில் வளர்ந்து ஜெர்மனி முழுவதும் வாழும் அவரது நட்புக் குழுவினர்களும் அவருடன் இணைந்துள்ளனர்; இன்றும் பல குடும்பத்தினர் அங்கு வாழ்கின்றனர்; அந்த ஊருடன் ஆழமான உறவைக் கொண்டுள்ளனர்.

இதுவே கூபேவுக்கும் அவரது நண்பர்களுக்கும் அரசியலில் ஈடுபட அவசியமாகியது. ஜெர்மனியின் வலதுசாரிகளிடமிருந்து பொது வெளியை மீட்டு எடுப்பது அவரது குழுவினரின் முக்கியமான நோக்கமாகும்; அதை ஜெர்மனியின் தீவிர வலதுசாரிகளுக்கு விட்டுவிடக் கூடாது. உதாரணமாக, 2023 கிருஸ்துமசின்போது, வலதுசாரியின் சுவரொட்டிகள் எந்த அளவுக்கு நகரத்தில் அனைத்து இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்தது என்று அவர் கவனித்தார். இதைப் போன்ற ஒன்று இதற்கு முந்தைய வருடங்களில் நடந்ததே இல்லை. 

கூபே தலைமையிலான குழு இணைய தளங்களின் மூலமாகத் தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தனர். பிறகு சில வாரங்களில், அவர்கள் உள்ளூர் செய்தித்தாள்களில் வெளிப்படையாக கடிதமொன்றை வெளியிட்டனர்; அத்துடன், இணையத்தில் புதிய செய்தித் தளங்களை உருவாக்கி அவற்றின் வழியாக AfD --க்கு எதிரான கருத்துகளைப் பேச ஆரம்பித்தனர். மேலும் அவர்கள் வெளிப்படையான, பன்முகத்தன்மை கொண்ட, பரந்த நோக்கமுடைய, ஜனநாயக சமூகம் அமைய வேண்டும்--- - பிரைட்பெர்கும் அதுபோலவே இருக்க வேண்டும் என்னும் தங்கள் நோக்கத்தை முன்வைத்தனர். அது, AfD, மற்றும் தீவிர வலதுசாரியினரான நவீன நாஜிக்களின் "மறு இடப் பெயர்வு" என்ற நாகரிகமான வார்த்தையில் ஜெர்மானியர் அல்லாத பிற இனத்தவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் திட்டத்தை நேரடியாக எதிர்த்தது. இக்குழுவின் வெளிப்படைத்தன்மையும் , ஜனநாயகத்துக்கான ஆதரவும் AfD -இன் ஜனநாயக விரோத எதேச்சாதிகாரத்துக்குச் சவால்விட்டது.

கூபேயும் அவரது குழுவினரும் பிரசுரித்த வெளிப்படையான கடிதத்துக்கு ஏராளமான மக்கள் இ -மெயில் மூலம் நன்றி கூறினார்கள். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரியினரின் கண்டனங்களும் வந்திருந்தன. ஆனால், இந்த இருவிதமான கருத்துப் பதிவுகளும் இந்தக்குழுவை நிறுவும் முதல் படியாக அமைந்தது. ஏராளமான மக்கள் இத்தகைய போராட்டங்களில் இணைய விரும்பினாலும் - இதுவரையிலும் சரியான வழியை அவர்கள் காண இயலவில்லை என்று கூபே கருதுகிறார்.

மேலும், அவர், AfD--க்கு வாக்களிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, அந்தக் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் அவர்கள் வாழும் உலகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது தெரியாது என்று கருதுகிறார். கூபே, தைரியமாக வலதுசாரிப் பக்கமுள்ள மக்களுடன் தொடர்ந்து விவாதங்களை நடத்துவது மிக முக்கியமான ஒன்று எனக் கருதுகிறார். மொத்தத்தில், அரசியல் என்பது வெறும் அருவமானதல்ல, அது நம்முடன் தொடர்புடைய ஒன்று எனக் கருதுகிறார்.

2. கிழக்கு ஜெர்மனி நகரம்--ஆண்ட்ரியா லூதர் 

கிழக்கு ஜெர்மனியின் சாக்சோனி --அன்ஹல்ட் மாகாணத்தில் உள்ள ஆஸ்சர்ஸ்லேபென்னில் வாழும் 70 வயதான ஆண்ட்ரியா லூதர், ஜெர்மனி சமூகத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதாகக் கருதுகிறார். அருகிலுள்ள ஒரு நகரத்தில் AfD -க்கு எதிரான பேரணி நடப்பதாக அறிந்தவுடன் "நாம் நிச்சயமாகப் பங்கேற்க வேண்டும்!" என்று கூறினார். தீவிர வலதுசாரிகளின் எழுச்சி அவரை நீண்ட காலமாக வருத்திக் கொண்டிருந்தது. இருப்பினும், வலதுசாரி அமைப்பான AfD -யை மட்டுமே இதற்காகக் குற்றம் சொல்ல முடியாது என்று கருதினார்.

ஆனால், ஜெர்மனியின் தீவிர வலதுசாரிகள், ஜெர்மானியர் அல்லாத பிற இனத்தவரை வெளியேற்ற விரும்பி, அதற்காக நடத்தப்பட்ட ரகசியக் கூட்டங்களை சமூக நோய்” என்பதாகச் சிறுமைப்படுத்தினாலும் அது அவரைப் பாதித்தது; அச்சமடையச் செய்தது. இதற்கு முன்பு வலதுசாரிகளுக்கு எதிரான பேரணி 1989-இல் ஜெர்மனி ஒன்றாக இணைந்தபோது திரண்ட மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று போலவே அன்றும் அவர்கள், " நாங்கள் இந்நாட்டு மக்கள்" என்று முழங்கினர். இது 'நாம் அடைந்ததைக் காக்க மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டிய தருணம்' என்று லூதர் கருதினார். "இதுவே நமது சட்டத்தின் ஆட்சி, இதுவே நமது ஜனநாயகம்."

"என்னுடைய மனசாட்சி இதைச் செய்ய என்னைத் தூண்டுகிறது" என்று லூதர் கூறுகிறார். அவருக்கு ஒரு மகளும் மூன்று பேரக் குழந்தைகளும் உள்ளனர். அவர்களுக்கு வாழ்க்கை வாழத் தகுந்ததாக இருக்க வேண்டும்; அது வெளிப்படையான ஜனநாயகம் மட்டுமே " என்று உறுதியுடன் சொல்கிறார். 

லூதரைப் பொறுத்தவரை "இங்கு ஜனநாயகம் இருக்கிறது, மக்கள் தங்களுக்கு தொடர்ந்து ஜனநாயக உரிமைகள் இருக்க வேண்டும்" என்று காண்பிக்க வேண்டும். 2024-ஆம் ஆண்டு தொடக்கத்தில், வலதுசாரிகளுக்கு எதிராக விரைவில் நடத்தப்பட இருந்த பேரணி பற்றி அறிந்தார். அவரது அடுத்த வீட்டில் வசிப்பவரிடம் " உங்களுக்கு அந்தப் பேரணி குறித்து தகவல் தெரியுமா? என்று கேட்டார். உடனே அவர், " ஆம், நாம் சேர்ந்து போவோம்" என்று பதிலளித்தார்.

லூதரும் அவரது அடுத்த வீட்டில் வசிப்பவரும் 1989--ஆம் ஆண்டில் நடந்த பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் அது ஏற்கனவே பரிச்சயமான உணர்வு. இருப்பினும், இன்றைய நோக்கம் வேறாக இருந்தது. லூதர் நகர சதுக்கத்தைச் சுற்றிலும் பார்த்தபோது தனக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த முகங்களைக் கண்டார். ஆனால், 2024-இன் தொடக்கத்தில் குளிர் மிகுந்த அந்த நாளில் ஏராளமான இளைஞர்களையும் கண்டார். பேரணியில் அவருடன் முன்பு பணிபுரிந்த நண்பர் ஒருவர் "நாங்கள் உங்களுக்கு அமைதியைக் கொண்டு வந்தோம்” என்று பொருள்படும் ஹீப்ரு மொழி நாட்டுப்புறப் பாடலைப் பாடினார். அவர் இந்தப் பொருள்படும் பாடல்களை வெவ்வேறு மொழிகளில் பாடினார். லூதர் உக்ரைனிய மொழியிலும் பாட விரும்பினார். ஆனால் வார்த்தை உச்சரிப்புகள் மிகக் கடினமாக இருந்தன. பேரணி நட்புணர்வுடனும் ஆதரவுடனும் இருந்தது. அனைவரும் சிரித்துக் கொண்டு இருந்தனர். யாரும் வருத்தப்படவில்லை.

இருப்பினும், AfD--யும் அவ்வப்போது பேரணிகளை நடத்தியது; ஆனால் அவை பரிதாபமாக இருந்தன. அவர்களுடன் பழைய ஜெர்மனியின் சட்டங்களை நடைமுறைப்படுத்தத் தீவிரமாக இருக்கும் குழுவினர் சிலரும் கூட இருந்தனர். ஒருவேளை, வலதுசாரியினருக்கு எதிரான பேரணி அவர்களைக் கலக்கமடையச் செய்திருக்கலாம்.

3. ஜெர்மனியின் ரைன்லேண்ட் - பாலதினேட் ----ஜூட்டா ப்லாம்பெக் 

ஜூட்டா ப்லாம்பெக்ஜெர்மனியின் ரைன்லேண்ட் --பாலதினேட் மாகாணத்தின் நடுத்தர நகரமான கோப்ளேன்ஸீல் வசிக்கிறார். அவர் அருகாமையில் உள்ள பல்கலைக் கழகத்தில் உயிரியல் படித்துக் கொண்டிருக்கிறார். மக்கள் ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்னும் கொள்கையில் உறுதியாக அவர் இருக்கிறார். 2023--ஆம் ஆண்டில் வலதுசாரி எழுச்சி பெற்று வந்த நிலயில் அவர் ஆதரவற்ற நிலைமையில் இருப்பதாக உணர்ந்தார். ஆனால், 'கரெக்ட்டிவ்'--இதழில் வெளிவந்த வலதுசாரியின் 'ஜெர்மானியர் அல்லாத மக்களை’ வெளியேற்றும் ரகசியத் திட்டத்தைப் பற்றிப் படித்தபோது, தான் வாழ விரும்பும் சமூகம் இது அல்ல என்று அறிந்தார். 

அவர் இதுபற்றி கோப்ளேன்ஷில் விசாரித்த போது, அங்கு எதுவும் திட்டமிடப்படவில்லை என அறிந்தார். ஒரு குளிர்கால இரவில் அவரது நண்பர்கள் மூன்று பேருடன் அந்த நகரத்தின் சிறிய ஹோட்டல் ஒன்றில் அமர்ந்திருந்தார். அந்த வியாழக்கிழமை இரவு, அவர்கள் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தனர். எனவே, மறு நாளே நகர மன்ற அலுவலகத்தில் வலதுசாரியினருக்கு எதிரான பேரணி ஒன்றை நடத்தப் பதிவு செய்தனர். ப்லாம்பெக்கும் அவரது நண்பர்களும் சமூக வலை தளத்தில் பேரணியில் பங்கு கொள்ள அழைப்பு விடுத்தனர். அவர்கள் உற்சாகப் பெருக்குடன் உணர்வூட்டப்பட்டவர்களாக இருந்தார்கள். அதே சமயத்தில் அவர்கள், பேரணியில் தாங்கள் மட்டுமே இருப்போமோ என்ற அச்சத்துடனும் இருந்தார்கள். 

அவர்கள் அதிகபட்சமாக 70 பேர் பங்குகொள்வார்கள் என்று எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். ஆனால் ஏராளமானவர்கள் பேரணியில் கலந்து கொண்டார்கள்--உண்மையில் ஆறு மடங்கு அதிகமாக! "நாங்கள் இதை இனிமேலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இப்போது நாங்கள் எதிர்த்து நிற்போம்!" என்ற முழக்கத்தை முன் வைத்து பேரணியை நடத்தினார்கள்.

அவர்கள், இதுவரையிலும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தவர்களிடம் உரையாற்ற விரும்பினார்கள். மூன்று நாட்கள் கழித்து, தலைநகரமான மெய்ன்ஷில் 10,000-க்கும் அதிகமானவர்கள் பேரணியில் பங்கு கொண்டார்கள். இப்பேரணியில், மாகாண ஆளுநர் மாலு ட்ரெயேரும் அவரது அரசாங்கத்தின் பணியாளர்கள் பாதிப் பேரும் பங்கு கொண்டார்கள் என்பது முக்கியமான ஒன்றாகும். இதனால் ப்லாம்பேக்கும் அவரது நண்பர்களும் பெரும் உற்சாகமடைந்தார்கள். பரந்த அளவில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த AfD -யை தடை செய்ய வேண்டும் என்பது போன்ற குறிப்பான கோரிக்கை எதுவும் இவர்களிடம் இல்லை. ப்லாம்பெக், வலதுசாரிக்கு எதிராகச் செயல்பட வேண்டியது ஒவ்வொருவரையும் பொறுத்தது என்று நினைத்தார். எனினும், மெயின்ஸ், கோப்ளெனஸ் இடங்களில் தொடங்கிய வலதுசாரிக்கு எதிரான அறிகுறிகள், போராட்டங்கள் நாடு முழுவதும் பரவின. மக்கள் சமூகம் நிராதரவாக இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. 

மனித நேயமில்லாத இனவெறியாளரிடமிருந்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற அவர்களுக்கு எதிராக மக்கள் போராட முடியும். ப்லாம்பேக்கை பொறுத்தவரை, இப்போராட்டத்தில் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைவது மிக முக்கியமான ஒன்று. மிகச் சில நாட்களிலேயே வலதுசாரியினருக்கு எதிரான போராட்டத்தில் ஏராளமான மக்கள் திரண்டது அவரது குழுவினருக்கு ஊக்கமூட்டியது. தீவிர வலதுசாரிசார்பான அரசியல் போக்குக்கு எதிராக மக்கள் போராட முடியும் என நிரூபித்தார்கள்.

4. பவேரியாவின் மேல் பகுதியில் இருக்கும் ஒரு நகரம்--- வால்டேர் பீட்டர் ஸ்டோல் 

வால்டேர் பீட்டர் ஸ்டோல், பவேரியாவின் மேல்பகுதியில் இருக்கும் உர்ஸ்பர்க் நகரத்தில் வாழ்பவர். அவரும் ஏராளமான மக்களை வெளியேற்றும் AfD -இன் திட்டம் பற்றிய விரிவான விளக்கங்களை 'கரெக்ட்டிவ்'-இன் அறிக்கை மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்தார். அதே நேரத்தில் அது குறித்து அவர் வியப்படையவில்லை. பல வருடங்களாக, அவரது நகரத்தில் ஏராளமான வலதுசாரிப் பேரணிகள் நடந்து கொண்டிருந்தன--- குறிப்பாக 2020-2021-ஆம் ஆண்டுகளில் கொரனா பெருந்தொற்றின் போது. ஸ்டோல் தீவிர வலதுசாரி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதைக் கவனித்து வந்தார். மேலும் மேலும் அதிகமாக வலதுசாரித் தீவிரவாதிகள் அப்பேரணிகளில் பங்கு கொண்டனர். இருப்பினும், ஜெர்மனியின் மத்திய பகுதி மக்கள் பெரும்பாலானவர்கள் இதனால் கவலை கொண்டார்கள். இதனாலேயே ஸ்டோல் 'உர்ஸ்பர்க்கின் பந்த்' --- 'உர்ஸ்பர்க் வண்ணமயமானது' என்ற முழக்கத்தைக் கொண்ட அமைப்பில் சேர்ந்தார். இது, அந்த நகரம் அனைவருக்கும் வண்ணமயமானது ---- நவீன நாஜிக்கள் அடையாளப்படுத்தும் நாஜிக்களின் சட்டைகளின் நிறமான பழுப்பு நிறமல்ல.

ஸ்டோல் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவது இதுவே முதல்முறை. எனினும், நவீன-நாஜிகளுக்கே உரிய காட்சிகள் எதுவும் உர்ஸ்பர்க்கில் நடக்கவில்லை. ஆனால் இப்போது, வலதுசாரிச் சக்திகள் தங்களது இருப்பை உணர வைக்க முயற்சிக்கின்றன. அவர்கள் ஸ்டாலையும் அவரது சகாக்களையும் மிரட்ட முயற்சித்தனர். ஸ்டோலின் சகாக்கள் வீதிகளில் வைத்து மிரட்டப்பட்ட போதும், ஸ்டோல் ஒருமுறைகூட நேரடியாக மிரட்டப்படவில்லை. ஒருமுறை குதிரை சாணக் குவியல் அவர்கள் சந்திக்கும் இடத்தின் வாசலில் கொட்டப்பட்டது. "உர்ஸ்பர்க் வண்ணமயமானது" என்னும் பேரணியைத் திட்டமிடும் குழுவில் அவர் செயல்பட்டார்; அவரது கூட்டாளிகள் வலதுசாரியினரின் தீவிர வாதத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள்.

ஸ்டோல், ஒருவர் வலதுசாரித் தீவிரவாதத்துக்கு எதிராக வாய் திறந்து பேசுவது வலதுசாரித் தீவிரவாத சித்தாந்தங்கள் பரவுவதைத் தடுக்க உதவும் என்று நம்புகிறார். அது, ஜனநாயகத்துக்கு எதிரான "ஜெர்மனியின் வலதுசாரித் தீவிரவாதிகளைப் புரிந்து கொள்ள உதவுகிறது என்று உறுதியாக நம்புகிறார். எனினும், இது அவர்களின் தூண்டுதல்களை புரிந்துகொண்டு அவர்களை எதிர்த்துஅவர்களை "நாஜிக்கள்" என்று தெளிவாக அம்பலப்படுத்த வேண்டும். ஸ்டோல் உரையாடல்களைத் தொடர்ந்து நடத்துவது மிக முக்கியமானது என்று விவாதிக்கிறார்; இந்த விவாதங்கள் நம்மைத் தெளிவு படுத்துவதுடன், மிகச் சிறப்பாக மக்கள் நம்முடைய ஜனநாயக விழுமியங்களைப் புரிந்து கொள்ள அவசியம் என்று விளக்குகிறார். எப்படி என்றாலும், இது அனைத்து நேரங்களிலும் தனது வேலையைச் சரியாக செய்யாது என்றாலும் இது முக்கியமான ஒன்று ஆகும்.

"நான் உண்மையில் எதன் பக்கம் நிற்கிறேன்?" என்று நம்மை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். ஜனநாயகத்தின் விழுமியங்களை எவ்வளவு சாத்தியமோ அந்த அளவுக்கு நேர்மையான முறையில் கட்டமைக்க இது முக்கியமானது என்று அவர் வரையறுக்கிறார். வெறும் வார்த்தைகளாக இல்லாமல், உண்மையில் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வதை ஒப்புக் கொள்ளுகிறேன். நாம் கூறுகிறோம் நாம் வெறுப்புக்கு எதிராக இருக்கிறோம் என்று; ஸ்டோல் மக்கள் இந்த விழுமியங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதையும் அவர்கள் வலதுசாரிகளின் தீவிரவாதத்தை ---வளர்ச்சியை தடுத்து நிறுத்த எந்த அளவுக்கு உதவுகின்றன என்பதையும் மறந்து விடுகிறார்கள் என்று நினைக்கிறார்.

5.பிராங்க்பர்ட் நகரம்: லார்ஸ் டாபெர்

பிராங்க்பர்ட்டில் ஆசிரியராக இருக்கும் லார்ஸ் டாபெர், நவீன- நாஜிக்களுக்கு எதிரான பேரணிகளில் தான் பங்குபெற்றதற்கு அவரது குழந்தைகளே காரணம் என்கிறார். அவர் வலதுசாரித் தீவிரவாதிகளுக்கு எதிராக நாகரிகமடைந்த ஒரு குடிமைச் சமூகம் என்ன செய்ய முடியும் என்பதை மக்கள் காட்ட வேண்டும் என்று விரும்புகிறார். 

பல வருடங்களுக்கு முன், அவர் பதின்பருவத்திலும்,பிறகு இளமைப் பருவத்திலும் பல பேரணிகளில் பங்குகொண்டிருக்கிறார். பிறகு பல ஆண்டுகள் அதை நிறுத்திவிட்டார். ஆனால், " இது நமது பங்களிப்பை ---இருப்பை காண்பிக்க வேண்டிய தருணம்” என்கிறார். மேலும், இது, "இனி எப்போதும் இல்லை" என்னும் வலதுசாரித் தீவிரவாதத்துக்கு எதிரான முழக்கத்தின் ஒரு அங்கமாகும். ஜனநாயகத்தின் எதிரிகள் மட்டுமே முழக்கமிட முடியும் என்பதல்ல; மக்கள் அவர்களது முழக்கங்களுக்கு தங்களுடைய இடத்தை ஒரு சிறிதும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்கிறார் அவர். ஜெர்மனியின் AfD -இன் சித்தாந்தங்களுக்கும் வலதுசாரித் தீவிரவாதத்துக்கும் பொருந்தாத--ஒத்துவராத மக்களை "வலுக்கட்டாயமாக வெளியேற்றும்" ரகசியத் திட்டங்களைப் பற்றி அவரும் பெரும் அச்சமடைந்துள்ளார்.

பல வருடங்களாக, ஏராளமான ஜெர்மானியர்கள் இத்தகைய செயல்கள் இனிமேல் நடக்கவே நடக்காது என்று நம்பினார்கள்; ஜனநாயகத்தின் எதிரிகள் நவீன-நாஜி பேரணிகளை நடத்தவோ ஜெர்மனியின் ஜனநாயகப் பாராளுமன்றங்களை ஆதிக்கம் செலுத்த முடியும் என்றோ யாரும் நினைத்துப் பார்த்தது கூட இல்லை. அதனால்தான், இன வெறிக்கு எதிராகவும் வலதுசாரித் தீவிரவாதத்துக்கு எதிராகவும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கவேண்டும் என்கிறார் டாபெர்.

பிராங்க்பர்ட்டின் முக்கியத்துவம் வாய்ந்த "ரோமர்" சதுக்கத்தில் 15,000பேருடன் இணைந்து பங்கு கொண்டது அவருக்கு சிலிர்ப்பு ஏற்படுத்தியது. அது ஒரு பெரிய மக்கள் சமூகமாகும். ஆனால் அப்போது பேரணியில், "பழுப்பு நிற அரசியல் நீல நிறம் கொண்டது" என்னும் வாசகம் கொண்ட சுவரொட்டிகள் காணப்பட்டன. பழுப்பு நிற அரசியல் என்பது 'ஹிட்லரின் துணை இராணுவப் படையின் (SA) பழுப்பு நிற சீருடையைக் குறிக்கும். அது பொதுவாக ஜெர்மனியின் வலதுசாரிகளுடன் தொடர்பு கொண்டது. மேலும்நீல நிறம் மூலம் AfD தன்னை அடையாளம் தெரியாமல் மறைத்துக் கொள்கிறது.. 

அவர்களது பேரணியின் சுவரொட்டிகள் AfD -யின் நீலநிறம் உண்மையில் நாஜி அரசியல் ஆகும் என்பதை வலியுறுத்தின. வரலாற்று ரீதியாக, 1942--ஆம் வருடம் ஜெர்மனியின் வான்சீயில் நடந்த கூட்டத்தின் முடிவுப்படி நடத்தப்பட்ட இனப் படுகொலையே ஹிட்லரின் நாஜி அரசியல் ஆகும். 2023-ஆம் ஆண்டு, ஜெர்மனியின் நவீன-நாஜிக்கள் இதே போன்ற ஒரு கூட்டத்தை நடத்தி, ஹிட்லரைப் போலவே, "மக்களை இடப்பெயர்வு செய்ய திட்டமிட்டனர். இதுவே இன்றைய நவீன நாஜிக்களின் கூட்டம்! 1942-இல் பெர்லினில் உள்ள வான்சீயில் கூட்டம் நடந்த இடத்துக்கு மிக அருகிலேயே 2023--இல் நவீன நாஜிக்களின் மாநாடும் நடந்தது என்பது தற்செயலானது அல்ல. 1942-இல் இனப்படுகொலையை தீர்மானித்த வான்சீயில் நடந்த மாநாட்டின் வரலாற்று முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே இன்றைய நவீன நாஜிக்கள் தங்களது திட்டத்திற்கான மாநாட்டை நடத்த அதே இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். 

டாபரின் ஒரு மகன் "ஏன் பழுப்பு நிறம்?" என்று கேட்டார். பழுப்பு நிறம் நாஜிக்களுடையது. நீலநிறம் AfD--யினுடையது. இவை நமக்கு தெள்ளத் தெளிவாகத் தெரியும். ஆனால் பதினொரு வயது குழந்தைக்கோ எட்டு வயது குழந்தைக்கோ அது பற்றிய தெளிவில்லை.

பல மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடத் தொடங்கியதைப் பார்த்த ஏராளமான மக்கள் அதனால் ஈர்க்கப்பட்டார்கள்; மேலும் வலதுசாரியின் அடிப்படைவாதங்களுக்கு எதிராக ஆர்வத்துடன் பேசினார்கள். ஆசிரியரான டாபர், எதிர்காலக் கல்வியாளரான இளைஞருக்கு இதைப் பற்றி விளக்கினார். பன்முகத்தன்மை, இனவாதம், நீதி, மற்ற இனத்தவர் மேல் வெறுப்பு கொள்ளுதல் ஆகியவை நிகழ்ச்சி நிரலாக ----திட்டமாக உள்ளது; அவரது பள்ளியிலும், அவர் " நான் என்ன செய்து கொண்டு இருக்கிறேன்? ஏன், எப்படி நான் வேறு மக்களை நடத்த வேண்டும்? திறந்த மனதுடன் நான் எப்படிச் செயல்பட வேண்டும்? எதற்காக?" என்று தனக்குள்ளேயே கேள்விகளை எழுப்பிக் கொண்டு இருக்கிறார். 

6. பெர்லினுக்கு வடக்கில் உள்ள ஒரு நகரம் ----- சபைன் ஸ்டெர்ன்பெக் 

சபைன் ஸ்டெர்ன்பெக், ஜெர்மனியின் தலை நகரமான பெர்லினுக்கு வடக்கில் உள்ள நெஸ்ட்ரேலிட்ஸ் என்னும் நகரத்தின் இளைஞர்கள் மன்றத்தில் உள்ள சமூக சேவகர் ஆவார். அவர் வலதுசாரித் தீவிரவாதத்தை எதிர்க்காமல் இருக்கிறார்கள் என்று தனது நகர மக்கள்மீது கோபம் கொண்டிருந்தார். வலதுசாரித் தீவிரவாதம் " கரெக்ட்டிவ்"--இன் அறிக்கைக்கு முன்பே வெகு காலமாக நெஸ்ட்ரேலிட்ஸீல் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. அவரும் ஏறக்குறைய தினந்தோறும் வலதுசாரித் தீவிரவாத அணுகுமுறைகளை எதிர்கொள்ளவேண்டி இருந்தது. எனினும், இதுவரையிலும் அமைதியாக இருந்த மக்கள், விழிப்படைந்து வலதுசாரிகளுக்கும் நவீன நாஜிக்களுக்கும் எதிராகப் பேரணி நடத்தியதால் மகிழ்ச்சி அடைந்தார். அவர் "நம்பிக்கை இருக்கிறது" என்கிறார்.

ஸ்டேர்ன்பெக் AfD விரைவில் பிராண்டென்பர்க் மாகாண அரசாங்கத்தில் பங்கு வகிக்கலாம் என்பதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதில் திருப்தி அடைந்துள்ளார். "கரெக்ட்டிவ்"--இன் அறிக்கையை பார்த்தபோது அவர் மிகுந்த கோபமடைந்தார். மேலும் அவர் "இது AfD--இன் வளர்ச்சியால் மட்டுமல்ல, ஒரு சமூகமாக நாம் வலதுசாரி ஜனரஞ்சகத்தை நீண்டகாலமாக அனுமதித்து விட்டோம்" என்பதால்தான் என்கிறார்.

மேலும், ஸ்டெர்ன்பெக், ஜெர்மானியர் அல்லாத குடிமக்களை இடப்பெயர்வு செய்வது மனிதாபிமானமற்றது என்கிறார். வலதுசாரிகள் இன்று நமது இளைஞர் மையங்களைத் தவிர்க்கின்றனர். நவீன நாஜிக்கள் இவற்றை ஒட்டுண்ணிகளின் கூடாரம் என்று இழிவாகக் கூறுகின்றனர்---- பெண்களை அவதூறு செய்யும் வகையில் ஒட்டுண்ணி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர்.

எனினும், அவர் நாம் தீவிரமான இடதுசாரிகள் இல்லை என்கிறார். நாஜிக்களோ அல்லது இன்றைய நவீன நாஜிக்களோ மக்களிடம் மிகவும் வன்முறையாக நடந்து கொள்வதற்கு இடதுசாரிச் செயல்பாடுகள் அவசியமில்லை. ஆனால், ஸ்டெர்ன்பெக்கின் இளைஞர்கள் மன்றம் உறுதியாக பாசிசத்துக்கு எதிரானது. தன்னை அவர், இடது சாரிஅரசியலுக்கு நெருக்கமானவர் என்று கருதுகிறார். இதனிடையில் நெஸ்ட்ரேலிட்ஸீல் ஏராளமான தீவிரமான வாக்குவாதங்கள் இளைஞர்களிடம் எழுந்தது. வயதில் பெரியவர்களுக்கிடையிலும் வன்முறை நடந்தது. உள்ளூர் நவீன நாஜிக்கள் உங்களை இளைஞர்கள் மையத்துடன் சேர்த்து அடையாளப்படுத்தப்படும்போது நீங்கள் பகைக்கு ஆளாவீர்கள். இளைஞர்கள் மையத்து உறுப்பினர்களை மிரட்டுவதே இதன் முக்கியமான நோக்கமாகும். இது குறித்து அந்த மையம் இளைஞர்களிடம் விவாதிக்கிறது. இளம் செயல்பாட்டாளர்கள் வலிமையான வலதுசாரிகளை அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் மிக அதிகமாக அவர்கள் தங்களது பெற்றோர்களைப் பின் தொடர்ந்தனர். இவை கிழக்கு ஜெர்மனியின் 90-களின் நவீன நாஜிக்களுடைய நடைமுறைகளாகும்.

"கரெக்ட்டிவ்"-- இன் அறிக்கை வெளி வந்த பிறகு, இந்த இளைஞர்கள் மையம் மற்ற இளைஞர்கள் மையங்களுடனும் மற்றும் நெஸ்ட்ரேலிட்ஷ் வண்ணமயமானது என்ற அமைப்புடனும் இணைந்து சிறப்பாகச் செயல்படுகிறது.

முதல்முறையாக இந்த இளைஞர் அமைப்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒரு பேரணியை நடத்தினார்கள். இந்த மையம் 150 பேர் கலந்து கொள்வார்களென்று எதிர்பார்த்தது. ஆனால், சுமார் 300 பேர் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்--- ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம், மோசமான வானிலை, உள்ளூர் வலதுசாரிக் குண்டர்களின் மிரட்டல் என்று இவை அனைத்தையும் மீறி! 

ஸ்டெர்ன்பெக், இந்தப் போராட்டம் தொடர்ந்து நடக்க ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த பங்களிப்பைச் செய்ய முடியும் என்று கூறுகிறார். பாசிச அமைப்புகளுக்கு எதிரான மன்றங்களுக்கு ஆதரவு இருக்கிறது. மக்கள் AfD -க்கு எதிரான கருத்துகளை இணைய தளங்கள் மூலமாகப் பகிர்ந்து கொள்ளுகிறார்கள். இந்தப் போராட்டங்கள் நீண்ட காலத் தாக்கத்தை மக்களிடம் உருவாக்கும் என்கிறார் அவர். இத்துடன், இளைஞர்கள் மன்றம் "பெருமை மிக்க ஊர்வலம்" என்னும் பதாகையில் ஜூன் மாதம் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டு உள்ளது. இத்தகைய முயற்சி இதுவே முதலாவது ஆகும்.

இப்போது ஸ்டெர்ன்பெக்கும் அவரது குழுவினரும் தனித்து இல்லை. 2024-இன் தொடக்கத்தில் 300-க்கும் அதிகமான AfD -க்கு எதிராகவும் வலதுசாரியினருக்கு எதிராகவும் ஜெர்மனி முழுவதும் பேரணிகள் நடந்திருக்கின்றன. இவை அனைத்தும் ஜெர்மனியிலிருந்து லட்சக்கணக்கான மக்களை நாடுகடத்தும் திட்டம் பற்றி நவீன நாஜிக்களின் ரகசியக் கூட்டம் நடந்த பிறகு கிளைத்து எழுந்தவை .

நாடு கடத்தும் திட்டம் புதிய பாசிஸ்ட்டுக்களுடன் தங்களை இணைத்துக் கொள்ளுபவர்கள், வலதுசாரித் தீவிரவாதிகள், நவீன நாஜிக்கள் மற்றும் AfD – யைச் சேர்ந்தவர்கள் ஆகியோருடைய மோசமான கலவையால் ஏற்பாடு செய்யப்பட்டது. நவீன நாஜிக்கள் மற்றும் AfD-- இன் இந்த ரகசியக் கூட்டம் பற்றி மக்களுக்குத் தெரிந்தவுடன் ஜெர்மனியின் ஜனநாயக மூகம் போராட்டத்துக்குத் தயாரானது..

இறுதியாகப் பார்த்தால், மேலே சொன்ன ஆறு நிகழ்வுகளிலும் மூன்று வியங்கள் பொதுவானவையாக உள்ளன. இந்த மூன்று கூறுகளும் ஜனநாயகத்துக்கு எதிரான அச்சுறுத்தலை எதிர்க்க மக்களை வெற்றிகரமாக ஒன்று சேர்த்தன.

முதலில் ஒரு தூண்டுதல் தேவை. ஜெர்மனியில் வலதுசாரித் தீவிரவாதிகள் மற்றும் AfD -இன் வளர்ச்சியை மக்கள் பல வருடங்களாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், நாஜிக்களின் பாணியில் ஏராளமான மக்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் திட்டம் வெளிப்படையாகத் தெரிந்த பின்தான் ஜெர்மனியின் வலதுசாரியும் AfD -யும் எவ்வளவு அபாயகரமானவர்கள் என்பதை மக்கள் உணர ஆரம்பித்தார்கள். இதுவரையிலும் ஜெர்மனியில் இதனுடன் ஒப்பிடும்படியான செயல்கள் எதுவும் நடந்ததில்லை.

இதற்கு ஓரளவு நெருக்கமான நிகழ்வு சென்ற வருடத்தின் "ரீச்சேஸ்பர்கேர் ஊழல்” மற்றும் அவர்களின் திட்டமான ராணுவ சதியால் "ஜெர்மனியின் ஜனநாயக ஆட்சியை ஒழித்துக்கட்டி விட்டு சர்வாதிகார ஆட்சியை நிறுவ முயன்றதே" ஆகும். AfD -யின் கட்டாயப்படுத்தப்பட்டு நாடு கடத்தும் திட்டம் 2024-ஜனவரியில் நடந்த மக்களின் எதிர்ப்புப் போராட்டங்களைத் தூண்டியதைப் போல, ரீச்சேஸ்பர்கேருடைய "ஜனநாயகத்தை அழிக்கும்" திட்டம் போராட்டங்களைத் தூண்டவில்லை.

இதுவரையிலும் வலதுசாரியினருக்கு எதிரான பெரும் போராட்டங்களும், BSW (Reason and Justice Party) என்னும் ஒரு புதிய கட்சியின் தோற்றமும் தடுக்கவே முடியாது என்பது போன்ற தோற்றம் தந்துகொண்டிருந்த AfD -யை தடுத்து நிறுத்திவிட்டது.

ஜெர்மனியில், 2024 பிப்ரவரியின் ஆரம்பத்தில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் ஆச்சரியமூட்டும்படி 79% மக்கள் வலதுசாரிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணிகளுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். மிக முக்கியமாக 38% மக்கள் இந்த எதிர்ப்புகள் AfD -யை பலவீனப்படுத்தி உள்ளதாக நினைக்கிறார்கள். உண்மையில், ஜனவரி 2024-இல் இந்தப் பேரணிகள் ஆரம்பித்ததில் இருந்து AfD, 3% பொதுமக்களின் ஆதரவை இழந்து உள்ளது..

இரண்டாவதாக, வலதுசாரிகளுக்கு எதிராக பேரணிகளுக்கு அணி திரட்டுவதற்கும் அவற்றில் பங்கெடுத்துக் கொள்வதற்கும் முன் மிகப்பெரிய அளவில் மக்களை அணிதிரட்டுவதற்காகச் சிறு குழுக்களாகக் கூடித் திட்டமிட்டார்கள். இந்த அணிதிரட்டல் என்பது தனிமனிதரிடமிருந்து வரவில்லை மாறாக, மற்றவர்களுடன் இணைந்து வேலை செய்த தனிநபர்களால் செய்யப்பட்டது. சுருக்கமாக, இது "குழுக்களின் பணி" ஆகும்.

இறுதியாக, இதன் முக்கியமான கருவி இணைய தளங்கள் ஆகும். இந்தத் தளங்கள், ஜெர்மனியின் வெகுஜன ஊடகங்கள் AfD--க்கு எதிரான பேரணிகளுக்கான தேதி, நேரங்களை அறிவிக்க ஆரம்பிக்கும் முன்பே உபயோகப்படுத்தப்பட்டன. இணைய தளங்கள் வாயிலாக, இந்தச் சிறு குழுக்கள் வலதுசாரியினருக்கு எதிரான ஊர்வலங்கள் குறித்த திட்டங்களை அறிவித்தன. மொத்தத்தில், இந்த எதிர்ப்புகளை பயனுள்ளதாக்க இந்த மூன்று வியங்கள் சரியாக அமைந்திருக்க வேண்டும்: தூண்டுதல், சிறு குழு மற்றும் இணைய தளங்கள்.

                                                                    தாமஸ் க்ளிக்கவெர்

                                                                 (தமிழில்:கவிதா)


(தாமஸ் க்ளிக்கவெர், லிவர்பூல் பல்கலைக் கழகத்தின் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்ட "Alternative für Deutschland: The AfD – என்னும் நூல் உட்பட 950--க்கும் அதிகமான கட்டுரைகளைப் பிரசுரித்துள்ளார்) 

 (Countercurrents.org, ல், 8.02.2024ல் வெளி வந்த கட்டுரை.)

Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட